உங்கள் வருகைக்கு நன்றி...

Wednesday, January 26, 2011

நேரம் தவறினால் நேரமும் தவறிடும்


காலம் பொன்போன்றது என்பது பழமொழி ஆனால் அது வாழ்க்கையில் பின்பற்றக் கூடிய வழியும் கூட.பலருக்கும் நேரந்தவறியதினால் ஏற்பட்ட கஸ்டங்கள் நிறையவே இருக்கும்.
குறிப்பிட்ட நேரத்தில் செல்லாததால் வேலையை இழந்திருப்பார்கள் சிலர் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு செல்லாததால் உயிரும் போயிருக்கும்.

இப்படி எத்தனையோ நிகழ்வுகள் நேரத்தை மதிக்காத காரணத்தினால் பலருக்கு தவறிபோயிருக்கிறது. இதில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

சில வருடங்களுக்கு முன் பதினைந்து தினங்கள் விடுமுறையில் தாயகம் செல்ல ஷார்ஜா விமான நிலையத்திலிருந்து ஏர்அரேபியா பட்ஜட்விமானத்தில் டிக்கேட் போட்டிருந்தேன். இரவு 10.45 க்கு விமானம் புறப்படும் நேரம். பயணிகள் மூன்று மணிநேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்தில் இருக்கவேண்டும் என்பது விதிமுறை.

நான் துபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு செல்வதற்கு எனது மைத்துனரிடம் ஏழு மணிக்கு வரச் சொல்லியிருந்தேன். அவர் ரென்ட்டிய காரில்(Rent a car) பணிப்புரிவதால் அவரிடம் எப்போதும் கார் கைவசம் இருந்துக் கொண்டிருக்கும்.

அன்று காலையிலிருந்து மிதமான மழை பெய்துக் கொண்டிருந்தது.மதியம் ஒரு மணிக்கெல்லாம் பணியிலிருந்து அறைக்கு வந்தும் விட்டேன்.மழை நின்றபாடில்லை மாலை ஐந்து மணிக்கு எனது மைத்துனருக்கு டெலிபோன் செய்து ஆறுமணிக்கெல்லாம் நீ வந்துவிடு என்றேன்.

தற்போது கையில் கார் இல்லை ஏழுமணிக்கு தான் கார் வரும் வந்ததும் வருகிறேன் என்றார்.நானும் சரி எப்படியும் ஏழு மணிக்கு வந்துவிடுவார் ஏழுக்கு புறப்பட்டாலும் எட்டு அல்லது ஒன்பது மணிக்குள் விமான நிலையம் சென்றுவிடலாம் புறப்படுவது 10.45க்குத்தானே என்று அலட்சியமாக இருந்தேன்.

மணி 6.45 ஆகிவிட்டது மைத்துனருக்கு டெலிபோன் செய்தேன். இன்னும் கார் வரவில்லை ஏதோ ஓரிடத்தில் டிராப்பிக்கில் மாட்டி இருக்கிறார் அதனால் காரை எதிர்பார்க்க வேண்டாம் என்றார். எனக்கு கோபம் வந்தது இதை முன்னாடியே நீ சொல்லி இருக்கலாமே என்று அவரிடம் நொந்துக் கொண்டு அவசரமாக டெக்ஸியை தேடினேன். அன்று மழை பெய்ததால் எல்லா டெக்ஸியும் பயணிகளுடன் சென்றது கிடைக்கவில்லை.

உடனே எனது பக்கத்திலுள்ள நண்பரிடம் தொடர்புக் கொண்டு அவருடைய காரை எடுத்துக் கொண்டு போக எனது மைத்துனரை அழைத்து நாங்கள் புறப்படுவதற்குள் மணி 7.35தை தாண்டி விட்டது.

துபாய் ஷார்ஜா பிரதான சாலையில் மழைத்தண்ணீர் தேங்கி நிற்க அதனால் பல கார்கள் அதில் சிக்கி ஸ்டார்ட் ஆகாமல் திணறிக் கொண்டிருந்தது. அதனால் டிராப்பிக் ஜாம் மாலை ஐந்து மணியிலிருந்து பல வழிச் சாலைகளும் அடைப்பட்டு ஆங்காங்கே கார்கள் பல மைல் தூரத்திற்கு நின்றுக் கொண்டிருந்தன.

நாங்களும் நெரிசலில் மாட்டி தவித்துக் கொண்டிருந்தோம். இன்ஜ் பை இன்ஜ்சாக கார் நகர்ந்தது. நேரம் கடந்துக் கொண்டிருக்க அந்தக் குளிரில் எனக்கு நன்றாக வேர்வை வேர்த்தது.
விமானத்தை பிடித்துவிடுவோமா என்ற சந்தேக கேள்வி என்னுள் எழுந்தது. இது பட்ஜெட் ஏர்லைன்ஸ் இந்த விமானத்தில் பயணிக்கவில்லை என்றால் நம்முடைய பணம் திரும்ப கிடைக்காது இதில் மட்டும் உறுதியாக இருந்தேன்.

ஒருவழியாக டிராப்பிக்கை கடந்து விமான நிலையத்தை அடைந்தபோது நேரம் 10.30மணி.சென்னை கவுண்டர் மூடப்பட்டிருந்தது அங்கயே உள்ள ஏர்அரேபியா அலுவலகத்திற்கு சென்றேன் கூட்டமாக இருந்தது என்னைப்போலவே பலரும் டிராப்பிக்கில் மாட்டி தாமதமாகத்தான் வந்துள்ளார்கள். சென்னை செல்லக்கூடியவர்கள் 15 நபர்கள் இருந்தோம்.
அதிகாரியிடம் பேசினோம் விமானம் புறப்பட இன்னும் 10 நிமிடங்கள் தான் இருக்கிறது அதனால் ஒன்றும் செய்ய இயலாது. நீங்கள் சரியான நேரத்திற்கு வந்திருக்க வேண்டும் மழைப்பெய்வதால் இன்னும் ஒருமணி நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

நொந்துபோய் அமர்ந்திருந்தோம் விமானத்தை விட்டது ஒருபுறம் என்றாலும் பணம் திரும்பக் கிடைக்காதே என்ற வருத்தம் மறுபுறம்.என்ன செய்வது என்று என்னையே நான் நொந்துக் கொண்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஏர்அரேபியா விமான அதிகாரி எங்களை அழைத்து உங்கள் அனைவருக்கும் இந்த மழையின் காரணமாக விமான டிக்கேட்டை மறுபடியும் பயணிக்கும் வாய்ப்பை கொடுக்கின்றோம் நாளை உங்கள் தொலைபேசிக்கு அழைப்பு வரும் உங்கள் பயணத்தேதியை உறுதி செய்துக் கொள்ளுங்கள் என்றார் தலைக்கு வந்தது தலைப்பாவுடன் போனதே என்று நிம்மதியுடன் மகிழ்சியாக வீட்டுக்கு புறப்பட்டோம்.

முப்பதாண்டு அனுபவத்தில் இது போன்ற நிகழ்வு இரண்டாவது முறையாக இரண்டு மாதங்களுக்கு முன் ஜெட்ஏர்வேஸ்சில் ஏற்பட்டது.

நானும் துணைவியாரும் அவசரவேலையாக சென்னைக்கு கிளம்பினோம் 11.30 மணி விமானத்திற்கு 10.30மணிக்கு ஜெட் விமான கவுண்டருக்கு வந்துவிட்டோம் ஆனால் கவுண்டர் குளோஸ் செய்துவிட்டோம் என்று கூறிவிட்டார்கள்.இது எங்களுடைய அலட்சியம் தான் காரணம் இம்முறை மழை இல்லை.

சரியானபடி நேரத்தை மதித்திருந்தால் நமது பயணமும் சரியானபடி நடந்திருக்கும் அலட்சியத்தினால் பயணமும் ரத்தாகிவிட்டது மன உலைச்சல் இரத்த அழுத்தம் தேவையில்லாத குழப்பம் இத்தோடு முடிந்துவிட்டதா

நம்மை அழைப்பதற்கு சென்னை விமான நிலையத்தில் உறவினர்கள் காத்துக்கிடக்க அவர்களுடைய நேரம் அவர்கள் வாடகைக்கு அமர்த்திய வாகனத்தின் வாடகை இப்படி சூழலையே இந்த நேரம் தவறுவதினால் மாற்றிவிடுகிறது.

இது பயணத்திற்கு மட்டுமல்ல எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பொறுந்தும்.
கொடுத்த வாக்கையும் கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்தையும் சரியாக பின் பற்றவேண்டும்.

கண்டிப்பாக இந்த கட்டுரை எனக்கு நானே எழுதிக்கொண்டது.

Sunday, January 23, 2011

அரபு தமிழன்

எனக்கு 30 அமீரகத்திற்கு 39- தொடர்- 12

இது ஒரு பாலை அனுபவம்

பழைய நினைவுகளை நினைத்துப் பார்த்து சம்பவங்களை கோர்வைப்படுத்துவதற்கு சற்றுசிரமம்தான். சிலதருணங்களில் நண்பர்களுடன் உரையாடும் போது பழைய நிகழ்வுகளை பகிர்ந்துக் கொள்ளும் போதும் சில சம்பவங்கள் நம் நினைவுக்குள் வந்துவிடும்.அப்படித்தான் சென்ற வெள்ளிக்கிழமை ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு நண்பர்களுடன் திரும்பும்வேளை இந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது அவர்களுடன் உரையாடினேன் இப்போது உங்களுடனும்...

ஹவுஸ்பாய்யாக இருந்த சமயத்தில் எனது அரபு முதலாழிக்கு பேரக்குழந்தை பிறந்திருந்தான்.அவன் பெயர் காலீது பின் ஜமான் ஒன்னரை மாதக்குழந்தையை கையில் அதன் தாய் வைத்திருந்தாள். அந்த குழந்தை கழுத்தை வளைத்து என்னைப் பார்த்தது சிரித்தது.இது எங்களுக்குள் நடந்த முதல் சந்திப்பு.

அடுத்த சில தினங்களில் அதே பார்வை அதே சிரிப்பு எனக்கு அவனை தூக்க வேண்டும் போல இருந்தது அரபியிடம் கேட்டதும் எனது கையில் அந்தக்குழந்தையைத் தந்தார்கள். எப்படி தூக்குவது என்றே தெரியாமல் திணறினேன்.

உடனே அந்த குழந்தையை ஒருடவலில் வைத்து சுற்றி மிக எளிதாக ஒரு பொம்மையை தருவதைப்போல என்கையில் தந்தார்கள். தூக்கி கையில் வைத்திருந்த என்னையே உற்றுப் பார்த்தான். இந்த பார்வை அவன் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது போலும்...

தினம் என்னை காண்பதில் அவனுக்கு பெரும் மகிழ்ச்சி. நாட்கள் செல்ல செல்ல அவன் தேடல் அவன் பொற்றோர்களை விட என்னையே சுற்றி இருந்தது. தன் குழந்தையை யாராவது பார்த்துக் கொண்டால் போதும் என்ற மனோநிலையில் இருந்த அந்த அரபுதாய்க்கு நான் ஹவுஸ்பாய் மட்டுமல்ல இந்த குழந்தையை பாராமரிக்கும் செலித்தாய்யை போல பராமரித்தேன்.தாய்பால் கிடைக்காத அவனுக்கு புட்டி பால் நான் கொடுத்தால் மட்டும் குடிக்கும் பழக்கத்திற்கு உட்பட்டான்.

நான் புட்டிப்பாலை மட்டும் கொடுத்து வளர்க்க வில்லை அத்துடன் தமிழ்பாலையும் ஊட்டினேன். அ..ஆ வில் தொடங்கி 1...2.. என்று எண்களையும் உணவு பண்டங்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தேன் எளிதில் கற்றுக் கொண்டான்.

அவன் தகப்பனாருக்கு ரொம்ப வருத்தம் என் குழந்தையை ஒரு இந்தியனாக மாற்றுகிறாய் என்று கூறி என்னிடமிருந்து அவனை பிரித்தார்கள். அரபுகாரர்களின் குழந்தைகளின் அட்டுளியம் அடாவடித்தனம் எப்படி இருக்கும் என்பதை அரபு நாடுகளில் பணிபுரிபவர்களுக்குத் தெரியும். அப்படித்தான் அடாவடித்தனம் செய்து மீண்டும் என்னிடம் வந்தான் இதனால் எனக்கு சிரமங்கள் எழுந்தது.

ஹவுஸ்பாய்கள் மாலையில் இரண்டு மணி நேரம்தான் வெளியில் சென்றுவர முடியும் அந்த இரண்டு மணி நேரத்தையும் அவனுடன்தான் கழிக்கவேண்டும் என்ற அவனுடைய அன்பு என்னை அவனிடமே பிணைய வைத்தது. சில தருணங்களில் அவனையும் அழைத்துக் கொண்டு மாலை நேரத்தில் நண்பர்களை சந்திக்க சென்று வருவேன்.

என் நண்பர்கள் அவனிடம் தமிழ்பேசி அழகு பார்ப்பார்கள். ஒருமுறை நண்பர்களிடம் அவன் முன் என்னை அடிப்பது போல் நடிக்கச் சொன்னேன். அவர்களும் அப்படியே செய்ய அவன் அழுதுக் கொண்டு கற்களை பொறுக்கி நண்பர்களை அடிக்க தொடங்கினான். அப்படியே அவனை வாரி அணைத்து முத்தமிட்டேன்.என்மேல் இத்தனை அன்பா! அவன்தாயிடம் தந்தையிடம் கிடைக்காத ஏதோ ஒன்று என்னிடம் கிடைக்கிறது.

விடுமுறையில் தாயகம் சென்று இரண்டுமாதங்கள் கழித்து வந்த என்னைக் கட்டிக்கொண்டு அழுதான்.அந்த இரண்டுமாதத்தில் என்னை பிரிந்த அவனுக்கு ரொம்பவும் கஸ்டமாக இருந்திருக்கிறது என்னைப்போல். அதற்காக அந்த பெற்றோர்கள் ரொம்பவும் கஸ்டப்பட்டதாக கூறினார்கள்.

இந்த இரண்டு மாதக்காலத்தில் அவனுக்கு நிகழ்ந்த அத்தனை விசயங்களையும் என்னிடம் பகிர்ந்துக் கொண்டான் அவனுக்கு பல் விழுந்ததிலிருந்து பல் முளைத்தது வரையில் கூறினான்.

இந்த இரண்டு மாதத்தில் அவனுக்கு நண்பர்கள் கிடைத்திருந்தார்கள் என்னை அதிகம் தொந்தரவு செய்வதில்லை. தமிழ்கூட பல வார்த்தைகளை மறந்திருந்தான்.எப்படியாவது இவனுக்கு முழுமையாக தமிழைக் கற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஆனால் அது நிறைவேறவில்லை. குடும்பப் பிரச்சனையில் அந்த குழந்தை தனிக் குடித்தினத்ததிற்கு வேறு இடத்திற்கு சென்றுவிட்டான்.

என்றாவது அவன் இங்கு வரும்போது சில நேரங்களில் நான் ஓய்வில் சென்றிருப்பேன்.நான் இருக்கும்போது வந்தால் அரபியில்தான் என்னிடம் உரையாடுவான்.நான் தமிழை ஞாபகம் படித்தினால் அவன் சிரித்துக் கொண்டே லா...லா...என்று அரபியில் இல்லை தமிழை பேசமாட்டேன் என்று அவன் கூறும்போது எனக்கு மன வருத்தத்தை கொடுத்தது.

சிலவருடங்களுக்கு பின் அந்த ஹவுஸ்பாய் வேலையிலிருந்து விடுதலை பெற்றாலும் அந்த அரபு குழந்தையின் அன்பு என் நெஞ்சத்தில் சிறைப்பட்டுதானிருக்கிறது.

என்னதான் இருந்தாலும் அன்னியநாட்டு குழந்தையிடம் தமிழை கற்றுக் கொடுத்திட ஆர்வம் கொண்டு அதில் வெற்றி தோல்வி ஏற்பட்டாலும் இன்று நம் தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க அன்னிய நாட்டுக்காரன் தேவைப்படும் சூழல் உருவாகுவதைக் கண்டு வேதனையாகத்தானே இருக்கிறது.

Monday, January 17, 2011

2010 பங்கும் 2011 சந்தையும்


சென்ற 2010 ஜனவரியில் டிமேட் கணக்கை திறந்து மிக ஆர்வத்துடன் பங்குசந்தையினுள் நுழைந்தேன். இந்த ஒரு ஆண்டின் எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளவேண்டும் என்ற ஆவலில் உங்களுடன் இதோ.!

பங்கு சந்தையைப் பற்றி பலரைப்போல எனக்கும் மித்த ஆர்வம் இருந்தது அதைப் பற்றி தெரிந்துக் கொள்ள சோமவள்ளியப்பனின் நூல்கள் வழிகாட்டியாக எனக்கு உதவியது.

டிமேட் கணக்கை திறந்ததும் சென்ற ஜனவரியில் முதன் முதலில் மெட்ராஸ் சிமிண்ட் வாங்கினேன். அலுவலக ஒய்வு நேரத்தில் சந்தைநிலவரத்தை அவ்வபோது பார்த்துக் கொள்வேன். அதுமட்டுமின்றி காலை நேர தொலைக்காட்சியில் வணிகச் செய்திகளை தினம் பார்ப்பதும், அதிலிருந்து நோட்ஸ் எடுத்துக் கொள்வதும் இந்த ஒரு ஆண்டு கால அனுபவத்தில் முக்கியமானது.

வணிகச்செய்தியில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்குசந்தை நிலவரங்களை ஓரளவு தெரிந்துக் கொள்ளமுடிந்தது. பங்கு பரிந்துரைகளும் அச்சமயத்தில் நடைபெறும், தற்போது வணிக விகடன் வார இதழாக வந்ததினால் வசதியாக இருக்கிறது. பல கம்பெனிகளை அனலைஸ் செய்து ரிப்போர்ட் தருகிறார்கள். அவர்களின் பரிந்துரை பங்குகள் என்னிடம் 75 சதவிகிதம் லாபத்தை தந்திருக்கிறது.

இத்தனை வழிகாட்டலையும் பெற்று எனது யோசனையின் பேரில் பங்குகளை வாங்குவதும் வாங்கிய பங்குகள் பதினைந்து முதல் இருபது சதவிகிதம் லாபத்தில் செல்லும்போது அதை விற்பதுமாக இப்படி ஒரு ஆண்டு விளையாடிப்பார்த்தேன்.

இந்த விளையாட்டில் எனக்கு லாபம் கிடைத்தது. ஆனால் நிபுணர்களின் ஆய்வில் அவர்களின் ரிப்போர்ட் எப்படி இருந்தது என்றால் சென்ற ஜனவரியில் வாங்கிய பங்குகளை டிசம்பர் வரை வைத்திருந்தவர்களுக்கு முப்பது சதவீதம் லாபம் கிடைத்திருக்கிறது என்று கூறினார்கள்.

எனது போர்ட் போலியோவில் இதை ஆய்வு செய்து பார்த்தேன். ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையில் 22 கம்பெனிகளை விற்றிருக்கிறேன் வாங்கியும் இருக்கிறேன். நிபுணர்களின் ஆய்வின்படி நான் விற்காமல் அப்படியே ஓராண்டு வைத்திருந்தால் எனக்கு 32 சதவீதம் லாபம் கிடைத்திருக்கும் ஆனால் அவ்வபோது விலை ஏற்றத்தில் நான் விற்றதால் எனக்கு 15 சதவீதம் மட்டுமே லாபம் கிடைத்தது.

பங்கு சந்தையை பொருத்தமட்டில் பொறுமை, நிதானம் மிகவும் அவசியம் என்பதை அனுபவரீதியாக தெரிந்துக் கொண்டேன். அவசரப்பட்டால் நாம் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை.

இந்த ஆண்டு 2011 ல் பங்கு சந்தை சரிந்துக் கொண்டே வருகிறது (FI) அன்னியர்களின் முதலீடுகள் குறைந்ததினால், டாலரின் மதிப்பு அதிகரித்ததினால், இந்திய தொழில்துறை தகவல்கள் (ஐ.ஐ.பி)சரியில்லாததால் சந்தை சரிந்தது, அதனால் பெரும்பாலான வங்கிப் பங்குகள் சரிந்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த சரிவு இன்னும் சில மாதங்களுக்கு தொடரலாம் என கணிக்கிறார்கள். அன்னிய முதலீடுகள் சில மாதங்கள் கழித்து இந்திய சந்தைக்குள் நுழையும் என்பது பல நிபுணர்களின் கனிப்பு.

இந்த சமயத்தில் நாம் என்ன செய்வது என்றால் பலருக்கும் தெரிந்த ஒரே லாஜிக், விலை இறங்கும்போது வாங்குவது விலை ஏறும்போது விற்பது இதை சரியாக செய்தால் லாபம் பார்க்கலாம்.

நல்ல கம்பெனிகளை தேர்வு செய்து இந்த விலை இறக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம் அதேபோல் ஏற்கனவே வாங்கிய பங்குகள் விலை இறங்கியிருந்தால் இன்னும் கொஞ்சம் வாங்கி விலை ஆவ்ரேஜ் செய்யலாம் என்பது நிபுணர்களின் ஆலோசனை ஆர்வமுள்ளவர்கள் நிதானமாக பங்குசந்தையில் இறங்கி விளையாடலாம்.

கையை சுடாதளவிற்கு கவனமாக இருக்கவேண்டும் இது ஒரு நல்ல வியாபாரம்.

Wednesday, January 12, 2011

அத்திக்கடை நண்பர்கள்

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 தொடர்- 11

இது ஒரு பாலை அனுபவம்

நண்பன் சிகாபுதீனின் வகுப்புத்தோழன் அஜீஸ்ரஹ்மான். இவன் சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அடிக்கடி சிகாபுதீனுக்கு கடிதம் எழுதுவான் இவர்களுக்கிடையில் என்னையும் கடிதத்தில் அறிமுகம் செய்து எழுதினான்.

எங்களுக்குள் நட்பு வளர்ந்தது ஒருவரை யொருவர் நாங்கள் அறிந்துக் கொள்ள புகைப்படங்களை பறிமாறிக்கொண்டோம் இதில் என்ன விசேஷம் என்றால் அஜீஸ்ரஹ்மான் தன்னுடைய புகைப்படத்தை நான்கு பாதியாக கட் செய்து ஒவ்வொரு பகுதியாக எனக்கு கடிதத்தில் அனுப்பிவைத்தான் அவன் தோற்றத்தை காண ஆவர்வமாக இருக்கும். முழுமையாக நான் காண்பதற்கு சுமார் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.

ஒருவிடுமுறையில் சென்னைக்கு சென்று அவன் தங்கிருந்த வாடகை அறையில் இரு தினங்கள் அவன் கல்லூரி நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு தங்கியிருந்து சினிமாவிற்கெல்லாம் சென்று வந்தோம். அந்த நாட்கள் நான் கல்லூரியில் படித்ததைப்போன்ற உணர்வைக் கொடுத்தது. கடிதத்தில் மட்டுமே உரையாடிய நாங்கள் நேரடியாக சந்தித்த போது நீண்ட நாட்கள் பழகிய நண்பனைப் போன்றே பழகினோம்.
அந்த நட்பு இன்றும் தொடர்கிறது.

இந்த கட்டுரையையும் கூட அவன் படித்துவிட்டு எனக்கு தொலைபேசி செய்வான். ஆம் இந்த தொடரை தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறான்.
அந்த நாட்களில் எனக்கு அதிகமான நண்பர்களாக பழகியவர்கள் அத்திக்கடை இளைஞர்கள். சிகாபுதீன், அஜீஸ்ரஹ்மான், நைஸ்காதர், நஜ்முதீன் ,சிராஜ்தீன் இவர்களைத் தொடர்ந்து பாவா வீட்டு ஹாஜா.

இவர்களில் பாவா வீட்டு ஹாஜாவைத் தவிர மற்றவர்கள் துபாயில் தான் இருக்கிறார்கள். சிகாபுதீனும் தங்க மார்கெட்டில் இருப்பதால் அவ்வபோது சந்தித்துக் கொள்வதுண்டு ஆனால் அதிகமாக பேசுவதுகிடையாது காரணம் வியாபார கடையில் கதைகள் பேசமுடியாதே.
அடுத்து அஜீஸ்ரஹ்மான் இவனும் ஜீவல்லரியில் ஆனால் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கடை என்பதால் அதிகமான வாடிக்கையாளர் தொந்தரவு இருக்காது என்றாலும் அவ்வபோது தொலைபேசியில் உரையாடுவோம்.

மலேசியாவில் முதலாழியாக வாழ்ந்தவன் பொருளாதார சுனாமியினால் மீண்டும் துபாயில் பணிப்புரிய வேண்டிய காலசூழ்நிலை என்றாலும் மனதளவில் அவன் எதையும் இலக்கவில்லை. நிறைய விசயங்களை தெரிந்திருக்கிறான் அந்த அறிவே அவனுக்கு ஊன்றுகோலாக இருக்கிறது. பொருள் அவனை இழந்தாலும் அவன் தன்னை இழக்கவில்லை. இழந்ததை விரைவில் மீட்டுவிடுவான்.

எனது தாய்மாமன் மகன் ஆக்கூர் ஜெகபர்அலி இவனும் நானும் உயிர் நண்பர்களைப் போல சிறுபிள்ளையிலிருந்து பழகிவந்தோம். நான் துபாய் வந்து சில வருடங்களில் ஹவுஸ்பாயாக இவனும் வந்தான். வெள்ளிவிடுமுறையில் நாங்கள் சந்தித்துக் கொள்வோம் அவனுடைய பணியில் பிரச்சனை வரவே அவனை சிகாபுதீன் தனது அரபியிடம் பேசி வேலைவாங்கி கொடுத்தான். நானும் அவர்களுடன் இணைந்துக் கொண்டதால் எங்களின் நாட்கள் இனிமையாக சென்றது.

ஒருநாள் இரவு செகண்ட்ஷோ சினிமா பார்த்துவிட்டு மூன்றுபேறும் சைக்கிளில் பின் படல்போட்டு நம் ஊரில் வருவதைப்போல மிதித்து வந்தோம். வரும் வழியில் போலீஸ் வாகனம் வரவே எங்களைக் கண்ட போலீஸ் ஆச்சரியப்பட்டார்கள். மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் என்று கூறினார்கள்.

மூன்றுபேர் சைக்கிளில் மிதித்து செல்வதை அப்போதுதான் அந்த போலீஸ்காரர்கள் கண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். எங்களை உற்சாகப்படுத்தி அனுப்பிவைத்தார்கள்.
ஆனால் ஜெகபர்அலிக்கு சிங்கப்பூரில் செட்டில் ஆகனும் என்ற ஆவல் அவனிடம் இருந்துக் கொண்டே இருந்தது. அவனுடைய அந்தக் கனவும் 1986 க்கு பிறகு நனவாகி இன்று சிங்கை பிரஜையாக மனைவி மக்களோடு வாழ்ந்துவருகிறான்.

இந்த நட்புவட்டத்திற்கு மத்தியில் எனது தேடல் அவர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டே வந்தது அந்த நேரங்களில் எனது சிறுகதை தொகுப்பான “விற்பனைக்கு வந்த கற்பனைக் கதைகள்” சிறுகதை தொகுப்பு வெளியிட்டிருந்தேன்.

எனது எழுத்தும் இலக்கிய ஆர்வமும் புதிய நண்பர்களை எனக்கு அறிமுகத்தைத் தந்தது அந்த அறிமுகம் எனக்கு ஞானப்பாட்டையை காண்பித்தது.
என்னை ஒருகொள்கையில் ஈடுபத்திக் கொண்டிருந்த போது அதை மறுபரிசீலனை செய்யுமளவு ஆன்மத்தேடல் என்னை மாற்றியது.
அந்த மாற்றத்தை நீங்களும் தெரிந்துக் கொள்ளத்தான் வேண்டும்…தொடர்வோம்.

Saturday, January 8, 2011

வலைப்பூவில் இருக்கும் வைரஸ்சை நீக்குவது எப்படி?

அன்பின் பதிவர்களே!

எத்தனையோ தெரியாத விசயங்களை வலைப்பதிவின் மூலம் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பினை இந்த இணையதளம் நமக்கு உருவாக்கி இருக்கிறது.

ஒன்றைப்பற்றி அறிய வேண்டுமானால் நூல்களை தேடி அல்லது அறிந்தவர்களை தேடி அலைந்தக் காலம் மலைஏறிவிட்டது.அறிவியலின் வளர்ச்சில் இருக்கும் நாம் அறையில் இருந்துக்கொண்டே இந்த உலகை சுற்றி வந்துவிடலாம் பல சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றுவிடலாம்.

இது எல்லாம் சரிதான் விசயத்திற்கு வாருங்கள் என்று நீங்கள் அழைப்புவிடுப்பது தெரிகிறது.

நாம் பதிவு செய்துக்கொண்டிருக்கும் நமது வலைப்பூவில் வைரஸ்தாக்குதல் இருந்தால் அதை எப்படி நிவர்த்தி செய்வது(?) என்பதை தெரிந்த பதிவர்கள் தயவுசெய்து எனக்கு சொல்லிக் கொடுங்கள் அல்லது லிங்க் கொடுங்கள்.

பலவாசகர்கள் எனது வலைதளத்திற்குள் வரமுடியவில்லை தலைப்புடன் நின்றுவிடுகிறது என்று புகார் செய்கிறார்கள். பலரால் கமாண்ட்டும் போடமுடியவில்லை என்று கூறுகிறார்கள் இதற்கெல்லாம் வைரஸ்தானே காரணம்? தெரிந்தவர்கள் தெளிவுப்படுத்த வேண்டுகிறேன்.

இது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் உபயோகமாக இருக்கும்...இதற்கு முன்னால் யாரும் வைரஸை நீக்குவதைப்பற்றி கட்டுரைகள் எழுதி இருக்கலாம் அவர்களுடைய லிங்க் கிடைத்தால் எனக்கு பெரிதும் உதவியாக இருக்கும்..

இதை வாசித்த உதவி செய்ய போகின்ற பதிவர்களுக்கு மிக்க நன்றியினை சமர்பிக்கின்றேன்.

நன்றி...நன்றி....நன்றி..!!!

Thursday, January 6, 2011

எமிரேட்ஸ் ஏர்லைன்சின் கவனத்திற்கு


சென்ற மாதம் டிசம்பரில் மருத்தவ பரிசோதனைக்காக சென்னைக்கு நானும் எனது மனைவியும் எமிரேட்ஸ் (EMIRATES AIRLINES)சில் இரண்டு தினங்களுக்காக சென்றோம். குறிப்பிட்ட தினத்தில் மருத்துவ பரிசோதனை முடியாததால் ஒரு தினம் தாமதமாக வரக்கூடிய சூழல் ஏற்படவே எங்களது விமான பயணச்சீட்டை மாற்றுவதற்கு சென்னையிலுள்ள எமிரேட்ஸ் அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்புக் கொண்டேன்.

பயணச்சீட்டை மாற்றுவதற்கு 500 இந்திய ரூபாய் கட்டவேண்டும் என்று கூறினார்கள்.(தற்போது தேதி மாற்றத்திற்கு பணம் கட்டவேண்டும்) கடன் அட்டை மூலம் கட்ட வேண்டும் என்றார்கள் நானும் சரி என ஒப்புக்கொண்டு கடன் அட்டையின் 16 இலக்க எண்ணை கூறினேன்.

கடன் அட்டையின் முடிவுகால வருடம், தேதி கேட்க்க அதையும் கூறினேன். பின்னர் கடன் அட்டையின் பின் பக்க உள்ள ரகசிய எண் (ccv)3 இலக்க எண்னை கேட்டதும் எனக்கு கோபம் வந்தது.

மன்னிக்கனும் என்னால் அந்த எண்ணை கூற இயலாது அப்படி நான் கூறுவம் பாதுகாப்பு கிடையாது என்றேன். அதற்கு அவர் எங்களுடைய வழக்கமும், பழக்கமும் இதுதான் என்றார்.
இருக்கலாம் ஆனால் வங்கி எங்களை எச்சரிக்கைப் படுத்தி இருக்கிறது என்று கூறிவிட்டு
சரி நான் விமான நிலையத்தில் பணமாகவே கட்டிவிடுகிறேன் என்றேன் அவரும் சரி என்றார்.

விமான நிலையம் சென்று எமிரேட்ஸ் கவுண்டரில் பயணச்சீட்டைக் கொடுத்ததும் தேதி மாற்றத்திற்கு 500 கட்டவேண்டும் என்றார் நானும் சரி என்றேன்.
எமிரேட்ஸ் மேற்பார்வையாளரிடம் அவர்பேசிவிட்டு அந்த தொகையை நீங்கள் கடன் அட்டை மூலம் தான் கட்டவேண்டும் என்று கூறிவிட்டு தொடர்புக்கு தொலைபேசி எண்ணையும் கொடுத்தார்.

நான் பணமாக கட்டுகிறேன் கடன் அட்டை மூலம் என்னால் கட்ட இயலாது அவர்கள் இரசிய எண்ணை கேட்கிறார்கள் நான் எப்படி அதை கொடுக்க முடியும் எனது கடன் அட்டைக்கு பாதுகாப்பு கிடையாது அது உங்களின் ஊழியர்கள் தவறாக பயன்படுத்த காரணமாகிவிடும் என்றேன்.

அப்படி எல்லாம் யாரும் செய்யமாட்டார்கள் நீங்கள் அந்த தொகையை கடன் அட்டை மூலம்தான் கட்ட முடியும் நாங்கள் பணமாக வாங்கக் கூடாது எங்களிடம் வேறு வழி இல்லை என்று மேலாளர் கூற, வேறு வழிஇன்றி கடன் அட்டையின் மூலம் கட்டினேன்.

எமிரேட்ஸ் நிறுவனம் தனது சேவையை பயணிகளுக்கு சிறப்பாக செய்வதாக கூறுகிறது ஆனால் இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்தாமல் இருப்பது அதன் வளர்ச்சிக்கு ஒரு சரிவுதான்.

ஒருவரின் கடன் அட்டையின் முழுவிபரம் ஒரு ஊழியருக்கு தெரியும் பொழுது அவர்களால் அதை தவறாக பயன்படுத்த ஒரு வாய்ப்பை எமிரேட்ஸ் போன்ற நிறுவனம் வகுத்துக் கொடுக்கிறது.

வங்கிகளில் கடன் அட்டையின் ரகசிய எண்ணை மாற்றுவதற்கு நாம் தொலைபேசி மூலம் அந்த எண்ணை நசுக்கி பதிவு செய்வோம் அதுதான் பாதுகாப்பான முறை இப்படி வெளிப்படையாக எல்லா இலக்க எண்களையும் ஒருவரிடம் கொடுக்கவும் கூடாது அப்படி கொடுப்பது ஆபத்தானது.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த முறையை மாற்றி அமைத்தால் பயணிகளின் பயம் நீங்கும் ஊழியர்களின் குறுக்கு சிந்தனையை போக்கும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு இமெயில் அனுப்பி உள்ளேன்.

Wednesday, January 5, 2011

எழுதப்படிக்க தெரியவில்லை என்றாலும் பழகத்தெரிந்திருக்கிறார்கள்

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 தொடர் - 10

இது ஒரு பாலை அனுபவம்

இரண்டு மாதம் விடுமுறையில் தாயகம் சென்ற எனக்கு துபாய் திரும்பும் அந்த நாள் ஆவலைக் கொடுத்தது. கொண்டு போன காசு கரைந்துபோனதாலா? அல்லது நண்பர்களிடம் கடன் வாங்கியதாலா? என்றே தெரியாமல் துபாய் மீது தேடல் அதிகரித்து.

வெளிநாட்டிலிருந்து நம் தாய்நாட்டிற்கு செல்லும்போது நம்மை ஏதோ வேறு கிரகத்திற்கு சென்று வந்த மனிதரைப்போல அப்போதைய கிராம மக்கள் பார்த்தார்கள். மித்த மரியாதையும் வழங்குகினார்கள் நம்மிடம் நிறைய பணம் இருப்பதாக அவர்கள் எண்ணிக்கொண்டார்கள். தூரத்து உறவினர்கள் கூச்சப்படாமல் நம்மிடம் துணியும், மணியும் கேட்டார்கள்.

இன்று அப்படியே மாறிவிட்டது ஒவ்வொரு ஊர்களிலும் ஐம்பது சதவீத இளைஞர்கள் தங்களின் ஊர்களில் இல்லை; பலரும் படிப்புக்காகவும், சிலர் வேலைக்காகவும், நகரங்களை நோக்கி அன்னிய நாட்டை நோக்கி, பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒருகாலத்தில் விமானப் பயணம் என்பது பெரிய விசயமாக இருந்தது. இன்று அது நம்மஊரு மினிபஸ் பயணம் மாதிரி ஆகிவிட்டது.
காலையில் சென்னையில் பார்த்தவரை சில மணி நேரங்கழித்து துபாயில் அல்லது சிங்கையில், சவுதியில் பார்க்கமுடிகிறது. தூரம் என்பதை இன்றைய விஞ்ஞானம் சுறுக்கிவிட்டது.

மீண்டும் துபாய் வந்தேன் நண்பன் சிகாபுதீன் ஆவலுடன் ஊர்செய்திகளை கேட்பான் அதை நாள் கணக்கில் சொல்லி காண்பிப்பேன். சொல்லுவதற்கும் அதை கேட்பதற்கும் மிக இனிமையாக இருக்கும்.

பணிமுடித்து இரவு நேரங்களில் பக்கத்து தெருவில் பணிப்புரியும் தேரிழந்தூர் கொல்லி பஷீர், தேரிழந்தூர் சபீருல்லா, அத்திக்கடை நைஸ்காதர் இவர்களுடன் கதைகள் பேசுவதுண்டு. நாங்கள் மட்டுமல்ல பலரும் அன்றாட அரபு வீடுகளில் நடைபெறும் கலாட்டாக்களை கூறுவார்கள் அங்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை போல் கலகலப்பாக இருக்கும்.
பல அரபு வீடுகளில் இலங்கை இளைஞிகளும் பணிப்புரிவார்கள் அதே வீட்டில் வாகனம் ஓட்டுனராக, சமையலராக பணிப்புரிவர்களிடையே காதல் மலர்ந்து சிலர் திருமணம் செய்துள்ளார்கள், சிலர் ஏமாற்றவும் செய்திருக்கிறார்கள்.

அரபிகளுக்கு இந்த காதல் விவகாரம் தெரிந்தால் உடனே இருவருடைய விசாவையும் ரத்து செய்து அவரவர்களின் நாடுகளுக்கு அனுப்பிவைத்து காதலைப் பிரித்து விட்டிருக்கிறார்கள்.
துபாய் தமிழ் பஜாரில் இருந்த ஹவாய் ஸ்டோரை எப்பவும் மறக்க முடியாது காரணம் தமிழ் வாரஇதழ்கள் புத்தகங்கள் அங்குதான் எனக்கு கிடைத்தது. அதில் பணிப்புரிந்த ஆக்கூர் அமீன் அன்று நண்பராக இருந்தார் இன்று குடும்ப நண்பராக இருக்கிறார்.

புத்தகங்களை பறிமாறிக் கொண்டதினால் கிடைத்த நட்புதான் திருவாருர் ஒலிமுஹம்மது. எனது எழுத்து ஆர்வத்தை புரிந்துக் கொண்ட அவர் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பார். நாளடைவில் எங்களின் நட்பு வளர்ந்து குடும்ப நட்பாக மாறியது. என்ன செய்ய! அந்த நட்பு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பின் முருங்கை மரம் போல முறிந்து போனதே!.
மனம் எப்பவும் குரங்குதான் கையில் தடியுடன்தான் நடக்க வேண்டும். அவ்வபோது மனதுக்கு ரெண்டு போடு போடவேண்டும் இல்லையென்றால் அது நம்மை போட்டுவிட்டு மனம் வலிக்குதே எனப் பாடவும் செய்யும் அதுதான் மனம்.

எழுத்து அல்லது படிப்பு இப்படி இருக்கும் எனக்கு இந்த வாடையே பிடிக்காத சில நண்பர்களின் பார்வையில் அரை கிருக்கனாகத் தெரியப்பட்டேன். புதிய நண்பர்களை கண்டால் நான் விடுவதில்லை எதையாவது நான் எழுதியதை கொடுத்து படிக்கச் சொல்லி கருத்துக் கேட்பேன் அதில் ஆர்வம் எனக்கு.

ஒருமுறை ஒரு நண்பர் கடிதம் எழுதிக்கேட்டார் நானும் எழுதிக் கொடுத்தேன் ரொம்பவும் கௌரவமாக பழகினார் நான் எழுதித் தந்து கடிதத்தை வைத்து என்னை புகழ்வார் அவருடைய புகழ்ச்சி என்னுடைய கதை கவிதைகளை அவரிடம் காண்பிக்க வேண்டும் என்ற ஆவலைக் கொடுத்தது.

ஒருநாள் எனது அறைக்கு வந்து பேசிக்கொண்டிருந்தார் அப்போது இதுதான் சமயம் என எனது இரண்டாவது நாவலான யார் அந்தக் குற்றவாளி? –யை அவரிடம் நீட்டினேன். படித்துவிட்டு சொல்லுங்கள் என்றேன்.

எந்த ஆரவாரமுமில்லாமல் வாங்கி வைத்துக் கொண்டு இன்னொரு நாளைக்கி படிக்கிறேனே என்றார். அந்த வார்த்தை எனக்கு அவரிடமிருந்த ஆர்வத்தைக் குறைத்தது.
கடிதம் எழுதவேண்டும் என்றார் அடிக்கடி என்னிடம் கடிதம் எழுதிக் கேட்கிறாரே அவருக்கு எழுதத்தெரியாதா? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஒருமுறை உங்கள் கையெழுத்து அழகாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இன்னொருமுறை எனது கதையை படிக்க கொடுத்தபோது சொன்னார் எனக்கு எழுத படிக்கத் தெரியாது அதை உங்களிடம் சொல்ல வெட்கப்படுகிறேன் என்றார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது அவரைப் பார்த்தால் படித்தவர்போல தோற்றமளித்தார். பாவம் அவருக்கு எழுத படிக்கத்தான் தெரியாது ஆனால் நன்றாக பழக்தெரிந்திருந்தார். அவரைவிட வயதில் குறைந்தவனாக இருந்தாலும் மரியாதையுடன் எப்பவும் நடந்துக் கொண்டார்.

சிலர் எழுதப் படிக்கத் தெரியாமல் தங்களின் குடும்பத்தினருக்கு மனைவிக்கு கடிதம் எழுதத் திண்டாடிக்கொண்டிருந்த அந்த காலக்கட்டத்தில் டேப் ரிக்காடு பெரிதும் அவர்களுக்கு பாலமாக இருந்தது.

பெரும்பாலும் பூங்காக்களில் பாக்கிஸ்தானிகளும் இந்தியர்களும் டேப்ரிக்காடில் தங்களின் எண்ணங்களை கடிதங்களாகப் பதிவு செய்துக் கொண்டிருப்பார்கள்.

பதிவைத் தொடர்வோம்…

Sunday, January 2, 2011

பாதுகாப்பில்லாத சுதந்திரத்தாய்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன் 2011 ல் புதுப்பொலிவுடன் நாம்மலர்வோம்…

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 தொடர் - 9

இது ஒரு பாலை அனுபவம்

அவசரமாக விமானம் மீண்டும் துபை விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டது ஏதோ சிறிய பிரச்சனை அதை ஒருமணி நேரத்தில் சரிசெய்துக் கொண்டு நமது பயணத்தை தொடரவோம் என்று அறிவிப்பு செய்தார்கள்.

ஒரு மணி நேரத்திற்குப்பின் அனைவரும் விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தில் ஓய்வு எடுங்கள் என்று கூறி இறக்கிவிட்டார்கள். ஓய்வில் அமர்ந்த எனக்கு உறக்கம் வரவே உறங்கிப்போனேன் சில மணிநேரங்கள் நன்றாக உறங்கிய எனக்கு திடீரென விழித்துப் பார்க்க என்னுடன் விமானத்தில் வந்த ஒருவரையும் அங்கு காணவில்லை.

ஆஹா…நம்மள தவிக்கவிட்டுட்டு பறந்துட்டாங்களேன்னு என்னை நானே நொந்துக் கொண்டு செய்வதறியாது திண்டாடி அங்குமிங்கும் அழைந்த எனக்கு ஒரு பெரிய வரிசையில் பயணிகள் நிற்பதைக் கண்டு எனக்கு நிம்மதி பிறந்தது.

அந்த வரிசையில் நானும் என்ன ஏது என்று கேட்காமல் நின்றேன். இறுதியாக அந்த வரிசை எங்களின் பாஸ்போர்ட்களை சேகரித்துக் கொண்டிருந்தது அப்போதுதான் வாய்திறந்து ஏன் என்று கேட்க விஸா கேன்சல் ஆகாதவர்கள் தங்களின் வீடுகளுக்கு சென்றுவிட்டு மதியம் 2.00 மணிக்கு வந்தால்போதும் என்று அதிகாலை 4.00 மணிக்கு கூறினார்கள்.

நானும் பலரைப்போல பாஸ்போர்ட்டை கொடுத்து விட்டு நண்பன் சிகாபுதீன் ரூமிற்கு சென்று கதவைதட்ட அவன் திறப்பதற்கு அஞ்ச பல சத்தியங்களை சொல்லி திறந்துவிடக்கோரி திறந்த அவனுக்கு பெருத்த ஆச்சர்யம் அதிர்ச்சி.

நடந்த விசயங்களை சொன்னதும் மதியம் சாப்பாட்டைக் கொடுத்து என்னை மீண்டும் விமானம் நிலையம் அனுப்பி வைத்தான். மாலை ஆறுமணிக்கு விமானத்தில் அமர்ந்து அது புறப்படுவதற்கு முன் டமாரென சப்தம் வரவே பயணிகள் கூச்சலிட்டார்கள் மீண்டும் அந்த விமானம் ஓரங்கட்டப்பட்டு விமான நிலையத்திற்குள் அனைவரையும் போகச் சொல்ல அப்போதுதான் பலரும் சப்தமாக பேசினார்கள்.

வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பார்களே அப்படி வாய்உள்ளவர்கள் ஏர்லைசன்கார்களிடம் சண்டைபிடித்து வேறு விமானத்தில் பறந்தார்கள். என்னைப்போன்ற வேடிக்கை மனிதர்கள் சிலர் எப்போதும்போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
அடுத்தது என்ன என்பதை தெரிந்துக் கொள்ள முயற்சி செய்தேன் ஏர்லைன்ஸ் பணிப்பெண் கூறினாள் இன்று இரவு நீங்கள் அனைவரும் தங்குவதற்கு ஹயாத் ரிஜென்ஸி ஹோட்டல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது இன்னும் சற்று நேரத்தில் உங்களை அழைத்துச் செல்வோம் நாளை காலையில் அமெரிக்காவிலிருந்து புதிய விமானம் வருகிறது அதில் நீங்கள் அனைவரும் பத்திரமாக அனுப்பி வைக்கப்படுவீர்கள் என்றார்கள்.

அவ்வளவு பெரிய ஹோட்டலில் தங்குவதற்கு ஆசையோ ஆவலோ என்னிடம் இல்லை ஆனால் இப்படியொரு வாய்ப்பை இறைவன் தந்திருக்கிறான் அதை மறுக்க முடியுமா என்ன?
எனது நண்பனுக்கு மிக்க சந்தோசம் அவனே இந்த ஹோட்டலில் தங்கியதைப்போன்ற உணர்வைப்பெற்றான்.

ஹயாத் ரிஜென்ஸி ஹோட்டலின் சுழற்சி உணவகத்தில் இரவு உணவருந்திவிட்டு துபையின் அழகை கண்டபோது இருட்டாகவே இருந்தது. அன்று இருண்டு போயிருந்த பலருடைய வாழ்க்கைக்கு துபை ஒளிகொடுத்து இன்று பிராகசப்படுத்திக் கொண்டிருக்கிறது தன் நகரத்தைப்போல என்றாலும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வளர்ச்சி என்பது அவர்கள் சென்ற வழியைப்பொருத்தும் இருக்கிறது.

மறுநாள் காலை 8.00 மணிக்கு எங்களை மீண்டும் விமான நிலையம் அழைத்துப்போக புதிய விமானம் அமெரிக்காவிலிருந்து காலை 10.00 மணிக்கு வந்து எங்களை பம்பாய் நகரத்தில் கொண்டுச் சேர்த்தது இத்தனை ஆண்டு அனுபவத்தில் இதுபோன்ற நிகழ்வு நடந்ததில்லை.
அங்கிருந்து சென்னை வந்துச் சேர்ந்தது பெரும்பாடு சென்னையிலிருந்து தனி ஆளாக வீடு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

ஏதோ அரபு நாட்டுல காசு ரோட்டிலே கிடந்து பொறுக்கிட்டு வருகிறமாதிரி நின்னவன், போறவன், பார்த்தவன், பேசினவன்னு காசை கறப்பதிலேயே குறியாக இருந்தார்கள். இதுமாதிரி சிமரங்களிலிருந்து விடுபடுவதற்குதான் உறவினர்கள் தங்கள் ஊர்களிலிருந்து வாடகைக் கார் அல்லது சொந்த வாகனத்துடன் வந்து அழைத்துச் செல்கிறார்கள்.

தற்போது சில டிராவல்ஸ்கள் அந்த வேலைகளை செய்துக் கொண்டும் வருகிறது. பாதுகாப்பு என்பது பிழைக்கபோன இடத்தில் கிடைக்குமளவு நம் சுதந்திர தாய் நாட்டில் இல்லை என்பது வருத்தத்திற்குரிய விசயம்.

இது முப்பது ஆண்டுமுன்னாடி நடந்தது மட்டுமல்ல இன்றும் தனிமனித பாதுகாப்பு என்பது நம் நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் இல்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

இது போன்ற பல உண்மைகளை இன்னும் பார்ப்போம்…