உங்கள் வருகைக்கு நன்றி...

Sunday, November 22, 2009

தங்கத்தில் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்...7 (நிறைவு)



தங்கத்தின் விலை ஏறி இறங்குவது போல வைரத்தின் விலையிலும் ஏற்றம் இறக்கம் இருக்கிறது.

இந்த விலையை இணையத்தில் தினமும் நாம் காணலாம். அதன் முகவரி
(www.rapaport.com)
அதில் VVS-1,VVS-2,VS-1,VS-2,SI-1,SI-2

இதன் விலைகளை கேரட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கிறார்கள்.

வைரத்தை சோதிப்பதற்கு இன்று பல கருவிகள் உள்ளன.சாதரன கல்லையும் வைரத்தையும் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
சிலர் ராசிப்பார்த்து தான் கல்லை வாங்குவார்கள்.வைரம் சிலருக்கு ராசி இல்லை என்று நம்புவார்கள்.இது அவரவர்களின் நம்பிக்கையை பொருத்த விசயம்.
பிறந்த மாதங்களை வைத்து கற்களை தேர்வு செய்கிறார்கள்.
அசலான கல்கலுக்கு சில தன்மைகள் இருப்பதாக சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வைரக்கல்லை பரிசோதிக்கும் கருவி

ஆபிரிக்கா கனடா இந்தியா பிரேசில் ரஷ்யா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வைரங்கள் கிடைக்கிறது.
ஆண்டுதோறும் ஏறத்தாழ 130 மில்லியன் காரட் (26இ000 கிலோ கிராம்) வைரம் எடுக்கப்படுகிறது.

உலகத்திலேயே வைரக்கல் பட்டைத்தீட்டக் கூடிய பெரிய மையம் பெல்ஜியத்தில் இருக்கிறது.
நம் நாட்டில் மும்பை சூரத், ஹகமதாபாத், பஹவாங்கர் குஜராத்திலும் சிறு சிறு மையமாகவும் இருக்கிறது. இந்த தொழிலில் சுமார் பத்துலட்சம் பேர்கள் ஈடுபட்டுள்ளார்கள். நம் நாட்டில் வைரத்தை வெட்டி அதிகமாக பட்டைத்தீட்டல் செய்து அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
இன்று வளைகுடா நாடுகளில் இந்தியாவில் பட்டைத் தீட்டப்பட்ட வைரங்களே அதிகமாக புலக்கத்தில் உள்ளது.
ஆனால் பெல்ஜியத்தில் பட்டைத்தீட்டப்பட்ட கல்லுகளுக்கு சந்தையில் தனித்துவம் கிடைக்கிறது. அதன் விலையிலும் மாறுதல் இருக்கிறது.

பெல்ஜிய மையத்தைப்பற்றி தமிழ் பண்பலையில் வெளியான செய்தியில்,

பெல்ஜியத்தின் அண்டவிப் ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய துறைமுக நகரமாகும். உலக வைரக்கல் மையம் என்று அழைக்கப்படுவதால் அது மேலும் மக்களைக் கவர்கிறது.

உலகில் பத்து வைரக்கல்களில் 7 இந்த நகரில் பட்டை தீட்டப்படுகின்றன. என்று கூறப்படுகின்றது.
அண்டவிப் நகரின் மிக பெரிய வைரக்கல் கடையின் 1000 சதுர மீட்டர் பரப்புடைய காட்சி அறையில் வைரக்கல் பட்டை தீட்டப்படுவதை இலவசமாக பார்வையிடலாம்.
இந்த நகரில் தயாரிக்கப்பட்ட வைரக்கல் வரி விலக்கு என்ற சலுகையுடன் ஏற்றுமதி செய்யப்படலாம்.
அண்டவிப் நகரின் வைரக்கல் பட்டை தீட்டும் வெட்டு கலை உலகில் முதல் தரமுடையது. அங்குள்ள மக்கள் இதனால் பெருமைப்படுகிறார்கள். இந்தத் தீட்டும் வெட்டு முறை ஏற்கனவே 600 ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றது. பட்டை தீட்டப்பட்ட வைரக்கல் மேலே 33 பக்கங்களும் கீழே 24 பக்கங்களும் கொண்டுள்ளது. இந்த வடிவ வைரக்கல் மிகவும் ஒளிமயமானது.
இந்த வடிவம் உலகில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பத்து கிராமுடைய ஒரு வைரக்கல் அண்டவிப் கலைஞர்களால் பட்டை தீட்டப்பட்ட பின் அதன் எடை 5 கிராம் மட்டும் இருக்கும். மற்ற 5 கிராம் எல்லாம் சிதறிவிடும்.
அண்டவிப் நகரில் உள்ள வைரக்கல் தெரு S வடிவில் உள்ளது. மொத்தம் 4 வைரக்கல் விற்பனை மையங்களில் 3 இந்த தெருவில் உள்ளன. 300 நிறுவனங்களின் வைரக்கல் விற்பனை மையத்தில் ஒரு மின்னணு சாவடியில் நுழைவு அட்டை காட்டிய பிறகு தான் நுழைய முடியும் என்று கூறுகிறது.

நாம் எதைவாங்கினாலும் அதைப்பற்றிய விபரங்களை கொஞ்சமாவது விளங்கிக் கொண்டு வாங்கினால் நாம் ஏமாற்றத்திலிருந்து காக்கப்படுகின்றோம்.

தெரிந்தவர்களிடம் கேட்கலாம் அல்லது இணையத்தில் தேடலாம்.

இன்றைய சூழலில் தங்கமும் வைரமும் விலையில் பெரும் ஏற்றத்தைக் கண்டுள்ளதால் அவைகளில் நாம் கொடுக்கக் கூடிய பணத்திற்கான மதிப்பு இருக்கிறதா என்பதை உறுதி படுத்திக் கொண்டு வாங்குவது சிறந்தது .
ஏமாற்றக் கூடியவர்கள் அதிகம் இருப்பதால் ஏமாறுபவர்களும் அதிகமாகவே இருக்கிறார்கள்.
ஆதலால் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் நம் பணத்தையும் தரத்தையும் இழந்திடாமல் காப்பாற்றலாம்.

இந்த தொடர் கட்டுரைக்கு பலர் வாழ்த்துக்கள் கூறினார்கள் சிலர் சந்தேகங்களையும் கேட்டார்கள்.

கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி…நிறைவு…!

Monday, November 16, 2009

தங்கத்தின் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்....6


தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்ற செய்தி பரவிவருவதால் ஏற்கனவே தங்கத்தில் பிஸ்கட்டுகளாக வாங்கி வைத்திருப்பவர்கள் லாபத்தில் இருந்தாலும் அதை விற்பனை செய்வதற்கு முன்வர வில்லை.

விலை இன்னும் ஏறும் என்ற எதிர்ப்பார்ப்பில் பலர் முதலீட்டின் நோக்கத்துடன் தங்கக்கட்டிகளை வாங்கி குவித்துக் கொண்டு வருகிறார்கள்.அதனால் துபாய் தங்க சந்தையில் தங்கக்கட்டிகள் வாங்குவதற்கு சில தினங்களாக தட்டுப்பாட்டில் இருக்கிறது.

ஒரு அவுன்ஸ்க்கு 3டாலர் பிரிமியம் என்ற கணக்கில் தங்கக்கட்டிகளை விற்பனை செய்த மொத்தவியாபாரிகள் தற்போது 6 டாலர் என்ற கணக்கில் விற்பனை செய்துவருகிறார்கள்.காரணம் டிமாண்ட் என்கிறார்கள்.

இந்த ஏற்றம் எதிர் வரும் ஜனவரி பிப்ரவரி வரை தொடரலாம் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இன்னும் சீன வருட பிறப்புக்கு பின் குறையலாம் என்று சீனர்கள் கருத்து கூறுகிறார்கள்.

எனவே முதலீடு என்ற எண்ணத்தில் இறங்கக்கூடியவர்கள் கவனமாக இறங்கலாம்.

சமீபகாலமாக வைரத்தின் விளம்பரங்களை நிறைய காண்கிறோம்.வைரக்கல் மோதிரம் ,வைரத்தோடு ,வைரநெக்லஸ் இப்படி வைரத்தில் நிறைய நகைகள் பலரை கவர்ந்து வருகிறது.

வைரத்தில் நகைகளை வாங்கக்கூடியவர்கள் வைரத்தைப்பற்றி அறிந்திருக்கிறார்களா.? என்றால் பலருக்கு அது சூனியமாகவே இருக்கிறது.
சாதாரண அமெரிக்கன் ஜர்கோன் கல்லையும் வைரக்கல்லையும் காண்பித்து எது வைரம் என்றால் திணறிப்போவார்கள்.

இந்த அறியாமை பலரை ஏமாறவைக்கிறது.தங்கத்திலிருந்து இரண்டு மூன்று மடங்கு அதிகமான விலையில் வைரநகைகளின் விலைகள் இருக்கிறது.

வைரத்திலும் தரம் இருக்கிறது அதற்கும் கேரட் இருக்கிறது.தங்கம் காப்பரின் அளவில் தரம் பிரிக்கப்படுகிறது.
வைரம் அதன் நிறம் கட்டிங் எடை இவைகளில் தரம் பிரிக்கப்படுகிறது.

வைரத்தின் தரம்

விவிஎஸ்-1 (VVS-1)
விவிஎஸ்-2 (VVS-2)
விஸ்-1 (VS-1)
விஸ்2 (VS-2)
எஸ்ஐ-1 (SI-1)
எஸ்ஐ-2 (SI-2)

இது தரத்தின் பெயர்கள்.அதன் நிறத்தை சி(C) டி(D) இ(E) எப்(F) ஹச்(H) ஐ(I) என ஆங்கில அரிச்சுவடி வார்த்தைகளில் நிறத்தை நிர்ணயித்துள்ளார்கள்.

விவிஎஸ்-1(VVS-1) சி(C) நிறத்தில் உள்ள வைரம் விலை அதிகம். தரம் நிறைந்ததாகும். பெரும்பாலும் கடைகளில் விஎஸ்-2(VS-2) மற்றும் எஸ்ஐ-2(SI-2) இந்த ரக வைரங்களை மோதிரம், நெக்லஸ்சில் பொருத்தி விற்பனை செய்கிறார்கள்.

விவிஎஸ்-1 (VVS-1)C நிறத்தின் ஒருகேரட் விலை $ 3500 அமெரிக்கன் டாலராகும்.
விஸ்-2 (VS-2)ஒருகேரட் $ 400 டாலராகும்.
ஒருகேரட் என்பதின் எடை 0.10 மில்லியாகும்.
போடிவைரக்கற்களை பதித்து அத்துடன் சில கலர் கற்களையும் பதிதத்து ஒரு நெக்லஸ் $ 5000 டாலர் என்று விற்பனை செய்வார்கள். தள்ளுபடி 25% அல்லது 50% சதவீதம் என்பார்கள்.

நாம் வாங்கிய சில மாதங்கள் கழித்து அதை விற்பனைக்கு கொடுத்தால் வைரத்திற்கு மதிப்புப்போட மாட்டார்கள். தங்கத்தின் எடைக்கு மட்டும் விலை நிர்ணயித்து அதற்கான தொகையை தருவார்கள். காரணம் வைரத்தின் தரம் எஸ்ஐ-2 என்ற குவாலிட்டியைச் சார்ந்தது. அதற்கு வாங்கும்போது மதிப்பிருக்கிறது. விற்கும் போது மதிப்பில்லை.

அதேநேரத்தில் விவிஎஸ்-1 அல்லது விவிஎஸ்-2 போன்ற வைரக்கற்கள் பதித்த நெக்லெஸ் வாங்கும் போது விலை அதிகம் . விற்கும்போதும் அதே விலை இல்லையென்றாலும் 75 சதவீதம் அதனுடைய தொகை திரும்ப கிடைக்கும்.

வைரத்தைப்பற்றி இன்னும் கொஞ்சம் தொடர்வோம்…

Tuesday, November 10, 2009

தங்கத்தில் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்...5


தங்கத்தின் விலை அவுன்ஸில் நிர்ணயிக்கப்படுகிறது.ஒரு அவுன்ஸ் என்பது 31.1035 கிராம் எடைகொண்டதாகும்.
உலக வர்த்தகசந்தையில் அவுன்ஸ் அளவின்படி அமெரிக்க டாலரில் விலை கோடிடுவார்கள்.இணையத்தில் கிட்கோ டாட்கம்மில் தங்கம் வெள்ளி பிளாட்டினம் ஆயில் கரண்சி போன்றவைகளின் விலையை டாலரில் காணலாம்.
தற்போது ஒரு அவுன்ஸின் விலை 1100-டாலர்.
இது இன்னும் ஏறுமா இறங்குமா…? என்று பலரின் கேள்வியாக இருக்கிறது.

கடந்த ஆண்டு 2008 ஆகஸ்ட் செப்டம்பரில் தங்கத்தின் விலை அவுன்ஸ் 685 டாலர் வரையில் இறங்கியது.அந்த தருணத்தில் பலர் இன்னும் இறங்கும் என்று எதிர்ப் பார்த்தார்கள்.ஆனால் ஏறத்தொடங்கியது.டிசம்பரில் 900 டாலராக அவுன்ஸின் விலை ஏற்றத்தைக்கண்டது.

ஜனவரி பிப்ரவரியில் தங்கத்தின் விலை அவுன்ஸ் 1200 வரை வரும் என்று நிபுணர்களின் கணிப்பு இருந்தது.அந்தச் சமயத்தில் அவுன்ஸ் 920 டாலராக இருந்தது.

ஆனால் பிப்ரவரியில் விலை ஏற்றம் நாளுக்கு நாள் 20 டாலரிலிருந்து 30 டாலர்வரையில் ஏறி 1005- சை தொட்டது.ஆனால் அது நீடித்து நிற்கவில்லை. மீண்டும் ஆயிரத்திலிருந்து படிப்படியாக குறைந்து 875 டாலர் வரையில் இறங்கியது.மீண்டும் 950 வரையில் சென்று ஏற்ற இறக்கம் கண்டது.

ஆகஸ்ட் 2009 தங்கவிலை கடுமையாக இறங்கும் என்று பல வல்லுனர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் எதிர்ப்பார்ப்புக்கு நேர் எதிர்மறையானது தங்கவிலை.
பலகாரணங்கள் பலரால் கூறப்படுகிறது.

1.பங்கு சந்தை சரிவினால் முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி படையெடுக்கிறார்கள்.

2.இணையதள வர்த்தகத்தால் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு.

3.அமெரிக்காவின் பொருளாதார சரிவினால் டாலரின் மதிப்பு உலக நாடுகளுக்கிடையில் குறைகிறது.அதனால் தங்கம் விலை ஏற்றம்.

4.சீனா இந்தியா இங்கிலாந்து போன்ற நாடுகள் டன் கணக்கில் தங்கம் வாங்கியிருப்பதினால் தங்கவிலை ஏறுகிறது.

5.தென்ஆப்ரிக்காவில் மின் தட்டுப்பாட்டின் காரணமாக தங்கச் சுரங்கங்கள் மூடப்பட்டிருப்பதினால் உலகில் தங்கக் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது அதனால் தங்கத்தின் விலை ஏற்றம்.

6.ஆயில் விலை கூடிவிட்டது அதனால் தங்கத்தின் விலையில் ஏற்றம் என்றார்கள்.இன்று ஆயிலின் விலை 100 சதவீதம் இறக்கம்.ஆனால் தங்கம் ஏற்றம்.

இப்படி பல காரணங்கள் சொல்லப்படுகிறது.எத்தனை காரணங்கள் சொல்லப்பட்டாலும் தங்கத்தின் விலை 1990-லிருந்து சுமார் 19 வருடங்களில் இன்று வரையில் 450 சதவீதம் விலை கூடி இருக்கிறது.

பங்குசந்தையை பொருத்தமட்டில் 21000 சென்ஸஸ் அதிகபட்சமாக சென்றிருந்தாலும் அதன் இறக்கம் 7000 சென்ஸஸ் வரையில் இறங்கி பல பெரிய நிறுவனங்களின் பங்குகளின் விலை கடுமையாக சரிந்து மீண்டும் ஏறி வருகிறது. ஆனால் தங்கம் ஏறும் முகமாக இன்று வரையில் இருந்து வருகிறது.

ஆதலால் அதிகபட்சமாக பணம் வைத்திருப்பவர்கள் தங்கத்தில் குறுகிய கால முதலீடாக இல்லாமல் நீண்டகால முதலீடாக வைத்திருக்க நினைப்பவர்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.இது அவரவர்களின் விருப்பத்தை பொருத்ததே.

இந்தப் படத்தைப் பார்த்தலே தெரியும்....தங்கவிலை ஏறியதின் காரணம்.


தங்கம் விலை ஏறிவருவதினால் தங்கக் கடைகாரர்களுக்கு கொள்ளை லாபம் என்று பலர் கருதுவது உண்டு.உண்மையாகவே தங்க ஏற்றத்தில் அவர்களுக்கு லாபம் கிடைக்கிறதா என்று கேட்டால் வெகு சிலருக்கு கிடைக்கலாம் ஆனால் பெரும்பாலோருக்கு கிடைக்க வாய்ப்பு குறைவு.

காரணம் இது ஒருவகையான சூதாட்ட வியாபாரம் (கேம்லிங்).
ஒரு கடைக்காரர் தன்னுடைய கடைக்கு ஐந்து கிலோ தங்கம் கொள்முதல் செய்கிறார் என்றால் அந்த ஐந்து கிலோவிற்கு சுத்ததங்கமாக கொடுப்பார்.அல்லது அதற்கு நிகரான தொகையை கொடுத்து விடுவார்.

பணமாக கொடுக்கும் பட்சத்தில் அன்றை விலை ஒரு கிராம் ஆயிரம் ரூபாய் என்றால் அந்த விலையை அவர்நிர்ணயம் செய்து உறுதிபடுத்த வேண்டும் (பிக்ஸிங்) .விலையை நிர்ணயிக்காமல் உறுதிபடுத்தாமல் (அன்பிக்ஸ்) வாங்கி இருந்தால் சில நாட்களில் தங்கத்தின் விலை 1200 என்று ஏறும் போது அவர் ஒரு கிராமுக்கு 200 ரூபாய் வித்தியாச தொகையை செலுத்தவேண்டும்.

அதே விலை 800 ரூபாயாக குறைந்தால் அவர் தான் வாங்கிய ஐந்து கிலோ தங்கத்தை பிக்ஸ் பண்ணினால் 200 ரூபாய் கொள்முதல் செய்தவரிடம் திரும்பப் பெற்றுக் கொள்வார்.

பெரும்பாலான கடைகளில் தினசரி வியாபாரங்களில் விற்பனையான தங்க எடைக்கு உடனே கொள்முதல் செய்பவர்களிடம் பிக்ஸ் அன்றைய விலையை நிர்ணயம் உறுதி செய்துக் கொள்வார்கள்.அப்படி செய்யாமல் ரெஸ்க் எடுத்தார்களென்றால் ஆபத்தில் தான் முடியும்.

இந்த விலை நிர்ணயத்திற்கு காலஅவகாசம் உண்டு.ஒவ்வொரு மொத்தவியாபாரிகளும் ஒரு கணக்கை வைத்திருப்பார்கள்.

விலை நிர்ணயிக்கப்படாத கடைக்காரர்கள் (அன்பிக்ஸ்ஸில்) பலர் நடுரோட்டுக்கே வந்துமிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இன்னும் தொடர்வோம்….

Sunday, November 8, 2009

தங்கத்தில் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்...4


இப்போதெல்லாம் நாம் தொலைக்காட்சியில் அடிக்கடி நகைக்கடைகளின் விளம்பரத்தை காணலாம்…சேதாரம் இல்லை செய்கூலி இல்லை …என்று மக்களை கவர்கிறது இந்த வாசகங்கள்.
சேதாரமும் செய்கூலியும் இல்லாமல் நகைகள் தயாரிக்கப்படுகிறதா…?
அல்லது பேஷன் மாறிப்போன துணிகளை தள்ளுபடி என்ற பெயரில் விற்கிறார்களே அது போன்று பழைய டிசைன் நகைகளை அப்படி ஏதும் விற்பனை செய்கிறார்களா…? என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது.

சேதாரம் இல்லாமல் நகைகள் தயார் செய்யப்படுவதே இல்லை.

பட்டறைகளில் தொழிற்சாலைகளில் செய்யப்படும் நகைகளுக்கு கண்டிப்பாக சேதாரம் உண்டு.
மொத்த வியாபாரிகள் வாங்கக்கூடிய நகைகளுக்கு அதாவது 916 க்கு அவர்கள் 920 என்றக் கணக்கில் 4 சதவீதம் சேதாரத்துடன் கொடுத்துதான் வாங்குவார்கள்.இது கல்கள் இல்லாத நகைகளுக்கு மட்டும்.

கல்வைத்த நகைகளுக்கு சேதாரம் இல்லை காரணம் கல்லின் எடை தங்கத்துடன் சேர்ந்துக் கொள்வதால் செய்கூலி சேதாரம் இல்லாமலேயே மொத்த வியாபாரிகள் வாங்குவார்கள்.
ஆனால் கல்பதித்த நகைகளை செய்யும்போதும் சேதாரம் ஏற்படும்.சேதாரம் இல்லாமல் நகைகள் செய்யப்படுவதில்லை.

பழைய நகைகளாக இருந்தாலும் அதை பாளீஸ் செய்து சூடுபத்திய திரவங்களில் நனைத்து அதிலுள்ள அழுக்குகளைப் போக்கி புதிய நகைப்போல விற்றுவிடுவார்கள்.
கல் வைத்த ஓரு மோதிரம் செய்வதென்பது
முதலில் மோல்டிங் செய்யப்படவேண்டும் மோல்டிங் செய்ய நகை செய்பவரால் கூலி மற்றும் சேதம் கொடுக்க படுகிறது.

பின்னர் அளவு தட்டி ராவி சுத்தம் செய்ய படுகிறது . அளவு தட்டும் போதும் ராவும் போதும் சேதம் ஏற்படும் . அடுத்து மோதிரம் பம்பிங் முறையில் மெருகு ஏற்ற படுகிறது. இதிலும் சிறிது சேதம் ஏற்படும். பின்னர் கல் வைத்து செதுக்க படுகிறது. கல்வைக்க செதுக்க நகை செய்பவரால் கூலி மற்றும் சேதம் கொடுக்க படுகிறது. பின்னர் நீர் மெருகு போடப்பட்டு மோதிரம் இறுதி வடிவம் அடைகிறது.

இவ்வளவு வேலைகள் செய்துவிட்டு சேதாரம் இல்லை செய்கூலி இல்லை என்று விளம்பரம் செய்கிறார்களே…தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்களா…? பொது மக்களை ஏமாற்றுகிறார்களா…?

சேதாரம் செய்கூலி இல்லாத நகைகளில் தரத்தினை சோதனைச் செய்துப் பாருங்கள் . இது ஒருவகையான மோடி வித்தைக்காரனின் மோசடியாகவே இருக்கும்.

18 கேரட்டின் நகைகள்……….
இது 750 என்ற சுத்த தங்கமும் 250 செம்பும் கலந்து செய்யப்படுகிறது.இதன் நிறம் மஞ்சளாக இருக்காது வெழுத்துப்போன நகைகளாக காட்சியளிக்கும்.சிலர் இந்த நிறத்தைக் கண்டுவிட்டு தங்கமே அல்ல என்று சத்தியம் செய்வார்கள்.

சொல்லப்போனால் அதிகமான புதிய வடிவங்களை இந்த 18 கேரட்டில்தான் வடிவமைக்க முடிகிறது. குhரணம் தங்கத்தில் கலவை அதிகமாக கூட்டினால் அதன் தன்மை கெட்டியாகும். நாம் நினைத்தபடி வடிவங்களை உருவாக்க முடியும்.
நம்ம ஊர்களில் காசிமாலை என்ற 22 கேரட் பத்து பவுன் நகையைப் பார்த்தால் பெரிதாக இருக்கும்.அதே பத்து பவுனுக்கு துபாயில் காசிமாலை வாங்கினால் பார்வைக்கு சின்னதாக இருப்பது போலத் தெரியும்… தரம் குறைவுதான் அதற்கு காரணம்.

பணக்காரர்கள் 18 கேரட்டின் நகைகளைதான் அதிகம் வாங்குபவர்களாக இருக்கிறார்கள். அதில் வைரங்களை பதிப்பதற்கு ஏற்றமான தரத்தை கொண்டதாக 18 கேரட் இருக்கிறது.
தற்போது 18 கேரட் நகைகள் பல நிறங்களில் செய்கிறார்கள்.வெள்ளை நிறம் ரோஸ்நிறம் பழுப்பு நிறத்திலும் செய்யப்படுகிறது.

தங்கம் விலை உதாரணத்திற்கு ஒரு கிராம் 18 கேரட் 1000 ரூபாய் என்றால் அதன் செய்கூலி ஒரு கிராமுக்கு 200 – 300 என்று பல வேலைப்பாடுகளுக்கு தகுந்தமாதிரி இருக்கிறது.

நம்நாட்டில் பெரிய நகரங்களில் 18 கேரட்டின் டிசைன்கள் விற்பனையாகி வருகிறது. மும்பை சென்னையிலும் சாதாரன 18 கேரட் சங்கிலிகள் வெள்ளைத்தங்கத்தில் விற்கப்படுகிறது.
ஆலோய் என்ற உலோகத்தை தங்கத்தில் கலந்து செய்த நகையை ரோடியம் என்ற அமிலத்தில் நனைத்து எடுத்தால் வெள்ளை நிறமாக மாறிவிடும்.

இப்போதெல்லாம் 22கேரட்டுகளில் வளையல்களில் வெள்ளை ரோடியம் இடப்படுகிறது. மஞ்சலும் வெள்ளை கலரும் கலந்திருப்பதினால் அழகின் மெருகு கூடுகிறது.
இன்னும் தொடர்வோம்….

Saturday, November 7, 2009

அமீரகப்பதிவர்களின் அட்டகாச அரட்டைகள்....


நவம்பர் 6 -என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் .(ஏன் என்ற பதிலை கடைசி வரியில பாருங்க)
அமீரகப்பதிவர்களின் அட்டகாச அரட்டைக்கு வெள்ளிக்கிழமை காலை 7.30க்கே
தயாரானேன்.
8மணிக்கெல்லாம் கீழைராஸாவின் சினுங்கல் ஆரம்பித்துவிட்டது.

ராஜாகமாலின் வருகைக்காக காத்திருந்து அழைத்துக் கொண்டு கீழைராஸாவின் வாகனத்தில் (கார்மேக) முகிலுடன் பிரியாணியை தூக்கிக் கொண்டு (இப்ப நாங்க தூக்கினோம் இத சாப்பிட்டதற்கு அப்புறம் எங்கள தூக்கப்போகுது) பேருந்து நின்றுக்கொண்டிருந்த இடத்திற்கு சென்றோம்.
மூக்குகண்ணாடியுடன் மூலையில் நின்றுக் கொண்டிருந்த நாஞ்சில் பிரதாப்பை நான் பேருந்து ஒட்டுனர் பாக்கிஸ்தானி என்று நினைத்துக் கொண்டேன்…பின்தான் தெரிந்தது உலகம் சுற்றும் வாலிபன் விருதை எனக்கு தந்த நாஞ்சில்பிராதாப் என்று…
கைகுலுக்கி உங்களை புகைப்படத்தில் பார்த்ததற்கும் நேரில் பார்பதற்கும் ரொம்ப வித்தியாசமிருக்கிறதே…என்று கூறிக் கொண்டேன்.அவரும் அப்படியே என்னைக்கண்டு கூறினார்.

முகில், ஹக்கீம், ஆசாத், நான்


ஆசாத்அண்ணன் சந்திரசேகர் ஹக்கீம் இவர்களும் வந்துவிடவே கைகளை கொடுத்து வாங்கிக்கொண்டு கிழக்கிற்கும் மேற்க்கிற்கும் அழைந்துக் கொண்டிருந்த எங்கள் டேராதளபதி கீழைராஸாவுடன் பேருந்து ஷார்ஜாவை நோக்கி புறப்பட்டது.

இதுவே இந்தியாவாக இருந்திருந்தால் பேருந்தில் பேனர் கட்டியிருக்கலாம் ஆனா அமீரகத்தில் அனுமதி வாங்கவேண்டும் என்றாலும் அந்தக் குறையும் இருக்கக் கூடாது என்ற ஆர்வத்தில் கீழைராஸா நான்கு போஸ்டர்களை பேருந்தினுல் அண்ணாச்சி அழைக்கிறார் என்ற வாசகத்துடன் ஒட்டி வைக்க பேருந்து ஷார்ஜா வந்து சேர்ந்தது.

காத்திருந்த ஆசிப்மீரான் (அண்ணாச்சி)கலையரசன் சுல்தான் பாய் கோபிநாத் கார்த்திக்கேயன் ஆதவன் சென்ஷி செந்தில்வேலன் லியோ இவர்கனைவரையும் அள்ளி திணித்திக் கொண்டு பேருந்து பெருமூச்சுடன் புறப்பட்டது…

நான் கல்லூரி செல்லாதவன் என்பதாலோ இந்த நிகழ்வு எனக்கு அமீரகப்பதிவர்கள் என்றக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இணைந்து செல்லும் சுற்றுலாவாகவே எனக்கு காட்சியளித்தது.

இந்த பதிவர்களுக்கு மத்தியில் வயசு தடையில்லை மதங்கள் தடையில்லை அங்கு நட்பு ஒன்றே படிகளாய் இருந்தது.

இரண்டு மணிநேர பேருந்து பயணம் எனக்கு 20 நிமிடமாகவே தெரிந்தது. வாய்விட்டு சிரித்து அளவும் வயிறும் வலித்தது.

ஒவ்வொருவர்களும் ஒவ்வொருதுறைகளில் பணிபுரிந்தாலும் அவைகளை மறந்து ஒன்றாக இணைந்து 18 வயசு இளைஞர்களாக அந்த நிகழ்வுமாற்றத்தை ஏற்படுத்தியது.

இதற்கு முன் நடந்த பதிவர்களின் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் அறிமுகம் இருந்தாலும் அதில் நெருக்கம் தெரியவில்லை.இந்த சுற்றுலா நெருக்கத்தை கொடுத்து எல்லோருடைய மனதிலும் நட்பை ஆழமாக பதித்துவிட்டது.

சில பதிவர்கள் தாயகம் சென்றிருந்ததினாலும் சிலர் வேலையின் நிமித்தமாக கலந்துக்கொள்ள முடியாத சூழ்நிலையிலாலும் அவர்களை இந்த சுற்றுலா இழந்தாலும் அவர்களை நினைவுக் கூறும் முகமாக அண்ணாச்சியும் கீழைராஸாவும் அவ்வபோது அவர்களின் பெயர்களை உச்சரித்தார்கள்.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் உடனுக்குடன் நேரடி ஒளிபரப்பை சென்ஷி அபாரமாக மடிகணினியில் தமிழ்மணத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.

வெள்ளிக்கிழமை ஜூம்மாத் தொழுகையை தொழுதுவிட்டு கோர்பக்கான் பீச்சில் பிரியாணியை இறக்கினோம்…வழக்கம்போல் சட்டி என் கஸ்டடியில்தான்…

பிரியாணி சட்டியை தூக்கிவரும் சுல்தன் பாய் ராஜாகமால்


அட....பிரியாணிய கொடுங்கப்பா.....

பிரியாணிய வச்சாச்சில்ல....


உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்பதுபோல் சிலர் சரிரத்தை சாய்த்தார்கள்.

வாழ்க்கையில் ஒருமுறையாவது கிரிக்கெட் மட்டையை பிடித்து விளையாடிவிடவேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த எனக்கு பெரிய வாய்ப்பு கிடைத்தது.
அண்ணாச்சி ஒரு அணியாகவும்
தளபதி கீழைராஸா ஒரு அணியாகவும் பிரிந்தார்கள்.

இவங்கள்ளாலம் ஆடி என்னத்த ஜெயிக்க போறங்கன்னு அண்ணாச்சி பார்க்கிறார்



நிக்கிற ஸ்டைல பார்தீங்களா...தளபதி கீழைராஸா



தளபதிக்கு எப்பவுமே சேனாதிபதியா நான் இருக்கனும் என்பதால் தளபதி அணியில் நான்.
மட்டையை பிடித்து ஆறு வீச்சத்தில் ஒரு ரன் எடுத்தேன் …பந்தை வீசி ஒருவரை ஆட்டம் இழக்கவைத்தேன். என்னை மாதிரியான வீரர்களை வைத்துக்கொண்டு அணி எப்படி ஜெயிக்கிறது…அதனாலயே எங்க அணி தோத்திடுச்சு என்றாலும்…அண்ணாச்சி அணியை ஜெயிக்க வச்சுட்டோம்.

தீவிரமான ஆட்டம்



ஜெயிச்ச டீமோடு சேர்திட்டோமில்ல....


எல்லோரையும் தனித்தனியே பேட்டிக் கண்டார் முகில். குறும்படம் வந்த பின்னாடிதான் தெரியும் பேட்டியா இல்ல பொட்டியான்னு…

எப்போதுமே அமைதியாக ஒதுங்கி இருக்கக்கூடிய எனது நண்பர் ராஜாகமால் இந்த பதிவர்களின் குழுமத்தில் இணைந்து கலகலப்பானார்.

படகுசவாரி இனிமையாக இருந்தது.அங்கு அனைவரும் சேர்ந்து பாடிய பாடல்களும்தான்.

கடல் குளியல்…அண்ணாச்சி குளிக்க வரவில்லை …யாரோ சொன்னார்கள் பெருநாளைக்குதான் அண்ணாச்சி குளிப்பாருன்னு…
முத்தெடுப்பதாக எண்ணி முகில் நத்தைகளை எடுத்தார்.
பதிவுல நன்றாக நீச்சலடிக்கும் சென்ஷி கடல்ல கரகாட்டம் ஆடுவாருன்னு எதிர்பார்த்தேன் அதை கலையரசன் செய்தார்…

அடுத்த குடும்பச்சுற்றுலாவிற்கு இந்த பீச்சை வாங்கிடலாமான்னு சுல்தான் பாயின் டிஸ்கஷன்


லியோவும் கோபியும் கும்மி அடித்தாரகள்;…சுல்தான் பாயிடம் சுறுசுறுப்பான நீச்சல். தளபதியைப் பற்றி சொல்லவே வேண்டாம் அவர் தரையிலேயே நீச்சலடிக்கக் கூடியவர் அவர் உடம்பை பார்த்துவிட்டு யாரும் ஏமாந்து விடக் கூடாது.

குளியலை முடித்துக் கொண்டு புறப்பட்டோம்…பேருந்தில் அண்ணாச்சியின் இனிமையான குரலில் பாடல்கள்…சுல்தான்பாயின் காதல் ஒவியப்பாடல்…
தளபதி கீழைராஸாவின் இஸ்லாமிய கீதம்
கலை கோபி சென்ஷி செந்தில் லியோ ஆதவன் இவர்களின் குத்துப்பாடல்கள் .

பலமுறை கோர்பகான் சென்றுள்ளேன்…வரும்போது அனைவரும் தூங்கிவிடுவது வழக்கம்…ஆனால் பதிவர்களின் இன்பச்சுற்றுலாவில் புறப்பட்டபோது எப்படி உற்சாகமிருந்ததோ அதே உற்சாகத்துடன் திரும்பி வரும்போதும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரியாவிடை கொடுத்து ஷார்ஜா வாசிகளை இறக்கிவிட்டு துபாய் வாசிகள் தளபதி கீழைராஸா நாஞ்சில் ஆசாத் அண்ணன் ராஜாகமால் ஹக்கீம் சந்திரசேகர் முகில் நாங்கள் மீதிருந்த பிரியாணியை பங்குப்போட்டு…

எங்களை ஏற்றிய இடத்திற்கே கொண்டு வந்து விட்ட எங்கள் தளபதி கீழைராஸா அவர்களுக்கு நன்றி கூறி மறக்காமல் அண்ணாச்சியை நினைவுக் கூர்ந்து விடைப்பெற்றோம்…
அண்ணாச்சி குறிப்பிட்டதைப் போல இந்த சுற்றுல வரலாற்றில் இடம்பிடிக்கக்கூடியதே…

எனது ஆரம்ப வரியில் குறிப்பிட்ட இந்த நவம்பர் 6 எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள் ஆனால் மறந்துவிட்டேன் அன்று எனது பிறந்தநாள்…அந்த நாளையே இந்த சுற்றுலா மறக்கவைத்திருக்கிறது என்றால் பதிவர்களின் சுற்றுலா எந்தளவு வெற்றி பெற்றிருக்கிறது என்பதை இதிலிருந்தே தெரிந்துக் கொள்ளலாம்…வராதவர்கள் அடுத்தமுறை மிஸ்பண்ணிடாதீங்க…

சந்தோசத்துடன் வீடுவந்தேன்…அங்கே ஒரே பனிமூட்டம்…!

Wednesday, November 4, 2009

தங்கத்தில் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்...3

கேடிஎம் எல்லா நாடுகளிலும் உபயோகிப்பதில்லை… சில நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது. அது ஒரு ரசாயனம் .(கெமிக்கல்)
கேடிஎம் இல்லாத செம்புக்கலக்காத தங்கத்துகலினால் பற்றவைக்கப்படும் நகைகளில் 916 தரம் கிடைக்கும். முன்பெல்லாம் நகை செய்பவர்கள் பற்றவைக்க பொடி என்று ஒரு கலவையை பயன் படுத்துவார்கள் . (தங்கம் + வெள்ளி +செம்பு ) இந்த மூன்றும் சேர்ந்ததுதான் பொடி . இந்த பொடியை பயன்படுத்தி நகை பற்றவைக்கும் போது பொடியில் உள்ள செம்பு இ மற்றும் வெள்ளி ஆகியவை நகை உடன் சேர்ந்து விடும் அதனால் தங்கத்தின் தரம் குறைந்து விடும் . ஆனால் கேடிஎம் வந்த பிறகு அந்த பிரச்சனை இல்லை . ஒரு கிராம் தங்கத்திற்கு நூறு மில்லி கிராம் அளவில் கேடிஎம் சேர்த்தால் போதும். பற்றவைக்க இதனை பயன் படுத்தலாம் .பற்றவைக்கும் போது ஏற்படும் வெப்பத்தில் கேடிஎம் மட்டும் தீய்ந்து போய்விடும். சுத்தமான தங்கம் மட்டும் நகையில் இருக்கும்
கேடிஎம் நகைகளைப் பொருத்தமட்டில் அதனுடைய தரம் கிட்டதட்ட 916 என்றால் 916 இருக்கவேண்டும்.
வாங்கக்கூடியவர்கள் அதை சோதித்துப்பார்பதில்லை.

தரம் பரிசோதிக்கும் லேசர் கருவி

சோதிப்பது எப்படி…?

லேபில் சோதனை செய்யும்போது நகையை உருக்கி தங்கத்தையும் அதில் கலந்திருக்கும் உலோகத்தையும் பிரித்து பார்ப்பார்கள்.அப்போது தான் அதன் தரம் விளங்கும்.ஆனால் நகை உருகுலைந்து விடும் .அதனால்தான் இன்றைய நவீன விஞ்ஞானத்தில் லேசர் கருவிகளை கண்டுபிடித்து நகைகள் உருகுலையாமல் அதன் தரத்தை சோதிப்பதற்கு உபயோகப்படுத்துகிறார்கள்.
இந்த லேசர்கருவிகள் தரக்கூடிய ரிப்போர்ட்டை சிலர் ஏற்றுக்கொள்வதில்லை.
அதிலும் முறைக்கேடுகள் நடப்பதாக கூறுகிறார்கள்.

பல பெரிய நகைநிறுவனங்களில் இந்த கருவியை வைத்து தரம் பரிசோதிக்கிறார்கள்.தங்களுடைய கடையின் பொருளை அதில் வைத்தால் 916 என்று சரியாக வருவதுபோல செட்டப் செய்திருக்கிறார்கள் என்று பலர் குற்றம் கூறுகிறார்கள்.

நெருப்பில் நைட்ரிக் அமிலத்தோடு நகையை உருக்கி அதன் கலப்பை கண்டறிவதனாலயே அதனுடைய சுத்தத்தை விளங்கமுடியும் .வாங்கிய நகையை உருகுலைக்க யாரும் விரும்புவதில்லை.

தங்கத்தை உரசிப்பார்க்கும் உரைக்கல்லும் அமிலங்களும்

தாங்கள் வாங்கிய நகை தரம் குறைவானது என்று நினைத்தால் முதலில் உரைக்கல்லில் உரைத்துப்பாருங்கள். கொல்லர்களிடம் இந்த உரைக்கல் கிடைக்கும் அல்லது உங்களுக்கு தெரிந்த நகைக் கடைகளில் கொடுத்து சோதியுங்கள். அந்த சோதனையில் அது தரம் குறைவு என்றால் லேசர் இயந்திரத்தின் மூலமும் சோதனை செய்யுங்கள் அதிலும் தரம் குறைவு என்று காணப்பட்டால் இறுதியாக வாங்கிய கடையில் நகையை திருப்பி கொடுத்து விடுங்கள். வாங்க மறுத்தார்கள் என்றால் நுகர்வேர் நீதி மன்றத்துக்கு போகப்போவதா சொல்லுங்கள் அதற்கும் மசியவில்லை என்றால் நைட்ரிக் அமிலத்துடன் நகையை உருக்கி அதன் தரத்த்தின் ரிப்போர்ட்டை வைத்து நுகர்வேர் நீதிமன்றத்தில் வழக்காடலாம்.

இதெல்லாம் நடக்கின்ற காரியமா…? என்று யோசனை செய்கிறீர்களா…?

இது நடந்திருக்கிறது. சிலர் வழக்கு பதிவு செய்து வெற்றி பெற்றுள்ளார்கள்…
பல நகைக்கடைக்காரர்கள் நீதிமன்றங்களுக்கு தங்களின் வாடிக்கையாளர்கள் செல்வதை விரும்பமாட்டார்கள் தங்கள் பெயர் கெட்டுவிடும் என்பதற்காக உடனே நகையை திரும்ப பெற்றுக் கொள்வார்கள்.
ஆதலால் நாம் வாங்கும் நகைகள் தரம்மிக்கதுதானா என்று பரிசோதித்து வாங்குங்கள்.

தங்கத்தில் முதலீடு செய்யக்கூடியவர்கள் 22 கேரட்டில் முதலீடு செய்யாதீர்கள். காரணம் ஆபரண தங்கத்தை வாங்கும் போது அதற்கான சேதாரம் மற்றும் செய்கூலி கொடுக்கவேண்டும். மீண்டும் விற்கப்படும் போது அன்றைய சந்தை நிலவரப்படி என்ன விலையோ அதிலிருந்து குறிப்பிட்ட தொகையை கழிவு செய்தே வாங்குவார்கள்.அதனால் சேதாரமும் செய்கூலியும் நமக்கு நஸ்டமாகும்.

ஆதலால் 24 கேரட் கட்டிகளை சுத்ததங்கம் 10 கிராம் அல்லது 20 கிராம் நம்மிடம் உள்ள பணத்திற்கு தகுந்த மாதிரி வாங்கிக் கொள்ளலாம். விற்கும்போது நஸ்டம் வராமல் தப்பித்துக் கொள்ளலாம்.

மொத்த வியாபாரிகள் (ஓல்சேல்) நகைகளை தொழிற்சாலையிலிருந்து வாங்கும் போது வாங்கக்கூடிய நகைகளிலிருந்து ஒரு பொருளை பரிசோதித்து தரத்தை சோதனை செய்வார்கள்.இது அமீரகத்தில் நடந்துக் கொண்டிருக்கும் வழக்கம்.

காரணம் அமீரக அரசாங்க தங்ககட்டுபாட்டு வாரியம் மூன்று மாதத்திற்கொருமுறை ஒவ்வொரு கடைகளுக்கும் வருகைத் தந்து அங்குள்ள நகைகளில் சிலவற்றை இவர்களின் பரிசோதனைக்கு எடுத்துச் செல்வார்கள்.
அப்படி எடுத்துச் செல்லும் நகைகளில் தரம் குறைவாக இருந்தால் அந்த நகைகள் அனைத்தையும் உருக்குவதற்கு கட்டளையிடுகிறார்கள்.
இரண்டாம் முறையும் இதே தரம் குறைவு என்றால் அபராதமும் ஒருமாதக்காலம் கடையடைப்பும் செய்வார்கள்.
மூன்றாம் முறை கடையின் லைசன்சை இரத்துசெய்துவிடுவார்கள்.
இந்த கட்டுப்பாட்டினால் தங்கத்தின் தரம் அமீரகத்தில் இன்று வரையில் தலைத்தூக்கி சர்வதேச சந்தையில் பெயரும் பெற்றுவருகிறது.

அமீரகத்தில் பல தொழிற்சாலைகள் இருக்கின்றன இதுமட்டுமல்லாமல் சிங்கப்பூர் மலேசியா துர்க்கி இத்தாலி இந்தோனேசியா போன்ற நாடுகளில் தயார் செய்யப்பட்ட நகைகள் அதிகம் அமீரக சந்தையில் விற்பனையாகின்றன.

அனைத்து நாடுகளின் நகைகளும் தரம்பரிசோதிக்கப்பட்ட பின்னரே விற்பனைசெய்யப்படுகிறது.அமீரகசந்தையை பொருத்தமட்டில் பல நாடுகளுக்கு நகைகளை ஏற்றுமதி செய்வதால் தரத்தில் மிக கவனமாக தங்கக் கட்டுப்பாட்டு வாரியம் இருக்கிறது.
குறிப்பாக இந்தியா இலங்கை சிங்கை மலேசியா வளைகுடாநாடுகள் மற்றும் இங்கிலாந்து அமெரிக்கா ஸ்பெயின் ஆஸ்தெரிலியா பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு துபாயிலிருந்து நகைகள் ஏற்றுமதியாகின்றது.

உலகசந்தையில் துபாய் சந்தை குறிப்பிடதக்கது.சில இந்திய நகைக்கடைகள் தங்களுடைய கிளைகள் துபாயிலும் இந்தியாவிலும் உள்ளதால் இந்தியாவில் அவர்களின் கிளைகளில் வாங்கிய நகைகளை துபாய் சந்தை விலையின்படி வாங்கிக் கொள்கிறார்கள்.அதுபோன்ற நம்பிக்கைமிக்க கடைகளில் நகைவாங்கினால் நம்முடைய பணத்திற்கு மதிப்பும் வாங்கிய பொருளில் தரமும் கிடைக்கும்…

இன்னும் தொடர்வோம்….

Monday, November 2, 2009

தங்கத்தில் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்...2


24 கேரட் என்பது சுத்தமான தங்கம். அதில் ஒரு சதவீதம் மட்டுமே காப்பர் கலந்திருக்கும்.அதை995 என்றும், 999 என்றும், 999.9 என்றும் தரத்தன்மையில் பிரிக்கப்படுகிறது.
சுத்தமான தங்கம் பல கிலோக்களில் இருக்கிறது ஆனால் அதிகமாக புலக்கத்தில் ஒரு கிலோ பாராகவும்
116.64 கிராம் பிஸ்கட் என்று அழைக்கப்படும் பத்து தோலாவாகவும் (டிடிபார்)
31.10 கிராம் கொண்ட அவுண்ஸ் காயினும் 20 கிராம் 10 கிராம் என்று சுத்தத்தங்கத்தில் விற்கப்படுகிறது.
எதையும் கலக்காமல் தங்கத்தை வடிவமைக்க முடியாது.

தங்கத்தில் காப்பரின் கலவை அதிகரிக்க அதிகரிக்க அதன் வலுகூடுகிறது.
24கேரட் தங்கக்கட்டிகள் அதிகமாக சுவிஸ் முத்திரையுடன் இருக்கும்.இது சுவிஸ்லாந்துதில் தயாரிக்கப்படுகிறது.நம் இந்தியாவில் சில தனியார் நிறுவனங்கள் சுத்தத்தங்கக் கட்டிகளை உலகத்தரத்திற்கு தயார்செய்து விற்கிறார்கள். ஆனால் உலக வார்த்தகத்தில் இந்திய தங்கத்தை அவ்வளவாக யாரும் சோதிக்காமல் வாங்குவதில்லை.
சுவிஸ் முத்திரைப்பதித்த தங்கக்கட்டிகளை நம்பிவாங்கலாம்.இது உலகதரம் பெற்ற சுத்த தங்கமாகும்.

முதலீடு செய்ய நினைப்பவர்கள் 24கேரட் சுத்தத் தங்கத்தை விலை குறையும் தருவாயில் வாங்கி வைத்துக் கொண்டு விலை கூடும் சமயத்தில் விற்பனைச் செய்யலாம்.ஆனால் இதில் சிரமம் என்னவென்றால் வாங்கக் கூடிய தங்கத்தை
பத்திரப்படுத்த வேண்டிய பொருப்பு அதிகமாகிறது.வங்கிகளில் லாக்கர்ஸ் வைத்திருப்பவர்கள் அதில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.

சென்ற வருடம் ஆகஸ்ட் தருவாயில் 10 தோலா (116.64) 10,000 திரஹம் (இந்திய ரூபாய் மதிப்பு 130,000) விற்பனையானது. பலர் தங்கத்தை வாங்கி சேமித்துக்கொண்டார்கள்.
இந்த ஒரு வருடத்தில் சுமார் 4500 திரஹம் (இந்திய ரூபாய் 58,500) 10 தோலாவிற்கு சுமார் பத்து மாதத்திற்குள் லாபம் கிடைத்திருக்கிறது. இன்றைய விலை 14,500. இது இன்னும் கூடும் என்றே வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

தங்கச்சுரங்கங்கள் ஆப்பிரிக்காவில் மின்தட்டுப்பாட்டினால் மூடப்பட்டதாலும் (நம் நாட்டில் பெங்களுருக்கு அருகில் கோலார் தங்கச்சுரங்கம் இருக்கிறது. இதில் தற்போது தங்கம் மிகக்குறைவாகக் கிடைப்பதால் அதை எடுப்பதில் தங்கத்தை விட கூடுதல் சிலவு ஆகிறது என்றக்காரணத்தினால் அந்தச் சுரங்கத்தை மூடிவைத்துள்ளார்கள்.)
தங்கம் தட்டுப்பாட்டினாலும் இணையதள வணிகம் அதிகரித்திருப்பதாலும் விலை ஏற்றத்திற்கு ஒரு காரணம்.

பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தினால் டாலரின் மதிப்பு குறைவதினால் தங்கத்தின் விலை ஏறுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இணையதளம் மூலம் வாங்கப்படும் தங்கம் நம் கைக்கு வருவதில்லை அது டிமேட் அக்கவுண்ட் இருந்தால் அந்த கணக்கில் எழுத்துரூபத்தில் வைக்கப்படும்.
விற்கப்படும்போதும் டிமேட் அக்கவுண்ட் மூலமே விற்பனைச் செய்யப்படும்.
கிட்டதட்ட பங்குச் சந்தை முறையில்தான் இணையதள தங்க வர்த்தகம் நடக்கிறது.
தங்கத்தைப் பார்க்காமல் தங்கம் வாங்கி எழுத்துருவில் வைத்துக் கொள்வதும் அதை விற்பனைச் செய்வதுமே ஆன்லைன் டிரேடிங் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் ஐசிஐசிஐ வங்கியில் டிமேட் அக்கவுண்ட் மூலம் தங்கம் வாங்குவதை நிறுத்திவைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

22 கேரட் இது 916- 8.40 சதவீதம் காப்பர் 91.60 சதவீதம் தங்கம்.
நம் நாட்டில் 22 கேரட் தங்கம் செய்பவர்கள் அதை பற்றவைக்கும்போது காப்பரைக் கொண்டும் சில்வரைக்கொண்டும் பற்றவைப்பதினால் தங்கத்தின் தரம் குறைகிறது.அது மட்டுமல்ல 91.6 கிராம் தங்கத்திற்கு பதிலாக 85.00 கிராம் மட்டும் தங்கமும் 15 கிராம் காப்பரும் கலந்து நகை செய்வதால் தங்கத்தின் தரம் 18 கேரட்டுக்கு தள்ளப்படுகிறது.
இதில் கேடிஎம் நகைக்கு கூடுதலாக விலை சொல்வார்கள்.

கேடிஎம்(KDM) என்றால் என்ன…?

"கேரட் டிவைசிங் மெட்டல்" என்று சொல்வார்கள். தமிழ் படுத்தவேண்டுமென்றால் உலோகத்தின் தரத்தை பிரித்துக் கொடுக்ககூடியதே .

அதாவது 91.6 கிராம் தங்கமும் 8.40 கிராம் காப்பரும் கலந்து நகைச் செய்யும் பொழுது அதை ஒட்டவைப்பார்கள் அப்படி ஒட்டவைக்கப்டும்போது கேடியத்தினால் பற்றவைப்பதற்கு பெயர்தான் கேடிஎம் நகைகள்(KDM).

வெளிநாடுகளில் விற்கக்கூடிய நகைகள் அனைத்தும் கேடிஎம் நகைகள் அல்ல.... அதன் தரத்தை பரிசோதித்துப்பார்த்தால் 22 கேரட்916 லிருந்து 920 க்குள் இருக்கும்.எப்படி என்பதை பின்னர் பார்ப்போம்...

தொடர்வோம்…