
நம்முடைய வாழ்க்கையில் மறந்துவிட்ட சில சம்பவங்கள் சில தருணங்களில் ஞாபகத்துக்கு வந்து நம்மை அந்தக் காலகட்டத்திற்கே அழைத்துச்செல்லும்.
இது பலருக்கும் நிகழக்கூடிய விசயம்தான். ஆனால் நிகழ்வுகள் மட்டும் ஒருவருக்கொருவர் வேறுபட்டிருக்கும்.
வாலிப பருவத்தில் நமக்கு நிறைய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நண்பர்களாகவும் இருப்பார்கள். காலம்கடந்து நாம் பின்னோக்கிப் பார்த்தால் நாம் பழகிய நண்பர்களில் ஒருசிலரைத் தவிர பலர் காணாமல் போயிருப்பார்கள்.ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.
அந்த ஒருசிலரிலும் நாம் இளமைக்காலத்தில் பழகிய வேகமிருக்காது. ஒரு இடைவெளி இருக்கும். எல்லாவிசயங்களையும் வாலிபத்தில் பேசியதைப்போல் இப்போது பேசவும் முடியாது. நம்மிடையே திரைஇருக்கும்.
அப்படி ஒரு நிகழ்வு நேற்றைய இரவு உறக்கத்திற்கு முன் என்சிந்தனை அரங்கில் பழைய நண்பனைப் பற்றி ஒடிக்கொண்டிருந்தது.அதை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில்…இதோ
எனது அமீரக வாழ்க்கையில் ஏற்பட்ட நட்புகள் பெரும்பாலும் இலக்கிய சிந்தனையினால் ஏற்பட்டது என்றே கூறவேண்டும்.
அன்று முதல் இன்றுவரையில் அப்படித்தான்…
1985-ல் “டெலிபோன் டைரி” என்ற துப்பறியும் நாவல் ஒன்றை துபாயில் நண்பர்களுக்கு மத்தியில் வெளியிட்டேன். அப்போதெல்லாம் தமிழ் சங்ககங்கள் இன்று நிறைந்திருப்பது போல் அன்று இல்லை. ஒரு அமைப்பு இருந்தது ஆனால் அதில் எனக்கு பரிச்சயம் இல்லை.அதனால் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளில் நண்பர்களை டேராநைப்ரோடு தமிழ் சந்தையில் சந்திப்பது வழக்கம். அந்த சந்திப்பில் ஒரு மலையாளி தேனீர்கடையில் அமர்ந்து எனது முதல் நூலை வெளியிட்டேன்.
1986-ல் இஸ்லாமிய சிந்தனையில் “விற்பனைக்கு வந்த கற்பனைக்கதைகள”; என்ற தலைப்பில் சிறுகதைகளின் தொகுப்பினை வெளியிட்டேன்.இதுவும் தேனீர் கடையில் வெளியிடப்பட்டது.
அந்த தருணத்தில் அறிமுகமான நண்பர் திருவாருரைச் சார்ந்த ஒலிமுஹம்மது.
இவரின் அரசியல் உரையாடல் காமடியாக இருக்கும். அவர் பேசும்போது எனக்கு ஆச்சரியங்களை ஏற்படுத்தும். அப்போது வயது எனக்கு 22. அவருக்கு 26 வயது.
இவ்வளவு விசயங்களை எப்படி இவர் ஞாபகத்தில் வைத்து பேசுகிறார் என்பது அவரிடம் பழகிய பின் நாட்களில் விளங்கிக்கொண்டேன்.
தினசரி பத்திரிக்கைகளையும் வாரப் பத்திரிக்கைகளையும் தொடந்து படித்து வருபவர்.
அவருடைய நட்பு என்னை அவருடன் நெருக்கத்துடன் பழகவைத்தது. எனது சொந்த கதைகளை குடும்பக்கதைகளை அவருடன் கலந்துபேசுவதற்கும் விடுமுறை நாட்களில் அவருடைய அறைக்கு செல்வதும் அவர் எனது அறைக்கு வருவதும் என் எழுத்துப்பணிகளுக்கு மிக உற்சாகத்தைக் கொடுப்பதுமாய் எங்களின் பொழுதுகள் நகர்ந்து கொண்டிருந்தது.இதில் எனது முதல் அமீரக நண்பனும்.
ஆம்
அமீரகத்தில் 1980 – டிசம்பரில் கால்பதித்தேன். எனக்கு முதன்முதலில் அறிமுகமான நபர் அத்திக்கடை சிஹாபுதீன் இவர்தான் எனது முதல் நண்பனாகவும் மாறினார்.இன்றும் நட்பு இருக்கிறது அன்றைய நெருக்கம் இல்லை.
நாங்கள் மூவரும் பின் நாட்களில் குடும்ப நண்பரானோம். விடுமுறையில் தாயகம் சென்றால் அவசியமாக நண்பர்களின் வீடுகளுக்கு சென்று வருவது வழக்கமாகிகப் போனது.
அப்படித்தான் நண்பர் ஒலிமுஹம்மது தன்னுடைய திருமணத்திற்க்காக விடுமுறையில் தாயகம் சென்றார். எங்கள் வீட்டுதேவைப்போல எனது குடும்பத்தார் அனைவரும் சென்று தங்கி வந்தனர்.
அவருக்கு திருமணமாகி இரண்டு நாட்களில் எனது சகோதரனுக்கு பைக் விபத்து நடந்துவிட்டது. எனது சகோதரனை பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
செய்தியறிந்த எனது நண்பர் ஒலிமுஹம்மது உடனே புறப்பட்டு பாண்டிச்சேரி சென்று அறுவைசிகிச்சை என் சகோதரனுக்கு முடியும்வரையில் ஒருவாரக்காலம் அங்கு மருத்துவமனையில் தங்கி என்சகோதரனுக்கு வேண்டிய உதவிகளை செய்துவிட்டு வந்துள்ளார்.
திருமணமான புதுமாப்பிள்ளை தனது மனைவியை விட்டு பிரிந்து ஒருவாரக்காலம் தனது நண்பனின் சகோதரனுக்காக வேண்டி மருத்துவமனையில் தங்கிஇருந்தது பெரிய விசயம். அவர் வீட்டில் எப்படியெல்லாம் பிரச்சனை வந்திருக்கும்.எப்படி யெல்லாம் பேசிஇருப்பார்கள். இந்த தியாகத்தை யாருக்காக செய்தார்.
ஆனால் அன்று இதன் கனம் எனக்கு தெரியவில்லை. நட்பு என்ற ஒரு உறவு மட்டும்தான் தெரிந்ததே தவிர ஒருமனிதனின் உணர்வு உதவி அதன் மதிப்பு விளங்கவில்லை.
பின் அந்த நண்பர் விடுமுறைக்கழித்து மீண்டும் துபாய் வாழ்க்கைக்கு வந்தார்.அடுத்து எனது திருமணத்திற்க்காக நான் தாயகம் செல்ல எத்தனிப்பதற்கு முன் அவருடைய கம்பெனியில் சில பிரச்சனைகளால் அவருடைய வேலையை ராஜினாமா செய்து விட்டு தாயகம் செல்லக்கூடிய சூழ்நிலை வரவே அவரை அனுப்பிவைத்தோம்.
பின் நான் தாயகம் செல்கிறேன்…எனது திருமணவிசயத்தில் சில குழப்பங்கள் என்குடும்பத்தில் நடந்தது. அதை பேசி சமாதானத்தை ஏற்படுத்தி என் திருமணம் நடக்க உதவியாக இருந்தவர்.
எனது திருமணத்திற்கு பின் நாங்கள் ஒரு குடும்பமாகவே பழகிவந்தோம். கொடுக்கல் வாங்களில் கணக்குகள் கிடையாது.
சிலவருடங்கள் அவர் தாயகத்திலேயே தொழில் செய்து வந்தார். என்னால் முடிந்த பொருளாதார உதவிகளை அவருக்கு செய்தேன்.
நான் எனது குடும்பத்தை துபாய்க்கு அழைத்துக் கொண்டேன்.
ஒரு நாள் நண்பர் தொலைபேசிசெய்து நான் துபாய்வரனும் விசா வேண்டும் என்றார்.
நானும் விசாவை விசாரித்தவரையில் அப்போது ஐயாயிரம் திரஹம் கொடுத்தால் இரண்டுவருட விசாக் கிடைக்கும் ஆனால் நாம் எங்கு வேண்டுமானாலும் வேலைப்பார்த்துக் கொள்ளலாம் என்ற சட்டம் இருந்தது. அதன்படி அவருக்கு விசா எடுத்து துபாய் அழைத்தேன். விசா சிலவிற்க்காக அவருடைய உறவினரிடமிருந்து ஆயிரம் திரஹம் வாங்கித்தந்தார் அவ்வளவு தான். அவர்தங்கு வதற்கு அறை ஏற்பாடு செய்து அவருடைய அன்றாட சிலவிற்கு பணமும் நான் கொடுக்கவேண்டி இருந்தது.
சிலமாதங்கள் சில வேலைகளுக்கு சென்று விட்டு வேலைபிடிக்கவில்லை என்று திரும்பவந்து விடுவார். அந்த தருணங்களில் நான் வாங்கிய சம்பளம் எனது குடும்பசிலவு நண்பரின் சிலவுக்கு எல்லாம் சேர்த்து எனக்கு பாரமாக இருந்தது.
ஒரு நாள் அவரிடம் என்னுடைய நிலையைப் பற்றியும் பேசினேன். கேட்டுக்கொண்டார்.
ஆனால் எங்கள் நட்பில் முன்னிருந்த சிநேகநெருக்கம் எங்கள் இருவரிடத்திலுமே இல்லை. அவர் சில வருடங்கள் தன் குடும்பத்தாருடன் தங்கிஇருந்ததினால் குடும்ப சிந்தனைகளுக்கு உட்பட்டிருக்கலாம் அதைப்போல் தான் எனக்கும் இருந்தது.
நாங்கள் தினசரி சிலமணிநேரங்கள் சந்தித்து பேசுவதுண்டு…அப்போதுக் கூட பழையமாதிரியான பேச்சு எங்களிடையே இல்லை.
ஒருநாள் அவர் தங்கிருந்த அறைநண்பர் எனக்கு தொலைபேசி செய்து உங்கள் நண்பர் நேற்று இரவு ஊருக்கு சென்று விட்டார். விசாவை ரத்துசெய்து விட்டு போய்விட்டார்.என்று சொன்னதும் நான் மிகுந்த வருத்தத்திற்கு ஆளானேன்.
சில தினங்கள் கழித்து இந்தியாவிலிருந்து கடிதம் போட்டிருந்தார். அதில் அவருக்கு விசா எடுத்த நபரிடம் கொடுத்த காசைகேட்டுவாங்கவும்.இரண்டு வருடம் முழுமையடையாததால் அந்தபணத்தை திரும்ப கேட்டு வாங்கி என்னுடைய பணத்தை அனுப்பிவைக்கவும் .
அதற்கு பதில் எழுதினேன் நாமாக விசாவை ரத்துசெய்து விட்டு போனதற்கு அவர்கள் பணம் தரமாட்டார்கள். என்னிடம் கூட ஒரு வார்தையும் சொல்லாமல் நீ சென்றது எனக்கு ரொம்ப கஸ்டமாக இருந்தது. உன் பணத்தை அனுப்பச் சொல்லி எழுதிஇருந்தாய். நீ 1000 திரஹம் தான் கொடுத்தாய் ஆனால் 4000 விசாவிற்கு நான் கொடுத்துள்ளேன். அதை யார் தருவது என்று.
எப்போதும் என்வீட்டுக்கு செல்லக் கூடியவர் இந்தமுறை செல்லவில்லை.
கடித தொடர்பு நின்று போனது. சிலவருடங்கள் கழித்து தாயகம் சென்ற நான் அவரைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வராததினால் அப்படியே மறந்துப்போனேன்.
இன்றுவரையில் அந்த நண்பனை நான் காணவில்லை. பலமுறை திருவாருர் சென்று வந்திருக்கிறேன் அவரும் என் கண்ணில் படவுமில்லை.
அந்த நண்பனின் உதவிகளை என்றும் மறக்க இயலாது.எவ்வளவுதான் கொடுக்கல் வாங்களில் ஒருவருக் கொருவர் கடன் பட்டிருந்தாலும் அந்த பணத்தையும் விட, என்மனதில் பதிந்து போன நட்பே இந்தக் கட்டுரையை எழுதத்தூண்டியது.
காலங்கள் கடந்தாலும் பழகிய நட்புகள் மனதில் பசுமையாகத்தானிருக்கும்.மறந்துவிட்டோம் என்று எண்ணினாலும் சில தருணங்களில் மறதி தன்னைமறக்க பழைய நினைவுகள் நம்மை ஆட்கொள்ளும் …!


















