உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, July 22, 2010

இந்திய வடமாநில சுற்றுலா– 1


இரவு 10 மணிக்கு சென்னை சென்டரலிருந்து டெல்லி செல்வதற்கு தினமும் தமிழ்நாடு விரைவு இரயில் தாயராக இருக்கிறது.முன்பதிவு செய்பவர்கள் ஒருமாதம் முன்பே செய்துக் கொள்வது நலம்.

எனது மற்றும் நண்பரின் குடும்பம் குழந்தைகளுடன் ஒன்பது நபர்கள் ஆக்ரா, டெல்லி, ஜெய்பூர் மற்றும் அஜ்மீர் சுற்றுவதற்கு புறப்பட்டோம்.குளிர்சாதன வசதி கொண்ட இரயில் பெட்டியில் முன்பதிவு இணையத்தின் மூலம் செய்திருந்ததால் கணினி அது இஸ்டத்துக்கு இருக்கையை தேர்வுச் செய்திருந்தது.இருக்கையை நம் விருப்பத்திற்கு தேர்வுசெய்யும் வாய்ப்பை இன்னும் இந்திய இரயிவே மக்களுக்கு வழங்கவில்லை என நினைக்கிறேன்.

இரண்டாம் வகுப்பில் முன்பதிவு செய்திருந்ததால் மேல் இருக்கை இரண்டும் ஜன்னலோர இருக்கைகள் மேலும் கீழும் எங்களுக்கு வழங்கி இருந்தார்கள்.

எங்களுடைய வசதிக்கு அமர்வதற்கு பயணிகளிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களும் விட்டுக் கொடுத்து நாங்கள் தந்த இருக்கையில் அமர்ந்து எங்களை சந்தோசப்படுத்தினார்கள்.

விட்டுக்கொடுக்கும் மனோநிலை இந்தியர்களான நம்மிடம் நிறையவே இருக்கிறது. முகந்தெரியாத பழக்கமே இல்லாதவர்களுக்கு நாம் விட்டுக் கொடுத்து அவர்களை சந்தோசப்படுத்துகிறோம் அதுவே நம் குடும்பத்தார்களுக்கு நம்மை விட்டுக் கொடுத்தால் நம்வாழ்க்கை அளவிலா ஆனந்தத்தை அடையும் என்பதை நாம் தெரிந்திருந்தாலும் மனம் ஈகோ என்ற கவசத்தை தலையில் மாட்டிக்கொண்டு கழட்டத்தெரியாமல் திணருகிறோம் என்பதானே உண்மை.

எங்கள் பயணம் இனிமையாக அமைவதற்கு இரயில் பயண இருக்கைள் எங்களின் விருப்பத்திற்கு மாற்றிக் கொண்டதால் குழந்தைகள் குதுகூலம் அடைந்தார்கள்.

முதலில் நாங்கள் சுற்றவேண்டிய இடம் ஆக்ரா என தீர்மானித்தோம். சென்னையிலிருந்து ஆக்ராவிற்கு சுமார் 1980 கி.மீ தூரம். இரு இரவுகள் ஒரு பகல் இரயில் பயணம். இரயிலில் தலையாணை போர்வை மற்றும் மெத்தை விரிப்பு இவைகளை முதல் இரண்டாம் மூன்றாம் வகுப்பு குளிர் பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு தருகிறார்கள் சுகமாக தூங்கலாம்.

நம் வீட்டில் கூட இவ்வளவு நேரம் தூங்க மாட்டோம் ஒய்வு எடுக்கமாட்டோம் ஆனால் நெடுந்தூர இரயில் பயணத்தில் நமக்கு கிடைக்க கூடிய ஒய்வு அலாதியானது அனுபவிக்க வேண்டியது.வாய்ப்பு கிடைக்கக் கூடியவர்கள் அதை அனுபவிப்பார்கள்.

நெடுந்தூர இரயில்பயணத்தில் பயணிகளுக்கு உணவு குழந்தைகளுக்கான உணவு இவைகள் அனைத்தும் இரயிலில் ஒரு பெட்டியில் அடுப்பங்கறையை உருவாக்கி அதில் சமைத்து சூடாக வழங்குகிறார்கள்.டீ காபி குளிர்பானங்கள் நொறுக்கு தீணிகள் விற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.

இரயில் செல்லும் பாதையில் நகரம் கிராமம் மலை என்று இயற்கையின் பன்முகங்களை கண்டு இரசிக்க முடிகிறது. சென்னையிலிருந்து ஆக்ரா செல்வதற்கு நான்கு மாநிலங்களை கடக்கவேண்டி இருக்கிறது.
இந்த நான்கு மாநிலங்களின் சீதோசனத்தை நம்மால் கண்டு இரசிக்க இயலுகிறது வெப்பத்தையும், மழையையும், மிதமான குளிரையும் அனுபவிக்க முடிகிறது.

இரயில் நிறுத்தும் இடங்களில் அந்தந்த ஊர்களின் பெயர்பெற்ற திண்பன்டங்கள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்கிறார்கள். விலையை மட்டும் நாம்தான் தீர்மானிக்கனும் சொன்ன விலையில் எதையும் வாங்கக் கூடாது விற்கக்கூடியவர்களும் அப்படிதான் விலையை நிர்ணயிக்கிறார்கள்.

நெடுந்தூரப் பயணத்திற்கு இரயில் சுமார் 24 பெட்டிகளை கோர்த்து செல்வதினால் 1 கி.மீ தூரத்திற்கு இரயில் நிற்பதைப்போன்ற பிரம்மை தோன்றுகிறது. ஓரு நிறுத்தத்தில் நின்றால் குளிர் சாதனப்பெட்டி நிறுத்தத்தின் கடைசியில் தான் நிற்கிறது அதனால் கடைகளில் ஏதும் பொருட்கள் வாங்க முடிவதில்லை சில நிமிடங்களில் இரயில் புறப்பட்டு விடுகிறது.

முதல் இரண்டாம் வகுப்புகளில் பாதுகாப்பு இருக்கிறது மற்ற வகுப்புகளில் செல்லக்கூடியவர்கள் உடமைகளில் மிக கவனமாக இருக்கவேண்டும் இருக்கிறார்கள் நீண்ட இரும்பு சங்கலியால் தங்கள் உடைமைகளை பூட்டி வைத்துக் கொள்கிறார்கள்.

பெரிய ஊர்களில் நிறுத்தும்போது தனியார் நிறுவனங்கள் இரயிலின் கழிவறையை நவீன இயந்திரங்களின் மூலம் தூய்மைப்படுத்துகிறார்கள் வரவேற்க்ககூடியது. இது தொடந்து செய்து வந்தால் மக்களுக்கு நன்மையாக இருக்கும்.

நீண்ட தூர பயணமாக இருப்பதால் குளியலறை வசதியும் எல்லா இரயில்களிலும் செய்யப்படவேண்டும் நாங்கள் சென்ற தமிழ்நாடு விரைவு வண்டியில் குளியலறை வசதி இல்லை. இராஸ்தானி விரைவு வண்டியில் இருப்பதாக கூறுகிறார்கள்.

இன்னும் மடி கணினி கைபேசி இவைகளுக்கு மின்சார வசதி (ரீ சார்ஜ் செய்யும் வசதி) செய்திருக்கிறார்கள்.

இரயில் பயணத்தில் நல்ல ஓய்வு கிடைத்தது. நாங்கள் செல்லவேண்டிய ஆக்ரா விடியற்காலை 4.30 மணிக்கு வந்தடைந்தது.எங்களில் யாருமே இதற்கு முன் ஆக்ரா வந்ததில்லை தங்குவதற்கு விடுதியை இணையதளத்தின் மூலம் செய்துக்கொள்ள வசதி இருந்தும் அதை செய்யாமல் அலட்சியப்படுத்தியதால் சில அசவுரியங்கள் ஏற்பட்டது.

ஆக்ரா ஸ்டேசனில் இரயில் நின்றதுமே புரோக்கர்கள் நம்மை சூழ்ந்துக் கொள்கிறார்கள் அவர்கள் அழைத்துச் சென்ற விடுதியில் அறை எடுத்தோம அப்படி எடுக்கும் அறைகளின் விலை சற்று கூடுதலாக இருக்கும் காரணம் புரோக்கர்களுக்கு கமிஷன் நம் வாடகையில் விழும். வந்த புரோக்கர் விடுதியுடன் விட்டபாடில்லை சுற்றிபார்க்க வாகனமும் ஏற்பாடு செய்துதருவதாக கூறி குளிர் சாதன வாகனத்தை தயார்செய்தார்.நாங்கள் செலுத்திய அதற்கான தொகை ஒரு மடங்கு கூடுதல் என்பது பின்னர் விசாரித்ததில் தெரிந்துக் கொண்டோம்.

அதிகாலை 6.00 மணிக்கெல்லாம் விடுதிக்கு வந்து சேர்ந்தோம் அந்த வீதியில் பல விடுதிகள் இருந்தன.
விடுதியின் எதிரில் பெரிய எருமைமாட்டு பண்ணையே இருந்தது.சாலையெல்லாம் எருமையின் சகதி சூழ்ந்து ஈக்கள் மோய்த்து கப் அடித்தது.உலக அதிசய சின்னமான தாஜ்மஹால் இருக்கக் கூடிய ஆக்ராவில் இப்படியா என்று நம்பவே முடியாமல் உ.பி அரசை திட்டிக்கொண்டிருந்தோம்.

8.30 மணிக்கு சுற்றுவதற்கு வாகனம் வந்துவிடும் அதற்குள் தயாராக வேண்டும் குளித்துவிட்டு புறப்பட்டோம்.

எங்கள் எல்லோர் மனதிலும் முதலில் தாஜ்மஹாலை காணவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.ஆனால் வாகன ஓட்டுனரோ ஃபத்தேபூர் சிக்ரி(அக்பர் கோட்டைக்கு) தான் முதலில் அழைத்துச் செல்வேன் என அடம்பிடித்தார். சரி அவருடைய விருப்பத்திற்கு விட்டோம் அக்பர் கோட்டை ஆக்ரா நகரத்திலிருந்து 45 கி.மீ தொலைவில் இருக்கிறது.மதியம் 3.00 சுமாருக்கு தாஜ்மஹாலில் விடுகிறேன் என்றார்.

நாங்கள் சென்றநேரம் வெயில் அனலை கக்கியது அந்த கொடுர வெப்பத்தில் நன்றாக நனைந்தோம்...எங்கள் சிறுசுகளெல்லாம் வெப்பத்தில் குளித்தனர்.
எங்கள் வாகனம் ஆக்ரா நகரத்தினுல் நுழைந்தது எருமைமாடுகள் நகரத்தை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது உ.பி அரசுக்கு எருமைகள் மீது தனி பாசங்காட்டி முழு சுதந்திரம் அளித்திருப்பார்கள் என நினைக்கத் தோன்றியது நகரில் எங்கு திரும்பினாலும் எருமைகள் மாநாடுதான். வாகன நெரிசலைவிட எருமைகளின் நெரிசல் அதிகம் காணப்பட்டன.

நகரில் ஒரு இடத்தில் கழுதைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்படும் என பலகையும் வைக்கப்பட்டிருந்தது.கழுதையின் முதுகில் இருபக்கமும் பெரிய பைகளைப்போல் அமைத்து அதில் செங்கற்களை நுழைத்துக் கொண்டிருந்தார்கள்.

நாம் எந்த யுகத்தில் இருக்கிறோம் என்பதே ஒரு கணம் யோசிக்க வைத்தது.நம் ஊர் மினி பஸ்களைப் போல் அங்கும் கிராமங்களுக்கு செல்லக் கூடிய வாகனங்கள் இருந்தன ஆனால் பேருந்துக்குள் கூட்டம் இருக்கிறதோ இல்லையோ பெரும்பாலோர் பேருந்துக்கு மேல் அமர்ந்து பயணம் செய்யவே ஆர்வப்படுகிறார்கள். பெரும்பாலன வாகனங்களில் மேல் தளங்களில் அமர்ந்தே பயணம் செய்கிறார்கள்.விவசாய நிலங்கள் அதிகமாக வரண்டே இருந்தது மழையை நம்பிதான் வாழ்கிறார்கள்.

ஏழைகளின் கடினமான உழைப்பை அவர்களின் கஸ்டங்களை வடமாநிலங்களில் பார்க்கமுடிந்தது...எங்கள் சுற்றுலா இடங்களை மட்டும் பார்ப்பதற்கல்ல மனிதர்களையும் தான்...நீண்டுவிட்டது தொடர்வோம்....

Tuesday, July 20, 2010

நீர்மை கொண்ட நீடுர் பதிவர் - சந்திப்பு

முஹம்மது அலி ஜின்னாஹ்


விடுமுறையை விழுங்கிவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பியாச்சு...முப்பது தினங்களில் கிடைத்த அனுபவங்கள் நிறையவே இருக்கு.
தென்மாநில சுற்றுலாவைப்பற்றி தொடர்எழுதவேண்டும் மனம்தொட்டதை மனதில் பட்டதை எழுதவேண்டும்.

நாட்குறிப்பில் எழுதிய காலத்தில் கூட நிகழ்வுகளை முழுமையாக எழுதமுடியாமல் எழுத்துக்கு வறுமை இருந்தது ஆனால் இன்று இணையதளத்தில் இலவசமாக கிடைத்திருக்கும் வலையில் ஒன்றுவிடாமல் அனைத்தையும் எழுதலாம் ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் நாட்குறிப்பில் எழுதிய சுதந்திரம் வலையில் இல்லை எழுதுபவர்களுக்கு பர்தா தேவைப்படுகிறது.

பேனா நண்பர்களாக அறிமுகமானவர்களை சந்திக்கும் போது எற்படக்கூடிய அலாதி இன்று பதிவர்களை சந்திக்கும்போது இல்லை என்று ஒரு பதிவர் சொன்னார். அவர் சந்தித்த பதிவர் அப்படி ஆனால் எனக்கு அது நேர்மாற்றம். பதிவராக இருந்தாலும் அதிபராக இருந்தாலும் விரல்களைப் போல்தான் மனிதர்கள்.

இந்த விடுமுறையில் ஒரே ஒரு பதிவரை மட்டும் நான் துபாய் புறப்படுவதற்கு முதல் நாள் எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்ற ஆவலில் நீடுரை நோக்கிச் சென்றேன்.(எனது பக்கத்து ஊர்)

எனது நண்பரின் மகளுக்கு அன்று நீடுரில் திருமணம் நிகழ்ச்சி அதில் கலந்துக் கொள்வதற்கு முன் 70 வயதைக் கடந்த முஹம்மது அலி ஜின்னாஹ் (நீடுர் சீசன்) என்ற பழுத்த ஞானப்பழத்தை சந்திக்க காலை 11 மணிக்கு அவர் இல்லம் வந்தேன்.

(தமிழக இஸ்லாமியர்கள் அறிந்த காலம்சென்ற சிந்தனைச் செல்வர் நீடுர் அட்வகேட் சையது அவர்களின் அன்புச் சகோதரர் தான் முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்கள்)

வழக்கம்போல் அழைப்பு மணி..

வெள்ளை நிற ஆடையில் வெண்மை சிரிப்புடன் நரைத்த முடி என்றாலும் நிமிர்ந்த இராணுவச் சிப்பாயைப்போல் பளிச்சிட்ட முஹம்மது அலி ஜின்னாஹ் என்னைக் கண்டு யார் என்று கேட்பார் என எதிர்பார்த்தேன் அவரோ அடையாளங்கண்டு வாங்கோ என்று உற்சாகத்துடன் சிரித்துக் கொண்டே வரவேற்றார்.

சிறிய வரவேற்பரையில் அமரப்போன என்னை உள்ளே வாங்க என பெரிய வரவேற்பறைக்கு அழைத்து அமரச்செய்து கூச்சப்படவேண்டாம் எனக்கூறிக் கொண்டே தனது அன்புநிறைந்த துணைவியாரிடம் என்னை ஞாபகமூட்டினார்.(ஏற்கனவே சொல்லி வைத்துள்ளார்)

என்னைக் கண்டதில் அவருக்கு அளப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருப்பதை அவருடைய பரபரப்பில் காணமுடிந்தது.குடிப்பதற்கு டீ அல்லது காபி அல்லது சர்பத் எதுவேண்டுமோ சொல்லுங்க என்று உரிமையோடு கேட்டுக்கொண்டார் சர்பத் என்றதும் டீ அல்லது காபி வேண்டும் என்றாலும் கேளுங்க கூச்சப்படாதீங்க என்று கேட்டுக் கொண்டார்.

அவருடைய பேரக்குழந்தை துருதுருவென அங்கும் இங்கும் விளையாடிக்கொண்டிருந்தார்.பொருட்களை எடுத்து உரியவர்களிடம் கொடுப்பதில் திறமைவாய்ந்தவராக காணப்பட்டார்.

உரையாடினோம் அவருடைய பேச்சில் இந்திய மூத்த தலைவர்களைப் பற்றிய செய்திகள் நிறைந்திருந்தது.இத்தனை வயசிலும் இவ்வளவு விசயங்களை ஞாபத்தில் வைத்திருப்பது எனக்கு ஆச்சரியத்தை தந்தது.பல நாடுகளுக்கு சென்றுவந்தவர்.ஆங்கில புலமை நிறைந்தவர்.

தனது படுக்கையறையில் வைத்து கணினியை செயல்படுத்திக் கொண்டிருப்பதை காணமுடிந்தது.கணினிக்கு முன் இருந்த நாற்காழியின் கைப்பிடியில் தலையணைகள் கட்டப்படிருந்ததை வைத்து அதிகமாக இணையதளத்தில் வலம்வருவதை கிரகிக்க முடிந்தது.

வயதாகிவிட்டால் பலர் தங்கள் வாழ்க்கை முடிந்தே விட்டது என்ற கவலையில் பல நோய்களோடு படுத்த படுக்கையில் இருக்கும் பலருக்கு எழுபது வயசிலும் சுறுசுறுப்புடனும் தன்னார்வத்துடன் இளைஞர்களுடன் சரிசமாக பழகிவரும் மதிப்பிற்குரிய முஹம்மது அலி ஜின்னாஹ் பெரியவர்களுக்கு முன்னுதாரணமானவர்.

எனது கட்டுரைகளைப்பற்றி கூறினார் நிறைய அறிவுரைகள் கூறுவார் என எதிர்பார்த்தேன் அவரோ என்னை பேசவைத்து இரசித்துக் கொண்டிருந்தார்.
தத்துவத்தின் மீது எனக்கிருக்கும் ஆர்வத்தைக் கூறினேன்.

எந்த தேவைகளுக்குமே அதிகமாக செல்லாதவர் தனதூரில் நடக்கும் எனது நண்பரின் மகளார் திருமணத்திற்கு அழைப்பு இருந்தும் செல்வதற்கு மனமின்றி இருந்தவர் என்வருகையால் நானும் வருகிறேன் என காரில் செல்ல கூப்பிட நான் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளேன் எனக்கூறியதும் அதிலே போகலாம் என என்னுடன் வந்தார்.அவருடைய இந்த அனுசரனை எனக்குள் நெகிழ்ச்சியை உண்டாக்கியது.

நாளை துபாய் புறப்படுகிறேன் என்றதும் வருத்தப்பட்டார்.சில தினங்களுக்கு முன்னாடியே நாம் சந்தித்திருக்க வேண்டும் நிறைய நேரங்களை சிலவழித்திருக்க வேண்டும் என தனது ஆதாங்கத்தை வெளிப்படுத்தினார்.

எனக்கும் அதே ஆதாங்கம் தான் ஆனால் பத்து தினங்கள் தென்மாநில சுற்றுலாவில் கழிந்துவிட்டதினால் நாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என விளக்கமளித்தேன்.

வயது வித்தியாசமின்றி தனது மகன் வயதையொத்த என்னிடம் அவர் வெளிப்படுத்திய பண்பை, அன்பை எண்ணும்போது ஒரு குருவைச் சந்தித்த திருப்தி ஏற்பட்டது.துபாய் சென்றதும் எனது பையனுடன் தொடர்புவைத்துக் கொள்ளுங்கள் என்று அன்பு வேண்டுகோள் வைத்தார்.எனது தந்தைக்கு சமமான முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்கள்.

இணையத்தில் முகப்புத்தகத்தில் வலம் வருவதும் வலைப்பூக்களை தொடங்கி பலரின் நல்ல பதிவுகளை அவர்களின் அனுமதிப்பெற்று தனது வலையில் மறுபதிவு செய்வதும் இவரின் வழமையாக இருக்கிறது. தன்னால் டைப் செய்யமுடியவில்லை என்னிடம் நிறைய கதைகள் இருக்கிறது டைப் செய்யமுடிந்தால் கதைகளை நிறைய பதிவுச் செய்வேன் என முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்கள் கூறினார்.

இந்த மூத்த பதிவரை சந்தித்ததில் மனம் மகிழ்ச்சியடைந்தது.இவரின் வயதிலும் சுறுசுறுப்புடன் வலம்வர வேண்டும் என்ற உரத்தை உள்ளத்தில் பதியவிட்டேன்.

எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வையும் அவருக்கு என்றென்றும் வழங்க இறைஞ்சுகிறேன்.

என்னை சந்தித்த பாதிப்பு அவரின் இமெயில் வரிகளில் காணமுடிந்தது.

இது பதிவரை பார்த்துவிட்டு வந்த பிரிவு அல்ல
இரு உள்ளங்களுக்குள் எற்பட்ட உறவு.!

Saturday, June 26, 2010

விட்டாச்சி விடுமுறை...இரயில் பயணம் இணையதள முன்பதிவு...

விடுமுறை என்பது அயல்நாட்டில் வாழக்கூடியவர்களுக்கு விடுதலையைப் போன்று இருக்கிறது என்று சொன்னால் அது மிகைஅல்ல.

எத்தனை சுகம் எத்தனை சுதந்திரம் இது பிரம்சாரிகளுக்கு மட்டுமல்ல குடும்பச்சாரிகளுக்கும் தான்.

ஓவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதி என்னுடைய விடுமுறை ஆரம்பம் முப்பது தினங்கள் உல்லாசமாய் உறவுகளுடன் உலாவும் நாட்கள்...

இப்போதெல்லாம் 30, தினங்களை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை இங்கு துபாயில் உள்ள பள்ளிக்கூடங்களில் கோடைவிடுமுறை ஒவ்வொரு ஆண்டும் மாறுதல்கள் இருந்துக் கொண்டே இருக்கின்றன.

சென்ற ஆண்டு ஜூன் 6, ரில் காலாண்டு தேர்வு துவங்கி 16, ரில் முடிந்தது அச்சமயம் நான் மட்டும் ஜூன் 3, னில் புறப்பட்டு இந்தியா சென்றேன் தேர்வு எழுதிவிட்டு எனது பிள்ளைகள் மனைவி 16, ரில் சென்னை வந்தார்கள்.
அங்கிருந்தபடியே சிங்கை மலேசியான்னு சுற்றுலா புறப்பட்டு 17, தினங்கள் சுற்றிவிட்டு அவர்களை சென்னையில் இறக்கி விட்டு நான் மட்டும் துபாய் வந்துவிட்டேன்.

ஆனால் இந்த முறை கொஞ்சம் மாற்றம் காலாண்டுத் தேர்வு ஜூன் 16,க்கு துவங்கி 27, லில் முடிகிறது. எனது விடுமுறை தேதியையும் ஜூன் 15,க்கு மாற்றிக் கொண்டுள்ளேன்.

தாயகத்தில் நிறைய தேவைகள் மற்றும் கல்யாண விருந்துகள் இதிலெல்லாம் கலந்துக் கொள்ளவேண்டும் அடுத்து இந்த முறை சுற்றுலா நம்நாட்டிலேயே பார்க்க வேண்டிய பல இடங்களில் சில இடங்களை சுற்றிப்பார்க்க ஒரு பட்டியலைத் தயார் செய்துள்ளேன்.

இந்த சுற்றுலா எனது குடும்பமும் எனது நண்பர் குடும்பமும் இணைந்து சுற்றுவதற்குத் திட்டமிட்டிருக்கின்றோம்.

சென்னையிலிருந்து இரயிலில் இந்த சுற்றுலாவை ஜூன் இறுதியில் துவங்க இருக்கிறோம்.

முதலில் ஆக்ரா, பின்னர் டெல்லி, பின்னர் அஜ்மீர் பின்னர் ஜெய்பூர் பின் ஜெய்பூரிலிருந்து சென்னைக்கு வந்தடைகிறோம்.மொத்தம் பத்து தினங்கள்.

இந்த இரயில் பயணத்தை இணையதளத்தின் மூலம் முன் பதிவு செய்வதைப் பற்றி உங்களோடு பகிர்ந்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.அத்துடன் எனக்கு கிடைத்த முன் பதிவு செய்தபோது கிடைத்த அனுபவத்தையும் பகிர்ந்துக் கொள்கிறேன்.

நாம் இரயில் ஸ்டேஷனில் கால் கடுக்க நின்று முன் பதிவு செய்யும் வேலையை இப்பொழுது எந்த நாட்டிலிருந்தும் நமது இந்திய இரயில் பயண இருக்கையை இணையதளத்தின் மூலமாக முன் பதிவு செய்துக் கொள்ளலாம்.

இந்தியன் இரயில்வே என்ற முகவரியை சொடுக்கினால் போதும் இரயிலைப்பற்றி காலம் நேரம் மற்றம் எங்கு செல்லவேண்டும் போன்ற விபரங்கள் முழுவதையும் தெரிந்துக் கொள்ளலாம்.

நமது பயணம் 90 தினங்களுக்குள் நிகழ்வதாக இருக்கவேண்டும்.இந்த பயண இருக்கையை பதிவு செய்வதற்கு நமது விபரங்களை கீழ்காணும் இணையதள முகவரியில் பதிவு செய்து உபயோகப் பெயர் கடவுச்சொல்லையும் நிறுவவேண்டும்.அதன் பிறகே நாம் இரயிலின் முன் பதிவு செய்ய முடியும்.
www.irctc.co.in.

இந்த இணையதளத்தில் சீசன் டிக்கேட் மற்றும் ஐடிக்கேட் இடிக்கேட் இவைகளை பெறலாம்.



எங்கள் சுற்றுலாவுக்கான டிக்கேட்டை ஐடிக்கேட்டாக அதாவது இன்டர்னெட் டிக்கேட்டாக புக் செய்தேன்.அதில் நமது இந்திய முகவரி தொலைப்பேசி எண் கேட்கப்பட்டிருக்கிறது பதிவு செய்தேன்.டிக்கேட் நிச்சயமானது உடனே இமெயில் வந்தது.அதில் நாங்கள் ஏறவேண்டிய ஸ்டேஷன் இறங்க வேண்டிய ஸ்டேஷன் கோட்ச் நம்பர் பிஎன்ஆர் எண் போன்ற விபரங்கள் மற்றும் தொகை விபரங்கள் இருந்தன.அத்துடன் 36 மணிநேரத்திற்குள் நீங்கள் தந்த முகவரிக்கு ஒரிஜினல் டிக்கேட் கூரியரில் வரும் பெற்றுக் கொள்ளவும் அப்படி வரவில்லை எனில் இந்த முகவரிக்கு இமெயில் அனுப்பவும் என்று மெயில் வந்தது.

36மணி நேரத்தையும் கடந்து 168வது மணிநேரத்தில் இமெயில் போட்டேன் உடன் பதில் கிடைத்தது அதில் சிப்பிங் எண் மற்றும் கூரியர் தொலைபேசி எண் எழுதி தொடர்புக் கொள்ள சொன்னார்கள்.

நானும் தொடர்புக் கொண்டேன் தஞ்சாவூரிலிருந்து என்னிடம் பேசியவர் இது திருச்சி மெயினுக்கு தான் வரும் நீங்க அங்க தொடர்புக் கொள்ளுங்கள் என்றார்.நம்பர் கேட்டேன் கொடுத்தார்.

திருச்சிக்கு போன்போட்டேன் சார் இது கோயமுத்தூர் டிவிசனில் இருக்கும் நீங்க அங்க போன்போட்டு கேளுங்க என்றார் நம்பர் வாங்கினேன்.இவ்வளவையும் துபாயிலிருந்து டெலிபோனில் செய்தேன்.

சுhர் இது விழுப்புரம் டிவிசன் நீங்க விழுப்புரத்திற்கு போட்டு கேளுங்க எனறதும் அதுவரை பொறுமையாக இருந்த எனக்கு கோபம் கொப்பளித்தது.

மீண்டும் முதல்லிருந்து தொடங்கினேன்.தஞ்சாவூர் சார் நான் தான் சொன்னேன்ல நீங்க திருச்சிக்கு பண்ணுங்க என்றார்.

ஏன்ன கிண்டல் பண்றீங்களா? ஊங்க பேரு என்ன? கேட்டேன் காளிமுத்து என்றார்.இரயில்வே டிபார்ட்மெண்டுல உங்க நம்பரத்தான் எழுதி இருக்காங்க இதுக்கு பதில் நீங்கதான் சொல்லனும்.என்றேன்

சார் புரிஞ்சுக்கோங்க இந்த சிப்மெண்ட் எங்களுக்கு வரலை திருச்சிக்கு போன் போட்டா விபரம் கிடைக்கும் என்றார் ஒரு விபரமும் சொல்லமாட்டேங்குறாங்க என்றேன்.மேனேஜர் நம்பர் தர்ரேன் அவரிடம் கேளுங்க என்றார் அதே கோபத்துடன் மேனேஜரை தொடர்புக் கொண்டேன் நான் வெளியில இருக்கேன் அலுவலகத்துக்கு போன்போட்டு கேளுங்க என்றார்.

கோபம் கொஞ்சம் அதிகமானது உங்க அலுவலகத்துக்கு போன்போட்டு கேட்டுவிட்டுதான் உங்களுக்கு போட்டிருக்கிறேன் என்றதும் ஒரு மணிநேரம் கழித்து தொடர்புக் கொள்ளுங்கள் என்றார்.

தோடர்புக் கொண்டேன் அந்த சிப்மெண்ட் விழுப்புரத்திற்கு அனுப்பி 6 நாட்கள் ஆகிடுச்சி என்றார்.

விழுப்புரம் மயிலாடுதுறை எண்ணை கொடுக்க மயிலாடுதுறைகாரன் சிதம்பரத்தில் இந்த சிப்மெண்ட் மாட்டிகிடுச்சி நீங்க விழுப்புரத்திலேயே கேளுங்க என்றதும்

முடியல…முடியலப்பா முடியல ஒரத்தன் அடிச்சா தாங்கலாம் இப்படி மாவட்டம் மாவட்டமா அனுப்பி அடிச்சா எப்படி தாங்குறது…வலிதாங்காம ஒருத்தன் கிட்ட டேய் நான் இரயிவே டிபார்ட் மெண்ட்க்கு கம்ளைண்ட் பண்ணுவேன்னே செஞ்சுக்கோ எங்கவேணுன்னாலும் செஞ்சுக்கோன்னா.

எவ்வளோ தைரியம்! இருக்காதா பின்னே! பேசினவன் ஒனரு இல்லையே இருந்தாலும் டிபாட்மெண்ட்க்கு கம்ளைண்ட் அனுப்பினேன் அதை சம்பந்தப்பட்ட கூரியருக்கு பார்வேட் செய்திருக்காங்க மறுதினமே எனக்கு ரொம்பவும் பணிவாக மெயில் அனுப்பி நான் தந்த முகவரியில் டெலிவரியும் செய்தாங்க.

அரசு ஊழியர்கள் தங்கள் பணிகளில் பொடுபோக்கிதனமாக இருக்கிறார்கள் என்ற குறையை போக்குவதற்கு தனியாரிடம் சில பொறுப்புகளை கொடுத்து செய்ய சொன்ன அவங்களும் அரசு ஊழியர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று நிறுபிக்கிறார்கள்.

சரி எப்படியோ சுற்றுலா பயணத்திற்கான இரயில் முன் பதிவு செய்தாகிவிட்டாச்சி

இந்த வரியிலிருந்து இதை கிளியனூர் கிராமத்தில் டைப் செய்துக் கொண்டிருக்கிறேன்.

இரயில் முன் பதிவு விசயத்தில் ஐ டிக்கட்டைவிட (இண்டர்நெட்) இ டிக்கேட் எளிமையாக தெரிகிறது.ஆன் லைனில் பதிவு செய்து அதை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொண்டால் போதுமானது பயணம் செய்யும் சமயத்தில் நம்மிடமுள்ள அடையாள அட்டை அதாவது ஒட்டு அட்டை ரேஷன் அட்டை பான் அட்டை டிரைவிங் லைசன்ஸ் இப்படி ஏதாவது ஒன்றை டிக்கேட் பரிசோதகரிடம் காண்பித்தால் போதுமானது.

ஆக உங்கள் இரயில் பயணங்களை முன்பதிவு செய்து சிரமங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

சரி எங்கள் சுற்றுலா இனிமையாக அமைவதற்கு வாழ்த்துங்களேன்.

மீண்டும் சந்திப்போம்!

Tuesday, June 8, 2010

தீட்டுவதும் பார்க்குறதும் எனக்கு தெரியும்


கதைச் சொல்வதும் கதைக்கேட்பதும் தமிழர்களின் பண்பாடு.நிறைய விசயங்களை கதை மூலமாகவே நமக்கு எத்தி வைக்கப்படுகிறது.மனதில் பதிவதற்கு இலகுவாக இருக்குமென்று முன்னோர்கள் கதையை சொல்லித்தந்திருக்கிறார்கள்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக இஸ்லாமிய இல்லங்களில் கிஸாக்கள் டேப்ரிக்காடரில் ஒலித்துக் கொண்டிருந்தது.கிஸா என்றால் நபிமார்களின் சரிதைகளை தப்ஸ் இசைமூலம் பாடப்பட்டு கதைச் சொல்வது. இது அன்றைய இஸ்லாமிய பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
நூறுமசாலா, கிஸ்மத்நாச்சியா கிஸா, அய்புப் நபி கிஸா, இப்படி பல தலைப்புகளில் கிஸாக்கள் ஆடியோ கேஸட்டுகளில் வெளிவந்துள்ளன.

கதைக் கேட்கும் பழக்கம் தமிழனுக்கு பெரிய ஆர்வத்தை இன்றளவும் கொடுக்துக் கொண்டிருக்கிறது.கதையை கேட்பதுமட்டுமல்ல பலர் இன்று கதையும் விடுகிறார்கள்.
அப்படி சிறுவயதில் மனதில் பதிந்த ஒரு எதார்த்தமான கதையை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

சிறு வயதில் இரவில் உறங்குமுன் கதைக் கேட்பது வழக்கம் யாராவது கதைச் சொல்லியாக வேண்டும்.சில தருணங்களில் அம்மா சொல்லுவார் சில தருணங்களில் எங்கள் வீட்டுக்கு வருகைப்புரிந்த உறவினர்கள் கூறுவார்கள்.யாரையும் விட்டுவைப்பதில்லை பேதமில்லாமல் எல்லோரிடமும் கதை கேட்பதில் தனி அலாதி.

ஒருமுறை எனது உறவினர் ஒரு கதைச் சொன்னார்.

ஒரு ஊரில் முட்டாள் இருந்தானாம் எந்த வேலைக்கும் செல்லமாட்டானாம் அவனுக்கு திருமணம் முடித்தார்கள் சில தினங்களில் மனைவி அவனை வேலைக்கு செல்லும்படி கூறினாள்.

எனக்கு எந்தவேலையும் தெரியாது என்றான் அடப்பாவி உன்னைபோய் கல்யாணம் கட்டிவிட்டார்களே என்று அவள் நொந்துப்போவாளாம்.
ஒருநாள் தனது தோழியிடம் தன் கணவர் எந்த வேலைக்கும் செல்வதில்லை ஒன்றுமே தெரியாத முட்டாளாக இருக்கிறார் என்று வருத்தப்பட்டு கூறினாள்.அதற்கு அவள் என் புருஷனும் அப்படித்தான் இருக்கார் நேற்று வீட்டைவிட்டு விரட்டிவிட்டேன் மன்னனுக்கு கவிதை எழுதி கொடுத்துட்டு காசு வாங்கி வந்தார் நீயும் விரட்டிவிடு என்றதும் என் புருஷனுக்கு எந்தவேலையும் தெரியாது கவிதை எப்படி எழுதுவாரு என்று அவளிடம் கேள்வி கேட்க நீ வீட்டை விட்டு விரட்டி பாரு எல்லாமே வரும் என்றாள்.

தன் கணவரை விரட்டினாள் மன்னனுக்கு கவிதை எழுதிக் கொடுத்துவிட்டு காசோட வீட்டுக்கு வா இல்லையெனில் வராதே என்றாள்.
அவன் என்ன செய்வதென்றே தெரியாமல் தெரு தெருவாய் சுற்றினான் கவிதை வரவில்லை.

மழைத்தூரல் ஆரம்பித்தது ஒதுங்கினான் அந்த மழையில் நனைந்தவாறு எருமை மாடுகள் வந்தன வந்த மாட்டில் ஒன்று தனது கொம்பினால் செவிற்றில் தீட்டுவதும்; அதை பார்ப்பதும் மீண்டும் தீட்டுவதும் அதைப்பார்ப்பதுமாய் செய்துக் கொண்டிருந்தது இதை பார்த்த அவன் கவிதை எழுதினான்

தீட்டுவதும் பார்க்குறதும் எனக்கு தெரியும்
தீட்டுவதும் பார்க்குறதும் எனக்கு தெரியும்

என்று இதே வரிகளை ஒரு பக்கம் முழுவதும் எழுதி மன்னரிடம் சென்றான்.
அங்கு பலரும் கவிதைகளுடன் நின்றிருந்தார்கள்.இவனோ தனது கவிதையை யாரும் படித்துவிடக் கூடாது என்று தாளை மடித்து வைத்துக் கொண்டு பயந்தபடி நின்றான்.

இவனுடைய முறை வந்ததும் மன்னர் கவிதைத் தாளை வாங்கிக் கொண்டு பொற்காசுகளை கொடுத்தார்.இவனுக்கு சந்தோசம் தாளமுடியவில்லை தனது கவிதைக்கும் காசு கிடைத்துவிட்டதே என்று மனைவியிடம் பொற்காசுகளை கொடுத்தான்.
மனைவி ஆனந்த மடைந்தாள்.

மறுதினம் மன்னருக்கு முகச்சவரம் செய்வதற்கு பரியாரி வந்தான்.
மன்னர் எப்போதும் சவரம் செய்வதற்கு நாற்காழியில் சாய்ந்தபடி மேலே தொங்கவிடப் பட்டிருக்கும் கவிதைகளை வாசித்துக் கொண்டே சவரம் செய்துக் கொள்வார் இது அவருடைய வழக்கம்.

இன்றும் அப்படித்தான் மன்னர் நாற்காழியில் சாய்ந்தபடி கவிதையை பார்வையிட்டார்.
பரியாரி சவரம் செய்வதற்கு முன் கத்தியை எடுத்து நன்றாக தீட்டிக் கொண்டிருந்தான் சுனை பிடித்திருக்கிறதா என்று தனது கட்டை விரலால் உரசிப்பார்த்தான் மீண்டும் தீட்டிக் கொண்டிருந்தான் வழக்கத்திற்கு மாறாக பரியாரி கத்தியை தீட்டிக் கொண்டிருப்பது மன்னருக்கு ஆச்சரியமாக இருந்தாலும் கவிதை படிப்பதில் ஆர்வம் அதிகமிருந்தது.

முட்டாள் எழுதிய கவிதையை படிக்க ஆரம்பித்தார் மௌனமாக படித்துக் கொண்டிருந்த மன்னருக்கு கடும்கோபம் வந்தது.இதை கவிதை என்று எழுதி என்னை ஏமாற்றி பொற்காசை வாங்கிசென்றுவிட்டானே ஆத்திரம் தாங்காமல் அந்த கவிதையை உரக்க படித்தார்.
தீட்டுறதும் பார்க்குறதும் எனக்கு தெரியும் என்றார்.
பரியாரி பதறினான் மன்னா என்று கூவினான் மீண்டும்
தீட்டுறதும் பாக்குறதும் எனக்கு தெரியும் என்று மறுபடியும் சப்தமாக வாசித்ததும் பரியாரி மன்னரின் காலைப்பிடித்து என்னை மன்னித்துவிடுங்கள் என்று ஓலமிட்டு அழ ஆரம்பித்தான்.

மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை இந்த கவிதை பரியாரியை அழவைத்துவிட்டதே இந்த கவிஞனை கழுகு மரத்தில் ஏற்றவேண்டும் என்று நினைத்த நேரத்தில்

அழுதுக் கொண்டிருந்த பரியாரி மன்னா! மன்னித்துவிடுங்கள் என்னை வைத்து உங்களை கொலைச் செய்ய சொன்னது உங்கள் மந்திரிதான்.
சவரம் செய்யும்முன் கத்தியை பலமுறை தீட்டி ஒரே இழுப்பில் கழுத்தை அறுத்திடவேண்டும் என்று மந்திரி கூறினார் அதனால்தான் கத்தியை பலமுறை நான் தீட்டிக் கொண்டிருந்தேன் தீட்டுறதும் பாக்குறதும் எனக்கு தெரியும் என்று எங்கள் சதியை தாங்கள் தெரிந்துக் கொண்டுவிட்டீர்கள் என்னை மன்னித்து உயிர் பிச்சைக் கொடுங்கள் என்று பரியாரி கூறியதும் மன்னர் திடுக்கிட்டு போனார்.

உடனே பரியாரியையும் கொலை செய்ய சொன்ன மந்திரியையும் கைது செய்ய உத்தரவிட்டு தீட்டுறதும் பாக்குறதும் எனக்கு தெரியும் கவிதையை எழுதிய கவிஞனை அழைத்து வரச்சொன்னார்.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த முட்டாளிடம் அவன் மனைவி மன்னர் உன்னை கூப்பிடுகிறாராம் என்று சொன்னதும் முட்டாளுக்கு வயிற்கை கலக்கியதாம் தான் எமுதிய கவிதைக்காத்தான் தன்னை கூப்பிடுகிறார் ஐயோ மன்னன் இன்று உயிருடன் சமாதி கட்டிவிடுவான் என்று பயந்து நடுநடுங்கி போனான்.கூடவே அவன் மனைவியும் என்கணவரை ஒன்றும் செய்துவிடாதீர்கள் என்று அழுதுக்கொண்டே பின் தொடர்ந்தாள்.

மன்னர் அவனை அழைத்து தனது சிம்மாசானத்தில் அமரவைத்து தங்க நாணயத்தால் அபிஷேகம் செய்வதை காரணமறியாமல் முட்டாளும் அவன் மனைவியும் ஆனந்தத்துடன் பார்த்தார்களாம்.

முட்டாளின் வரிகள் ஒருநாட்டு மன்னரின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது.
முட்டாள் என்று யாரும் யாரையும் தீர்மானித்துவிட முடியாது.

அறிவு என்பது காணாமல்போன ஒட்டகமாக இருக்கிறது அதை எங்கு கண்டாலும் கட்டிபோட்டுவிடுங்கள் என்பது அண்ணல் நபிகளின் அழகிய பொன்மொழி.

Monday, May 31, 2010

உலக புகையிலை எதிர்ப்பு தினம்


இன்றைய தினம் உலக புகையிலை எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
புகையிலை என்றதும் நம் சிந்தைக்கு வருவது சிகரெட்.

இது பலருடைய வாழ்க்கையை புகைத்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மை.
ஆண்களைப்போல சில பெண்களும் இன்று புகைப்பதை ஒரு மாடனாக கருதுகிறார்கள்.
ஸ்டைலுக்காக புகைக்கப்படும் பழக்கம் நாளடைவில் வலுவாகி புகைக்காமல் இருக்கமுடியாத சூழலுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள்.
தற்போது ஐடி துறை கால் சென்டர்களில் பணிப்புரியும் இளம் பெண்களிடம் புகைக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது.
பெரும்பாலும் வேலையின் பளுவாலும் பசியை மற்றும் உடல் பருமனை குறைப்பதற்கும் புகைக்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.

சில காலங்களுக்கு முன் விமானத்தில் புகைப்பதற்கு அனுமதியளித்திருந்தார்கள் இன்று விமான நிலையத்தில் கூட புகைப்பதற்கு அனுமதி இல்லை.சில விமான நிலையங்களில் தனி அறையை புகைப்பதற்கு ஒதுக்கியிருந்தாலும் அங்கு சென்று புகைப்பதைவிட ஒரு இரண்டுநிமிடம் நின்று வந்தால்போதும் சிகரெட் குடித்த உணர்வோடு வந்துவிடலாம் அந்தளவு புகைமூட்டமாக இருக்கும்.

முன்னையவிட தற்போது அதிகமான விழிப்புணர்வு புகையிலையின் கெடுதலைப்பற்றி வந்திருக்கிறது பல நாடுகள் பொது இடங்களில் புகைப்பதை தடை செய்திருக்கிறார்கள்.
ஆனால் இந்தோனேஷியாவில் இந்த தடை அமுலில் இருந்தாலும் அதிகமானோர் பொது இடங்களில் புகைக்கிறார்கள்.

இதெல்லாம் மற்றவர்களின் ஆய்வு என்னைப்பற்றிய ஆய்வை நான் சொல்லவேண்டும் ஆரம்பத்தில் நான் புகைக்க ஆரம்பித்தேன் மெல்ல மெல்ல புகை என்னை புகைக்க ஆரம்பித்தது.

புகைக்கும் பழக்கம் எங்கு தொடங்கியது என்று என்னிடம் நீங்கள் கேட்டால் நட்பு என்று சொல்வேன்.ஆம் நண்பர்களுடன் ஜாலியாய் தினம் ஒரு சிகரெட் என்று துவங்கிய பழக்கம் அது வளர்ந்து தினம் ஒரு பாக்கெட் (20) என்ற கணக்கில் சில நேரங்களில் சந்தோசமான துக்ககரமான நேரங்களில் கொஞ்சம் அதிகமாகவே புகைத்து என்நேரமும் என் உடலைப்போல் ஆன்மாவைப்போல் என் கூடவே இருந்து இடது பேண்ட் பாக்கெட்டை ஆக்கிரமிப்பு செய்து தனி இடத்தை என்னிடம் பெற்றிருந்தது.

திருமணத்திற்கு பின் எனது மனைவி என்னிடம் சிகரெட்டை விடும்படி எத்தனையோ முறை கேட்டுக் கொண்டிருக்கிறார்.அப்போதெல்லாம் என் மனைவிக்கு கோபம் உண்டாக்குவதற்காக நீ எனக்கு இரண்டாவது மனைவி என்பேன் எப்படி என்றால் உன்னை கல்யாணம் செய்வதற்கு முன்னிருந்தே நான் புகைத்துக் கொண்டிருக்கிறேன் அதனால் முதல் மனைவி சிகரெட் என்பேன்.

புகைப்பதற்கு எத்தனையோ காரணங்களை கூறியிருக்கிறேன் ஆனால் அத்தனையும் உண்மையல்ல என்பது புகைப்பவர்களுக்கு தெரியும்.

எனது குழந்தைகள் என்னிடம் இந்த பழக்கத்தை விடுங்களேன் என்று கேட்கும்போது உள்ளுக்குள் வெட்கப்பட்டிருக்கிறேன்.இப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அதை விடமுடியாமல் தவிக்கின்றோமே எப்படியாவது விடவேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்ததே தவிர அதைவிட்டுவிடுவதற்கு மனம் தயாராக இல்லை.

பொது நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளும் பழக்கமுடைய எனக்கு நான் பழகக் கூடிய நண்பர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத்தவிர பல நண்பர்கள் புகைப்பதில்லை.புகைத்துவிட்டு நண்பர்களின் பக்கத்தில் அமரும்போது அவர்களின் முகம் சுளிவதை காணும் என் மனசு வலியை சுமந்திருக்கிறது.வாயை பினாயிலிட்டு கழுகினாலும் சிகரெட்வாடை போவதில்லை.


எனது ஆன்மீக குருவைக்காண குடும்பத்துடன் சென்றபோது புகைப்பதை சொல்லக்கூடாது என்று நான் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அதையும்மீறி எனது குழந்தைகள் நான் புகைப்பதை அவர்களிடம் கூறிவிட்டார்கள்.

என் குரு ஆச்சரியமாக என்னைப்பார்தார்கள் உங்களுக்கு இந்த பழக்கமிருக்கிறதா? நம்பிள்ளைகள் இதுபோன்ற பழக்கங்களில் ஈடுபடமாட்டார்கள் தங்கள் மனதை இதில் லயிக்கசெய்து பாழாக்கிக் கொள்ளவேண்டாம் அதனால் வரக்கூடிய தீமைகளை எடுத்துக் கூறினார்கள்.

அவர்களிடம் என்னைப்பற்றிய குறையை கூறும்போது நான் கூனிக்குறுகி விட்டேன்.
எப்படியாவது விட்டுவிடுகிறேன் என்று நான் கூறினாலும் மனம் சம்மதிக்கவில்லை.

மனிதன் ஏதோ ஒன்றுக்கு கட்டுப்படவேண்டும் அந்தக் கட்டுப்பாடு இல்லை என்றால் நூலறுந்த பட்டத்தைப் போன்று அவனுடைய வாழ்க்கை இருக்கும்.

குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டால் அதனால் வரக்கூடிய நன்மைகள் எனக்குத்தானே இருந்தாலும் ஈகோ சும்மா இருப்பதில்லை மனைவிச் சொல்லி இதை விடவேண்டுமா? அல்லது நீ பெற்ற குழந்தைகள் சொல்லி விடவேண்டுமா? இப்படி விடாமல் புகைத்துக் கொண்டிருப்பதற்கு பல காரணங்களை மனம் கற்பித்தாலும் அறிவு அதை ஏற்றுக் கொள்வதில்லை.

புகைக்கக் கூடியவர்களுக்கு புகைப்பதினால் பல தீமைகள் இருக்கிறது என்பது தெரிந்துதான் இருக்கிறார்கள் ஆனால் அந்த தீமை அவர்களைத் தண்டிக்காத வரையில்.
ஆனால் தண்டிக்கப்படும்போது அதை துண்டித்துவிடுவார்கள் தண்டனைக்காக காத்திருக்க வேண்டுமா?.

ஒரு செயலை தொடரும்போது மனம் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை அதை தொடச்சியாக்கும்போது அது பழக்கமாகிறது.அந்த பழக்கம் வழக்கமாகி வாழ்க்கையாகிறது.

இப்படி தொடரப்படுவதுதான் எந்தப்பழக்கமும்.

அந்தப்பழக்கத்திலிருந்து விடுப்பட்டு சரியாக சொல்ல வேண்டுமானால் 2010 ஏப்ரல் 10 தேதி இரவு 9.30 மணிக்கு புகைப்பதை விட்டுவிட்டேன்.50 தினங்களை புகைக்காமல் கடத்தியும் விட்டேன்.வாடை இன்னும் வீசிக்கொண்டு தானிருக்கிறது இருந்தாலும் நான் போராட புறப்பட்டுவிட்டேன்.

புகைப்பதில் நுழைந்த பலர் அதிலிருந்து மீண்டுவருவது கடினம் என்று தங்களுக்குள் ஒரு எண்ணத்தை வழுவாக வைத்திருக்கிறார்கள் என்பது உண்மை.
நானும் அப்படிதான் இருந்தேன் எனது குரு கேட்டார்கள் உங்கள் மனதை உங்களால் வெல்ல முடியும் விட்டுப்பாருங்கள் உங்கள் மனோசக்தியை உணர்வீர்கள் என்றார்கள்.

என்மனதை வென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தூக்கி வீசினேன் இந்த ஐம்பது தினங்களில் அந்த நினைவு வரும்போதெல்லாம் நம் மனதை வெல்லவேண்டும் என்ற எண்ணைத்தை வலுவாக்கிக் கொள்கிறேன் அந்த எண்ணத்திற்கு மத்தியில் இந்த சிகரெட் வலுவிழந்து வருகிறது.

ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீளக்கூடியவர்களின் மனோசக்தி அவர்களுக்கு அதிகரிக்கிறது அவர்களால் எதையும் வைராக்கியத்துடன் செய்து சாதிக்கமுடியும் என்பதை இந்த ஐம்பது தினத்தில் நான் கற்றுக் கொண்டுவரும் அனுபவப்பாடங்கள்.

அந்த பழக்கத்தை விட்டதினால் எனது குடும்பம் சந்தோசமடைகிறது நானும் சந்தோசமடைகிறேன் என்னுள் இருந்த புகைக்கும் எண்ணம் இல்லாதபடியால் அவ்வபோது நண்பர்களைவிட்டு விலகி புகைத்துவிட்டு வரும் அந்த நிமிடங்கள் இன்று மீண்டுருக்கிறது ச கநண்பர்களுக்கு மத்தியில் இன்று நானும் புகைக்காதவனாக காட்சியளிக்கிறேன்.

சாதிக்க முடியும் என்னாலும் சாதிக்க முடியும் ஆம் நான் இமயத்தை தொடவில்லை ஆனால் என்வீட்டு இதயங்களை தொட்டுவிட்டேன்.

மீள்வதற்கு வழிதந்த என்குருவிற்கும் என்குடும்பத்தார்கள் எனது நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை இத்தருணத்தில் கூறிக் கொள்கிறேன்.

நண்பர்களே!
உங்களாலும் முடியும் நீங்களும் சாதனையாளர்தான்.. வாழ்த்துக்கள்!

Thursday, April 15, 2010

சந்திச்சாச்சு....அமீரகப்பதிவர்கள்


நீண்ட இடைவெளிக்கு பிறகு அமீரகப்பதிவர்கள் சந்திக்கலாம் என ஒரு மனதாக இமெயிலில் முடிவெடுத்தாலும் அதில் உள்குத்து, வெளிகுத்து என்று பல குத்துக்கள் இருந்தது.

அதென்ன இத்தனை குத்துன்னு கேட்கிறீங்களா விசயம் இருக்கு...

கராமா பூங்காவில் இரவு 8.00 மணிக்கு சந்திக்க நாள், நேரம் குறித்தாச்சு. நான் அங்கே செல்லும் போது 8.30 மணி.(நாம எப்போங்க சரியான நேரத்துக்கு போயிருக்கோம்)


பெரிய கூட்டம் இருக்கும்னு கற்பனையில போனே... ஆமாங்க சென்றமுறை குறும்படம் வெளியீட்டோம் இல்லீங்களா... அதை பார்த்துட்டு பலபேர் வலைப்பூ ஆரம்பிச்சதா அரச புரசல கேள்விப்பட்டேன்.அதனால் என்னுடைய எதிர்பார்ப்பு கொஞ்சம் ஏத்தமா இருந்தது.ஆனா அங்க பத்து பன்னிரெண்டு பேர்தான் இருந்தாங்க...

கீழைராஸா பேசிக்கிட்டு இருந்தாரு அவரைச்சுற்றி வட்டமா கொலகொலைக்கா மந்திரிக்கா நரியநரிய சுத்திவா மாதிரி உட்காந்திருந்தாங்க.

ஏற்கனவே பதிவர்களுடன் அறிமுகம் ஆகிவிட்டதினால குசலம் கொஞ்சம் ஜாஸ்தியா இருந்துச்சு.

சென்ஷி பக்கதுல உட்காரச்சொன்னாரு அவரு ஆசைக்கி அங்கேயே உட்காந்தேன்.

அண்ணாச்சிய காணும்மேன்னு கீழைராஸாவிடம் கேட்க அரைமணிநேரத்துல வந்துடுவாருன்னு கூறினார்.சொன்னா மாதிரியே 20 நிமிஷத்துல அண்ணாச்சியும் பெண்பதிவரான ஜெஸிலாவும் வந்தார்கள்.
பதிவர்கள் சங்கம் நாம எப்போது ஆரம்பிப்பது என்று சென்ஷி கேட்க அண்ணாச்சி முறைக்க இப்பவும் இது சங்கம்தான்டோய் தனியா என்னவேண்டிக்கிடக்கு என்றதும்
கீழைராஸா அமீரகத்துல இருக்குற எல்லா சங்கத்துலயேயும் தலைய கொடுத்துட்டு வாலைத் தேடிக்கிட்டிருக்கோம் இதுக்கு மேலயும் சங்கம் தேவையா?ன்னு முற்று புள்ளி வைத்தார்.

வந்தவர்கள்
1.அண்ணாச்சி
2.ஆஸாத்
3.கீழைராஸா
4.செந்தில்வேலன்
5.சுந்தர்
6.சென்ஷி
7.அகமது சுபைர்
8.முத்துக்குமரன்
9.கலையரசன்
10.நாஞ்சில் பிரதாப்
11.முதுவை முகில்
12.ரியாஸ்
13.சபிர்
14.நான்

நிறையப்பேரைக் காணுமேன்னு சுபைர்ரிடம் கேட்டேன்
நல்லா சிரித்துக் கொண்டு பேசியவர் சட்டென முகத்தை மாற்றிக் கொண்டார் காரணம் அப்போது விளங்கவில்லை.ஆனாலும் இந்த சந்திப்புல சுபைர் ரொம்ப சந்தோசமா இருந்தாரு.

அந்த சந்தோசத்துக்கு காரணம் (கடாவை பழிகொடுக்கபோறாங்க) அவருக்கு அடுத்தமாசம் கல்யாணம்.


சில பதிவர்கள் தாயகம் செல்வதனாலயும், பல தமிழ் அமைப்புகளில் விடுமுறை நாட்களில் விழாக்கள் நடத்துவதனாலயும், பதிவர் சந்திப்பு விடுமுறைநாளுக்கு விடுமுறை கொடுத்துவிட்டு இப்படி திடுதிப்புன்னு ஏற்பாடு செய்திருக்காங்கன்னு நெனச்சிங்கன்னா தப்பு தப்பு...
இது விருந்துக்காகவே கூடிய சந்திப்புன்னு நான் இங்க எழுதல...அதனாலதான் உள்குத்து வெளிகுத்துன்னு சொன்னேன்.


ஆமாங்க... சுபைரும் செந்தில்வேலனும் வந்தவர்களுக்கு மட்டும் ட்ரீட்டு வச்சாங்க.அதனால தான் என்னப் பார்த்து முறைச்சாரு.எல்லா பதிவரும் வந்து கலந்திருந்தா அனேகமா சுபைர் வந்திருக்க மாட்டாருன்னு குசும்பன் சொல்வது காதில் விழுகிறது.

சுபைரு ட்ரீட்டு கொடுத்தது தான் பழியாவதற்கு

செந்தில்வேலன் கொடுத்தது தான் பழியாகி பழிவாங்க வந்தவருக்கு (குழந்தை பிறந்ததற்காக) கொடுத்தாரு...


அண்ணாச்சி நல்ல உணவகமாக பார்த்து அழைச்சுட்டுப் போவதற்கு முன்னாடியே ஜெஸிலா கிளம்பிட்டாங்க சுபைருக்கு ரொம்ப சந்தோசம் ஒரு தல குறைஞ்சுடுச்சு.

கொஞ்ச தூரம் நடப்பாட்டியே அண்ணாச்சி அழைச்சுக்கிட்டு போனதின் இரகசியம் நல்லா சாப்பிடுவோம்னு மட்டுமல்ல தரமான உணவகத்தை தேர்தெடுப்பதற்கு என்று சாப்பிட்ட போது விளங்கிக்கிட்டோம்.
சுpக்கன் மட்டன் பிரியாணி சிக்கன் கபாப் சிக்கன்65 சிக்கன் டிக்கா இப்படி சிக்கு சிக்குன்னு பல ஐட்டங்கள்
(பதிவர் சந்திப்புக்கு வராத அமீரகப் பதிவர்களே வயிற்றெரிச்சல் படவேண்டாம். சுபைரு கல்யாண முடிச்சதும் இன்னொரு விருந்தும் கொடுப்பாரு)

எல்லாம் முடிஞ்சு வெளியில வந்தோம் ... ஒரு நிமிசம் என்று கூறி சுபைர் பாத்ரூம் போனாரு போய் ரொம்ப நேரமாச்சு ஆளைக் காணும்.

சுபைரிடம் ஏம்பா இவ்வளவு நேரம் என்று கேட்க
உடனே முகில் பாத்ரூமில் அழுதுவிட்டு வராரு...என்று கூறி புன்னகையுடன் எல்லோரும் விடைபெறுவதற்கு முன்

உதவிக்கரம் நீட்டியவருக்கு மருத்துவ உதவிக்காக அண்ணாச்சி பண்ட் கலெக்ட் செய்தார்.பலரும் பங்கெடுத்தோம்.

கடைசியா ஒருவார்த்தை கீழைராஸா சொன்னார்

இந்த நிகழ்ச்சிய யாரும் பதிவிடவேண்டாம்ன்னார்.அவரு சொன்னதை எல்லாரிடமும் சொல்லனுங்குறதுனால தான் இந்த பதிவு.


மொத்தத்துல கூட்டம் குறைவா இருந்ததுனால மொக்கையும் குறைவா இருந்துச்சு...வராத பதிவர்களை நினைத்து சுபைருக்கு சந்தோசம் எங்களுக்கு வருத்தம்.

Wednesday, April 14, 2010

பூஜியமாகும் சூனியம்


சில தினங்களுக்கு முன் எனது ஆன்மீக ஆசிரியரின் சொற்பொழிவைக் கேட்க சென்றிருந்தேன்.
ஆண்டுக்கு ஒருமுறை பத்து அல்லது பதினைந்து தினங்களுக்கு துபாயில் சொற்பொழிவாற்றுவார்கள்.

பலதரபட்ட கேள்விகள் பலரும் கேட்பார்கள்.எல்லாவற்றிற்கும் பதில் கிடைக்கும்.ஆனால் கேட்கப்படும் கேள்வியை விளங்கி கேட்கப்படும்போது அதற்கான பதிலும் நம் மனதில் பதியும் இருள் விலகி அறிவுத் தெளியும்.
எல்லோரும் கேட்கிறார்கள் என்று நாமும் எதையாவது கேட்டால் பதில் கிடைக்கும் ஆனால் அந்த பதில் நம் மனதில் தரிபடாது.

ஏத்தனையோ நூற்களை நாம் வாசிக்கின்றோம் எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு நூலும் ஒரு அறிவுதான்.ஆனால் அந்த நூற்கள் அறிவின் பூரணத்தை விளக்குவதில்லை.ஏட்டுக்கல்வியினால் எல்லாவற்றையும் விளக்க முடியாது.
விளக்கம் கொடுப்பதற்கு ஒரு ஆசான் தேவை.விளக்கமில்லாத படிப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.

ஞானிகளிடம் பூரணத்தை கேட்டு தெளியலாம்.கேட்கப்படும் நம்மிடம் தேடல் இருக்கவேண்டும்.இல்லையெனில் எந்த பதிலும் நம்மை திருப்தி படுத்தாது.
எல்லாவற்றிகும் ஒரு வழி இருக்கிறது.அந்த வழியில் தான் எதையும் பெறவேண்டும்.வழிமாறினால் வாழ்க்கையும் மாறிவிடும் சிந்தனையும் மாறிவிடும்.

இது அவசரக்காலம் எதையும் அவசரமாக செய்யப் பழகுகிறோம்.இந்த அவசரம் மனிதனை போட்டி மனப்பான்மையை உண்டாக்கி பொறாமைகளை வளர்த்து வருகிறது.

இந்த பொறாமை ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அழிப்பதற்கும் அவனைக் கெடுப்பதற்கும் பல யுக்திகளை கையாளுகிறான்.
அப்படிப்பட்ட யுக்திகளில் ஒன்று தான் செய்வினை செய்வதும் சூனியம் வைப்பதும்.இதில் பெரும்பாலும் பெண்கள் கவரப்படுகிறார்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்.

உண்மையில் ஒரு மனிதனுக்கு சூனியமோ செய்வினையோ செய்யமுடியுமா? அப்படி செய்வதினால் அதில் மனிதன் பாதிக்கப்படுகிறானா?

இந்த கேள்விகள் என் ஆன்மீக ஆசிரியரிடம் கேட்கப்பட்டது.

ஒரு கதை மூலம் விளக்கம் அளித்தார்கள்.

ஒரு சாலை ஓரத்தில் இருவர் எதிர் எதிரே ஒரேவிதமான கடை வைத்திருந்தார்கள்.ஒருவருக்கு நல்லவியாபாரம் அவர் நியாயமான விலையில் விற்பனை செய்துக் கொண்டிருந்தார்.மற்றவருக்கோ அந்தளவு வியாபாரமில்லை.எதிர் கடைக்காரனைக் கண்டு அவர் பொறாமைக் கொண்டார்.

ஒரு நாள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.உன்னை என்ன செய்கிறேன் பார் உனக்கு சூனியம் வைக்கிறேன் என்று வியாபாரம் இல்லதவர் கூற உன்னால் முடிந்ததை செய் என்றார் நியாயக் கடைக்காரர்.

மறுதினம் காலையில் கடைத் திறக்க வந்தவருக்கு அதிர்ச்சி.அவர் கடை வாசலில் கருப்பாக மணி உதிர்ந்து கிடைப்பதைப் போல கடுகு கிடைப்பதைக் கண்டதும் பொறாமை கடைக்காரர் ஏதோ சூனியம் செய்வினை வைத்துவிட்டார் என்று இவரே ஒரு பிரம்மையை ஏற்படுத்திக் கொண்டு கவலையடைந்தார்.அந்த கவலை வியாபார சிந்தனையிலிருந்து அவரை திசைத்திருப்பியது.அவருக்கு வியாபாரம் மந்தமானது அவர் உடல் நிலையும் மோசமானது.

இவரின் நண்பர் இவரைக்காண வந்தபோது தனக்கும் தனது எதிரி கடைக்காரனுக்கும் நடந்த பிரச்சனையை கூறி அவர்தான் எனக்கு செய்வினை செய்துவிட்டார்.என்னுடைய வியாபாரமும் உடல் நிலையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. என்று அவர் கூறியதும் அந்த நண்பர் கூறினார்
உன்னுடைய எதிரையை பார்த்துவிட்டுதான் உன்னைக்காண வந்துள்ளேன்.
அவர் உனக்கு செய்வினையோ சூனியமோ வைக்கவில்லை. ஆனால் ஒரு ஐம்பது கிராம் கடுகை மட்டும் உன் கடை வாசலில் கொட்டிஇருக்கிறார் அதைக்கண்ட உனக்கு பயம் உண்டாகி நீயே உனக்கு சூனியத்தை செய்வினையை வைத்துக் கொண்டுள்ளாய் என்றார்.
இப்படித்தான் பலர் தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்துக் கொள்கிறார்கள்.என்ற கதையை ஆன்மீக ஆசிரியர் கூறினார்கள்.

பல பெண்களிடம் சூனியத்தின் நம்பிக்கை நிறைந்திருக்கிறது.எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள்.சூனியம் என்றாலே ஒன்றும் இல்லை என்பதுதானே பொருள்.ஒன்றுமில்லத ஒன்றினால் என்ன செய்ய முடியும். ஆனால் நம்பிக்கை எதையும் செய்யும்.
இறைவன் ஆதியில் சூனியமாக இருந்ததை அமாவாக இருந்தேன் என்கிறான்.ஒன்றுமில்லா ஒன்றுதான் இந்த பிரபஞ்சமாக இருக்கிறது.

செய் என்றால் செயல்பாடு
வினை என்றாலும் செயல்பாடுதான்; செய்வினை என்ற சொற்சொடருக்கு செயல் என்பதுதான் பொருளாக இருக்கிறது.

செய்வினை சூனியம் என்பது மனிதர்களை முட்டாளாக்குவதற்கும் பொருளை அபகரிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஏமாற்று கண்கட்டு வித்தை.
சூனியம் மூலம் ஒருவரை பழிவாங்க முடியுமென்றால் நம்நாட்டு அரசியல்வாதிகளை எண்ணிப்பாருங்கள்.
சூனியம் வைத்தே ஒட்டையும் ஆட்சியையும் பிடித்துவிடுவார்கள் எதிர்கட்சி என்பதே இல்லாமலாகிவிடும்.எதிர்ப்பனுக்கெல்லாம் சூனியம்தான்.
இது சாத்தியமா?

சில இல்லங்களில் மாமியார் மருமகள் பிரச்சனை கூட சூனியம் என்ற பாட்டையில்தான் நடைப்பெறுகிறது.

இந்த நம்பிக்கையை பேணக்கூடியவர்களுக்கு சூனியம் எல்லாமும் செய்யும் இதை ஏற்காதவர்களுக்கு சூனியம் தனக்கே சூனியமாக்கிக் கொள்ளும்.

நம்பிக்கை என்பது மனிதன் தெளிவுவடைவதற்குதானே தவிர மூடநம்பிக்கையை வளர்ப்பதற்கல்ல.!