உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, May 5, 2011

சக்கரை வியாதிக்கு சகசமான வைத்தியம்



இன்று சர்க்கரை வியாதி என்பது சர்வசாதரணமாகி விட்டது யாரைப் பார்த்தாலும் கேட்டாலும் தங்களுக்கு அந்த நோய் இருப்பதாகவே பெரும்பாலோர் கூறுகிறார்கள்.உலகம் முழுவதும் 15 கோடி மக்களுக்கு இந்த வியாதி இருப்பதாக ஒரு செய்தி சொல்கிறது.ஆனால் நம் பாரத நாட்டில் சுமார் இரண்டு கோடி மக்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

பெரும்பாலோருக்கு தங்களுக்கு சர்க்கரை வியாதி இருப்பதே தெரியாமல் உடம்பை பரிசோதனையும் செய்யாமல் அதைப்பற்றிய விழிப்புணர்வும் இல்லாமல் இந்த வியாதியால் அவதிப்பட்டு வாழ்ந்துக் கொண்டு வருகிறார்கள்.

முதலில் சர்க்கரை வியாதி என்றால் என்ன? என்பதை சுறுக்கமாக தெரிந்துக்கொள்வோம்.
நாம் உட்கொள்ளும் உணவுகளிலிருந்து கிடைக்ககூடிய குளுக்கோஸ் எரிபொருளாக மாறுகிறது. இந்த குளுகோஸ் இரத்தத்திற்குள் சென்று பின்னர் இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உடற்செல்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. கணையம் எனும் உடல் உறுப்பு இன்சுலின் எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த இன்சுலின் இரத்தத்தின் வழியாக செல்களை சென்றடைகின்றன. அங்கு குளுகோஸ் ஐ சந்தித்து, செல்களானது குளுகோஸ்-ஐ தங்களுக்குள் எடுத்துக் கொள்ளச் செய்கிறது. குளுக்கோஸ்-ஐ செல்கள் எரித்து உடலுக்கு தேவையான சக்தியினை உற்பத்தி செய்து தருகிறது.

இது சர்க்கரை வியாதி இல்லாதவர்களின் உடல் நிலை. ஆனால் அந்த நோய் இருக்கும்போது ஏற்படக்கூடிய மாற்றங்கள்

குளுக்கோஸ்-லிருந்து சக்தியை உற்பத்தி செய்வதை சர்க்கரை நோய் கடினமாக்குகிறது. வயிறு போன்ற ஜீரண உறுப்புகள், உணவினை குளுகோஸ்-ஆக மாறச் செய்கின்றன. அவை இரத்தத்திற்குள் சென்று இரத்தத்தின் வழியாக செல்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடிவதில்லை
ஏனெனில்
1. இன்சுலின் போதுமான அளவு இல்லாதிருக்கலாம்.
2. இன்சுலின் அதிகளவில் இருந்தும், இந்த இன்சுலின் செல் உறையில் உள்ள ரிசப்ட்டார் எனப்படுவதை திறக்க முடியாத நிலை ஏற்படுவதினால் செல்லானது குளுக்கோஸ்-ஐ உட்கொள்ள முடியாத நிலை
3. எல்லா குளுக்கோஸ் துகள்களும் செல்களுக்குள் செல்ல மிகக் குறைந்த அளவே ரிசப்ட்டார்கள் இருக்கலாம்.
எல்லா குளுக்கோஸ் துகள்களும் இரத்தத்திலேயே தங்கியிருக்கும். இதனை ஹைப்பர்கிளைசீமியா (இரத்தத்தில் குளுக்கோஸ் அல்லது சர்க்கரை மிகவும் அதிகளவில் இருப்பது) என்பர். செல்களில் போதிய அளவு குளுக்கோஸ் இல்லாததினால் உடல் நன்கு செயல்பட தேவையான சக்தியினை உற்பத்தி செய்ய முடிவதில்லை.

அதனால் நமது உடம்பில் செயற்கையாக ஆங்கில வைத்திய முறையில் தினம் மாத்திரைகள் அல்லது ஊசிகளின் மூலம் இன்சுலினை செலுத்தி சர்க்கரையை குறைத்துக் கொள்கிறோம்.
இது சர்க்கரை வியாதி உள்ள எல்லோரும் தினம் தினம் செய்துக் கொண்டிருக்ககூடிய நிகழ்வு.

சில தினங்களுக்கு முன் எனது நண்பர் M.E.Sஅபுதாஹிர் பைஜி அவர்கள் சர்க்கரை வியாதியை இயற்கை வைத்தியத்தின் மூலம் ஒருவர் குணப்படுத்துகிறார் என்று ஒரு துண்டு பிரச்சாரத்தை காண்பித்தார்கள்.

படத்தின் மீது கிளிக் செய்தால் பெரிய எழுத்தில் படிக்கலாம்

அதை முழுவதையும் வாசித்துப் பார்த்தேன். “சர்க்கரை நோய்க்கு எளிய இயற்கை மூலிகை மருந்து” - என்று தலைப்பிட்டு விளம்பரப்படுத்தி இருந்தார்கள். இந்த விளம்பரம் நோய்க்கு சிகிச்சை பெற்றவர் கொடுத்திருக்கிறார் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விசயம்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் துர்க் என்ற ஊரில் பாபா ஷேக் இஸ்மாயில் என்பவர் இந்த வைத்தியம் முறையை செய்துவருகிறார்கள்.பல மாநிலத்திலிருந்து மக்கள் அவரைத்தேடிச் சென்று அவர் தரும் மருந்தை உட்கொள்கிறார்கள்.குணம்பெருவதாக கூறுகிறார்கள்.

அந்த மாநிலத்திற்கு நாம் எப்படி செல்ல வேண்டும் என்ற விபரங்களும் துண்டு பிரச்சாரத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த வைத்தியத்தின் சிறப்பு என்ன வென்றால் பாபா தரக்கூடிய சூரண மருந்தை ஓரிருமுறை மட்டுமே சாப்பிட்டால் போதுமானது சர்க்கரை அளவு குறைந்துவிடும்.என்கிறார்.

வைத்தியர் பாபா ஷேக் இஸ்மாயில்

அவர் கூறும் அறிவுரைகள்

1. மருந்து சாப்பிட்டப் பின் தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்கு தண்ணீர் உணவு புகைத்தல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

2. நான்கு மணிநேரம் கழித்தப்பின் நீங்கள் ஒதுக்கிவைத்த இனிப்பு சாப்பாடு அனைத்தும் வயிறு நிறைய சாப்பிட வேண்டும்.

3. உணவில் புளி கத்தரிக்காய் மாங்காய் கண்டிப்பாக இரண்டு மாதங்களுக்கு சேர்த்துக் கொள்ளக்கூடாது.

4. மருந்துக் குடித்தப்பின் ஏற்படும் உமிழ்நீர் மற்றும் ஒமட்டலுடன் கூடிய உமிழ்நீர் ஆகியவற்றை கண்டிப்பாக துப்பக்கூடாது.

5. இருமல் ஏற்பட்டு அதனால் வரும் சளியினை துப்பலாம்.

6. வீட்டிற்குச் சென்றப்பின் சர்க்கரை அளவு உயர்வு தெரிந்தால் இரண்டு நாட்களுக்கு மட்டும் நீங்கள் பயன்படுத்தி வந்த சர்க்கரை மாத்திரைகளை உட்கொண்டு அதன் பின் சுத்தமாக சர்க்கரை மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.முப்பது நாட்கள் கழித்து உங்கள் சர்க்கரை அளவை பரிசோதனை செய்துக் கொள்ளவும். பரிசோதனையில் சர்க்கரை நார்மல் அளவிற்கு குறைந்திருப்பதை காண்பீர்கள்.

7. இன்சுலின் பயன்படுத்துபவர்கள் சூரண மருந்தை இரண்டு முறை இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டும்.

8. மாத்திரை மருந்து சாப்பிடக்கூடியவர்கள் ஒருமுறை சூரணமருந்தை எடுத்துக் கொண்டால் போதுமானது.

என்று இப்படி பாபா ஷேக் இஸ்மாயில் அறிவுரைகள் வழங்கி இருக்கிறார்கள்.

இவைகள் எல்லாம் உண்மைதானா?அல்லது பணம் பண்ணும் வழியா? என்ற சந்தேகமும் நமக்கு தோன்றவே செய்தன. வரக்கூடியவர்களிடம் டோக்கன் முறையில் பெயர்களை பதிவு செய்வதற்கு முப்பது ரூபாயும் பாபா கொடுக்கக் கூடிய மருந்துக்கு 120 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. என்று பிரசுரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

நண்பர் அபுதாஹிர் அவர்களுக்கு சர்க்கரை இருப்பதினால் அதற்கான மாத்திரைகள் தினம் சாப்பிட்டு வருகிறார்கள் இந்த துண்டுப் பிரச்சாரத்தைப் பார்த்ததும் சட்டீஸ்கர் சென்று வருதற்கு துபாயிலிருந்து ஆயத்தமானார்கள்.
அப்போது நான் கேட்டுக் கொண்டவிசயம்
வைத்தியர் பாபாவை புகைப்படம் எடுத்துவாருங்கள் சென்று வரக்கூடிய விபரங்களையும் சேகரித்து வாருங்கள் என்று கேட்டுக்கொண்டதற்கினங்க அதற்கும் மேலாகவே சகோதரர் அபுதாஹிர் அவர்கள் தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதி அதற்கான சிலவுகள் என்று பல விபரங்களையும் சேகரித்து வந்துள்ளார்கள்.

இனி நண்பர் M.E.S.அபுதாஹிர் பைஜி அவர்கள் கூறுவதைக் கேட்போம்.

துபாயிலிருந்து டெல்லி அங்கிருந்து ராய்பூர் விமானம் மூலம் வந்திறங்கினேன்.அங்கிருந்து துர்க் செல்வதற்கு 40 கி.மீ தூரம்.
(தமிழகத்திலிருந்து வரக்கூடியவர்கள் சென்னை சென்ட்ரலிருந்து கோர்பா-6327 எக்ஸ்பிரஸ் இரயிலில் நேரடியாக துர்க் வாரம் இருமுறை செல்கிறது அதில் வரலாம்) புதன்காலையில் துர்க் வந்தடைந்தேன்.

அப்பொழுது என் உடம்பில் சர்க்கரை அளவு 360 இருந்தது.வியாழன்கிழமை அதிகாலை எழுந்து இறைவணக்கத்தை முடித்துக் கொண்டு வெறும் வயிறுடன் தண்ணீர் கூட அருந்தாமல் ஜூம்மா பள்ளிவாசலுக்கு வந்தேன்.பள்ளியில் வைத்துதான் மருந்து தருகிறார்கள்.

பல மாநிலத்திலிருந்து வைத்தியத்திற்காக பலரும் வருகிறார்கள் குறிப்பாக தமிழகத்திலிருந்து இந்த வைத்தியமுறை தெரிந்தவர்கள் வருகிறார்கள். நீண்ட வரிசை நின்றது மற்றவர்களைப் போல நானும் வரிசையில் அமர்ந்து சென்றேன்.

மருந்தை குவளையில் போட்டு கலக்குகிறார் பாபா


பாபா அவர்கள் மூலிகை மருந்தை எடுத்து உள்ளங்கையில் வைத்து குவளையில் பாலுடன் கலந்து கொடுத்தார் அதைக் குடித்தேன் கடுமையான கசப்பும் துவப்பும் இருந்தது.இந்த மருந்தை குடித்த உடன் தண்ணீர் குடிக்கலாம். அதன் பின் சில மணி நேரங்கள் கழித்து இனிப்பு மற்றும் உணவு உண்டேன்.
புளி மாங்காய் கத்தரிக்காய் இவைகள் கலக்காத உணவு அங்கு தயாரித்தும் கொடுக்கிறார்கள்.
நம் வசதிகேற்ப அங்கு தங்கிக் கொள்ளலாம் மூன்று தினங்கள் தங்கி இரண்டு தினங்கள் மட்டும் மருந்து சாப்பிட்டேன் மூன்றாவது தினம் துபாய் புறப்பட்டு விட்டேன். பாபா தரக்கூடிய மருந்து அங்கே மட்டுமே சாப்பிடக் கொடுக்கிறார் மற்றபடி அதை பொட்டலம் போட்டு வீட்டுக்கு எடுத்துப்போக கொடுப்பதில்லை அனுமதியுமில்லை.

அங்கு தங்கிருந்த மூன்று தினங்களில் சர்க்கரையை பரிசோதித்து பார்க்கவில்லை. துபாய் வந்ததும் பரிசோதனை செய்து பார்த்ததில் சர்க்கரை எப்பவும் போல 360 அதிகமாகவே இருந்தது.எப்பவும் சாப்பிடக்கூடிய சர்க்கரை மருந்து ஒருதினம் எடுத்துக் கொண்டேன்.

ஆனால் முன் இருந்ததை போல் அல்லாமல் தற்போது உடலில் சோர்வு இருக்கவில்லை சர்க்கரை அதிகமானால் பல்வலி கோபம் ஏற்படும் அந்த வலியும் இல்லை பதட்டம் கோபம் இருக்கவில்லை மாறாக உடலில் புத்துணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

இந்த மருந்து சாப்பிட்டு இன்றுடன் பதினைந்து தினங்களுக்கும் அதிகமாகிவிட்டது. இந்த நாட்களில் தினம் உட்கொள்ளவேண்டிய சர்க்கரை மருந்தை ஒருநாள் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளேன்

நண்பர் M.E.S.அபுதாஹிர் பைஜியுடன் பாபா மற்றும் அவர் நண்பர்கள்

தற்போது பரிசோதித்து பார்த்தவரையில் சர்க்கரை 360 லிருந்து 250க்கு குறைந்திருக்கிறது பலருக்கு நார்மலாக இருப்பதாக கூறுகிறார்கள்; ஆனால் எனது உடல் நிலைக்கு இன்னும் சில தினங்களில் குறைந்துவிடும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. என்று புத்துணர்ச்சியுடன் அபுதாஹிர்பைஜி கூறுகிறார்கள்.

சர்க்கரை வியாதிக்கு பலவிதமான வைத்திய முறைகள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது ஆனால் இந்த வைத்தியமுறை எளிமையாக இருக்கிறது. பாபா கொடுப்பது மூலிகை மருந்து அதை உட்கொள்வதால் சர்க்கரை வியாதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும் என்று அங்கு சென்று வந்தவர்கள் கூறுகிறார்கள்.

பாபா வசிக்கும் துர்க்கில் நமது நண்பர் உள்ளுர்வாசிகளிடம் பாபாவைப் பற்றி விசாரித்தும் இருக்கிறார்.அவர் வைத்தியத்தைப் பற்றி சிலர் நம்பிக்கையும் சிலர் அவநம்பிக்கையும் கொண்டுள்ளார்கள்.

இன்றுவரையில் பாபா தனது வைத்தியத்தை எதிலும் விளம்பரங்கள் செய்யவில்லை கேள்விஞானத்தில் சென்று அவரைப்பார்த்து மருந்துண்டு குணம் தெரிந்தவர்கள் மற்றவர்களிடம் கூறுவதை வைத்தே பலரும் அங்கு சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பர் M.E.S.அபுதாஹிர் பைஜி அவர்களை ஒரு முன்னோட்டம் பார்த்த வரையில் பாபாவின் வைத்தியத்தில் நம்பிக்கை தெரிகிறது.அதனால்தான் இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு பதிவு செய்கிறேன்.

இன்னுமொரு நண்பர் துர்க் செல்வதற்கு ஆயத்தம் மேற்க்கொண்டுள்ளார்.

வேறு ஏதும் விபரம் வேண்டுபவர்கள் நேரடியாக பாபாவிற்கு தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு விவாதிக்கலாம்.

முக்கிய அறிவிப்பு
இங்கு சென்றுவந்த நண்பருக்கு இன்று வரையில் (2013 அக்டோபர்) சர்க்கரை வியாதி குணமாக வில்லை என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

Sunday, April 17, 2011

காலத்தால் கரையாத காவியம் தீரன் திப்புசுல்தான்


நல்ல நட்பு கிடைப்பது அரிது அதுவும் இலக்கிய உலகில் சாதித்துக் கொண்டிருப்பவர்களுடன் நெருக்கமான உறவு கிடைப்பதும் அவர்களுடன் பழகுவதும் ஒரு அலாதியான இன்பம்.

சில வருடங்களுக்கு முன் துபையில் அறிமுகமான இலங்கையைச் சார்ந்த காவியத்திலகம் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களுடன் எனக்கு கிடைத்த நட்பை மிகவும் மதிக்கிறேன் என்றென்றும் நினைவுக் கொள்கிறேன்.

டாக்டர் ஜின்னாஹ்வைப் பற்றி தமிழகத்தில் பிரபலமான இலக்கியவாதிகளிடம் கேட்டால் அவருடைய சாதனைகளை பட்டியலிட்டு கூறுவார்கள். இலக்கிய வட்டத்தில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்திருக்கும் இவர் ஒரு மருத்தவர்.

மருந்தகம் அமைத்து கூடுமானவரையில் ஏழைகளுக்கு இலவச வைத்தியங்களை செய்தும் மலைவாழ் மக்களிடத்திற்கு சென்று வைத்தியம் செய்ததும் இவருடைய வரலாற்று சுவடுகள். மருத்துவ தொழிலில் ஈடுப்பட்டிருந்த காலத்திலும் இலக்கியத்தின் மீது அளவிலா காதல் கொண்டிருந்ததற்கு காரணம் அவருடைய தந்தை புலவர்மணி M.K.ஷரீபுத்தீன் அவர்கள்.ஆனால் பத்திரிக்கைதுறை ஜம்பவான் அறிஞர் எஸ்.டி.சிவநாயகம் அவர்களை தனது குருவாக ஏற்றுள்ளார்.

அமீரகத்தில் ஜின்னாஹ் அவர்களின் புதல்வர்களும், புதல்வியும் இருப்பதினால் அடிக்கடி துபாய் வந்துபோவது அவரின் வழமை. வந்த இடத்திலும் இலக்கிய ஆர்வலர்களின் தொடர்பை துபாயில் இயங்கிக் கொண்டிருக்கும் சங்கமம் தொலைக்காட்சி நிறுவனர் கலையன்பன் மூலம் கிடைக்க அதன் வழி எனக்கும் கிடைத்தது.

பண்டார வன்னியன் காவியம் வெளியீட்டு விழாவிற்கு தொலைபேசி மூலம் என்னை அழைத்து உரையாடிய ஜின்னாஹ் அவர்களை அதே தினத்தில் சந்தித்தேன். அந்த சந்திப்பு இன்று வரை தொடர்கிறது இறைவனின் நாட்டத்தால் என்றும் தொடரவேண்டும்.

பண்டார வன்னியன் காவிய நூலை பெற்றபோதுதான் ஜின்னாஹ் அவர்களின் சாதனைகளை படிக்கத் தெரிந்தேன். 1965-ல் இலக்கியத்தில் பிரவேசித்துள்ள இவர் கவிதை சிறுகதை புதினம் சிறுவர் இலக்கியம் மொழிமாற்றம் (கவிதை) இவைகளில் ஆர்வம் கொண்டவரானார். இவர்வெளியிட்ட நூற்கள் முத்துநகை, பாலையில் வசந்தம் மஹ்ஜபீன் காவியம்,புனித பூமியிலே காவியம்,பணிமலையின் பூபாளம் கவிதை தொகுப்பு, கருகாத பசுமை (புதினம்),பிரளயம் கண்ட பிதா, தாய்க்கென வாழ்ந்த தனயன்,(குறுங்காவியங்கள்),கடலில் மிதக்கும் மாடி வீடு (சிறுவர் பாடல்கள்),அகப்பட்ட கள்வன் (சிறுவர் படக்கதை),பெற்றமனம் சிறுகதைத் தொகுப்பு,எங்கள் உலகம் (சிறுவர் பாடல்கள்),பண்டார வன்னியன் காவியம்,திருநபிக் காவியம்,திருமறையும் நபிவழியும்,வேரறுந்த நாட்கள், ராகுலுக்கு ஒரு புது வண்டி,ஆகிய நூற்களை வெளியீட்டுள்ளார்.இன்னும் வெளிவரவேண்டிய நூற்கள் ஏராளம் இருக்கின்றன. இதுவரையில் ஏழு காவியங்களை எழுதி வெளியீட்டுள்ளார்.இதில் டாக்டர் கலைஞர் அவர்களால் எழுதப்பட்ட பண்டார வன்னியன் நாவலை 1500 பாடல்களாக காவியமாக்கியவர். அந்த காவியத்திற்கு இலங்கை அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் மிக உயர்வானவிருது சாகித்ய மண்டலம் அவருக்கு 2005-ல் வழங்கப்பட்டது.

இவருடைய மஹ்ஜபீன் காவியம், புனித பூமியிலே காவியம் ஆகிய இரு காவியங்களும் இந்திய தமிழ்நாட்டின், வேலூர் மாவட்ட மேல்விசாரம் அப்துல்ஹக்கீம் கல்லூரியின் தமிழ்துறை தலைவர் பேராசிரியர் எஸ்.முஹம்மதுஅலி அவர்களால் ஈழக்கவிஞர் ஜின்னாஹ் ஷரீபுத்தீனின் இரட்டைக் காப்பியங்கள் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஆய்வு செய்யப்பட்டு சென்னைப் பல்கலைகழகத்தில் 2006-ம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார். இன்னும் தமிழகத்தில் பல இலக்கிய நிகழ்வுகளில் மு.மேத்தா, வைரமுத்து, வாலி, கவிக்கோ போன்றவர்கள் இவருடைய காவியங்களை கவிதைகளை விமர்சித்துள்ளார்கள். சென்னையில் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக்கழகம் துவங்குவதற்கு முக்கிய காரணமாகவும் விளங்கியவர். பல அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்துக் கொண்டிருப்பவர் இருபதுக்கும் அதிகமான விருதுகளை பெற்றவர்.

இவருடைய சாதனைகள் மிக நீளமானது 68 வயதை தொட்டிருந்தாலும் இவர் இன்றும் இளைஞராகவே திகழ்கிறார் இவருடைய எழுத்துக்களுக்கு வயதாகவில்லை. இன்னும் காவியங்கள் படைத்தவண்ணமிருக்கிறார்.இறைவனின் அருளால் நிறைய நிறைய காவியங்களை இவர் படைக்கவேண்டும் என்பதே எமது பிரார்த்தனை.

2011 ஏப்ரல் 14 வியாழன் மாலை துபாயில் இவருடைய தீரன் திப்பு சுல்தான் காவியம் வெளியிடப்பட்டது.

தீரன் திப்பு சுல்தானைப்பற்றி அறிந்துக் கொள்வதற்காக இலங்கையிலிருந்து மூன்றுமுறை கர்நாடகா மாநிலத்திற்கு விஜயம் செய்து வரலாற்று சிறப்புமிக்க இடங்களை எல்லாம் பார்வையிட்டு பல நூற்களை ஆய்வு செய்து தீரன் திப்பு சுல்தானின் முழுமையான உண்மையான வரலாற்றை காவியமாக 1607 பாடல்களில் பாடியிருக்கிறார்.

இவர் அன்னிய நாட்டுக்காரராக இருந்தாலும் தன் இன மன்னனின் கரையைபோக்குவதற்கு தன்னாலான முயற்சியாக இந்த காவியத்தை இவர் செய்திருப்பது இஸ்லாமிய வரலாற்றில் பதிவுச்செய்யப்பட வேண்டிய ஒரு விசயமாக இருக்கிறது. இவர் இலங்கை மன்னன் பண்டாரவன்னியனின் காவியத்தையும் மதபேதமின்றி எழுதி இருப்பது இவருடைய மனிதநேயத்தை பறைசாற்றுகிறது.

இந்த விழாவிற்கு இலக்கிய ஆர்வமிக்கவர்கள் மட்டுமே கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் டாக்டர் ஜின்னாஹ் அவர்களைப் பற்றிய ஒரு கவிதையை நான் வாசித்தளித்தேன்.

இலங்கை மண்ணில் உதயமானவர்
இலக்கிய விண்ணில் இதயமானவர்

தோற்றத்தில் எளிமையானவர்-கவி
ஏற்றத்தில் முதன்மையானவர்

பழக்கத்தில் இனிமையானவர்-தமிழ்
புழக்கத்தில் புதுமையானவர்

நாணயம் குறையாத நளினமானவர்
ஆணவம் நிறையாத அமைதியானவர்

புகழ்தேட அகல் ஏற்றாதவர்
பொருள் தேட மருள் கொள்ளாதவர்

காவியம் படைப்பதில் இளமையானவர்
ஆவியம் படைத்தவனுக்கு இசையானவர்

திரு நபிகள் மீது காதலானவர்
திறனாய்வு செய்து காவியமாக்கியவர்

அன்னியன் எழுத்தை ஏற்றவர்-அதனால்
பண்டார வன்னியன் கவியை சாற்றியவர்

மருத்துவம் படித்த மனிதரிவர்-என்றாலும்
கருத்துரை வடித்த தமிழறிஞரிவர்

தீரன் திப்பு சுல்தானை சொந்தமாக்கியவர்
தீ யறம் சுமத்தியவர்களை சிந்தையாக்கிவர்

ஏழுக் காவியங்களை எழவைத்தவர்- எட்டாத
சாகித்யமண்டலத்தை விழவைத்தவர்

தமிழ்மாமணி தமிழியலில் சின்னமானவர்
காவியத்திலகம் கவிக்கதிரோன்பெற்ற ஜின்னாஹ் அவர்

பல அமைப்புகளில் தலைமை ஏற்றவர்
தன் உழைப்பினால் திரவியம் பெற்றவர்

வாழ்நாள் சாதனையாளரென்ற விருதைப்பெற்றவர்
வாழ்க்கை சோதனைகளில் பொறுமைப்பெற்றவர்

வாழ்க்கைத் துணைவியோடு வளமானவர்-தன்
வாழ்க்கையை துணிவோடு வலம்வருபவர்

வள்ளலாய் பலகாப்பியங்களை வழங்கவேண்டுமிவர்
வலமான தேகத்தை தரவேண்டும் வல்லோனவர்

வாழ்க வாழ்கவென வாசனமாய் வாழ்த்துமிவர்
வாஞ்சையோடு இறைஞ்சுகின்றேன் இஸ்மத் இவர்!

என்று கவிதையைப் பாடி எனது அவாவை வெளிப்படுத்திக் கொண்டேன். இவருடைய காவியங்கள் மரபுக் கவிதைகளாக இருந்தாலும் அதைப்படிக்க, படிக்க மரபு மறைந்து, வசனநடையாக கருத்துக்களை புரிந்துக் கொள்ளுமளவிற்கு, எளிமையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமீரகத்திற்கு தற்போது அவர் வருகைத் தந்து இரண்டு மாதங்கள் ஆகியிருக்கின்றன.இந்த நாட்களில் பல அமைப்புகளின் நிகழ்வுகளில் கலந்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் மூஸாநபி காவியத்தை எழுதி முடித்திருக்கின்றார்.இது எட்டாவது காவியம்!

இதுவரையில் தமிழக வரலாற்றில் ஒரு புலவர் எட்டு காவியங்களை வெளியிட்டுள்ளாரா? என்பது கேள்வியாக இருக்கிறது.! ஆனால் இஸ்லாமிய இலக்கிய உலகில் இதுவரையில் இவரைவிட அதிகளவில் யாரும் காவியங்கள் வெளியிடவில்லை என்பது வரலாறாக இருக்கிறது.பல காவியங்களை தனது சொந்த பொருட்செலவில் செய்திருக்கிறார்.

தமிழ் மீது ஆர்வம் கொண்ட மதிப்பிற்குரிய டாக்டர் ஜின்னாஹ் அவர்கள் 1999-ம் ஆண்டு புதுச்சேரி கோட்டைக்குப்பத்தில் நடைப்பெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் தமிழ்மாமணி விருதை பெற்றிருக்கிறார்.இன்னும் தமிழியல், காவியத்திலம், கவிக்கதிரோன், கலாபூசணம், நற்கவிஞர், கவிமாமணி, காவியக் கவிமணி, கவிச் சக்கரவர்த்தி, காப்பியக்கோ என்று பல விருதுகளை குவித்துள்ளார். எத்தனை விருதுகளை பெற்றிருந்தாலும் தன்னடக்கம், எளிமை இவருடன் பிறந்த ஒன்றாகவே இருக்கிறது.

இவருடைய காவியங்களனைத்தும் பல்கலைகழகங்களில் பாடங்களாக விளங்குவதற்கு தகுதியானவை என்று பேராசிரியர்கள் கூறுகிறார்கள்.

பேராசிரியர்களும், முனைவர்களும் காவியங்களை வெளியிடுவதற்கு யோசித்துக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில்; தைரியமாக ஆண்டுக்கு ஒரு காவியத்தை வெளியிடும் டாக்டர் ஜின்னாஹ் போன்ற தயாள இலக்கியமனம் படைத்தவர்களுடன் நட்புக் கொண்டிருப்பது எல்லாம் வல்ல இறைவன் எனக்களித்த வரம்.

இவர் இஸ்லாமியர் என்பதற்காக கொடுக்க வேண்டிய கௌரவங்களை மத துவேசமிக்க அரசியல்வாதிகளால் மறைக்கப்பட்டு வருகிறது; பல அமைப்புகள்தான் அதிகமான விருதுகளை வழங்கியிருக்கிறது ஆனால் அரசாங்கத்தினால் கிடைக்கவேண்டிய விருதுகள் தடுக்கப்பட்டே வருகின்றன. ஆனால் கௌரவங்களை எதிர் நோக்கி இன்று வரையில் இவர் எழுதவில்லை என்பதுதான் உண்மை.

தமிழுக்காக உயிர் கொடுப்போம் இன்னும் எதையெல்லாம் கொடுப்போம் என்று வாய்கிழிய மேடைகளில் பேசுகிறார்களேயொழிய ஒரு உண்மையான தமிழ் அறிஞரை கண்ணியப்படுத்தவோ மரியாதை செய்யவோ தெரியாதவர்காளவே அதிகாரமிக்கவர்கள் திகழ்கிறார்கள் என்பது வருத்தத்திற்குரிய செய்தியாக இருக்கிறது.

இன்றைய காலத்தில் காவியம் படைப்பவர்களை காண்பது அரிது அந்த அரிதான அறிஞர்களுக்கு தக்க ஊக்கமும் உற்சாகமும் தருவது ஒவ்வொரு தமிழனின் கடமையாக இருக்கிறது.

இந்தியாவில் தீரன் திப்புசுல்தான் காவியம் கிடைக்குமிடம்
சமநிலை சமுதாயம் பப்ளிக்கேஷன் பிரைவேட் லிமிட், எண் 5 கிரீண்ரோடு, தவ்ஸன் லைட், சென்னனை – 600006.
தொலைபேசி - +91-9840277450

Wednesday, April 6, 2011

தரம் தரமாக இருக்கும் வரையில் தரத்தை யாராலும் குறைக்க முடியாது!

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 தொடர் - 14

இது ஒரு பாலை அனுபவம்

ஹவுஸ்பாய் பணியிலிருந்து முதன்முதலாக வியாபாரத்தில் சேல்ஸ்மேன் பணிக்கு மாற்றத்தை கொடுத்தவன் நண்பன் சிஹாபுதீன்.

பூதமங்கலம் அப்துல்கரீம் சிஹாபுதீனுக்கு தெரிந்த நண்பர். அவர் பணிப்புரியும் இமிட்டேசன் ஜீவல்லரி கடையில் எனக்கு வேலைகிடைக்க துபாய் அல்குரேயர் சென்டருக்குள் நுழைந்தேன்.
அப்போது எனக்கு திருமணமாகி நான்கு மாதங்கள் மனமெல்லாம் மனைவியின் மணம் வீசியது.காதல் என்னிடம் கதை படித்தது.

என்ன வாழ்க்கை இது இப்படிதான் வாழ வேண்டுமோ என்றெல்லாம் மனம் புலம்பிக் கொண்டிருந்த நேரத்தில் புதிய அறிமுகங்களை நான் எழுதிய நாவல் டெலிபோன்டைரி எனக்கு கொடுத்தது.

அல்குரேயர் சென்டருக்குள் ஐநூறுக்கும் அதிகமான கடைகள் இருந்தன.பல கடைகளில் விற்பனையாளர்களாக தமிழர்கள் பணிபுரிந்தார்கள்.

அப்படித்தான் ஜெய்னா ஜீவல்லரியில் பணிப்புரிந்த மூவருடைய அறிமுகம் கிடைத்தது. ஆயங்குடி இனியவன் ஹாஜிமுஹம்மது, கீழக்கரை அபுதாஹிர், அத்திக்கடை ஹாஜா.
இனியவனின் சந்திப்பு இலக்கியம் சார்ந்திருந்தது அந்த தருணத்தில் நம்பிக்கை என்ற கையேட்டு பத்திரிக்கையை துவங்கினார் அதில் என்னை இணைத்துக் கொண்டார் அதில் கவிதைகள் எழுதினேன். ஆனால் இனியவனின் வேகம் அசுரமானதாக இருந்தது.
இன்று அவர் டோஹா கத்தாரில் பணியில் வணிகத்தில் தலைசிறந்து விளங்குகிறார் பன்மொழிகளை கற்று பலரிடமும் பழகுகிறார் அவரிடம் தமிழ்தாகம் தழைத்திருந்தது அத்தருணங்களில் எனது மெய்ஞ்ஞானசபைக்கு அழைத்துச் சென்றேன் ஆனால் மெய்ஞ்ஞானம் மறைந்துக் கொண்டு அவரிடம் கேள்வி ஞானம் முன்னின்றது.அதனால் தான் சொன்னேன் ஞானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

கீழக்கரை அபுதாஹிர் என் எழுத்தின் மூலமே இணைந்தவர் என் வாழ்க்கையின் திருப்பு முனை இவர்தான். இவருடைய நண்பர் ஹிலால் முஹம்மதின் அறிமுகம் பெற்றுத்தந்தார். பணிமுடிந்த தருணங்களில் இரவில் ஒன்றுக்கூடுவோம் ஞானம் பேசுவோம் அவர்களுக்கு மத்தியில் நான் இளையவன் ஆனாலும் அதிகமாக பேசி இருக்கிறேன்.

அந்த ஞான நட்புதான் நகைக்கடையில் பணியமர்த்தி தந்தது என்று கூறுவதில் சந்தோசமடைகிறேன்.

நட்பு எல்லோருக்கும் உண்டாகலாம் ஆனால் எப்படி உண்டானது என்பதை பொருத்தே அந்த நட்பின் வலிமை நிறைந்திருக்கும் மனதில் என்றும் மலர்ந்திருக்கும். ஆனால் எனக்கு இவர்களிடம் மெய்ஞ்ஞானத் தேடலில் அதைப்பற்றிய வாதாடலில் உண்டானது.

ஞானம் நாடியவர்களுக்கு தான் கிடைக்கும்.

நம் கையில் கிடைத்திருக்கும் கல்லை கூலாங்கல் என தூக்கி வீசுவதற்கு எத்தனிப்போம் ஆனால் மகான்கள் அதில் வைரம் இருப்பதை உணர்த்துவார்கள்.
நாம் இறைவனை எங்கேயோ தூரமாக வைத்திருப்போம் ஆனால் மகான்கள் இறைவனை நம் பிடரியின் நரம்பிற்கும் சமீபமாக இருப்பதை உணர்த்துவார்கள்.

ஞானவேட்கை இருந்தாலேயொலிய அதைப்பற்றி பேச அல்லது அதைக் கேட்கமுடியாது.மகான்களிடம் படித்துக் கொண்டிருப்பவர்கள் தான் ஞானிகள்.
அந்த ஞானவேட்கை நிறைந்தவர்களாக திகழ்ந்தவர்கள் சகோதரர்கள் ஹிலால் மற்றும் அபுதாஹிர் இருவரும்.

நான் பணிப்புரிந்த அல்குரேயரில் பணி இழந்த போது ஹிலால் மற்றும் அபுதாஹிர் அவர்கள் என்னை நகைக்கடையில் பணியமர்த்த என்னிடம் ஒப்புதல் கேட்டார்கள். இரண்டு தினங்கள் அவகாசம் கேட்டேன். என்னிடம் பயம் நிறைந்திருந்தது என்னை தரம் குறைத்துவிடுவார்களோ என்ற பயம் இருந்தது.அச்சமயத்தில் ஹிலால் அவர்களின் தைரியமான வார்த்தைகள்தான் இன்றுவரையில் நகைக்கடையில் நடமாட வைத்துக்கொண்டிருக்கிறது.

நாம் தரமாக இருக்கும் வரையில் யாராலும் நம்தரத்தை குறைத்துவிட முடியாது வேண்டுமானால் உரசி பார்க்கலாம்.

நல்ல நட்புதான் ஒரு நல்லவேளையை பெற்றுத்தந்திருக்கிறது.தங்கக் கடையில் நுழைந்ததும் எங்களின் சந்திப்பில் இடைவெளி ஏற்பட்டது அது எனக்கு பணியினால் ஏற்பட்ட பளுவினாலும் ஹிலால், அபுதாஹிர் அவர்களுக்கு இறைத்தேடலின் சிந்தனையிலும் இடைவெளி நீண்டது.

ஆண்டுகள் பல கடந்திருந்தாலும் அவ்வபோது முகமுன் சந்திக்கொள்வோம் ஆனால் ஹிலால் அதிகமான பொருள் சம்பாதித்தளவு அருளையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். போதுமென்ற மனம் நிறைந்ததால் தனது இறை(காதல்) நேச வாழ்க்கைக்காக அமீரக வாழ்க்கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தாய் மண்ணில் நிரந்தரமாக பாதம் பதித்துவிட்டார்.

அபுதாஹிர் அவர்கள் பி.பி.ஜீவல்லரியை நிர்வகித்து வருகிறார் இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது நேற்றைய தினம் அவரை சந்தித்து உரையாடினேன். எங்களின் பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொண்டோம்.

இப்படிபட்ட தூய்மையான நண்பர்களை கிடைக்க செய்த எல்லாம் வல்ல இறைவனுக்கு என்றென்றும் நன்றிக்கடன்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஞானம் கற்றுக் கொள்ளுங்கள் நாம் ஞானியாக அல்ல மனிதனாக வாழ்வோம்.!

தொடர்வோம்...

Monday, March 21, 2011

துரிதமாக ஒரு பயணம் துருக்கி வரையில்...

குறிப்பு - இது தொடரல்ல நீளமான பதிவு

துருக்கி இஸ்தாம்புலில் நடக்கவிருக்கும் தங்க நகைகளின் 2011 கண்காட்சியை காண்பதற்கும், புதிய டிசைன்களை தேர்வு செய்வதற்கும் நான்கு தினங்கள் அலுவலக பணியாக நான் சென்றிருந்தேன்.

பலநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்னோடு துபாயிலிருந்து எமிரேட்சில் இஸ்தாம்புலுக்கு பயணம் செய்தார்கள். பல இந்தியர்களும் அதில் இருந்தாலும் சில தமிழர்கள் தமிழில் பேசிய சப்தம் கேட்கவே எனக்குள் பரவசம், நான் தனிமைப்பட்ட உணர்வை அந்த தமிழர்களின் பேச்சு நீக்கியது. அவர்கள் யார்? என்ன ஏது என்ற விபரமோ, அறிமுகமோ செய்துக்கொள்ளவில்லை ஆனால் அவர்கள் உரையாடிய தமிழ் என்னை சந்தோசப்படுத்தியது, நம்பிக்கை ஊட்டியது ஆம் தாயோடு பயணிப்பதைப் போன்ற உணர்வைக் கொடுத்தது நமது தாய்மொழி.

விமானத்திலிருந்து இந்த பகுதியை எழுதிக்கொண்டிருக்கிறேன் எமிரேட்சில் எந்த நாட்டுக்கு பயணம் செய்தாலும் தமிழ் படம் இரண்டு ஒளிபரப்புகிறார்கள் அட்டவணைப்படி இந்த மாதம் ஜக்குபாய், அசல் இரண்டு படங்களைப் பார்த்தேன்.

இதன் பிறகு ஹோட்டல் அறையிலிருந்து பதிவுசெய்கிறேன்.
என்னை அழைப்பதற்கு எங்கள் நட்புக் கம்பெனியின் ஊழியர் நண்பர் ஆர்தோ துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் வந்திருந்தார்.விமான நிலையத்தில் வெப்பத்தை உணர்ந்த நான் வெளியில் வந்ததும் குளிரை சுவாசித்தேன். ஆம் 17 டிகிரி இது சாதாரணம் என்கிறார்கள் துருக்கியர்கள் மைனஸ் எல்லாம் வருமாம்.

மாலை 6.00 மணிக்கு துருக்கி விமான நிலையத்திலிருந்து நான் தங்கப்போகும் வாவ் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். விமான நிலையத்திலிருந்து 10 நிமிடங்கள் தான் வாவ் ஹோட்டல் இதற்கு எதிர்புறம் தான் நகை கண்காட்சியின் அரங்கம் இருக்கிறது எளிதாக ஐந்து நிமிடத்தில் நடந்துவிடலாம்.

ஹோட்டலில் முன் பதிவு செய்யப்பட்டிருந்ததால் அதிகநேரம் எடுக்கவில்லை சில நிமிடங்களில் 17 வது மாடியின் அறை சாவியை தந்தார்கள்.

அறையின் ஜன்னல் வழியாக கிழக்கு பகுதி துருக்கியை காணமுடிந்தது சாலைகளில் வாகனங்கள் எந்தநேரமும் சென்றுக்கொண்டே இருந்தன சில தருணங்களில் வாகன நெரிசல் டிராபிக் இருந்தது.


இரவு 8.00 மணிக்கு அறையிலிருந்து ஹோட்டல் உணவகத்திற்கு வந்தேன் துருக்கி நாட்டு உணவுதான் வைத்திருந்தார்கள் சுவையாகதான் இருக்கும் ஆனால் சுவைப்பதற்கு பசி அவ்வளவாக இல்லை அருகில் சூப்பர் மார்கெட் இருக்கிறதா என்று வினவினேன்.நான் மறந்துபோன பல்பேஸ்ட் வாங்குவதற்கு.

நடக்கும் தூரத்தில் ஏதும் இல்லை சில மைல்கள் போகனும் மெட்ரோ இரயிலை உபயோகப்படுத்துங்களேன் என்றார்கள்.

என்னை அழைப்பதற்கு வந்த நண்பர் ஆர்தோ தனியாக செல்ல வேண்டாம் ஏமாற்றுவார்கள் என்று கூறிவிட்டு போன வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தது.இருந்தாலும் ஒரு குருட்டு தைரியத்தில் ஹோட்டலில் இருந்து புறப்பட்டேன்.

மெட்ரோ ஸ்டேசன் வரையில் நடப்பதற்கு 7 நிமிடங்கள் ஆகின விளக்கு வெளிச்சம் ஏதும் இல்லை மனமெல்லாம் பயம் இருந்தாலும் ஒரு நம்பிக்கை அவ்வபோது தைரியத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.ஏதும் நடக்காது அப்படி நடந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது.
மெட்ரோ ஸ்டேசன் வந்துவிட்டேன் எந்த ஸ்டேசனில் இறங்குவது எந்தப்பக்கம் போகும் இரயிலில் ஏறுவது குழப்பம்.
டிக்கெட் எடுக்கும் மெசின் அருகில் நின்று கொண்டிருந்தேன்.இரவு நேரம் என்பதால் ஒன்று இரண்டு நபர்கள் தான் வருவதும் போவதுமாக இருந்தார்கள் .நான் நிற்பதை பார்த்து விட்டு இருவர் துருக்கி மொழியில் விசாரித்தார்கள் நான் ஆங்கிலத்தில் பேச அவர்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் கொஞ்சம் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் பேசினார்கள் சூப்பர்மார்கெட் போகவேண்டும் என்று கேட்டுக் கொள்ள அவர்களும் இரண்டு ஸ்டேசனுக்கு பிறகு இறங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்.

இந்த மெட்ரோவில் என்னைத் தவிர அனைவரும் குளிருக்காக வேண்டி ஜாக்கெட் அணிந்திருந்தார்கள் அந்த ஒன்றே என்னை அன்னியனாக அனைவருக்கும் மத்தியில் காட்டிக்கொடுத்தது. எந்த நாடு என்று என்னை விசாரித்தார்கள் இந்தியா என்றேன் இஸ்தாம்புல் எப்படி இருக்கிறது? கேட்டார்கள் நல்ல மனிதர்கள் வாழக்கூடிய நகரம் என்றேன் கை குலுக்கினார்கள்.

அவர்களிடமிருந்து விடைப்பெற்று ஸ்டேசனில் இறங்கினேன். மெட்ரோவில் எந்த ஸ்டேசனில் ஏறி இறங்கினாலும் ஒரு லிரா 75 குருஸ் ஒரே தொகைதான். (துருக்கியின் பணத்திற்கு லிரா என்றும் காசுக்கு குருஸ் என்றும் அழைக்கிறார்கள்) இறங்கி ஸ்டேசனின் வெளியில் நடந்தேன் அப்படியே நமது சிங்கார சென்னையின் நினைவைத் தந்தது.பிளாட்பாம் கடைகள் ஏராளம் இருந்தது கூட்டம் நெரிசல் இருந்தது ரோட்டைக் கடப்பதற்கு பாலத்தின் வழியாக நடந்தேன் பாலத்தின் இரு பக்கங்களிலும் கடைகள் இருந்தன.கடந்துச் சென்றேன் உணவகங்கள் வரிசையாக இருந்தது அதன் அமைப்பு கிட்டத்தட்ட தமிழர்களின் உணவகங்கள் போலவே அமைந்திருந்தது.

அதைப்பார்த்ததும் மனசுக்கு சென்னையில் இருப்பதைப்போன்ற உணர்வு இருந்தது.

இன்னும் தஞ்சைப் பகுதியில் இஸ்லாமியர்களை துலக்கர்கள் என்று அழைப்பதுண்டு. அது துருக்கியிலிருந்து வணிகத்திற்காக இந்தியா வந்து குறிப்பாக தமிழகத்தில் அதிகமான வணிகம் செய்தவர்கள் துருக்கியர்கள்.காலப்போக்கில் தமிழகத்திலேயே அவர்கள் தங்களின் வாழ்கையை அமைத்துக் கொண்டு நிரந்தரமாக தங்கினார்கள் அவர்களை துருக்கர்கள் என்று அழைத்து வந்தனர் நாளடைவில் அது துலக்கர் என்று மறுவி விட்டது.அந்த துருக்கியர்கள் வடிவமைத்த உணவகங்கள்தான் இன்றும் நமது தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருந்து வருகிறது.

துருக்கியில் சமதளமான தெருக்கள், சாலைகள் இல்லை மேடு, பள்ளம் நிறைந்தாக இருக்கிறது. நான் நடந்துச் சென்ற அந்த தெருவின் எல்லையில் ஒரு சூப்பர்மார்கெட் இருந்தது பல்பேஸ்ட் வாங்கிக் கொண்டு கிங் பர்கரில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் மெட்ரோவை நோக்கி நடந்தேன். சரியாக நான் இறங்க வேண்டிய ஸ்டேசனில் இறங்கி ஹோட்டலுக்கு வந்துச் சேர்ந்தேன்.

மறுதினம் அதிகாலையில் துபாயில் கண்விழிப்பதைப் போன்றே 6.00 மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது காலை தொழுகையை நிறைவு செய்துவிட்டு லெப்டப்புடன் அனுபவங்களை பதிவு செய்ய தொடங்கினேன்.

நகை கண்காட்சி நடக்கும் அரங்கத்திற்கு புறப்பட்டேன் காலை நேரத்தில் வானம் மேகமூட்டமாக இருந்தது.சில நிமிடங்கள் நடந்தேன் அரங்கத்தின் வாயிலில் சரியான கூட்டம் அதனால் பாதுகாப்பும் அதிகமாக இருந்தது. விசிட்டர்கள் தங்களை பதிவு செய்வதற்கு பாஸ்போர்ட் மற்றும் விசிட்ங் கார்டு கொடுக்க வேண்டும் இதைக் கொடுத்து விசிட்டர் நுழைவுச் சீட்டு வாங்க வேண்டும் இதைப் பெறுவதற்கு சுமார் மூன்று மணிநேரம் வரிசையில் நின்றுக் கொண்டிருந்தோம். எனக்கு முன்னால் சில தமிழ் முகங்கள் நின்றுக் கொண்டிருந்தன பரிச்சயமில்லாதவர்கள் இருந்தாலும் அவ்வபோது எங்களின் பார்வை ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவிதம் நீயும் தமிழனா நானும்தான் என்பதை போல இருந்தது.

ஒவ்வொரு விசிட்டர்களையும் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவு செய்கிறார்கள் அதன் நகலை நுழைவுச் சீட்டாக தந்தார்கள்.இந்த கண்காட்சிக்காக பல நாடுகளிலிருந்து பார்வையாளராகவும் சிலர் அங்கு ஸ்டால் அமைத்து வர்த்தகம் செய்வதற்கும் வருகைப் புரிந்திருந்தார்கள்.

இத்தாலி நாட்டில் ஆண்டு தோறும் பிப்ரவரியில் நகை கண்காட்சி நடக்கும் அதுதான் பிரமாண்டமாக இருக்கும் அதற்கு அடுத்தபடியாக துருக்கி இஸ்தாம்புலில் இந்த ஷோ இதில் நமது இந்திய சகோதரர்கள் குஜராத்திகள் வெள்ளி நகைகள் மற்றும் கலர் கற்கள் வைத்து ஸ்டால் அமைத்திருந்தார்கள்.

ஒரு இந்தியரின் ஸ்டாலில் புத்தகமாக இருந்தது அருகில் சென்று விசாரித்தேன் அவர் கூறினார் நகைகளின் டிசைன்கள் அடங்கிய நூற்கள் மற்றும் பல ஆங்கில சிற்றிதழ்களில் புதிய வடிவத்தில் வெளியான நகைகளின் டிசைன்கள் அடங்கிய இந்த நூல்களை மட்டுமே விற்பனை செய்கிறார் மும்பையைச் சேர்ந்த சகோதரர்.

பெரும்பாலானவர்கள் பார்வையாளர்களுக்கு தங்களின் டிசைனின் கேட்டலாக்குகளை அழகான பைகளில் வைத்து தங்கள் ஸ்டாலின் முன் வைத்துவிடுகிறார்கள் தேவையானவர்கள் அதை எடுத்துச் செல்லலாம். அனைத்து ஸ்டால்களிலுமே இனிப்பு வகைகளை வைத்து வரக்கூடிய பார்வையாளர்களை உபசரிக்கிறார்கள்.

பெரும்பாலான ஸ்டால்களில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பார்வையாளர்களுடன் ஆங்கிலம் மற்ற மொழிகளை உரையாடுவதற்கு துருக்கிய நாட்டைச் சேர்ந்த இளம் பெண் பிள்ளைகளை உலாவரச் செய்துள்ளார்கள் சிலர் தங்களின் நகைகளை அந்த இளம் பெண்களுக்கு அணிவித்து அதன் அழகை கண்டு ஆர்டர்களை பெறுவதற்கும் ஸ்டாலின் வாயில் நிறுத்தி இருந்தார்கள்.நாம் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக அவர்கள் பதில் சொல்வதில்லை அந்த ஸ்டாலின் உரிமையாளரிடம் கேட்டு பதிலளிக்கிறார்கள் பெரும்பாலன துருக்கியர்களுக்கு ஆங்கிலமொழி தெரியவில்லை.

நகைகண்காட்சி நடக்கும் அந்த அரங்கம் மிக நீளம் அகலமுமானது ஆதலால் பகுதி பகுதியாக பிரித்து வைத்திருக்கிறார்கள் முழுவதையும் சுற்றி பார்க்க கால்கள்தான் வேண்டும் ஆங்காங்கே அமர்ந்து ஓய்வெடுக்க இருக்கைகளும் உணவகங்களும் இருக்கின்றன.

நான் சுற்றி பார்த்தவரையில் புதிய டிசைன்கள் சில இருந்தன அவைகள் எடைக்குறைவாகவும் கற்கள் இல்லாத டிசைனாகவும் அனைவரும் எளிதில் வாங்கக் கூடிய டிசைனாகவும் பார்த்து தேர்வு செய்து வைத்துள்ளேன் அதன் செய்கூலி அதிகமாக இருக்கிறது முதல் சுற்று பேச்சுவார்த்தை அந்த வணிகருடன் முடித்துள்ளேன் இரண்டாவது சுற்று பேச்சு வாரத்தை நாளை நடத்துவேன் இதற்கிடையில் எனது கம்பெனியின் நிறுவனரும் நாளை கண்காட்சிக்கு பார்வையிட வருகிறார் அவருடன் கலந்து இறுதியாக ஆர்டர் செய்வோம்.

மாலை ஏழு மணியுடன் கண்காட்சி அரங்கம் மூடப்படும் மீண்டும் மறுநாள் காலை 10.00 மணிக்கு திறப்பார்கள்.அன்று மாலை மழை பெய்திருந்தது இரவு ஆர்த்தோ துருக்கி நண்பர் எனக்கும் அவருடைய வாடிக்ககையாளர்களான துபாய் மஹல்லாத்தி ஜூவல்லரியில் பணிப்புரியும் இந்தியர்களுக்கும் விருந்தளித்தார். அங்குள்ள உணவகங்கள் பெரும்பாலும் பெரிதாகவே அமைத்திருக்கிறார்கள். ஒரு உணவகத்திற்குள் சென்றால் சுமார் 500 நபர்கள் அமர்ந்து சாப்பிடக்கூடிய அளவிற்கு இடவசதிகள் இருக்கின்றன.


துருக்கி உணவு மிகவும் சுவைமிக்கதாக இருக்கிறது கத்தரிக்காய் என்றாலே எனக்கு பிடிக்காது ஆனால் அதே கத்தரிக்காயை இவர்கள் சமைத்து வைத்திருந்த விதம் மிகவும் ருசியாக இருந்தது பச்சை காய்கறிகளை மிகவும் பக்குவப்படுத்தி ருசியை கூட்டி செய்திருக்கிறார்கள் மாமிசங்களும் மிருதுவாகதான் இருந்தன ஆனால் பச்சை காய்கறியின் மீது அளவு கடந்த அன்பையும் பாசத்தையும் எனக்குள் துருக்கியர்கள் ஏற்படுத்திவிட்டார்கள்.

உணவுக்கு துருக்கியர்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள் ஒரு பொருளை ஒரேமாதிரி சமைப்பதில்லை பலவிதமான ருசிகளில் சமைத்து அந்த பொருளை விரும்பாதவர்களையும் விரும்ப வைக்கக் கூடிய தந்திரம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் விரைவில் உணவுக்காக ஒரு ஷோ ஏற்பாடு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.( அப்படி ஒரு ஷோ நடத்தினால் எவ்வளவு சிலவானாலும் சரி கண்டிப்பாக அம்மணியை அழைத்துக் கொண்டு வந்துவிடுவேன்.)

விருந்துக்கு வந்த ஆர்த்தோ வாடிக்கையாளர்களான ஹைதராபாத்தைச் சார்ந்த சகோதரர்கள். இவர்கள் ஏற்கனவே எனக்கு பரிட்சையமானவர்கள்தான் அவர்களும் துபை கோல்டு மார்க்கெட்டில் பணிபுரிபவர்கள் ஒன்றாக சந்தித்து உணவருந்தியதில் எங்களுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

இரவு உணவருந்திவிட்டு வரும் வழியில் நல்ல மழைபெய்தது அதனுடன் குளிரும் சேர்ந்து எங்களை குளிரவைத்தது.விடுதிக்குள் வந்து வெப்பமூட்டும் மெஷினின் காற்றை அறைக்குள் நிரப்பி உறங்கினேன்.

விடிந்தது பொழுது எனது அறையின் ஜன்னல் வழியாக காலைக்கதிரவனின் உதயத்தையும் கனமில்லாத கருணையாக பெய்துக் கொண்டிருந்த மழையையும் என்னால் கண்டு ரசிக்க முடிந்தது.


வழக்கம்போல இரண்டாம் நாளாக கண்காட்சி அரங்கத்திற்கு சென்றேன் முதல் நாள் கூட்டத்தைவிட இன்று கொஞ்சம் அதிகமாக இருந்தது.இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஜூம்ஆ தொழுகைக்கு செல்லவேண்டுமே எப்படி எங்கு யாருடன் செல்வது என்ற சிந்தனை அதிகாலையிலிருந்தே இருந்துக் கொண்டிருந்தது.

துருக்கியின் மிகவும் பிரபல்யமான சுல்தான் பள்ளிவாசலுக்கு சென்று தொழுகை புரியவேண்டும் என்ற ஆவல் என்னிடம் இருந்தது ஆனால் இன்று எனது கம்பெனியின் நிறுவனர் அதாவது முதலாழி வருகிறார் என்னை கண்காட்சியில் சந்திப்பதாக கூறியிருந்தார் எந்த நேரத்தில் தொலைபேசியில் தொடர்புக் கொள்வார் என்று தெரியாததினால் அங்கு சென்று வருவதற்கு காலம் போததாது என்று தெரிந்ததால் இன்னொரு வாய்ப்பை எதிர்பார்த்து என்எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.

கண்காட்சியை வலம் வந்துக் கொண்டிருந்தபோது துபாயில் அசினா ஜூவல்லரியில் பணிப்புரியும் தமிழ் நண்பர்கள் அய்யுப் மற்றுமொருவர் நின்றுக் கொண்டிருக்க அளவிலா ஆனந்தத்துடன் இரண்டு தினங்களுக்குபிறகு அவர்களுடன் தமிழில் பேசுவதற்கு வாய்ப்பாக இருந்தது. சில நிமிடங்களில் அவர்களும் விடைப்பெற்று சென்றார்கள்.

ஹால் எண் 3-ல் ஜூம்ஆ தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுப்பு செய்தார்கள் குழப்பத்துடன் இருந்த நான் மகிழ்ச்சியுடன் தொழச்சென்றேன்.ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கு தொழுதக் காட்சி மனதில் பிரமாண்டத்தை தோற்றிவித்தது.

சரியாக தொழுகை முடிந்து சில நிமிடங்களில் எனது கம்பெனியின் பாஸ் என்னை அழைக்க அவரைச் சந்தித்தேன்.நேற்று நான் நகைகளை தேர்வு செய்த கம்பெனிகளுக்கு பாஸ்சுடன் சென்று எங்களின் ஆர்டர்களை உறுதி படுத்திக் கொண்டோம் அதில் ஒரு சப்ளையர் இன்று இரவு தங்கள் கம்பெனி நடத்தும் பேஷன் ஷோவிற்கும் அங்கு நடக்கும் இரவு விருந்துக்கும் எங்களை அழைத்தார் அவர் தந்த இன்விட்டேசனை பெற்றுக் கொண்டு சில மணி நேரங்கள் என்னுடன் உலாவந்த பாஸ் அவருடைய நண்பர்களை கண்டதும் என்னிடமிருந்து விடைப்பெற்றார் நாளை சந்திப்போம் என்று!

நாளை வெளியில் சென்று சுற்றிப் பார்க்கலாம் என்று திட்டமிட்டிருந்த எனது திட்டத்தில் இடி விழுந்ததினால் உடனடி தீர்மானம் செய்தேன் இப்பவே புறப்பட்டு செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வந்துவிடாலாம் எனது குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வேறு வாங்கவேண்டும் என்பதினாலும் சந்தர்பத்தை கிடைத்த நேரத்தை நழுவவிடாமல் மாலை 6.00 மணிக்கு புறப்பட்டேன்.

இஸ்தாம்புல் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த நான் அங்கிருந்து கிராண்ட் பஜார் என்று அழைக்கும் பழைமை வாய்ந்த அந்த மார்க்கெட்டிற்கு டெக்ஸியில் செல்வதாக இருந்தால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் ஆகும் என்றார்கள் காரணம் டிராபிக். ஆனால் மெட்டோவில் சென்றால் ஒரு மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம் என்றதும் நான் மெட்ரோவை தேர்வு செய்தேன்.

ஸ்டேசனில் நின்றுக் கொண்டிருந்த ஒருவரிடம் கிராண்ட் பஜார் செல்ல வேண்டும் எந்த ஸ்டேசனில் இறங்கனும் என்று கேட்டேன் அவருக்கு ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் தெரியவில்லை ஆனால் அவர் அருகில் நின்றுக் கொண்டிருந்த துருக்கியர்களிடம் ஆங்கிலம் தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறீர்களா என்று கேட்டு இருவரை அழைத்துவந்து என்னிடம் பேச வைத்தார்.

நான் போகவேண்டிய இடத்தை சொன்னதும் செல்லும் வழியில் இன்டர்சேன்ஜ் இருக்கிறது நீங்கள் இன்னொரு இரயில் மாறவேண்டும் என்று கூறிவிட்டு நான் கிராண்ட் பஜாரை கடந்து தான் செல்கிறேன் அந்த நிறுத்தத்தில் உங்களை இறக்கிவிடுகிறேன் என்றதும் துருக்கியர்களின் பண்பாட்டை எண்ணி மிகைத்தேன்.

மேட்ரோவிலிருந்து இன்டர்சேன்ஜில் மற்றொரு ஸ்ட்ரீட் மெட்ரோவிற்கு மாறினேன் இந்த ரெயில் கார் பஸ் போகும் ரோட்டிலேயே சில இடங்களில் மட்டும் செல்கிறது பெரும்பாலான இடங்களில் தனிச் சாலையில் செல்கிறது.

மேட்ரோ எந்தந்த ஸ்டேசனில் நிற்கும் என்ற இடத்தின் பெயர்களைப் பதிவு செய்து வைத்துள்ளார்கள் அதில் நான் ஏறிய ஸ்டேசனையும் இறங்க வேண்டிய ஸ்டேசனையும் துருக்கி நண்பர்கள் காண்பிக்கவே அதை துருக்கி மொழியிலேயே ஆங்கிலத்தில் குறித்துக் கொண்டேன்.



கிராண்ட் பஜாரில் இறங்கி எந்தப் பக்கம் போக வேண்டும் என்று தெரியாமல் நடந்தேன் எதிரில் பழைமையான பிரமாண்டமான பள்ளிவாசல் தெரிய அதனுள் சென்றேன் அது சுல்தான் பள்ளி தொழுதேன் வேலைபாடுகள்நிறந்த கலைநயத்துடன் கட்டப்பட்டிருக்கிறது. அதை பார்த்துவிட்டு மார்கெட் பக்கம் நடந்தேன் மிக நீளமான தெரு இரு பக்கங்களிலும் கடைகள் இந்த பகுதி வர்த்தகர்கள் அரபி மொழியும் ஆங்கிலமும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு பொருளுக்கு விலைக்கேட்டால் நமது மொழியை வைத்தே நாம் சுற்றுலாவாதி என்பதை மோப்பம் பிடித்து விலையை அதிகமாக கூறுகிறார்கள் இங்கு பேரம் பேசிதான் பொருட்களை வாங்க வேண்டி இருக்கிறது.

துபாய் மார்கெட்டை ஒத்துப்பார்த்தோமேயானால் துருக்கி மார்கெட் விலை அதிகம் என்றே கூறலாம். பொருட்களின் தரம் நல்லதரமானதாகவே தெரிந்தது அதனாலேயே விலை அதிகம் கொடுக்க வேண்டி இருக்கிறது.

இரவு ஒன்பது மணிவரையில் சுற்றிவிட்டு மீண்டும் மெட்ரோ பயணம் ஆனால் யாரிடமும் வழி கேட்கவில்லை வந்த வழியை தெரிந்துக் கொண்டேன் வரும் வழியில் குளிர் என்னை நன்றாக நோவ புடைத்தது.

இன்று மூன்றாவது தினம் காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் இருந்தது ஹோட்டல் அறையில் வெப்பக்காற்று இயந்திரம் இருப்பதால் வெளியில் சீதோசனம் எப்படி இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை காலை 10.30 க்கு கண்காட்சி அரங்கத்திற்கு புறப்பட்டேன் ஹோட்டலை விட்டு வெளியில் வந்தேன் ஜில்லென்று என்னை வைத்து குளிர் சாதனப்பெட்டியில் திணித்ததைப் போன்று இருந்தது நான் விடும் மூச்சு காற்று புகையாகவே வெளியில் வந்தது இன்று 7 டிகிரி குளிர்.

கண்காட்சி அரங்கில் உலாவந்தபோது சவுதிஅரேபிய நாட்டைச் சேர்ந்த எங்களின் வாடிக்கையாளரை சந்தித்தேன் என்னைக் கண்டதும் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது என்னுடனேயே கண்காட்சி அரங்கத்தில் உலாவந்தார்கள்.

முதல்தினம் பரிச்சயமில்லாத தமிழ் முகங்களை கண்ட நான் அவர்களை இப்பொழுது நேருக்கு நேராக ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டோம். கொஞ்சமும் தாமதிக்காமல் ஆங்கில மொழியில் பேசாமல் நேரடியாக நீங்க எந்த ஊர் என்று தமிழில் என்னை விசாரிக்க நான் பதில் சொல்ல எங்களின் விசிட்டிங் கார்டுகளை பரிமாறிக்கொண்டோம்.

கோயமுத்தூரிலிருந்து ஐந்துபேர்கள் இந்த கண்காட்சியை காண்பதற்கு வருகைப்புரிந்துள்ளார்கள். இவர்கள் நகை பட்டறைகள் வைத்திருக்கிறார்கள் இந்த கண்காட்சியில் புதிய டிசைன்களை காண்பதற்கும் அவர்களின் டிசைன்களை காட்டுவதற்கும் வருகைப் புரிந்ததாக கூறினார்கள் மகிழ்வுடன் கை குலுக்கிக் கொண்டு விடைபெற்றோம்.
மாலை பேஷன் ஷோவிற்கு அழைத்த சப்ளையரின் அழைப்புக்கு போக முடியவில்லை என்னுடன் சுற்றிக் கொண்டிருக்கும் சவுதியர்கள் இரவு விருந்துக்கு அழைத்துச் சென்றார்கள். போகும் வழியில் ஷாப்பிங் மால் சென்றோம் கூட்டம் அதிகமாக இருந்தது அது வாரத்தின் இறுதி நாள் சனிக்கிழமை இரவு விடிந்தால் விடுமுறை என்பதால் மக்கள் தங்களின் நேரத்தை மாலில் கழித்தனர். ஓவ்வொரு பொருளின் விலையை பார்த்தால் அங்குள்ளவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை நமக்குதான் எக்சேன்ஜ் ரேட் எகுறுகிறது சுற்றினோமே தவிர ஒன்றும் யாரும் வாங்கவில்லை.


எங்களை இரவு விருந்துக்கு அழைத்துச் சென்ற சப்ளையர் ஒன்னரை மீட்டர் கபாப் ஆர்டர் செய்து திகைப்பூட்டினார். நம்ம ஊரில் விஜிபியில் நீளமான மெகா தோசையை அறிமுகம் செய்திருந்தார்களே அதுபோல ஒன்னரை மீட்டர் நீளத்திற்கு கபாப் அதாவது ஆட்டுக்கரியை அரைத்து இன்னும் சில பொருட்களை கலந்து அதை நெருப்பில் சுட்டு இப்படி வைத்தார்கள். கபாப் சாப்பிட்டிருக்கிறேன் ஆனால் இது நீளம் பெரிது எப்படி இவ்வளவு பெரிய காபாபை சாப்பிடப்போகிறமோ என்று ஆச்சரியப்பட்ட எனக்கு அரைமணியில் காளியாகிபோனது ஆச்சரியமாக இருந்தது.

இரவு 12 மணிக்கு இஸ்தாம்புல்லை காரில் அமர்ந்து சுற்றிப்பார்த்தேன் சுமார் இரண்டு கோடி மக்கள் இஸ்தாம்புல் நகரத்தில் வாழ்கிறார்கள். இதில் ஒரு பகுதி ஆசிய கண்டமாகவும் ஆற்றின் பாலத்தை கடந்து மறுபுறம் ஐரோப்பிய கண்டமாகவும் திகழ்ந்துக் கொண்டிருக்கிறது. துருக்கி நாட்டு பெண்கள் இளம் தலைமுறைகள் பெரும்பாலோர் நமது இந்திய கலாச்சாரமான மூக்குத்தி அணிவதையும் புகைப்பதையும் புதிய நாகரீகமாக கருதுகிறார்கள்.
ஐரோப்பிய கலாச்சாரம் இவர்களிடம் அதிகம் தென்பட்டாலும் ஒரு எல்லைக்குள் நிற்கிறார்கள் துருக்கிய இஸ்லாமிய நாடு என்பதால் 90 சதவீதத்தினர் இஸ்லாமியர்களாக வாழ்வதினால் இஸ்லாமிய கட்டுப்பாட்டுக்குட்பட்டு வாழ்கிறார்கள்.

நான்காம் நாளான இன்று பகல் 12 மணிக்கு எனது துருக்கி பயணத்தை முடித்துக் கொண்டு ஹோட்டலை செக்அவுட் செய்துவிட்டு விமானநிலையத்தை நோக்கி புறப்பட இருக்கிறேன் இதுவரையில் ஹோட்டல் அறையிலிருந்து பதிவு செய்துக் கொண்டிருக்கிறேன் .
இனி துருக்கி விமான நிலையத்தில் நேரம் கிடைத்ததால் இதோ உங்களுடன்…
பெரிய விமான நிலையமாகவும் டூட்டி ப்ரீ கடைகள் தனித்தனியாகவும் இருக்கிறது.

பல மணிநேரங்கள் டிரான்சிட் பயணிகளாக அமர்ந்து இருப்பவர்களுக்கு ஐந்து ஈரோவில் இயந்திர மசாஜ் செய்துவிடுகிறார்கள்.

டூட்டிப்ரீயில் எதை வாங்கினாலும் ஈரோவின் விலையை தான் லேபிளில் இருக்கிறது.
துருக்கி நாடு சுற்றிப்பார்க்ககூடிய வரலாற்று சிறப்புமிக்க பல இடங்கள் நிறைந்த நாடு ஆனால் விலைவாசி தங்கும் அறைவாடகை மற்றும் டெக்ஸ உணவு இவைகளை துபாயுடன் இணைத்து பார்க்கும்போது விலை துருக்கியில் அதிகமாக இருக்கிறது.

சுற்றுலாவில் நாட்டமுடையவர்கள் பட்ஜெட் விமானத்தில் துருக்கி ஒருமுறை வந்து போகலாம் மே மாதத்திலிருந்து ஆகஸ்ட் வரையில் கோடைகாலமாக இருக்கும் மற்ற மாதங்களின் சீதோசனம் குளிரும் வாடைக்காற்றுமாக இருக்கும் தொழில் விசயமாக நான் துருக்கி வந்திருந்தாலும் பார்க்கவேண்டிய பழைமைமிக்க மியூசியத்தை மிஸ் பண்ணின வருத்தம் என்னிடம் இருக்கத்தான் செய்கிறது குடும்பத்துடன் வரவேண்டுமென்ற ஆவலும் இருக்கிறது.

இறைவன் நாட்டமிருந்தால் இன்னொருமுறை துருக்கி வருவேன்.!
இந்த பதிவை துருக்கியில் எழுதத்துவங்கிஅங்கேயே நிறைவு செய்துவிட்டு விமானத்தில் ஏறப்போகின்றேன்.

துருக்கியின் இணையதளத்தில் பிளாக்ஸ்போட்டிற்கு தடை செய்துள்ளார்கள் இதை போஸ்ட் செய்வதற்கு முயற்சித்தேன் முடியவில்லை துபாயிலிருந்துதான் இதை போஸ்ட் செய்வேன்.
இவ்வளவு தூரம் ஆர்வத்துடன் படித்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றியை சமர்பிக்கின்றேன்.

Sunday, March 6, 2011

நீண்ட நாட்களுக்கு பிறகு...


முப்பது தினங்களுக்கு பிறகு உங்களுடன் உரையாடுகிறேன்...தொடர் எழுதிக் கொண்டிருந்த நான் அதை தொடராமல் இப்படி நாட்களை விழுங்கிவிட்டு தொடர் எழுதினால் அது படிப்பவர்களுக்கு ஆவலை அளிக்காது என்பதை அறிகிறேன்.

பல வேலைகளின் பளுவால் வலைப்பக்கம் வரமுடியாத வந்தாலும் எழுதும் மனநிலை இல்லாத ஒரு அவசர உணர்வில் இந்த நாட்கள் என்னை கழித்தது.

பல அமைப்புகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதால் விழாக்காலங்களில் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டுமே அதுவும் ஒரு காரணம், அடுத்து தங்கிருந்த கட்டிடத்திலேயே கீழ்தளத்திலிருந்து மேல்தளத்திற்கு நான்காவது மாடிக்கு வீட்டை மாற்றிக் கொண்ட காரணமும் கூட.

ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு மாறுவது என்பது எவ்வளவு பெரிய தலைவலி, தலைசுற்றல் என்பது வீடு மாறியவர்களுக்கு தெரியும்.ஆனால் எனக்கு அதெல்லாம் தெரியவில்லை காரணம் எனது மைத்துனர்களின் உதவி இருந்ததினால் நான் தப்பித்துக் கொண்டாலும் எனது துணைவியார் ரொம்ப கஸ்டப்பட்டதாக சொன்னார்கள்...அதில் நான் ஒன்றுமே செய்யவில்லை என்ற குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தார்கள்.

ஒரு வீடு மாறுவதற்கே இவ்வளவு கஸ்டமாக பீல் பண்ணும் நாம், எந்த நேரத்திலும் நமது பின்னாடியே நிழலாக சுற்றிவரும் மரணம் தரும் மாற்றத்தை இந்த மனம் எப்படி ஏற்றுக் கொள்ளும்(?) என்ற சிந்தனை எனக்குள் வந்தது.இந்த உலகில் அழிவு என்பது எதுவும் இல்லை ஆனால் மாற்றம் மட்டுமே நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பதை ஞானமாக படித்திருக்கிறேன்.
அதனால் எந்த மாற்றமானாலும் மனதை பக்குவப்படுத்திக் கொண்டால் மாற்றமும் மகிழ்வுடன் மாறிவிடும்.

எங்கள் அமைப்பின் சார்பாக அகிலத்தின் அருட்கொடை அண்ணல் பெருமானார் (ஸல் அலை) அவர்கள் அவதரித்த விழாவிற்காக இலங்கை வரை நண்பர்களுடன் நான்காம் வருடமாக சென்று வந்தேன்.ஒவ்வொரு முறை செல்லும்போதும் ஒருவித ஆன்ம ஆனந்தம் இம்முறையும் அப்படித்தான் அதை எழுத்தில் கொண்டுவர முடியாது.

துபாயில் சென்ற வாரம் நடந்த எங்கள் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய அமைப்பின் விழாவிற்கு வருகைப் புரிந்த தமிழஞர்களுடன் பழுகும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் முக்கியமாக கவிச்சித்தர் மு.மேத்தா அவர்களுடன்.

65 வயதைக் கடந்த மனிதராக இருந்தாலும் இன்னும் 50பதைப்போலவே காட்சியளிக்கிறார் எதை பேசினாலும் பல்தெரிய சிரித்து பேசுகிறார்.நிறைய பொறுமை நிதானம் அவரிடம் நிறைந்திருந்தது.எதையும் எதிர்பார்க்காத எண்ணத்தை கொண்டுள்ளார் அதனால் அவருடைய மனம் எப்பவும் எதார்த்தமாகவே இருக்கிறது.ஐந்து பெண்மக்களை பெற்றவர் என்றாலும் அதிகம் ஆசைப்படாதவராகவே காட்சியளித்தார்.

எங்கள் அமைப்பில் பேசும்போது கவிதையைப் பற்றியும் கூறினார் அதில் ஒரு கவிதை

குடியரசுதினம்
ஆளுநர் மாளிகையில்
அனைத்துக்கட்சி
தலைவர்களுக்கும்
விருந்து
பரிமாறிக் கொண்டிருந்த
பணியாளர்கள்
தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்
யார்
யாரைச் சாப்பிடப்போகிறார்களோ.!

இந்த கவிதையை கூறி நமது அரசியல்வாதிகளைப்பற்றிய கருத்தும் கூற அது நகைச்சுவையாக மாறி அனைவரையும் சிரிக்க(சிந்திக்க)வைத்தது.

தமிழறிஞர்களான இலங்கை காப்பிகோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் சென்னையைச் சார்ந்த இனியதிசைகள் பத்திரிக்கையின் ஆசிரியர் தொண்டு நிறுவனர் பேராசிரியர் சே.மு.முகமதலி இவர்களுடன் சந்திப்பு சில தினங்களில் அடிக்கடி நடந்தது.

எங்கள் ஏகத்து மெய்ஞ்ஞான சபையின் மீலாதுவிழா பணி... இப்படி காலத்தை காரணத்துடன் கழித்துவிட்டதால் அவைகள் அத்தனையும் என்னிடம் அனுபவ ஆடையாக இருக்கிறது.

இப்படி சென்றமாதம் தொடர் இலக்கியவிழா மழையாக பொழிந்ததால் நனைந்துவிட்டேன்.

இனி இன்னொரு நிகழ்வு அடுத்த வாரத்தில் தொழில் சார்ந்த பயணம் துருக்கி வரை செல்லவேண்டி இருக்கிறது அதையும் முடித்துவிட்டால் நிம்மதியாக எனது தொடரை தொடருவேன்.


Tuesday, February 1, 2011

ஞானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 தொடர் - 13
இது ஒரு பாலை அனுபவம்
1987 -லில் விற்பனைக்கு வந்த கற்பனைக் கதைகள் என்றொரு சிறுகதை தொகுப்பை துபையில் வெளியிட்டேன். இந்த நூல் தமிழகத்தின் பல ஊர்களைச் சார்ந்த நண்பர்களின் அறிமுகத்தை கொடுத்தது ஆனால் எனது ஊரைச் சார்ந்த சகோதரர் முஹம்மது சபீர்ருடைய அறிமுகமும் கிடைத்தது; இந்த அறிமுகம்தான் என்னை ஞானப் பாட்டைக்கு அழைத்துச் சென்றது.

புதிய கொள்கையில் தீவிரமாக இருந்த எனக்கு முஹம்மது சபீர் காட்டிய ஞானப்பாட்டை என்னை யோசிக்க வைத்தது.

நம்பிக்கை என்பது இரண்டு விதம் ஒன்று நன்னம்பிக்கை இரண்டாவது மூடநம்பிக்கை ஆனால் நாம் எந்த நம்பிக்கையில் இருக்கிறோம் என்பது அவரவர் அறிவுக்கே விட்டுவிடலாம் காரணம் இது எனது பாலைப் பயணம்.

எந்த நம்பிக்கையில் நான் இருந்தேன் என்ற வினா ஞானப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவுப்படுத்தியது.இந்த தெளிவுக்காக இரண்டு ஆண்டுகள் முழுமையாக சிலவு செய்திருக்கிறேன்.

ஏனெனில் என் மனப்பாட்டையில் நான் எதையெல்லாம் விளங்கி வைத்திருந்தனோ அதையெல்லாம் நானே அழிக்கவேண்டியதாகி விட்டது. கணக்கு தவறு என்றால் அழித்துதானே ஆகவேண்டும்.

படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு பலர் படைத்தவனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.வணங்கிவிட்டால் போதும் கடமையை முடித்துவிட்டோம் என்ற எண்ணத்தில் நானுமிருந்தேன்.

இறைவன் எண்ணத்தில் இருக்கிறானா? அல்லது என்னிடமும் இருக்கிறானா(?) என்ற கேள்வி என்னைப்பற்றி நான் அறியும்போது எழுந்த சந்தேகங்கள். இறைவன் மேலானவன் என்பதற்காக ஆகாயத்தில் அமர்ந்திருப்பதாக பலரைப்போல் நானும் மேலேப் பார்த்த காலமும்முண்டு.

இறைவனின் அசலான பெயரை உச்சரிக்கும் பலர் இன்னும் கற்பனையாகத்தான் அவனை வைத்திருக்கிறார்கள்.அஸ்திவாரம் சரியாக இல்லாததினால்தான் இன்றும் பல அமைப்புகளாய் ஒன்றுமையில்லாமல் உலகளவில் சாந்தியாளனாக திகழவேண்டியவர்கள் தீவிரமாக வாழ்கிறார்கள்.

எதையுமே பயில்வதற்கு ஒருவர் வேண்டும் அந்த ஒருவர் குருவாக விளங்க வேண்டும் அந்த குருவிடம் தன்னைபடிக்க வேண்டும் தன்னைப்படிக்காமல் வேறு எதைப்படித்தாலும் அதில் சாந்தம் இருப்பதில்லை சாந்தமில்லா மனிதனிடம் மனிதம் நிலைப்பதில்லை.
ஞானம் என்பது கடல் அள்ள அள்ள வந்துக்கொண்டே இருக்கும் தோண்டத் தோண்டக் கிடைத்துக் கொண்டேயிருக்கும் ஏனெனில் மனிதன் ஒரு புதையல்.தன்னிடம் இருப்பதை விட்டுவிட்டு வெளியில் தேடுகிறான்.

அப்படி வெளியில் இருந்த என்னை உள்ளுக்குள் அழைத்த நண்பர் முஹம்மது சபீரை நான் எப்படி மறப்பேன்.இவர் படித்தவர் தன்னையும் இன்னும் படித்துக் கொண்டிருப்பவர் ஞானத்தையும் ஆனால் வங்கியின் மேலாளராக வளைகுடாவைச் சுற்றி பல நாடுகளில் பணிப்புரிந்தாலும் கனடா இவரை தனது பிரஜையாக்கி தற்போது அவர் அங்கே தொழிலதிபராக திகழப்போகின்றவர் அவருடைய வளமான வாழ்விற்கும் நிறைவான மனதிற்கும் வாழ்த்துக்கள்.

ஞானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை அப்படி கிடைத்தவர்கள் அதைப்பயிலாமல் சென்றால் அவர்களின் வாழ்க்கையில் சாந்தி நிலைப்பதில்லை.

எதையும் புதிதாக கேள்விப்படும்போது அதை ஏற்றுக்கொள்ளும் மனம் அவ்வளவு எளிதில் வருவதில்லை.பல ஆராய்ச்சிகள் பலரிடம் அதைப்பற்றிய வாதங்கள் செய்து விதண்டாவாதங்களும் செய்வோம் அப்படித்தான் ஞானப்பாட்டையின் ஆரம்ப நாட்கள்.

நான் விளங்கி வைத்திருந்த வாதங்கள் தலைக்குனிந்தது மரத்தின் வேர்களைக் காணவேண்டுமானால் தோண்டித்தான் பார்க்கவேண்டும் மரத்திற்கு வேரே இல்லை என்பது மடமை அப்படித்தான் பல விசயங்களை தோண்டாமலேயே விதண்டா வாதம் செய்தேன்.
இதற்கெல்லாம் பதிலளித்தார் சபீரின் நண்பர் மதுக்கூர் முஹம்மது காலீது. (பின் நாட்களில் எனக்கும் நண்பரானவர்)

ஹவுஸ்பாய் பணியில் ஓய்வு நேரத்தில் முஹம்மது காலீது அலுவலகத்திற்கு சென்றுவிடுவேன்.அந்த சமயத்தில் அவரின் அலுவலகத்தில் அவர் மட்டுமே இருப்பார் ஒருமணி நேரத்திற்கும் அதிகமாக தினமும் எங்களின் வாதங்கள் தொடந்தது.
ஓராண்டுக்கும் மேலாக நாங்கள் இருவரும் வாதம் புரிந்துள்ளோம்.
ஞானப்பாட்டைக்கு கைகாட்டியவர் முஹம்மது சபீர் அதனுள் அழைத்துச் சென்றவர் முஹம்மது காலீது அவர்கள்.

இவர்கள் இருவரின் நட்பு இறைவன் எனக்களித்த கொடை.

அமீரகம் என்னை ஆளாக்குவது தொடர்வோம்…