உங்கள் வருகைக்கு நன்றி...

Monday, March 21, 2011

துரிதமாக ஒரு பயணம் துருக்கி வரையில்...

குறிப்பு - இது தொடரல்ல நீளமான பதிவு

துருக்கி இஸ்தாம்புலில் நடக்கவிருக்கும் தங்க நகைகளின் 2011 கண்காட்சியை காண்பதற்கும், புதிய டிசைன்களை தேர்வு செய்வதற்கும் நான்கு தினங்கள் அலுவலக பணியாக நான் சென்றிருந்தேன்.

பலநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்னோடு துபாயிலிருந்து எமிரேட்சில் இஸ்தாம்புலுக்கு பயணம் செய்தார்கள். பல இந்தியர்களும் அதில் இருந்தாலும் சில தமிழர்கள் தமிழில் பேசிய சப்தம் கேட்கவே எனக்குள் பரவசம், நான் தனிமைப்பட்ட உணர்வை அந்த தமிழர்களின் பேச்சு நீக்கியது. அவர்கள் யார்? என்ன ஏது என்ற விபரமோ, அறிமுகமோ செய்துக்கொள்ளவில்லை ஆனால் அவர்கள் உரையாடிய தமிழ் என்னை சந்தோசப்படுத்தியது, நம்பிக்கை ஊட்டியது ஆம் தாயோடு பயணிப்பதைப் போன்ற உணர்வைக் கொடுத்தது நமது தாய்மொழி.

விமானத்திலிருந்து இந்த பகுதியை எழுதிக்கொண்டிருக்கிறேன் எமிரேட்சில் எந்த நாட்டுக்கு பயணம் செய்தாலும் தமிழ் படம் இரண்டு ஒளிபரப்புகிறார்கள் அட்டவணைப்படி இந்த மாதம் ஜக்குபாய், அசல் இரண்டு படங்களைப் பார்த்தேன்.

இதன் பிறகு ஹோட்டல் அறையிலிருந்து பதிவுசெய்கிறேன்.
என்னை அழைப்பதற்கு எங்கள் நட்புக் கம்பெனியின் ஊழியர் நண்பர் ஆர்தோ துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் வந்திருந்தார்.விமான நிலையத்தில் வெப்பத்தை உணர்ந்த நான் வெளியில் வந்ததும் குளிரை சுவாசித்தேன். ஆம் 17 டிகிரி இது சாதாரணம் என்கிறார்கள் துருக்கியர்கள் மைனஸ் எல்லாம் வருமாம்.

மாலை 6.00 மணிக்கு துருக்கி விமான நிலையத்திலிருந்து நான் தங்கப்போகும் வாவ் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். விமான நிலையத்திலிருந்து 10 நிமிடங்கள் தான் வாவ் ஹோட்டல் இதற்கு எதிர்புறம் தான் நகை கண்காட்சியின் அரங்கம் இருக்கிறது எளிதாக ஐந்து நிமிடத்தில் நடந்துவிடலாம்.

ஹோட்டலில் முன் பதிவு செய்யப்பட்டிருந்ததால் அதிகநேரம் எடுக்கவில்லை சில நிமிடங்களில் 17 வது மாடியின் அறை சாவியை தந்தார்கள்.

அறையின் ஜன்னல் வழியாக கிழக்கு பகுதி துருக்கியை காணமுடிந்தது சாலைகளில் வாகனங்கள் எந்தநேரமும் சென்றுக்கொண்டே இருந்தன சில தருணங்களில் வாகன நெரிசல் டிராபிக் இருந்தது.


இரவு 8.00 மணிக்கு அறையிலிருந்து ஹோட்டல் உணவகத்திற்கு வந்தேன் துருக்கி நாட்டு உணவுதான் வைத்திருந்தார்கள் சுவையாகதான் இருக்கும் ஆனால் சுவைப்பதற்கு பசி அவ்வளவாக இல்லை அருகில் சூப்பர் மார்கெட் இருக்கிறதா என்று வினவினேன்.நான் மறந்துபோன பல்பேஸ்ட் வாங்குவதற்கு.

நடக்கும் தூரத்தில் ஏதும் இல்லை சில மைல்கள் போகனும் மெட்ரோ இரயிலை உபயோகப்படுத்துங்களேன் என்றார்கள்.

என்னை அழைப்பதற்கு வந்த நண்பர் ஆர்தோ தனியாக செல்ல வேண்டாம் ஏமாற்றுவார்கள் என்று கூறிவிட்டு போன வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தது.இருந்தாலும் ஒரு குருட்டு தைரியத்தில் ஹோட்டலில் இருந்து புறப்பட்டேன்.

மெட்ரோ ஸ்டேசன் வரையில் நடப்பதற்கு 7 நிமிடங்கள் ஆகின விளக்கு வெளிச்சம் ஏதும் இல்லை மனமெல்லாம் பயம் இருந்தாலும் ஒரு நம்பிக்கை அவ்வபோது தைரியத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.ஏதும் நடக்காது அப்படி நடந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது.
மெட்ரோ ஸ்டேசன் வந்துவிட்டேன் எந்த ஸ்டேசனில் இறங்குவது எந்தப்பக்கம் போகும் இரயிலில் ஏறுவது குழப்பம்.
டிக்கெட் எடுக்கும் மெசின் அருகில் நின்று கொண்டிருந்தேன்.இரவு நேரம் என்பதால் ஒன்று இரண்டு நபர்கள் தான் வருவதும் போவதுமாக இருந்தார்கள் .நான் நிற்பதை பார்த்து விட்டு இருவர் துருக்கி மொழியில் விசாரித்தார்கள் நான் ஆங்கிலத்தில் பேச அவர்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் கொஞ்சம் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் பேசினார்கள் சூப்பர்மார்கெட் போகவேண்டும் என்று கேட்டுக் கொள்ள அவர்களும் இரண்டு ஸ்டேசனுக்கு பிறகு இறங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்.

இந்த மெட்ரோவில் என்னைத் தவிர அனைவரும் குளிருக்காக வேண்டி ஜாக்கெட் அணிந்திருந்தார்கள் அந்த ஒன்றே என்னை அன்னியனாக அனைவருக்கும் மத்தியில் காட்டிக்கொடுத்தது. எந்த நாடு என்று என்னை விசாரித்தார்கள் இந்தியா என்றேன் இஸ்தாம்புல் எப்படி இருக்கிறது? கேட்டார்கள் நல்ல மனிதர்கள் வாழக்கூடிய நகரம் என்றேன் கை குலுக்கினார்கள்.

அவர்களிடமிருந்து விடைப்பெற்று ஸ்டேசனில் இறங்கினேன். மெட்ரோவில் எந்த ஸ்டேசனில் ஏறி இறங்கினாலும் ஒரு லிரா 75 குருஸ் ஒரே தொகைதான். (துருக்கியின் பணத்திற்கு லிரா என்றும் காசுக்கு குருஸ் என்றும் அழைக்கிறார்கள்) இறங்கி ஸ்டேசனின் வெளியில் நடந்தேன் அப்படியே நமது சிங்கார சென்னையின் நினைவைத் தந்தது.பிளாட்பாம் கடைகள் ஏராளம் இருந்தது கூட்டம் நெரிசல் இருந்தது ரோட்டைக் கடப்பதற்கு பாலத்தின் வழியாக நடந்தேன் பாலத்தின் இரு பக்கங்களிலும் கடைகள் இருந்தன.கடந்துச் சென்றேன் உணவகங்கள் வரிசையாக இருந்தது அதன் அமைப்பு கிட்டத்தட்ட தமிழர்களின் உணவகங்கள் போலவே அமைந்திருந்தது.

அதைப்பார்த்ததும் மனசுக்கு சென்னையில் இருப்பதைப்போன்ற உணர்வு இருந்தது.

இன்னும் தஞ்சைப் பகுதியில் இஸ்லாமியர்களை துலக்கர்கள் என்று அழைப்பதுண்டு. அது துருக்கியிலிருந்து வணிகத்திற்காக இந்தியா வந்து குறிப்பாக தமிழகத்தில் அதிகமான வணிகம் செய்தவர்கள் துருக்கியர்கள்.காலப்போக்கில் தமிழகத்திலேயே அவர்கள் தங்களின் வாழ்கையை அமைத்துக் கொண்டு நிரந்தரமாக தங்கினார்கள் அவர்களை துருக்கர்கள் என்று அழைத்து வந்தனர் நாளடைவில் அது துலக்கர் என்று மறுவி விட்டது.அந்த துருக்கியர்கள் வடிவமைத்த உணவகங்கள்தான் இன்றும் நமது தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருந்து வருகிறது.

துருக்கியில் சமதளமான தெருக்கள், சாலைகள் இல்லை மேடு, பள்ளம் நிறைந்தாக இருக்கிறது. நான் நடந்துச் சென்ற அந்த தெருவின் எல்லையில் ஒரு சூப்பர்மார்கெட் இருந்தது பல்பேஸ்ட் வாங்கிக் கொண்டு கிங் பர்கரில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் மெட்ரோவை நோக்கி நடந்தேன். சரியாக நான் இறங்க வேண்டிய ஸ்டேசனில் இறங்கி ஹோட்டலுக்கு வந்துச் சேர்ந்தேன்.

மறுதினம் அதிகாலையில் துபாயில் கண்விழிப்பதைப் போன்றே 6.00 மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது காலை தொழுகையை நிறைவு செய்துவிட்டு லெப்டப்புடன் அனுபவங்களை பதிவு செய்ய தொடங்கினேன்.

நகை கண்காட்சி நடக்கும் அரங்கத்திற்கு புறப்பட்டேன் காலை நேரத்தில் வானம் மேகமூட்டமாக இருந்தது.சில நிமிடங்கள் நடந்தேன் அரங்கத்தின் வாயிலில் சரியான கூட்டம் அதனால் பாதுகாப்பும் அதிகமாக இருந்தது. விசிட்டர்கள் தங்களை பதிவு செய்வதற்கு பாஸ்போர்ட் மற்றும் விசிட்ங் கார்டு கொடுக்க வேண்டும் இதைக் கொடுத்து விசிட்டர் நுழைவுச் சீட்டு வாங்க வேண்டும் இதைப் பெறுவதற்கு சுமார் மூன்று மணிநேரம் வரிசையில் நின்றுக் கொண்டிருந்தோம். எனக்கு முன்னால் சில தமிழ் முகங்கள் நின்றுக் கொண்டிருந்தன பரிச்சயமில்லாதவர்கள் இருந்தாலும் அவ்வபோது எங்களின் பார்வை ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவிதம் நீயும் தமிழனா நானும்தான் என்பதை போல இருந்தது.

ஒவ்வொரு விசிட்டர்களையும் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவு செய்கிறார்கள் அதன் நகலை நுழைவுச் சீட்டாக தந்தார்கள்.இந்த கண்காட்சிக்காக பல நாடுகளிலிருந்து பார்வையாளராகவும் சிலர் அங்கு ஸ்டால் அமைத்து வர்த்தகம் செய்வதற்கும் வருகைப் புரிந்திருந்தார்கள்.

இத்தாலி நாட்டில் ஆண்டு தோறும் பிப்ரவரியில் நகை கண்காட்சி நடக்கும் அதுதான் பிரமாண்டமாக இருக்கும் அதற்கு அடுத்தபடியாக துருக்கி இஸ்தாம்புலில் இந்த ஷோ இதில் நமது இந்திய சகோதரர்கள் குஜராத்திகள் வெள்ளி நகைகள் மற்றும் கலர் கற்கள் வைத்து ஸ்டால் அமைத்திருந்தார்கள்.

ஒரு இந்தியரின் ஸ்டாலில் புத்தகமாக இருந்தது அருகில் சென்று விசாரித்தேன் அவர் கூறினார் நகைகளின் டிசைன்கள் அடங்கிய நூற்கள் மற்றும் பல ஆங்கில சிற்றிதழ்களில் புதிய வடிவத்தில் வெளியான நகைகளின் டிசைன்கள் அடங்கிய இந்த நூல்களை மட்டுமே விற்பனை செய்கிறார் மும்பையைச் சேர்ந்த சகோதரர்.

பெரும்பாலானவர்கள் பார்வையாளர்களுக்கு தங்களின் டிசைனின் கேட்டலாக்குகளை அழகான பைகளில் வைத்து தங்கள் ஸ்டாலின் முன் வைத்துவிடுகிறார்கள் தேவையானவர்கள் அதை எடுத்துச் செல்லலாம். அனைத்து ஸ்டால்களிலுமே இனிப்பு வகைகளை வைத்து வரக்கூடிய பார்வையாளர்களை உபசரிக்கிறார்கள்.

பெரும்பாலான ஸ்டால்களில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பார்வையாளர்களுடன் ஆங்கிலம் மற்ற மொழிகளை உரையாடுவதற்கு துருக்கிய நாட்டைச் சேர்ந்த இளம் பெண் பிள்ளைகளை உலாவரச் செய்துள்ளார்கள் சிலர் தங்களின் நகைகளை அந்த இளம் பெண்களுக்கு அணிவித்து அதன் அழகை கண்டு ஆர்டர்களை பெறுவதற்கும் ஸ்டாலின் வாயில் நிறுத்தி இருந்தார்கள்.நாம் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக அவர்கள் பதில் சொல்வதில்லை அந்த ஸ்டாலின் உரிமையாளரிடம் கேட்டு பதிலளிக்கிறார்கள் பெரும்பாலன துருக்கியர்களுக்கு ஆங்கிலமொழி தெரியவில்லை.

நகைகண்காட்சி நடக்கும் அந்த அரங்கம் மிக நீளம் அகலமுமானது ஆதலால் பகுதி பகுதியாக பிரித்து வைத்திருக்கிறார்கள் முழுவதையும் சுற்றி பார்க்க கால்கள்தான் வேண்டும் ஆங்காங்கே அமர்ந்து ஓய்வெடுக்க இருக்கைகளும் உணவகங்களும் இருக்கின்றன.

நான் சுற்றி பார்த்தவரையில் புதிய டிசைன்கள் சில இருந்தன அவைகள் எடைக்குறைவாகவும் கற்கள் இல்லாத டிசைனாகவும் அனைவரும் எளிதில் வாங்கக் கூடிய டிசைனாகவும் பார்த்து தேர்வு செய்து வைத்துள்ளேன் அதன் செய்கூலி அதிகமாக இருக்கிறது முதல் சுற்று பேச்சுவார்த்தை அந்த வணிகருடன் முடித்துள்ளேன் இரண்டாவது சுற்று பேச்சு வாரத்தை நாளை நடத்துவேன் இதற்கிடையில் எனது கம்பெனியின் நிறுவனரும் நாளை கண்காட்சிக்கு பார்வையிட வருகிறார் அவருடன் கலந்து இறுதியாக ஆர்டர் செய்வோம்.

மாலை ஏழு மணியுடன் கண்காட்சி அரங்கம் மூடப்படும் மீண்டும் மறுநாள் காலை 10.00 மணிக்கு திறப்பார்கள்.அன்று மாலை மழை பெய்திருந்தது இரவு ஆர்த்தோ துருக்கி நண்பர் எனக்கும் அவருடைய வாடிக்ககையாளர்களான துபாய் மஹல்லாத்தி ஜூவல்லரியில் பணிப்புரியும் இந்தியர்களுக்கும் விருந்தளித்தார். அங்குள்ள உணவகங்கள் பெரும்பாலும் பெரிதாகவே அமைத்திருக்கிறார்கள். ஒரு உணவகத்திற்குள் சென்றால் சுமார் 500 நபர்கள் அமர்ந்து சாப்பிடக்கூடிய அளவிற்கு இடவசதிகள் இருக்கின்றன.


துருக்கி உணவு மிகவும் சுவைமிக்கதாக இருக்கிறது கத்தரிக்காய் என்றாலே எனக்கு பிடிக்காது ஆனால் அதே கத்தரிக்காயை இவர்கள் சமைத்து வைத்திருந்த விதம் மிகவும் ருசியாக இருந்தது பச்சை காய்கறிகளை மிகவும் பக்குவப்படுத்தி ருசியை கூட்டி செய்திருக்கிறார்கள் மாமிசங்களும் மிருதுவாகதான் இருந்தன ஆனால் பச்சை காய்கறியின் மீது அளவு கடந்த அன்பையும் பாசத்தையும் எனக்குள் துருக்கியர்கள் ஏற்படுத்திவிட்டார்கள்.

உணவுக்கு துருக்கியர்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள் ஒரு பொருளை ஒரேமாதிரி சமைப்பதில்லை பலவிதமான ருசிகளில் சமைத்து அந்த பொருளை விரும்பாதவர்களையும் விரும்ப வைக்கக் கூடிய தந்திரம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் விரைவில் உணவுக்காக ஒரு ஷோ ஏற்பாடு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.( அப்படி ஒரு ஷோ நடத்தினால் எவ்வளவு சிலவானாலும் சரி கண்டிப்பாக அம்மணியை அழைத்துக் கொண்டு வந்துவிடுவேன்.)

விருந்துக்கு வந்த ஆர்த்தோ வாடிக்கையாளர்களான ஹைதராபாத்தைச் சார்ந்த சகோதரர்கள். இவர்கள் ஏற்கனவே எனக்கு பரிட்சையமானவர்கள்தான் அவர்களும் துபை கோல்டு மார்க்கெட்டில் பணிபுரிபவர்கள் ஒன்றாக சந்தித்து உணவருந்தியதில் எங்களுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

இரவு உணவருந்திவிட்டு வரும் வழியில் நல்ல மழைபெய்தது அதனுடன் குளிரும் சேர்ந்து எங்களை குளிரவைத்தது.விடுதிக்குள் வந்து வெப்பமூட்டும் மெஷினின் காற்றை அறைக்குள் நிரப்பி உறங்கினேன்.

விடிந்தது பொழுது எனது அறையின் ஜன்னல் வழியாக காலைக்கதிரவனின் உதயத்தையும் கனமில்லாத கருணையாக பெய்துக் கொண்டிருந்த மழையையும் என்னால் கண்டு ரசிக்க முடிந்தது.


வழக்கம்போல இரண்டாம் நாளாக கண்காட்சி அரங்கத்திற்கு சென்றேன் முதல் நாள் கூட்டத்தைவிட இன்று கொஞ்சம் அதிகமாக இருந்தது.இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஜூம்ஆ தொழுகைக்கு செல்லவேண்டுமே எப்படி எங்கு யாருடன் செல்வது என்ற சிந்தனை அதிகாலையிலிருந்தே இருந்துக் கொண்டிருந்தது.

துருக்கியின் மிகவும் பிரபல்யமான சுல்தான் பள்ளிவாசலுக்கு சென்று தொழுகை புரியவேண்டும் என்ற ஆவல் என்னிடம் இருந்தது ஆனால் இன்று எனது கம்பெனியின் நிறுவனர் அதாவது முதலாழி வருகிறார் என்னை கண்காட்சியில் சந்திப்பதாக கூறியிருந்தார் எந்த நேரத்தில் தொலைபேசியில் தொடர்புக் கொள்வார் என்று தெரியாததினால் அங்கு சென்று வருவதற்கு காலம் போததாது என்று தெரிந்ததால் இன்னொரு வாய்ப்பை எதிர்பார்த்து என்எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.

கண்காட்சியை வலம் வந்துக் கொண்டிருந்தபோது துபாயில் அசினா ஜூவல்லரியில் பணிப்புரியும் தமிழ் நண்பர்கள் அய்யுப் மற்றுமொருவர் நின்றுக் கொண்டிருக்க அளவிலா ஆனந்தத்துடன் இரண்டு தினங்களுக்குபிறகு அவர்களுடன் தமிழில் பேசுவதற்கு வாய்ப்பாக இருந்தது. சில நிமிடங்களில் அவர்களும் விடைப்பெற்று சென்றார்கள்.

ஹால் எண் 3-ல் ஜூம்ஆ தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுப்பு செய்தார்கள் குழப்பத்துடன் இருந்த நான் மகிழ்ச்சியுடன் தொழச்சென்றேன்.ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கு தொழுதக் காட்சி மனதில் பிரமாண்டத்தை தோற்றிவித்தது.

சரியாக தொழுகை முடிந்து சில நிமிடங்களில் எனது கம்பெனியின் பாஸ் என்னை அழைக்க அவரைச் சந்தித்தேன்.நேற்று நான் நகைகளை தேர்வு செய்த கம்பெனிகளுக்கு பாஸ்சுடன் சென்று எங்களின் ஆர்டர்களை உறுதி படுத்திக் கொண்டோம் அதில் ஒரு சப்ளையர் இன்று இரவு தங்கள் கம்பெனி நடத்தும் பேஷன் ஷோவிற்கும் அங்கு நடக்கும் இரவு விருந்துக்கும் எங்களை அழைத்தார் அவர் தந்த இன்விட்டேசனை பெற்றுக் கொண்டு சில மணி நேரங்கள் என்னுடன் உலாவந்த பாஸ் அவருடைய நண்பர்களை கண்டதும் என்னிடமிருந்து விடைப்பெற்றார் நாளை சந்திப்போம் என்று!

நாளை வெளியில் சென்று சுற்றிப் பார்க்கலாம் என்று திட்டமிட்டிருந்த எனது திட்டத்தில் இடி விழுந்ததினால் உடனடி தீர்மானம் செய்தேன் இப்பவே புறப்பட்டு செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வந்துவிடாலாம் எனது குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வேறு வாங்கவேண்டும் என்பதினாலும் சந்தர்பத்தை கிடைத்த நேரத்தை நழுவவிடாமல் மாலை 6.00 மணிக்கு புறப்பட்டேன்.

இஸ்தாம்புல் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த நான் அங்கிருந்து கிராண்ட் பஜார் என்று அழைக்கும் பழைமை வாய்ந்த அந்த மார்க்கெட்டிற்கு டெக்ஸியில் செல்வதாக இருந்தால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் ஆகும் என்றார்கள் காரணம் டிராபிக். ஆனால் மெட்டோவில் சென்றால் ஒரு மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம் என்றதும் நான் மெட்ரோவை தேர்வு செய்தேன்.

ஸ்டேசனில் நின்றுக் கொண்டிருந்த ஒருவரிடம் கிராண்ட் பஜார் செல்ல வேண்டும் எந்த ஸ்டேசனில் இறங்கனும் என்று கேட்டேன் அவருக்கு ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் தெரியவில்லை ஆனால் அவர் அருகில் நின்றுக் கொண்டிருந்த துருக்கியர்களிடம் ஆங்கிலம் தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறீர்களா என்று கேட்டு இருவரை அழைத்துவந்து என்னிடம் பேச வைத்தார்.

நான் போகவேண்டிய இடத்தை சொன்னதும் செல்லும் வழியில் இன்டர்சேன்ஜ் இருக்கிறது நீங்கள் இன்னொரு இரயில் மாறவேண்டும் என்று கூறிவிட்டு நான் கிராண்ட் பஜாரை கடந்து தான் செல்கிறேன் அந்த நிறுத்தத்தில் உங்களை இறக்கிவிடுகிறேன் என்றதும் துருக்கியர்களின் பண்பாட்டை எண்ணி மிகைத்தேன்.

மேட்ரோவிலிருந்து இன்டர்சேன்ஜில் மற்றொரு ஸ்ட்ரீட் மெட்ரோவிற்கு மாறினேன் இந்த ரெயில் கார் பஸ் போகும் ரோட்டிலேயே சில இடங்களில் மட்டும் செல்கிறது பெரும்பாலான இடங்களில் தனிச் சாலையில் செல்கிறது.

மேட்ரோ எந்தந்த ஸ்டேசனில் நிற்கும் என்ற இடத்தின் பெயர்களைப் பதிவு செய்து வைத்துள்ளார்கள் அதில் நான் ஏறிய ஸ்டேசனையும் இறங்க வேண்டிய ஸ்டேசனையும் துருக்கி நண்பர்கள் காண்பிக்கவே அதை துருக்கி மொழியிலேயே ஆங்கிலத்தில் குறித்துக் கொண்டேன்.



கிராண்ட் பஜாரில் இறங்கி எந்தப் பக்கம் போக வேண்டும் என்று தெரியாமல் நடந்தேன் எதிரில் பழைமையான பிரமாண்டமான பள்ளிவாசல் தெரிய அதனுள் சென்றேன் அது சுல்தான் பள்ளி தொழுதேன் வேலைபாடுகள்நிறந்த கலைநயத்துடன் கட்டப்பட்டிருக்கிறது. அதை பார்த்துவிட்டு மார்கெட் பக்கம் நடந்தேன் மிக நீளமான தெரு இரு பக்கங்களிலும் கடைகள் இந்த பகுதி வர்த்தகர்கள் அரபி மொழியும் ஆங்கிலமும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு பொருளுக்கு விலைக்கேட்டால் நமது மொழியை வைத்தே நாம் சுற்றுலாவாதி என்பதை மோப்பம் பிடித்து விலையை அதிகமாக கூறுகிறார்கள் இங்கு பேரம் பேசிதான் பொருட்களை வாங்க வேண்டி இருக்கிறது.

துபாய் மார்கெட்டை ஒத்துப்பார்த்தோமேயானால் துருக்கி மார்கெட் விலை அதிகம் என்றே கூறலாம். பொருட்களின் தரம் நல்லதரமானதாகவே தெரிந்தது அதனாலேயே விலை அதிகம் கொடுக்க வேண்டி இருக்கிறது.

இரவு ஒன்பது மணிவரையில் சுற்றிவிட்டு மீண்டும் மெட்ரோ பயணம் ஆனால் யாரிடமும் வழி கேட்கவில்லை வந்த வழியை தெரிந்துக் கொண்டேன் வரும் வழியில் குளிர் என்னை நன்றாக நோவ புடைத்தது.

இன்று மூன்றாவது தினம் காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் இருந்தது ஹோட்டல் அறையில் வெப்பக்காற்று இயந்திரம் இருப்பதால் வெளியில் சீதோசனம் எப்படி இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை காலை 10.30 க்கு கண்காட்சி அரங்கத்திற்கு புறப்பட்டேன் ஹோட்டலை விட்டு வெளியில் வந்தேன் ஜில்லென்று என்னை வைத்து குளிர் சாதனப்பெட்டியில் திணித்ததைப் போன்று இருந்தது நான் விடும் மூச்சு காற்று புகையாகவே வெளியில் வந்தது இன்று 7 டிகிரி குளிர்.

கண்காட்சி அரங்கில் உலாவந்தபோது சவுதிஅரேபிய நாட்டைச் சேர்ந்த எங்களின் வாடிக்கையாளரை சந்தித்தேன் என்னைக் கண்டதும் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது என்னுடனேயே கண்காட்சி அரங்கத்தில் உலாவந்தார்கள்.

முதல்தினம் பரிச்சயமில்லாத தமிழ் முகங்களை கண்ட நான் அவர்களை இப்பொழுது நேருக்கு நேராக ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டோம். கொஞ்சமும் தாமதிக்காமல் ஆங்கில மொழியில் பேசாமல் நேரடியாக நீங்க எந்த ஊர் என்று தமிழில் என்னை விசாரிக்க நான் பதில் சொல்ல எங்களின் விசிட்டிங் கார்டுகளை பரிமாறிக்கொண்டோம்.

கோயமுத்தூரிலிருந்து ஐந்துபேர்கள் இந்த கண்காட்சியை காண்பதற்கு வருகைப்புரிந்துள்ளார்கள். இவர்கள் நகை பட்டறைகள் வைத்திருக்கிறார்கள் இந்த கண்காட்சியில் புதிய டிசைன்களை காண்பதற்கும் அவர்களின் டிசைன்களை காட்டுவதற்கும் வருகைப் புரிந்ததாக கூறினார்கள் மகிழ்வுடன் கை குலுக்கிக் கொண்டு விடைபெற்றோம்.
மாலை பேஷன் ஷோவிற்கு அழைத்த சப்ளையரின் அழைப்புக்கு போக முடியவில்லை என்னுடன் சுற்றிக் கொண்டிருக்கும் சவுதியர்கள் இரவு விருந்துக்கு அழைத்துச் சென்றார்கள். போகும் வழியில் ஷாப்பிங் மால் சென்றோம் கூட்டம் அதிகமாக இருந்தது அது வாரத்தின் இறுதி நாள் சனிக்கிழமை இரவு விடிந்தால் விடுமுறை என்பதால் மக்கள் தங்களின் நேரத்தை மாலில் கழித்தனர். ஓவ்வொரு பொருளின் விலையை பார்த்தால் அங்குள்ளவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை நமக்குதான் எக்சேன்ஜ் ரேட் எகுறுகிறது சுற்றினோமே தவிர ஒன்றும் யாரும் வாங்கவில்லை.


எங்களை இரவு விருந்துக்கு அழைத்துச் சென்ற சப்ளையர் ஒன்னரை மீட்டர் கபாப் ஆர்டர் செய்து திகைப்பூட்டினார். நம்ம ஊரில் விஜிபியில் நீளமான மெகா தோசையை அறிமுகம் செய்திருந்தார்களே அதுபோல ஒன்னரை மீட்டர் நீளத்திற்கு கபாப் அதாவது ஆட்டுக்கரியை அரைத்து இன்னும் சில பொருட்களை கலந்து அதை நெருப்பில் சுட்டு இப்படி வைத்தார்கள். கபாப் சாப்பிட்டிருக்கிறேன் ஆனால் இது நீளம் பெரிது எப்படி இவ்வளவு பெரிய காபாபை சாப்பிடப்போகிறமோ என்று ஆச்சரியப்பட்ட எனக்கு அரைமணியில் காளியாகிபோனது ஆச்சரியமாக இருந்தது.

இரவு 12 மணிக்கு இஸ்தாம்புல்லை காரில் அமர்ந்து சுற்றிப்பார்த்தேன் சுமார் இரண்டு கோடி மக்கள் இஸ்தாம்புல் நகரத்தில் வாழ்கிறார்கள். இதில் ஒரு பகுதி ஆசிய கண்டமாகவும் ஆற்றின் பாலத்தை கடந்து மறுபுறம் ஐரோப்பிய கண்டமாகவும் திகழ்ந்துக் கொண்டிருக்கிறது. துருக்கி நாட்டு பெண்கள் இளம் தலைமுறைகள் பெரும்பாலோர் நமது இந்திய கலாச்சாரமான மூக்குத்தி அணிவதையும் புகைப்பதையும் புதிய நாகரீகமாக கருதுகிறார்கள்.
ஐரோப்பிய கலாச்சாரம் இவர்களிடம் அதிகம் தென்பட்டாலும் ஒரு எல்லைக்குள் நிற்கிறார்கள் துருக்கிய இஸ்லாமிய நாடு என்பதால் 90 சதவீதத்தினர் இஸ்லாமியர்களாக வாழ்வதினால் இஸ்லாமிய கட்டுப்பாட்டுக்குட்பட்டு வாழ்கிறார்கள்.

நான்காம் நாளான இன்று பகல் 12 மணிக்கு எனது துருக்கி பயணத்தை முடித்துக் கொண்டு ஹோட்டலை செக்அவுட் செய்துவிட்டு விமானநிலையத்தை நோக்கி புறப்பட இருக்கிறேன் இதுவரையில் ஹோட்டல் அறையிலிருந்து பதிவு செய்துக் கொண்டிருக்கிறேன் .
இனி துருக்கி விமான நிலையத்தில் நேரம் கிடைத்ததால் இதோ உங்களுடன்…
பெரிய விமான நிலையமாகவும் டூட்டி ப்ரீ கடைகள் தனித்தனியாகவும் இருக்கிறது.

பல மணிநேரங்கள் டிரான்சிட் பயணிகளாக அமர்ந்து இருப்பவர்களுக்கு ஐந்து ஈரோவில் இயந்திர மசாஜ் செய்துவிடுகிறார்கள்.

டூட்டிப்ரீயில் எதை வாங்கினாலும் ஈரோவின் விலையை தான் லேபிளில் இருக்கிறது.
துருக்கி நாடு சுற்றிப்பார்க்ககூடிய வரலாற்று சிறப்புமிக்க பல இடங்கள் நிறைந்த நாடு ஆனால் விலைவாசி தங்கும் அறைவாடகை மற்றும் டெக்ஸ உணவு இவைகளை துபாயுடன் இணைத்து பார்க்கும்போது விலை துருக்கியில் அதிகமாக இருக்கிறது.

சுற்றுலாவில் நாட்டமுடையவர்கள் பட்ஜெட் விமானத்தில் துருக்கி ஒருமுறை வந்து போகலாம் மே மாதத்திலிருந்து ஆகஸ்ட் வரையில் கோடைகாலமாக இருக்கும் மற்ற மாதங்களின் சீதோசனம் குளிரும் வாடைக்காற்றுமாக இருக்கும் தொழில் விசயமாக நான் துருக்கி வந்திருந்தாலும் பார்க்கவேண்டிய பழைமைமிக்க மியூசியத்தை மிஸ் பண்ணின வருத்தம் என்னிடம் இருக்கத்தான் செய்கிறது குடும்பத்துடன் வரவேண்டுமென்ற ஆவலும் இருக்கிறது.

இறைவன் நாட்டமிருந்தால் இன்னொருமுறை துருக்கி வருவேன்.!
இந்த பதிவை துருக்கியில் எழுதத்துவங்கிஅங்கேயே நிறைவு செய்துவிட்டு விமானத்தில் ஏறப்போகின்றேன்.

துருக்கியின் இணையதளத்தில் பிளாக்ஸ்போட்டிற்கு தடை செய்துள்ளார்கள் இதை போஸ்ட் செய்வதற்கு முயற்சித்தேன் முடியவில்லை துபாயிலிருந்துதான் இதை போஸ்ட் செய்வேன்.
இவ்வளவு தூரம் ஆர்வத்துடன் படித்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றியை சமர்பிக்கின்றேன்.

Sunday, March 6, 2011

நீண்ட நாட்களுக்கு பிறகு...


முப்பது தினங்களுக்கு பிறகு உங்களுடன் உரையாடுகிறேன்...தொடர் எழுதிக் கொண்டிருந்த நான் அதை தொடராமல் இப்படி நாட்களை விழுங்கிவிட்டு தொடர் எழுதினால் அது படிப்பவர்களுக்கு ஆவலை அளிக்காது என்பதை அறிகிறேன்.

பல வேலைகளின் பளுவால் வலைப்பக்கம் வரமுடியாத வந்தாலும் எழுதும் மனநிலை இல்லாத ஒரு அவசர உணர்வில் இந்த நாட்கள் என்னை கழித்தது.

பல அமைப்புகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதால் விழாக்காலங்களில் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டுமே அதுவும் ஒரு காரணம், அடுத்து தங்கிருந்த கட்டிடத்திலேயே கீழ்தளத்திலிருந்து மேல்தளத்திற்கு நான்காவது மாடிக்கு வீட்டை மாற்றிக் கொண்ட காரணமும் கூட.

ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு மாறுவது என்பது எவ்வளவு பெரிய தலைவலி, தலைசுற்றல் என்பது வீடு மாறியவர்களுக்கு தெரியும்.ஆனால் எனக்கு அதெல்லாம் தெரியவில்லை காரணம் எனது மைத்துனர்களின் உதவி இருந்ததினால் நான் தப்பித்துக் கொண்டாலும் எனது துணைவியார் ரொம்ப கஸ்டப்பட்டதாக சொன்னார்கள்...அதில் நான் ஒன்றுமே செய்யவில்லை என்ற குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தார்கள்.

ஒரு வீடு மாறுவதற்கே இவ்வளவு கஸ்டமாக பீல் பண்ணும் நாம், எந்த நேரத்திலும் நமது பின்னாடியே நிழலாக சுற்றிவரும் மரணம் தரும் மாற்றத்தை இந்த மனம் எப்படி ஏற்றுக் கொள்ளும்(?) என்ற சிந்தனை எனக்குள் வந்தது.இந்த உலகில் அழிவு என்பது எதுவும் இல்லை ஆனால் மாற்றம் மட்டுமே நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பதை ஞானமாக படித்திருக்கிறேன்.
அதனால் எந்த மாற்றமானாலும் மனதை பக்குவப்படுத்திக் கொண்டால் மாற்றமும் மகிழ்வுடன் மாறிவிடும்.

எங்கள் அமைப்பின் சார்பாக அகிலத்தின் அருட்கொடை அண்ணல் பெருமானார் (ஸல் அலை) அவர்கள் அவதரித்த விழாவிற்காக இலங்கை வரை நண்பர்களுடன் நான்காம் வருடமாக சென்று வந்தேன்.ஒவ்வொரு முறை செல்லும்போதும் ஒருவித ஆன்ம ஆனந்தம் இம்முறையும் அப்படித்தான் அதை எழுத்தில் கொண்டுவர முடியாது.

துபாயில் சென்ற வாரம் நடந்த எங்கள் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய அமைப்பின் விழாவிற்கு வருகைப் புரிந்த தமிழஞர்களுடன் பழுகும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் முக்கியமாக கவிச்சித்தர் மு.மேத்தா அவர்களுடன்.

65 வயதைக் கடந்த மனிதராக இருந்தாலும் இன்னும் 50பதைப்போலவே காட்சியளிக்கிறார் எதை பேசினாலும் பல்தெரிய சிரித்து பேசுகிறார்.நிறைய பொறுமை நிதானம் அவரிடம் நிறைந்திருந்தது.எதையும் எதிர்பார்க்காத எண்ணத்தை கொண்டுள்ளார் அதனால் அவருடைய மனம் எப்பவும் எதார்த்தமாகவே இருக்கிறது.ஐந்து பெண்மக்களை பெற்றவர் என்றாலும் அதிகம் ஆசைப்படாதவராகவே காட்சியளித்தார்.

எங்கள் அமைப்பில் பேசும்போது கவிதையைப் பற்றியும் கூறினார் அதில் ஒரு கவிதை

குடியரசுதினம்
ஆளுநர் மாளிகையில்
அனைத்துக்கட்சி
தலைவர்களுக்கும்
விருந்து
பரிமாறிக் கொண்டிருந்த
பணியாளர்கள்
தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்
யார்
யாரைச் சாப்பிடப்போகிறார்களோ.!

இந்த கவிதையை கூறி நமது அரசியல்வாதிகளைப்பற்றிய கருத்தும் கூற அது நகைச்சுவையாக மாறி அனைவரையும் சிரிக்க(சிந்திக்க)வைத்தது.

தமிழறிஞர்களான இலங்கை காப்பிகோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் சென்னையைச் சார்ந்த இனியதிசைகள் பத்திரிக்கையின் ஆசிரியர் தொண்டு நிறுவனர் பேராசிரியர் சே.மு.முகமதலி இவர்களுடன் சந்திப்பு சில தினங்களில் அடிக்கடி நடந்தது.

எங்கள் ஏகத்து மெய்ஞ்ஞான சபையின் மீலாதுவிழா பணி... இப்படி காலத்தை காரணத்துடன் கழித்துவிட்டதால் அவைகள் அத்தனையும் என்னிடம் அனுபவ ஆடையாக இருக்கிறது.

இப்படி சென்றமாதம் தொடர் இலக்கியவிழா மழையாக பொழிந்ததால் நனைந்துவிட்டேன்.

இனி இன்னொரு நிகழ்வு அடுத்த வாரத்தில் தொழில் சார்ந்த பயணம் துருக்கி வரை செல்லவேண்டி இருக்கிறது அதையும் முடித்துவிட்டால் நிம்மதியாக எனது தொடரை தொடருவேன்.


Tuesday, February 1, 2011

ஞானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 தொடர் - 13
இது ஒரு பாலை அனுபவம்
1987 -லில் விற்பனைக்கு வந்த கற்பனைக் கதைகள் என்றொரு சிறுகதை தொகுப்பை துபையில் வெளியிட்டேன். இந்த நூல் தமிழகத்தின் பல ஊர்களைச் சார்ந்த நண்பர்களின் அறிமுகத்தை கொடுத்தது ஆனால் எனது ஊரைச் சார்ந்த சகோதரர் முஹம்மது சபீர்ருடைய அறிமுகமும் கிடைத்தது; இந்த அறிமுகம்தான் என்னை ஞானப் பாட்டைக்கு அழைத்துச் சென்றது.

புதிய கொள்கையில் தீவிரமாக இருந்த எனக்கு முஹம்மது சபீர் காட்டிய ஞானப்பாட்டை என்னை யோசிக்க வைத்தது.

நம்பிக்கை என்பது இரண்டு விதம் ஒன்று நன்னம்பிக்கை இரண்டாவது மூடநம்பிக்கை ஆனால் நாம் எந்த நம்பிக்கையில் இருக்கிறோம் என்பது அவரவர் அறிவுக்கே விட்டுவிடலாம் காரணம் இது எனது பாலைப் பயணம்.

எந்த நம்பிக்கையில் நான் இருந்தேன் என்ற வினா ஞானப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவுப்படுத்தியது.இந்த தெளிவுக்காக இரண்டு ஆண்டுகள் முழுமையாக சிலவு செய்திருக்கிறேன்.

ஏனெனில் என் மனப்பாட்டையில் நான் எதையெல்லாம் விளங்கி வைத்திருந்தனோ அதையெல்லாம் நானே அழிக்கவேண்டியதாகி விட்டது. கணக்கு தவறு என்றால் அழித்துதானே ஆகவேண்டும்.

படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு பலர் படைத்தவனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.வணங்கிவிட்டால் போதும் கடமையை முடித்துவிட்டோம் என்ற எண்ணத்தில் நானுமிருந்தேன்.

இறைவன் எண்ணத்தில் இருக்கிறானா? அல்லது என்னிடமும் இருக்கிறானா(?) என்ற கேள்வி என்னைப்பற்றி நான் அறியும்போது எழுந்த சந்தேகங்கள். இறைவன் மேலானவன் என்பதற்காக ஆகாயத்தில் அமர்ந்திருப்பதாக பலரைப்போல் நானும் மேலேப் பார்த்த காலமும்முண்டு.

இறைவனின் அசலான பெயரை உச்சரிக்கும் பலர் இன்னும் கற்பனையாகத்தான் அவனை வைத்திருக்கிறார்கள்.அஸ்திவாரம் சரியாக இல்லாததினால்தான் இன்றும் பல அமைப்புகளாய் ஒன்றுமையில்லாமல் உலகளவில் சாந்தியாளனாக திகழவேண்டியவர்கள் தீவிரமாக வாழ்கிறார்கள்.

எதையுமே பயில்வதற்கு ஒருவர் வேண்டும் அந்த ஒருவர் குருவாக விளங்க வேண்டும் அந்த குருவிடம் தன்னைபடிக்க வேண்டும் தன்னைப்படிக்காமல் வேறு எதைப்படித்தாலும் அதில் சாந்தம் இருப்பதில்லை சாந்தமில்லா மனிதனிடம் மனிதம் நிலைப்பதில்லை.
ஞானம் என்பது கடல் அள்ள அள்ள வந்துக்கொண்டே இருக்கும் தோண்டத் தோண்டக் கிடைத்துக் கொண்டேயிருக்கும் ஏனெனில் மனிதன் ஒரு புதையல்.தன்னிடம் இருப்பதை விட்டுவிட்டு வெளியில் தேடுகிறான்.

அப்படி வெளியில் இருந்த என்னை உள்ளுக்குள் அழைத்த நண்பர் முஹம்மது சபீரை நான் எப்படி மறப்பேன்.இவர் படித்தவர் தன்னையும் இன்னும் படித்துக் கொண்டிருப்பவர் ஞானத்தையும் ஆனால் வங்கியின் மேலாளராக வளைகுடாவைச் சுற்றி பல நாடுகளில் பணிப்புரிந்தாலும் கனடா இவரை தனது பிரஜையாக்கி தற்போது அவர் அங்கே தொழிலதிபராக திகழப்போகின்றவர் அவருடைய வளமான வாழ்விற்கும் நிறைவான மனதிற்கும் வாழ்த்துக்கள்.

ஞானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை அப்படி கிடைத்தவர்கள் அதைப்பயிலாமல் சென்றால் அவர்களின் வாழ்க்கையில் சாந்தி நிலைப்பதில்லை.

எதையும் புதிதாக கேள்விப்படும்போது அதை ஏற்றுக்கொள்ளும் மனம் அவ்வளவு எளிதில் வருவதில்லை.பல ஆராய்ச்சிகள் பலரிடம் அதைப்பற்றிய வாதங்கள் செய்து விதண்டாவாதங்களும் செய்வோம் அப்படித்தான் ஞானப்பாட்டையின் ஆரம்ப நாட்கள்.

நான் விளங்கி வைத்திருந்த வாதங்கள் தலைக்குனிந்தது மரத்தின் வேர்களைக் காணவேண்டுமானால் தோண்டித்தான் பார்க்கவேண்டும் மரத்திற்கு வேரே இல்லை என்பது மடமை அப்படித்தான் பல விசயங்களை தோண்டாமலேயே விதண்டா வாதம் செய்தேன்.
இதற்கெல்லாம் பதிலளித்தார் சபீரின் நண்பர் மதுக்கூர் முஹம்மது காலீது. (பின் நாட்களில் எனக்கும் நண்பரானவர்)

ஹவுஸ்பாய் பணியில் ஓய்வு நேரத்தில் முஹம்மது காலீது அலுவலகத்திற்கு சென்றுவிடுவேன்.அந்த சமயத்தில் அவரின் அலுவலகத்தில் அவர் மட்டுமே இருப்பார் ஒருமணி நேரத்திற்கும் அதிகமாக தினமும் எங்களின் வாதங்கள் தொடந்தது.
ஓராண்டுக்கும் மேலாக நாங்கள் இருவரும் வாதம் புரிந்துள்ளோம்.
ஞானப்பாட்டைக்கு கைகாட்டியவர் முஹம்மது சபீர் அதனுள் அழைத்துச் சென்றவர் முஹம்மது காலீது அவர்கள்.

இவர்கள் இருவரின் நட்பு இறைவன் எனக்களித்த கொடை.

அமீரகம் என்னை ஆளாக்குவது தொடர்வோம்…

Wednesday, January 26, 2011

நேரம் தவறினால் நேரமும் தவறிடும்


காலம் பொன்போன்றது என்பது பழமொழி ஆனால் அது வாழ்க்கையில் பின்பற்றக் கூடிய வழியும் கூட.பலருக்கும் நேரந்தவறியதினால் ஏற்பட்ட கஸ்டங்கள் நிறையவே இருக்கும்.
குறிப்பிட்ட நேரத்தில் செல்லாததால் வேலையை இழந்திருப்பார்கள் சிலர் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு செல்லாததால் உயிரும் போயிருக்கும்.

இப்படி எத்தனையோ நிகழ்வுகள் நேரத்தை மதிக்காத காரணத்தினால் பலருக்கு தவறிபோயிருக்கிறது. இதில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

சில வருடங்களுக்கு முன் பதினைந்து தினங்கள் விடுமுறையில் தாயகம் செல்ல ஷார்ஜா விமான நிலையத்திலிருந்து ஏர்அரேபியா பட்ஜட்விமானத்தில் டிக்கேட் போட்டிருந்தேன். இரவு 10.45 க்கு விமானம் புறப்படும் நேரம். பயணிகள் மூன்று மணிநேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்தில் இருக்கவேண்டும் என்பது விதிமுறை.

நான் துபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு செல்வதற்கு எனது மைத்துனரிடம் ஏழு மணிக்கு வரச் சொல்லியிருந்தேன். அவர் ரென்ட்டிய காரில்(Rent a car) பணிப்புரிவதால் அவரிடம் எப்போதும் கார் கைவசம் இருந்துக் கொண்டிருக்கும்.

அன்று காலையிலிருந்து மிதமான மழை பெய்துக் கொண்டிருந்தது.மதியம் ஒரு மணிக்கெல்லாம் பணியிலிருந்து அறைக்கு வந்தும் விட்டேன்.மழை நின்றபாடில்லை மாலை ஐந்து மணிக்கு எனது மைத்துனருக்கு டெலிபோன் செய்து ஆறுமணிக்கெல்லாம் நீ வந்துவிடு என்றேன்.

தற்போது கையில் கார் இல்லை ஏழுமணிக்கு தான் கார் வரும் வந்ததும் வருகிறேன் என்றார்.நானும் சரி எப்படியும் ஏழு மணிக்கு வந்துவிடுவார் ஏழுக்கு புறப்பட்டாலும் எட்டு அல்லது ஒன்பது மணிக்குள் விமான நிலையம் சென்றுவிடலாம் புறப்படுவது 10.45க்குத்தானே என்று அலட்சியமாக இருந்தேன்.

மணி 6.45 ஆகிவிட்டது மைத்துனருக்கு டெலிபோன் செய்தேன். இன்னும் கார் வரவில்லை ஏதோ ஓரிடத்தில் டிராப்பிக்கில் மாட்டி இருக்கிறார் அதனால் காரை எதிர்பார்க்க வேண்டாம் என்றார். எனக்கு கோபம் வந்தது இதை முன்னாடியே நீ சொல்லி இருக்கலாமே என்று அவரிடம் நொந்துக் கொண்டு அவசரமாக டெக்ஸியை தேடினேன். அன்று மழை பெய்ததால் எல்லா டெக்ஸியும் பயணிகளுடன் சென்றது கிடைக்கவில்லை.

உடனே எனது பக்கத்திலுள்ள நண்பரிடம் தொடர்புக் கொண்டு அவருடைய காரை எடுத்துக் கொண்டு போக எனது மைத்துனரை அழைத்து நாங்கள் புறப்படுவதற்குள் மணி 7.35தை தாண்டி விட்டது.

துபாய் ஷார்ஜா பிரதான சாலையில் மழைத்தண்ணீர் தேங்கி நிற்க அதனால் பல கார்கள் அதில் சிக்கி ஸ்டார்ட் ஆகாமல் திணறிக் கொண்டிருந்தது. அதனால் டிராப்பிக் ஜாம் மாலை ஐந்து மணியிலிருந்து பல வழிச் சாலைகளும் அடைப்பட்டு ஆங்காங்கே கார்கள் பல மைல் தூரத்திற்கு நின்றுக் கொண்டிருந்தன.

நாங்களும் நெரிசலில் மாட்டி தவித்துக் கொண்டிருந்தோம். இன்ஜ் பை இன்ஜ்சாக கார் நகர்ந்தது. நேரம் கடந்துக் கொண்டிருக்க அந்தக் குளிரில் எனக்கு நன்றாக வேர்வை வேர்த்தது.
விமானத்தை பிடித்துவிடுவோமா என்ற சந்தேக கேள்வி என்னுள் எழுந்தது. இது பட்ஜெட் ஏர்லைன்ஸ் இந்த விமானத்தில் பயணிக்கவில்லை என்றால் நம்முடைய பணம் திரும்ப கிடைக்காது இதில் மட்டும் உறுதியாக இருந்தேன்.

ஒருவழியாக டிராப்பிக்கை கடந்து விமான நிலையத்தை அடைந்தபோது நேரம் 10.30மணி.சென்னை கவுண்டர் மூடப்பட்டிருந்தது அங்கயே உள்ள ஏர்அரேபியா அலுவலகத்திற்கு சென்றேன் கூட்டமாக இருந்தது என்னைப்போலவே பலரும் டிராப்பிக்கில் மாட்டி தாமதமாகத்தான் வந்துள்ளார்கள். சென்னை செல்லக்கூடியவர்கள் 15 நபர்கள் இருந்தோம்.
அதிகாரியிடம் பேசினோம் விமானம் புறப்பட இன்னும் 10 நிமிடங்கள் தான் இருக்கிறது அதனால் ஒன்றும் செய்ய இயலாது. நீங்கள் சரியான நேரத்திற்கு வந்திருக்க வேண்டும் மழைப்பெய்வதால் இன்னும் ஒருமணி நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

நொந்துபோய் அமர்ந்திருந்தோம் விமானத்தை விட்டது ஒருபுறம் என்றாலும் பணம் திரும்பக் கிடைக்காதே என்ற வருத்தம் மறுபுறம்.என்ன செய்வது என்று என்னையே நான் நொந்துக் கொண்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஏர்அரேபியா விமான அதிகாரி எங்களை அழைத்து உங்கள் அனைவருக்கும் இந்த மழையின் காரணமாக விமான டிக்கேட்டை மறுபடியும் பயணிக்கும் வாய்ப்பை கொடுக்கின்றோம் நாளை உங்கள் தொலைபேசிக்கு அழைப்பு வரும் உங்கள் பயணத்தேதியை உறுதி செய்துக் கொள்ளுங்கள் என்றார் தலைக்கு வந்தது தலைப்பாவுடன் போனதே என்று நிம்மதியுடன் மகிழ்சியாக வீட்டுக்கு புறப்பட்டோம்.

முப்பதாண்டு அனுபவத்தில் இது போன்ற நிகழ்வு இரண்டாவது முறையாக இரண்டு மாதங்களுக்கு முன் ஜெட்ஏர்வேஸ்சில் ஏற்பட்டது.

நானும் துணைவியாரும் அவசரவேலையாக சென்னைக்கு கிளம்பினோம் 11.30 மணி விமானத்திற்கு 10.30மணிக்கு ஜெட் விமான கவுண்டருக்கு வந்துவிட்டோம் ஆனால் கவுண்டர் குளோஸ் செய்துவிட்டோம் என்று கூறிவிட்டார்கள்.இது எங்களுடைய அலட்சியம் தான் காரணம் இம்முறை மழை இல்லை.

சரியானபடி நேரத்தை மதித்திருந்தால் நமது பயணமும் சரியானபடி நடந்திருக்கும் அலட்சியத்தினால் பயணமும் ரத்தாகிவிட்டது மன உலைச்சல் இரத்த அழுத்தம் தேவையில்லாத குழப்பம் இத்தோடு முடிந்துவிட்டதா

நம்மை அழைப்பதற்கு சென்னை விமான நிலையத்தில் உறவினர்கள் காத்துக்கிடக்க அவர்களுடைய நேரம் அவர்கள் வாடகைக்கு அமர்த்திய வாகனத்தின் வாடகை இப்படி சூழலையே இந்த நேரம் தவறுவதினால் மாற்றிவிடுகிறது.

இது பயணத்திற்கு மட்டுமல்ல எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பொறுந்தும்.
கொடுத்த வாக்கையும் கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்தையும் சரியாக பின் பற்றவேண்டும்.

கண்டிப்பாக இந்த கட்டுரை எனக்கு நானே எழுதிக்கொண்டது.

Sunday, January 23, 2011

அரபு தமிழன்

எனக்கு 30 அமீரகத்திற்கு 39- தொடர்- 12

இது ஒரு பாலை அனுபவம்

பழைய நினைவுகளை நினைத்துப் பார்த்து சம்பவங்களை கோர்வைப்படுத்துவதற்கு சற்றுசிரமம்தான். சிலதருணங்களில் நண்பர்களுடன் உரையாடும் போது பழைய நிகழ்வுகளை பகிர்ந்துக் கொள்ளும் போதும் சில சம்பவங்கள் நம் நினைவுக்குள் வந்துவிடும்.அப்படித்தான் சென்ற வெள்ளிக்கிழமை ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு நண்பர்களுடன் திரும்பும்வேளை இந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது அவர்களுடன் உரையாடினேன் இப்போது உங்களுடனும்...

ஹவுஸ்பாய்யாக இருந்த சமயத்தில் எனது அரபு முதலாழிக்கு பேரக்குழந்தை பிறந்திருந்தான்.அவன் பெயர் காலீது பின் ஜமான் ஒன்னரை மாதக்குழந்தையை கையில் அதன் தாய் வைத்திருந்தாள். அந்த குழந்தை கழுத்தை வளைத்து என்னைப் பார்த்தது சிரித்தது.இது எங்களுக்குள் நடந்த முதல் சந்திப்பு.

அடுத்த சில தினங்களில் அதே பார்வை அதே சிரிப்பு எனக்கு அவனை தூக்க வேண்டும் போல இருந்தது அரபியிடம் கேட்டதும் எனது கையில் அந்தக்குழந்தையைத் தந்தார்கள். எப்படி தூக்குவது என்றே தெரியாமல் திணறினேன்.

உடனே அந்த குழந்தையை ஒருடவலில் வைத்து சுற்றி மிக எளிதாக ஒரு பொம்மையை தருவதைப்போல என்கையில் தந்தார்கள். தூக்கி கையில் வைத்திருந்த என்னையே உற்றுப் பார்த்தான். இந்த பார்வை அவன் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது போலும்...

தினம் என்னை காண்பதில் அவனுக்கு பெரும் மகிழ்ச்சி. நாட்கள் செல்ல செல்ல அவன் தேடல் அவன் பொற்றோர்களை விட என்னையே சுற்றி இருந்தது. தன் குழந்தையை யாராவது பார்த்துக் கொண்டால் போதும் என்ற மனோநிலையில் இருந்த அந்த அரபுதாய்க்கு நான் ஹவுஸ்பாய் மட்டுமல்ல இந்த குழந்தையை பாராமரிக்கும் செலித்தாய்யை போல பராமரித்தேன்.தாய்பால் கிடைக்காத அவனுக்கு புட்டி பால் நான் கொடுத்தால் மட்டும் குடிக்கும் பழக்கத்திற்கு உட்பட்டான்.

நான் புட்டிப்பாலை மட்டும் கொடுத்து வளர்க்க வில்லை அத்துடன் தமிழ்பாலையும் ஊட்டினேன். அ..ஆ வில் தொடங்கி 1...2.. என்று எண்களையும் உணவு பண்டங்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தேன் எளிதில் கற்றுக் கொண்டான்.

அவன் தகப்பனாருக்கு ரொம்ப வருத்தம் என் குழந்தையை ஒரு இந்தியனாக மாற்றுகிறாய் என்று கூறி என்னிடமிருந்து அவனை பிரித்தார்கள். அரபுகாரர்களின் குழந்தைகளின் அட்டுளியம் அடாவடித்தனம் எப்படி இருக்கும் என்பதை அரபு நாடுகளில் பணிபுரிபவர்களுக்குத் தெரியும். அப்படித்தான் அடாவடித்தனம் செய்து மீண்டும் என்னிடம் வந்தான் இதனால் எனக்கு சிரமங்கள் எழுந்தது.

ஹவுஸ்பாய்கள் மாலையில் இரண்டு மணி நேரம்தான் வெளியில் சென்றுவர முடியும் அந்த இரண்டு மணி நேரத்தையும் அவனுடன்தான் கழிக்கவேண்டும் என்ற அவனுடைய அன்பு என்னை அவனிடமே பிணைய வைத்தது. சில தருணங்களில் அவனையும் அழைத்துக் கொண்டு மாலை நேரத்தில் நண்பர்களை சந்திக்க சென்று வருவேன்.

என் நண்பர்கள் அவனிடம் தமிழ்பேசி அழகு பார்ப்பார்கள். ஒருமுறை நண்பர்களிடம் அவன் முன் என்னை அடிப்பது போல் நடிக்கச் சொன்னேன். அவர்களும் அப்படியே செய்ய அவன் அழுதுக் கொண்டு கற்களை பொறுக்கி நண்பர்களை அடிக்க தொடங்கினான். அப்படியே அவனை வாரி அணைத்து முத்தமிட்டேன்.என்மேல் இத்தனை அன்பா! அவன்தாயிடம் தந்தையிடம் கிடைக்காத ஏதோ ஒன்று என்னிடம் கிடைக்கிறது.

விடுமுறையில் தாயகம் சென்று இரண்டுமாதங்கள் கழித்து வந்த என்னைக் கட்டிக்கொண்டு அழுதான்.அந்த இரண்டுமாதத்தில் என்னை பிரிந்த அவனுக்கு ரொம்பவும் கஸ்டமாக இருந்திருக்கிறது என்னைப்போல். அதற்காக அந்த பெற்றோர்கள் ரொம்பவும் கஸ்டப்பட்டதாக கூறினார்கள்.

இந்த இரண்டு மாதக்காலத்தில் அவனுக்கு நிகழ்ந்த அத்தனை விசயங்களையும் என்னிடம் பகிர்ந்துக் கொண்டான் அவனுக்கு பல் விழுந்ததிலிருந்து பல் முளைத்தது வரையில் கூறினான்.

இந்த இரண்டு மாதத்தில் அவனுக்கு நண்பர்கள் கிடைத்திருந்தார்கள் என்னை அதிகம் தொந்தரவு செய்வதில்லை. தமிழ்கூட பல வார்த்தைகளை மறந்திருந்தான்.எப்படியாவது இவனுக்கு முழுமையாக தமிழைக் கற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஆனால் அது நிறைவேறவில்லை. குடும்பப் பிரச்சனையில் அந்த குழந்தை தனிக் குடித்தினத்ததிற்கு வேறு இடத்திற்கு சென்றுவிட்டான்.

என்றாவது அவன் இங்கு வரும்போது சில நேரங்களில் நான் ஓய்வில் சென்றிருப்பேன்.நான் இருக்கும்போது வந்தால் அரபியில்தான் என்னிடம் உரையாடுவான்.நான் தமிழை ஞாபகம் படித்தினால் அவன் சிரித்துக் கொண்டே லா...லா...என்று அரபியில் இல்லை தமிழை பேசமாட்டேன் என்று அவன் கூறும்போது எனக்கு மன வருத்தத்தை கொடுத்தது.

சிலவருடங்களுக்கு பின் அந்த ஹவுஸ்பாய் வேலையிலிருந்து விடுதலை பெற்றாலும் அந்த அரபு குழந்தையின் அன்பு என் நெஞ்சத்தில் சிறைப்பட்டுதானிருக்கிறது.

என்னதான் இருந்தாலும் அன்னியநாட்டு குழந்தையிடம் தமிழை கற்றுக் கொடுத்திட ஆர்வம் கொண்டு அதில் வெற்றி தோல்வி ஏற்பட்டாலும் இன்று நம் தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க அன்னிய நாட்டுக்காரன் தேவைப்படும் சூழல் உருவாகுவதைக் கண்டு வேதனையாகத்தானே இருக்கிறது.

Monday, January 17, 2011

2010 பங்கும் 2011 சந்தையும்


சென்ற 2010 ஜனவரியில் டிமேட் கணக்கை திறந்து மிக ஆர்வத்துடன் பங்குசந்தையினுள் நுழைந்தேன். இந்த ஒரு ஆண்டின் எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளவேண்டும் என்ற ஆவலில் உங்களுடன் இதோ.!

பங்கு சந்தையைப் பற்றி பலரைப்போல எனக்கும் மித்த ஆர்வம் இருந்தது அதைப் பற்றி தெரிந்துக் கொள்ள சோமவள்ளியப்பனின் நூல்கள் வழிகாட்டியாக எனக்கு உதவியது.

டிமேட் கணக்கை திறந்ததும் சென்ற ஜனவரியில் முதன் முதலில் மெட்ராஸ் சிமிண்ட் வாங்கினேன். அலுவலக ஒய்வு நேரத்தில் சந்தைநிலவரத்தை அவ்வபோது பார்த்துக் கொள்வேன். அதுமட்டுமின்றி காலை நேர தொலைக்காட்சியில் வணிகச் செய்திகளை தினம் பார்ப்பதும், அதிலிருந்து நோட்ஸ் எடுத்துக் கொள்வதும் இந்த ஒரு ஆண்டு கால அனுபவத்தில் முக்கியமானது.

வணிகச்செய்தியில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்குசந்தை நிலவரங்களை ஓரளவு தெரிந்துக் கொள்ளமுடிந்தது. பங்கு பரிந்துரைகளும் அச்சமயத்தில் நடைபெறும், தற்போது வணிக விகடன் வார இதழாக வந்ததினால் வசதியாக இருக்கிறது. பல கம்பெனிகளை அனலைஸ் செய்து ரிப்போர்ட் தருகிறார்கள். அவர்களின் பரிந்துரை பங்குகள் என்னிடம் 75 சதவிகிதம் லாபத்தை தந்திருக்கிறது.

இத்தனை வழிகாட்டலையும் பெற்று எனது யோசனையின் பேரில் பங்குகளை வாங்குவதும் வாங்கிய பங்குகள் பதினைந்து முதல் இருபது சதவிகிதம் லாபத்தில் செல்லும்போது அதை விற்பதுமாக இப்படி ஒரு ஆண்டு விளையாடிப்பார்த்தேன்.

இந்த விளையாட்டில் எனக்கு லாபம் கிடைத்தது. ஆனால் நிபுணர்களின் ஆய்வில் அவர்களின் ரிப்போர்ட் எப்படி இருந்தது என்றால் சென்ற ஜனவரியில் வாங்கிய பங்குகளை டிசம்பர் வரை வைத்திருந்தவர்களுக்கு முப்பது சதவீதம் லாபம் கிடைத்திருக்கிறது என்று கூறினார்கள்.

எனது போர்ட் போலியோவில் இதை ஆய்வு செய்து பார்த்தேன். ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையில் 22 கம்பெனிகளை விற்றிருக்கிறேன் வாங்கியும் இருக்கிறேன். நிபுணர்களின் ஆய்வின்படி நான் விற்காமல் அப்படியே ஓராண்டு வைத்திருந்தால் எனக்கு 32 சதவீதம் லாபம் கிடைத்திருக்கும் ஆனால் அவ்வபோது விலை ஏற்றத்தில் நான் விற்றதால் எனக்கு 15 சதவீதம் மட்டுமே லாபம் கிடைத்தது.

பங்கு சந்தையை பொருத்தமட்டில் பொறுமை, நிதானம் மிகவும் அவசியம் என்பதை அனுபவரீதியாக தெரிந்துக் கொண்டேன். அவசரப்பட்டால் நாம் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை.

இந்த ஆண்டு 2011 ல் பங்கு சந்தை சரிந்துக் கொண்டே வருகிறது (FI) அன்னியர்களின் முதலீடுகள் குறைந்ததினால், டாலரின் மதிப்பு அதிகரித்ததினால், இந்திய தொழில்துறை தகவல்கள் (ஐ.ஐ.பி)சரியில்லாததால் சந்தை சரிந்தது, அதனால் பெரும்பாலான வங்கிப் பங்குகள் சரிந்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த சரிவு இன்னும் சில மாதங்களுக்கு தொடரலாம் என கணிக்கிறார்கள். அன்னிய முதலீடுகள் சில மாதங்கள் கழித்து இந்திய சந்தைக்குள் நுழையும் என்பது பல நிபுணர்களின் கனிப்பு.

இந்த சமயத்தில் நாம் என்ன செய்வது என்றால் பலருக்கும் தெரிந்த ஒரே லாஜிக், விலை இறங்கும்போது வாங்குவது விலை ஏறும்போது விற்பது இதை சரியாக செய்தால் லாபம் பார்க்கலாம்.

நல்ல கம்பெனிகளை தேர்வு செய்து இந்த விலை இறக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம் அதேபோல் ஏற்கனவே வாங்கிய பங்குகள் விலை இறங்கியிருந்தால் இன்னும் கொஞ்சம் வாங்கி விலை ஆவ்ரேஜ் செய்யலாம் என்பது நிபுணர்களின் ஆலோசனை ஆர்வமுள்ளவர்கள் நிதானமாக பங்குசந்தையில் இறங்கி விளையாடலாம்.

கையை சுடாதளவிற்கு கவனமாக இருக்கவேண்டும் இது ஒரு நல்ல வியாபாரம்.

Wednesday, January 12, 2011

அத்திக்கடை நண்பர்கள்

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 தொடர்- 11

இது ஒரு பாலை அனுபவம்

நண்பன் சிகாபுதீனின் வகுப்புத்தோழன் அஜீஸ்ரஹ்மான். இவன் சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அடிக்கடி சிகாபுதீனுக்கு கடிதம் எழுதுவான் இவர்களுக்கிடையில் என்னையும் கடிதத்தில் அறிமுகம் செய்து எழுதினான்.

எங்களுக்குள் நட்பு வளர்ந்தது ஒருவரை யொருவர் நாங்கள் அறிந்துக் கொள்ள புகைப்படங்களை பறிமாறிக்கொண்டோம் இதில் என்ன விசேஷம் என்றால் அஜீஸ்ரஹ்மான் தன்னுடைய புகைப்படத்தை நான்கு பாதியாக கட் செய்து ஒவ்வொரு பகுதியாக எனக்கு கடிதத்தில் அனுப்பிவைத்தான் அவன் தோற்றத்தை காண ஆவர்வமாக இருக்கும். முழுமையாக நான் காண்பதற்கு சுமார் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.

ஒருவிடுமுறையில் சென்னைக்கு சென்று அவன் தங்கிருந்த வாடகை அறையில் இரு தினங்கள் அவன் கல்லூரி நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு தங்கியிருந்து சினிமாவிற்கெல்லாம் சென்று வந்தோம். அந்த நாட்கள் நான் கல்லூரியில் படித்ததைப்போன்ற உணர்வைக் கொடுத்தது. கடிதத்தில் மட்டுமே உரையாடிய நாங்கள் நேரடியாக சந்தித்த போது நீண்ட நாட்கள் பழகிய நண்பனைப் போன்றே பழகினோம்.
அந்த நட்பு இன்றும் தொடர்கிறது.

இந்த கட்டுரையையும் கூட அவன் படித்துவிட்டு எனக்கு தொலைபேசி செய்வான். ஆம் இந்த தொடரை தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறான்.
அந்த நாட்களில் எனக்கு அதிகமான நண்பர்களாக பழகியவர்கள் அத்திக்கடை இளைஞர்கள். சிகாபுதீன், அஜீஸ்ரஹ்மான், நைஸ்காதர், நஜ்முதீன் ,சிராஜ்தீன் இவர்களைத் தொடர்ந்து பாவா வீட்டு ஹாஜா.

இவர்களில் பாவா வீட்டு ஹாஜாவைத் தவிர மற்றவர்கள் துபாயில் தான் இருக்கிறார்கள். சிகாபுதீனும் தங்க மார்கெட்டில் இருப்பதால் அவ்வபோது சந்தித்துக் கொள்வதுண்டு ஆனால் அதிகமாக பேசுவதுகிடையாது காரணம் வியாபார கடையில் கதைகள் பேசமுடியாதே.
அடுத்து அஜீஸ்ரஹ்மான் இவனும் ஜீவல்லரியில் ஆனால் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கடை என்பதால் அதிகமான வாடிக்கையாளர் தொந்தரவு இருக்காது என்றாலும் அவ்வபோது தொலைபேசியில் உரையாடுவோம்.

மலேசியாவில் முதலாழியாக வாழ்ந்தவன் பொருளாதார சுனாமியினால் மீண்டும் துபாயில் பணிப்புரிய வேண்டிய காலசூழ்நிலை என்றாலும் மனதளவில் அவன் எதையும் இலக்கவில்லை. நிறைய விசயங்களை தெரிந்திருக்கிறான் அந்த அறிவே அவனுக்கு ஊன்றுகோலாக இருக்கிறது. பொருள் அவனை இழந்தாலும் அவன் தன்னை இழக்கவில்லை. இழந்ததை விரைவில் மீட்டுவிடுவான்.

எனது தாய்மாமன் மகன் ஆக்கூர் ஜெகபர்அலி இவனும் நானும் உயிர் நண்பர்களைப் போல சிறுபிள்ளையிலிருந்து பழகிவந்தோம். நான் துபாய் வந்து சில வருடங்களில் ஹவுஸ்பாயாக இவனும் வந்தான். வெள்ளிவிடுமுறையில் நாங்கள் சந்தித்துக் கொள்வோம் அவனுடைய பணியில் பிரச்சனை வரவே அவனை சிகாபுதீன் தனது அரபியிடம் பேசி வேலைவாங்கி கொடுத்தான். நானும் அவர்களுடன் இணைந்துக் கொண்டதால் எங்களின் நாட்கள் இனிமையாக சென்றது.

ஒருநாள் இரவு செகண்ட்ஷோ சினிமா பார்த்துவிட்டு மூன்றுபேறும் சைக்கிளில் பின் படல்போட்டு நம் ஊரில் வருவதைப்போல மிதித்து வந்தோம். வரும் வழியில் போலீஸ் வாகனம் வரவே எங்களைக் கண்ட போலீஸ் ஆச்சரியப்பட்டார்கள். மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் என்று கூறினார்கள்.

மூன்றுபேர் சைக்கிளில் மிதித்து செல்வதை அப்போதுதான் அந்த போலீஸ்காரர்கள் கண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். எங்களை உற்சாகப்படுத்தி அனுப்பிவைத்தார்கள்.
ஆனால் ஜெகபர்அலிக்கு சிங்கப்பூரில் செட்டில் ஆகனும் என்ற ஆவல் அவனிடம் இருந்துக் கொண்டே இருந்தது. அவனுடைய அந்தக் கனவும் 1986 க்கு பிறகு நனவாகி இன்று சிங்கை பிரஜையாக மனைவி மக்களோடு வாழ்ந்துவருகிறான்.

இந்த நட்புவட்டத்திற்கு மத்தியில் எனது தேடல் அவர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டே வந்தது அந்த நேரங்களில் எனது சிறுகதை தொகுப்பான “விற்பனைக்கு வந்த கற்பனைக் கதைகள்” சிறுகதை தொகுப்பு வெளியிட்டிருந்தேன்.

எனது எழுத்தும் இலக்கிய ஆர்வமும் புதிய நண்பர்களை எனக்கு அறிமுகத்தைத் தந்தது அந்த அறிமுகம் எனக்கு ஞானப்பாட்டையை காண்பித்தது.
என்னை ஒருகொள்கையில் ஈடுபத்திக் கொண்டிருந்த போது அதை மறுபரிசீலனை செய்யுமளவு ஆன்மத்தேடல் என்னை மாற்றியது.
அந்த மாற்றத்தை நீங்களும் தெரிந்துக் கொள்ளத்தான் வேண்டும்…தொடர்வோம்.