உங்கள் வருகைக்கு நன்றி...

Wednesday, December 30, 2009

சென்னையும் என்னையும் சுற்றிப்பார்க்கச் சென்றேன்.!

சென்னையை பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏழாம் வகுப்பு படிக்கும் போது எனக்குள் அதிகம் இருந்தது. ஆனால் எப்படி போய் பார்ப்பது யார் அழைத்துச் செல்வார்கள் என்றுதான் புரியவில்லை.

படிக்கும் காலங்களில் அதிகமாக ஊர் சுற்றமுடியாது. பள்ளியை காரணம் காண்பித்து பயணங்கள் நிராகரிக்கப்படும போது மனசு கஸ்டப்படும்.

குழந்தைகளுடன் எங்கயாவது வெளியூருக்கு பயணம் புறப்பட்டால் அந்த குழந்தைகளுக்கு குதுகுலமாக இருக்கும். குழந்தைகள் பயணத்தை பெரிதும் விரும்புவார்கள்.

பயணங்கள் முடிவதில்லை ஒவ்வொரு மனிதரும் பயணித்து கொண்டுதானிருக்கிறோம். இடம் விட்டு இடம் பெயர்வதுமட்டுமல்ல பயணம் .புறம் விட்டு அகத்தை சிந்திப்பதும் பயணம் தான் இது ஆத்ம பயணம்.

புறப் பயணங்களில் தேடிச் செல்வது எப்படி கிடைக்கிறதோ அது போல
அகப் பயணத்தில் தேடப்படுவதும் கிடைக்கிறது. எதையும் தேடினால்தான் கிடைக்கும் என்பது உயிர்களின் நியதி.

இப்போ நான் சொல்ல வருகிற விசயம் அகப்பயணமல்ல.புறப் பயணம் !
இது பல ஆண்டுகளுக்கு முன் சின்ன வயதில் நான் செய்த பயணம்.எல்லா நிகழ்வுகளிலும் ஆன்மீகம் கலந்துதான் இருக்கிறது. ஆன்மா இல்லாத நிகழ்வு பயணம் எங்கும் நடப்பதில்லை.

சென்னைத் தேடல் என் மனதுள் ஆழமாக பதிந்து இருந்தது. ஒருநாள் பக்ரீத் பண்டிகைக்கும் சில தினங்களுக்கு முன் எனது பெரியம்மா வீட்டில் 500 ரூபாய் பணமும் கொஞ்சம் கறியும் கொடுத்து வர அம்மா கூறினார். பெரியம்மா வீடு 40 கிமீ.

நானும் கொடுப்பதற்கு புறப்பட்டு சென்று விட்டேன். செல்லும்போதே மனதில் சென்னையின் தேடல் வழுவானது. பெரியம்மாவிற்கு கொடுக்கவேண்டிய பணம் கையில் இருந்ததினால் அந்தப் பணத்தில் சென்னையை பார்த்து வந்துவிடலாம் என்ற சிந்தனை உசுப்பேத்தியது. கையில் கறி இருக்கிறதே அதை என்னச் செய்வது என சிந்தனையிடம் கேட்டபோது அதை பெரியம்மாவிடம் கொடுத்துவிட்டு கிளம்பிடலாம் என்று மனசு சொல்ல அப்படியே நடந்தது.

எனது தகப்பனார் சிங்கப்பூரில் இருந்ததினால் அவர் தாயகம் வரும்போது அழைப்பதற்கு சென்னைக்கு எனது உறவினர்கள் தான் செல்வார்கள் நானும் செல்கிறேன் என்றால் அம்மா விட மாட்டார்கள். பள்ளிக்கூடம் இருக்கிறது என்ற காரணத்தைக் காட்டுவார்கள். அந்த தாக்கமே என்னை தனியாக செல்லவைத்திருக்கிறது.

மயிலாடுதுறையிலிருந்து இரவு 12 மணி இரயிலில் சென்னைக்கு புறப்பட்டேன் . வீட்டில் அம்மா தேடுவார்கள் என்ற எண்ணமோ அதனால் அவர்களுக்கு ஏற்படக் கூடிய சிரமம் எவ்வளவு மன உளச்சல் எவ்வளவு என்ற கணக்கெல்லாம் எனக்கு தெரியவில்லை என்பதை விட சிந்தனை செய்யவில்லை என்பதுதான் சரி.

இரயிலில் செல்லும்போது ஒரு தம்பதி எனது இருக்கைக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்தனர். என்னுடன் பேசிக் கொண்டு வந்தார்கள். எதற்காக சென்னை செல்கிறாய் என்று அவர்கள் கேட்ட போது எனது தந்தை சிங்கப்பூரிலிருந்து வருகிறார் அவரை அழைக்கப்போகிறேன் என்று பொய்யை கூறினேன்.
எக்மோர் ஸ்டேசன்தான் கடைசி என்பது தெரியாமல் எக்மோர் வந்தும் இரயிலில் அமர்ந்திருந்தேன். எனது எதிரில் இருந்த தம்பதியினர் இறங்கலையா என்று கேட்க நான் சென்னையில தான் இறங்கனும் என்று கூற அப்படி ஒரு ஸ்டேசன் இருக்குமோ என்ற சந்தேகத்திலேயே அவர்கள் இறங்கினார்கள்.

சற்று நேரத்தில் போர்ட்டர் ஏன் தம்பி உட்காந்திருக்கீங்க லக்கேஜ் இருக்கா என்று கேட்க இல்லீங்க சென்னையில தான் இறங்கனும்னு சொன்னதும் தம்பி நீ புச்சா ன்னு கேட்க நான் பேந்த பேந்த விழிச்சு ஆமான்னு சொன்னதும் இதான் மெட்ராசுன்னு சொல்லி இறக்கி விட்டாங்க.

எக்மோரை சுற்றிப் பார்த்து விட்டு நடந்தேன் . சென்னையின் நெரிசல் என்னை இரசிக்க வைத்தது. எங்கும் கூட்டம் யாரிடமும் எதையும் கேட்க பயம். ஏன்னை சென்னை வாசியாய் காண்பித்துக் கொள்ள கேப்பெல்லாம் வாங்கி தலையில் மாட்டிக் கொண்டேன். எங்கேச் செல்வது என்று புரியவில்லை நடந்தேன் நடந்துக் கொண்டே அண்ணாசமாதி வந்தேன். அதைப் பார்த்ததும் நாம் மெட்ராசுலதான் இருக்கிறோம் என்ற உணர்வு சந்தோசத்தைக் கொடுத்தது. இன்றும் தமிழகத்தில் எத்தனையோ மனிதர்கள் சென்னையை பார்க்காதவர்களாக பலர் தன்னையும் பார்க்காதவர்களாக வாழ்ந்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.


பர்மா பஜார் சென்று கேமரா வாங்கி மீண்டும் அண்ணா சமாதி வந்து போட்டோ எடுத்துக் கொண்டேன். செல்லும் வழியில் சட்டமன்றத்தைப் பார்த்தேன் அந்த ரோட்டில் அதிகம் வாகன நெரிசல் இல்லை. இரவு வந்தது அதனூடே தூக்கமும் வந்தது. எங்கு தூங்குவது என்று புரியவில்லை. கால் போன போக்கில் நடந்த போது ஹோட்டலில் தங்கலாம் என்ற யோசனையில் திருவல்லிக்கேணியில் ரூம் போட்டு தங்கி விட்டு காலையில் எழுந்து குளித்துவிட்டு எங்கு செல்வது என்று தெரியாமல் தஞ்சாவூர் போகலாம் என்று முடிவு செய்து பஸ்டாண்ட் வந்தேன்.

சென்னையில் பிட்பாக்கேட் அடிப்பார்கள் என்று சினிமாவில் பார்த்ததால் மணிபர்சை மட்டும் பனியனுக்குள் போட்டுக் கொண்டேன். தஞ்சை பஸ்சில் அமர்ந்ததும் கண்டெக்டர் டிக்கேட் கொடுக்க நான் பர்சை எடுக்க பனியனுக்குள் கையை விட்டால் பர்சைக் காணவில்லை. பதறிப்போனேன் கையில் வைத்திருந்த பெட்டியிலும் தேடிவிட்டேன். கிடைக்கவில்லை என்ன தம்பி பர்சை அடிச்சுட்டாங்களான்னு கண்டக்டர் கேட்டதும் எனக்கு அழுகை வந்துவிட்டது. பஸ் இன்னும் புறப்படவில்லை பலர் இருக்கையில் அமர்ந்துக் கொண்டிருந்தார்கள். அனைவருக்கும் செய்தி பரவவே எல்லோரும் எனக்காக இறக்கப்பட்டார்கள். ஐயோ பாவம் சின்ன பையனா இருக்குறான் இவனிடம் பர்சை அடிச்சுருக்காங்களேன்னு அனுதாபப்பட்டார்கள்.

இறங்கி தேடிப்பாரு ன்னு ஒருவர் அட்வைஸ் பண்ண முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் என்னைக் கூப்பிட்டார். உன் பேரென்ன எந்த ஊரு என்று விசாரித்தார். நான் அழுதுக் கொண்டே ஊர் பெயரைச் சொன்னதும் பர்சுல எவ்வளவு பணம் வைத்திருந்தாய் எனக்கேட்டார். 300 ரூபாய்கு அதிகம் என்றேன்.நீ தனியாவா வந்தே எனக்கேட்டார் ஆமாம் என்றதும் அவர்கையில் வைத்திருந்த பையிலிருந்து எனது பர்சை எடுத்துக் கொடுத்தார். பஸ்சுக்குள்ள தான் கிடந்தது என்றதும் எனக்கு சந்தோசமாக இருந்தது.

என் மீது அனுதாப்பட்ட எல்லோரும் அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்கள். பர்சை எடுத்துக் கொடுத்த நல்ல மனிதர் எல்லோராலும் பாராட்டுப் பெற்றார்.

தஞ்சையில் வந்து இறங்கி எங்கு செல்வது என்று தெரியாமல் கடைத்தெருக்களில் சுற்றி விட்டு இரவு மாநகராட்சி விடுதியில் தங்கி விட்டு காலையில் புறப்பட்டு கும்பகோணம் சென்றேன்.அங்கும் இப்படித்தான் ஒரே நாளில் மீண்டும் சென்னைக்கு கிளம்பினேன் இன்னொரு முறை பார்க்கவேண்டும் என்ற ஆவல் என்பதைவிட கையில் காசு இருந்தது. சரியான பைத்தியக்காரனா இருப்பான் போலிருக்கேன்னு நீங்க நினைக்கலாம்.

பைத்தியம்தான் குறிக்கோள் இல்லாத பயணம் செய்பவர்களும் வாழ்க்கையை வாழ்பவர்களும் பைத்தியம்தான்.

நாலு காசு சம்பாதிச்சா அதன் வலி என்னன்னு தெரியும் என்று சொல்வார்கள். அப்பா சம்பாதிச்ச காசுல பெத்தவங்களுக்கு வலியை மட்டும் கொடுத்திட்டு என்னை மாதிரி ஊர்சுற்றியவர்கள் இன்னும் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் நிறைய பேர்கள் இருந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.சரியான வழிக்காட்டல் இல்லாமையே இது போன்ற நிகழ்வுகள் நடந்தேறுகிறது.

ஒருவழியாக காசு கறைய கறைய சில தினங்களில் உறவினர் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அப்போது தான் தெரிந்தது நான் காணாமல் போய்விட்டதாக என்னைத் தேடி பல ஊர்களுக்கு அழைந்ததும் பெருநாளையும் கொண்டடாமல் துக்கம் அனுஷ்டித்ததும் எல்லாவற்றையும் உறவினர்கள் கூற அந்த நிமிடமே ஒரு ஆளை அனுப்பி நான் கிடைத்துவிட்டேன் என்ற செய்தியை எங்க வீட்டுக்கு சொல்லி அனுப்ப எனக்கு பயம் வந்தது.

உறவினர்களில் சிலர் என்னைப் பாராட்டினார்கள் இந்த வயசுல இவ்வளவு தைரியமா நீ மெட்ராஸ் வரைக்கும் தனியா போய் விட்டு வந்திருக்கிறே உனக்குள்ள துணிச்சல் யாருக்கும் வராதுப்பா என்றும் …
சிலர் நீ யெல்லாம் ஒரு புள்ள இதுவே என் புள்ளயா இருந்தால் வெட்டி காவுக் கொடுத்திருப்பேன் என்று சிலரும் சலித்தனர்.

எல்லோருடைய பேச்சையும் புதுப் பெண்ணைப்போல் தலைக்குனிந்து கேட்டுக் கொண்டு பதில் சொல்லாமல் நின்றிருந்தேன்.தவறு செய்தால் தலைக் குனிந்துதானே ஆகவேண்டும்.

சில தவறுகள் செய்யும் போது அது தவறாகத் தெரிவதில்லை செய்ததற்கு பிறகு தான் தெரியும். காரணம் அனுபவயின்மையும் அறிதலின்மையும்.

வாழ்க்கையும் கிட்டதட்ட என் கதைமாதிரிதான். வாழ்க்கை பயணத்தில் சம்பாதிப்பைதான் பலர் வாழ்க்கை என்கிறோம். அதற்காக வேண்டி எதையும் இழக்க தயாராக இருக்கிறோம்.

தேடித்தேடிப் பயணிக்கிறோம் பொருள்களை குவிக்கிறோம் ஆனால் தேடப்பட்டதில் நிறைவு கண்டோமா ?. கைத்தடியை குடையென்று ஏந்தினால் நனைந்து விடுவோம் அல்லது காய்ந்து விடுவோம். ஆனால் குடையை கைத்தடியாக பயன்படுத்தலாம். குடைன்னு நான் சொல்வது அகப் பயணம்.

புறப்பயணம் பொருளைக் கொடுக்கும் அகப்பயணம் அமைதியைக் கொடுக்கும்
எல்லோரும் பொருள்தேடுவது சந்தோசமாக வாழ்வதற்கு ஆனால் சந்தோசம் எதில் இருக்கிறது.?

15 comments:

கீழை ராஸா said...

சின்னப்பசங்க செலவில்லாமல் ஊர்சுத்துனா ஏண்டா ஊர் சுத்துறேன்னு திட்டுறாங்க, அதுவே பெரியவங்க, ஆயிரக்கணக்கா செலவழிச்சி ஊர் சுத்துனா சுற்றுலான்னு சொல்றாங்கன்னு ஒரு சின்னப்பையன் அப்பாவியா கேட்கிற மாதிரி ஒரு ஜோக் இருக்கு..ஆனா நீங்க சின்ன வயசுலேயே செலவழிச்சி ஊர் சுத்துன கிள்ளாடியா இருக்கீங்களே..:-)
அந்த அனுபவம் தான் இன்றைக்கு தங்களை உலகம் சுற்றும் வாலிபனாக்கி உள்ளது இல்லையா...வாழ்த்துக்கள்...

Anonymous said...

Super na..... ! I love the way u explained the unstability life....Gr8 and cheer up!

- Dheva. S

Anonymous said...

சகோதரர் கிளியனூர் இஸ்மத் அவர்களுக்கு
தங்களின் சென்னையும் என்னையும் சுற்றிப்பார்க்கச் சென்றேன்.!

கட்டுரை மிகவும் அருமை வெளிய+ர் பயணம் மட்டுமல்லாது அது உள்@ர் பயணம் ( அகப்பயணம்) கூட
ஆங்காங்கே கோர்த்திருந்த கருத்துக்கள் ரோஜாவாய் மணக்க இனிக்க ஏதோ ஒரு பொக்கேவை உங்களிடமிருந்த பெற்றது போலிருந்தது.

மிகவும் நெகழ்வித்த கட்டுரை. பாராட்டுக்கள் பல

With best regards

Kamal

ஸாதிகா said...

உங்களின் முதல் சென்னைப்பயணம் திகில் நிறைந்ததாக இருந்தது.ஒவ்வொரு பாராவையும் படிக்க படிக்க 'அப்புறம் அப்புறம்'என்று இருந்தது.கிட்டத்தட்ட பி டி சாமி கதைகள் படிப்பது போல். கடைசியில் அம்மாவிடம் வாங்கிய டோசை எழுதாமல் விட்டு விட்டீர்களே?

Anonymous said...

நண்பரே

இந்த பதிவு என்னை உலுக்கி விட்டது. பின்னூட்டம் எழுத அமர்ந்தால் எவ்வளவோ தோன்றுகிறது. முடிந்தவரை நான் உணர்ந்ததை சொல்லுகிறேன்.

1. தங்கள் நேர்மை : வாசகரின் கண்ணில் உடுருவி உண்மை சொல்கிறது. உள்ளதை உள்ளபடி சொல்ல தன்னம்பிக்கையும் துணிவும் வேண்டும். இது அந்தரங்கம் யாருக்கும் சொல்ல வேண்டாம் என எல்லோரும் விடுவதில் ஒரு சுயநலம் தெரிகிறது. தாங்கள் இப்படி உடைத்து சொல்வதின் நோக்கம்இ பொது நலம் அது எனக்கு புரிகிறது. மிகவும் உயர்ந்த தங்கள் பண்புக்கு என் தலை தாழ்த்திய வணக்கம்.

2. தேடல் : தன்னந்தனியாய் இலக்கு தீர்மானம் இல்லாமல் இப்படி செய்யஇ மிக சில பேர்களால் மட்டுமே முடியும். நானும் தீர்மானம் இல்லாத பயணத்தில் திளைத்து இருக்கிறேன். எனக்கு தெரிந்து ரஜினிகாந்த் பாலகுமாரன் எல்லாம் இன்றும் இதை செய்கிறார்கள்.

வெறும் நிகழ்வு மாத்திரம் அல்லாதுஇ உணர்வும் சொன்னது மிக அருமை. இன்னும் கொஞ்சம் சொல்லக்கூடாத என கூட தோன்றியது.

இதை இன்னும் விரிவாகஇ அத்தனை உணர்வுகளையும் உரக்கச் சொல்லி ஒரு தொடர் பதிவாய் செய்யக் கூட நான் பரிந்துரைப்பேன்.

வாழ்த்துக்கள்.

லாரன்ஸ்

குசும்பன் said...

ஹீரோ இது எத்தனை வயசில் நடந்தது, ஏன்னா இப்பவும் பார்க்க சின்னபையன் மாதிரிதான் இருக்கீங்க, அதனால் வயசை சொன்னால் நன்றாக இருக்கும்:)

அப்புறம் அப்ப சுத்த ஆரம்பிச்சது இன்னும் நிக்கவில்லை போல:))

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

அண்ணா! உங்களை மெட்ராஸ் போனதற்குப் பாராட்டுனவுங்க யாரு? நான் உங்க அம்மாவா இருந்திருந்தா அவங்களையும் உதைச்சு உங்களையும் வெயில்ல கட்டிப்போட்டிருப்பேன்.மன்னிக்கவும்.என் குழந்தைகள் ட்யுஷன் போய்விட்டு ஒரு மணி நேரம் தாமதமாக வந்தாலே உயிர் கருகிப் போகிறது.உங்கள் தந்தையும் அருகில் இல்லாத உங்கள் தாய் என்ன பாடுபட்டிருப்பார்கள்?பாவம்.
அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்.

Prathap Kumar S. said...

ஹஹஹ அப்பவே நீங்க ஒரு பயண விரும்பிதானா??? சரியாப்போச்சு... அப்ப எடுத்த போட்டாவையும் போட்டுருந்தீங்கன்னா நல்லாருந்திருக்கும்...

கிளியனூர் இஸ்மத் said...

//அந்த அனுபவம் தான் இன்றைக்கு தங்களை உலகம் சுற்றும் வாலிபனாக்கி உள்ளது இல்லையா...//

கீழைராஸா... உண்மைதான் நன்றி

நன்றி தேவா

கமால் சார்...உங்க பாராட்டுக்கு நன்றி

//கடைசியில் அம்மாவிடம் வாங்கிய டோசை எழுதாமல் விட்டு விட்டீர்களே?//

சகோதரி ஸாதிகா....அம்மா டோஸ்விடல....பிள்ளை கிடைத்ததே போதும்னு நினைச்சாங்க...உங்க கருத்துக்கு நன்றி.

//இதை இன்னும் விரிவாக, அத்தனை உணர்வுகளையும் உரக்கச் சொல்லி ஒரு தொடர் பதிவாய் செய்யக் கூட நான் பரிந்துரைப்பேன்.//

இதை இன்னும் விரிவா எழுதலாம் படிப்பவர்களுக்கு சலிப்பாக இருக்குமோ என்ற அச்சத்தில் அடக்கி வாசிச்சேன்.நன்றி லாரன்ஸ்.

//ஹீரோ இது எத்தனை வயசில் நடந்தது, ஏன்னா இப்பவும் பார்க்க சின்னபையன் மாதிரிதான் இருக்கீங்க, அதனால் வயசை சொன்னால் நன்றாக இருக்கும்:)//


குசும்பா உங்களுக்கு ஸ்பெஷல் பிரியாணி...ஏன்னா ஹீரோன்னு சொல்லிட்டீங்க....வயசு12 ல.நன்றி


// நான் உங்க அம்மாவா இருந்திருந்தா அவங்களையும் உதைச்சு உங்களையும் வெயில்ல கட்டிப்போட்டிருப்பேன்.மன்னிக்கவும்//

நல்லவேலை தப்பிச்சுட்டேன்....நன்றி சகோதரி கா.நா. சாந்தி லெஷ்மணன்

நாஞ்சில்....அந்த போட்டோக்கள் கைவசம் இல்லை....நன்றி

குடுகுடுப்பை said...

நீங்க சொல்ற இந்த அகப்பயணம் எனக்கு புரியமாட்டேங்குது. பதிவு படிக்க நல்லாருக்கு, அளவுக்கு மீறி நல்ல மனுசனா இருக்கீங்கன்னு மட்டும் புரியுது.

சிநேகிதன் அக்பர் said...

//எல்லோரும் பொருள்தேடுவது சந்தோசமாக வாழ்வதற்கு ஆனால் சந்தோசம் எதில் இருக்கிறது.?//

தேவையான கேள்வி. பதில் எங்கே.

பயணக்கட்டுரை மிகவும் அருமை.

துபாய் ராஜா said...

அருமையான சுயபரிசோதனை பகிர்வு.

உள்ளம் உறுத்தும் உண்மையை மறைக்காமல் பதிவிட்ட உங்க நேர்மை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணாச்சி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

படித்தேன்;
இரசித்தேன்.

கிளியனூர் இஸ்மத் said...

உங்கள் வருகைக்கு நன்றி நிஜாம்....

ப.கந்தசாமி said...

நல்ல அனுபவம். ஆனாலும் சொல்லாமல் போனது மிகவும் தப்பு.

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....