உங்கள் வருகைக்கு நன்றி...

Sunday, February 26, 2012

ஒரு பாட்டில் "அன்பு" ஆயிரம் ரூபாய்!

இன்று காலை பணிக்கு புறப்படுமுன் தொலைக்காட்சியில் மகளிர் அரங்கத்தில் ஒரு சிறுமி பேசிக்கொண்டிருந்தாள் வயது அநேகமாக பத்துக்குள்ளாக இருக்குமென நினைக்கிறேன் கல்வியே அறிவைத் தரும் என்ற தலைப்பில் ஆவேசமாக பேசினாள்.

பணிக்கு புறப்பட்ட நான் ஐந்து நிமிடம் அந்த சிறுமியின் பேச்சை கேட்டுவிட்டு புறப்பட்டேன். சிந்தனை அந்த சிறுமியின் பேச்சில் சுழன்றது.

கல்வி மட்டுமே மனித சமுதாயத்தை மேம்படுத்தும் கல்வி ஒன்றே மனிதனை உயர்வடையச் செய்யும் என்றெல்லாம் பலரும் பேசுகிறார்கள் அவர்களின் பேச்சு உண்மையானதுதான் ஆனால் கற்கும் கல்வி?

ஒரு மாணவனின் வாழ்க்கை முன்னேற்றம் என்பது அவன் படித்து முடித்து வேலைக்கு சென்று நன்கு சம்பாதித்து எல்லா வசதிகளுடனும் வாழும்போது அவனை உயர்ந்த நிலையில் இருக்கிறான் என்று சமுதாயம் சொல்கிறது.

கல்வியினால் சமுதாயம் முன்னேறுகிறது என்பது மச்சி வீடு மாடி வீடாகவும், மாடி வீடு பங்களாக்களாகவும் இப்படி வசதிகள் கல்வியினால் மாற்றம் காண்கிறதே தவிர, மனித நேயத்தில், மனிதர்களின் குண நலன்களில் இன்றைய கல்வி மாற்றத்தை அதிகம் தருகிறதா(?) என்பது கேள்வியாகும்.

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் கிராமம் வரையில் இணையதளம் வளர்ந்து விட்டது என்னவோ உண்மைதான் ஆனால் கிராமத்தில் வாழ்ந்த பெற்றோர்கள் இன்று முதியோர் இல்லங்களில் வாழ்ந்து வருவதும், முதியோர் இல்லங்கள் வளர்ந்து வருவதும் கல்வியின் முன்னேற்றமா?

பொருளாதாரத்தை முன்வைத்து கல்விச் சாலைகளும், கற்பிக்கப்படும் ஆசிரியர்களும், கற்கும் மாணவர்களும், பெற்றோர்களும் செல்கிறார்கள் அவர்களின் சமுதாயம் எப்படிபட்டாதக இருக்கிறது என்றால் மனிதனுக்கு மனிதன் உதவி செய்வது என்பது மறந்து உதவி செய்வதற்கு ஆதாயம்தேடும் வியாபார சமுதாயமாக மாறி வருகிறது என்பதை கண்கூடாகக் காணமுடிகிறது.

அண்ணன் தம்பிக்கு மத்தியில் பாசத்தைவிட தங்களிடமுள்ள பணம்தான் யார் அண்ணன் யார் தம்பி என்பதையே இன்றை சூழல் நிர்ணயிக்கிறது.

இந்திய அரசியல்வாதிகள் எல்லாம் படிக்காதவர்களா? கல்வி கற்றவர்கள்தானே? இன்று பொறுப்பில் இருக்கக்கூடியவர்களின் சுரண்டல்கள் எத்தனை கோடிகள் என்பதை ஊடகத்துறை வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறதே இவர்களிடம் பொருளாதார ஆசையை மட்டுமே வளர்த்திருப்பது எது?

இன்றைய காலத்தில் பெரிய தவறுகளை எல்லாம் கல்வி கற்கும் சில மாணவர்கள் சர்வ சாதரணமாக செய்கிறார்கள் அவர்களுக்கு கற்பிக்கும் அந்த ஆசிரியர்கள் எப்படிபட்டவர்களாக இருப்பார்கள்?

கல்விச் சாலைகளை மிக அழகாக வடிவமைத்து வருவதில் இன்று கவனமாக இருக்கும் இவர்கள் அதில் படிக்கும் மாணவர்களின் குண நலன்களை அழகுபடுத்த வேண்டிய பணி கல்விச் சாலைகளுக்கு இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.

அறிவைக் கற்கும் அனைத்துமே கல்விதான் ஆனால் இன்றைய சூழலில் பெரும்பாலோர் அறிவு பெறுவதற்காக கல்வி கற்கவில்லை பொருளீட்டுவதற்காக மட்டுமே கல்வி கற்கிறார்கள். இந்த பொருள் கல்வியானால் இந்த சமுதாயத்தில் வசதிகள் பெருகலாம் ஆனால் ஒரு இயந்திரதனமான வாழ்க்கைமுறை வளர்ந்து மனிதம் ஏழையாகவே இருக்கும்.

பொருளாதாரத்தை வைத்து எதையும் செய்யமுடியும் என்ற எண்ணம் வளர்ந்து வரும் சமுதாயத்தில் அன்பு என்பது மினரல் வாட்டரைபோல பாட்டல்களில் அடைத்து ஒரு பாட்டில் அன்பு ஆயிரம் ரூபாய் என சூப்பர் மார்கெட்டுகளில் விற்பனை செய்யக்கூடிய காலம் நம்மை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது.

மனிதனை மனிதனாக வாழவைக்கக்கூடிய தன்னை அறியும் ஞானக்கல்வியை இணைத்து கல்லூரிகளில் அனைவரும் கற்பதற்கு வழிவகை செய்யவேண்டும். அன்பும் நேயமும்மிக்க இந்த கல்வியினால் மட்டுமே இந்த சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றங்களை நிகழ்த்த முடியும்.

“சீன தேசம் சென்றாயினும் சீரான கல்வியைத்தேடு” என்று கூறும் அண்ணல் நபிகள் ஏட்டுக் கல்வியை கற்காதவர்கள். இறைவன் கற்பித்துக் கொடுத்த கல்வியைகற்று இந்த உலகத்திற்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் ஒரு கல்விச்சாலையாகவே இருக்கிறான் அவன் அதை அறிந்துக் கொண்டானேயானால் மனிதம் மலரும் அன்பு ஓங்கும்.தினம் அரைமணித் துளியேனும் நம்மை நாம் சிந்திக்க முற்பட்டால் நம்மிலே மாற்றங்கள் நிகழும் அந்த மாற்றம் இந்த சமுதாயத்தை மாற்றும்.!

Saturday, February 25, 2012

தந்தைக்கு ஒரு தாலாட்டு - 2

சிங்கை மருத்துவரிடம் இந்தியாவிற்கு என்தந்தையை அழைத்துச் செல்கிறேன் என்று அனுமதி கேட்டதும் அவர்களும் அனுமதி அளித்தனர்.

ஐம்பதாண்டு காலம் வாழ்ந்த சிங்கப்பூர் அந்த நாட்டின் குடிமகன் என் தந்தையை அந்த நாட்டைவிட்டு அழைத்துச் செல்லும்போது என்தந்தையின் மனம் பட்ட கஷ்டங்களை என்னால் காணமுடிந்தது.

உறவினர்கள் அனைவரும் விமான நிலையத்தில் திரண்டு நின்று தள்ளு வண்டியில் அமர்ந்திருந்த என்தந்தைக்கு வழியனுப்பு விழாவைப் போல வாழ்த்துச் சொல்லி அனுப்பிய அந்த கணம் இனி நான் சிங்கப்பூர் வரவே மாட்டேனோ(?) என்ற கேள்விப் பார்வையோடு அனைவரையும் பார்த்து கண்ணீரோடு விடைபெற்ற அந்த தருணங்கள் வரையில் இவர் மறுஉலக வாழ்க்கைக்கு செல்ல விடைபெறுகிறார் என்ற இரகசியம் எங்கள் யாருக்குமே தெரியாது.

சென்னை விமான நிலையத்தில் எங்கள் குடும்பம் தந்தையின் வருகைக்காக காத்திருக்க தள்ளு வண்டியில் தள்ளிக் கொண்டு வந்ததைப் பார்த்த என்தாயார் மற்றும் சகோதர சகோதரிகள் கதறி அழுதனர்.

சர்கரை வியாதிக்கு நல்ல முறையில் சிகிச்சை செய்யக்கூடியவர் நாகப்பட்டினம் அன்சாரி டாக்டர் என்பதை கேள்விப்பட்டிருந்ததால் சென்னையிலிருந்து நாகைக்கு விரைந்தோம்… டாக்டர் பார்த்துவிட்டு புண்ணை குணமாக்கி விடலாம் என்று ஆறுதலான வார்த்தைகளை உதிர்த்தார். இரண்டு தினங்களில் தைரியத்துடன் நான் பணிக்கு துபாய் திரும்பிவிட்டேன்.

சரியாக மூன்று மாதத்தில் பெருவிரலிலும் கால் பாதத்திலும் ஏற்பட்ட புண்ணை குணமாக்கி என் தந்தையை நடமாடவிட்ட பெருமை டாக்டர் அன்சாரியை சாரும். இரண்டாண்டுகள் இறைவணக்கத்திலேயே அதிகமாக பொழுதை கழித்தார் அவ்வபோது சர்க்கரை வியாதியின் தாக்குதலும் இருந்துக் கொண்டு இருந்தது.

2004 லில் விடுமுறையில் தாயகம் வந்தபோது சில தினங்களில் என் தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். மாதம் ஒருமுறை உடல் பரிசோதனை செய்வதற்கு செல்லும் தஞ்சாவூர் ரோகினி மருத்துவமனைக்கு என்தந்தையை அழைத்துச்செல்ல தயாரானோம். அந்த தருணத்தில் என் தந்தையின் உடன்பிறந்த சகோதரி வந்திருந்தார் என் தந்தைக்கு சட்டை அணிவித்து பொத்தான் மாட்டிவிட்டு அண்ணே நல்லபடி திரும்ப வருவேண்ணே என்ற வார்த்தையை கூறியபோது அந்த வார்த்தை என்மனத்தில் ஏதோ ஒரு நெருடலை கொடுத்தது.

ரோகினி மருத்துவமனையில் எங்கள் உறவினர் ஒருவரை சேர்த்து இருந்தார்கள். அவர்களும் என் தந்தையைக் கண்டு நலம் விசாரித்துவிட்டு சிங்கப்பூரின் பழைய கதைகளை பேசி கலகலப்பாக இருந்தார்.
மூன்று தினங்களாக வாடிய முகத்துடன் இருந்த என் தந்தை அவரின் பழைய நிகழ்வுகள் நினைவுகள் அவர் மனதை உற்சாகப்படுத்தியது.

இரவு அங்கு தங்கியிருக்கும் சூழல் ஏற்படவே என்னை வீட்டு போகும்படி என் தந்தைக் கூற, வேண்டாம் நான் இங்கு இருக்கிறேன் தம்பி வீட்டுக்கு போகட்டும் என்று கூறி தம்பியை அனுப்பி விட்டேன்.

பின்னிரவில் மூச்சுத்தினரல் ஏற்பட்டது உறங்கிக் கொண்டிருந்த என்னை என்தாயார் எழுப்ப நான் அவசரமாக மருத்துவரை கூப்பிட்டேன் வந்து பார்த்துவிட்டு ஆக்ஸிஜன் கவரை உபயோகிக்க கொடுத்துவிட்டு சென்றார்.

சற்று நேரத்தில் மூச்சுத்திணறல் சரியானது கட்டிலில் அமர்ந்திருந்த என் தந்தை கீழே அமரவேண்டும் எனக்கேட்க கீழே அமர்த்தினேன். மீண்டும் கட்டிலில் அமர வேண்டும் எனச் சொல்ல தந்தையைத் தூக்கி கட்டிலில் அமர வைப்பதற்கு சிரமப்பட்டேன்.

காலை ஆறு மணிக்கு என் தந்தையை பரிசோதிக்க டாக்டர் அறைக்குள் வரவே நான் பக்கத்து அறையில் உள்ள உறவினருக்காக மருத்துவமனையின் கீழ்தளத்தில் உள்ள உணவகத்தில் பால் வாங்க சென்று சில வினாடிகளில் என் மனைவி பதற்றத்துடன் என்னை அழைக்க ஓடிப்போய் என் தந்தையை கண்டபோது கட்டிலில் உறக்க நிலையில் கிடக்க டாக்டர் என் தந்தையின் நெஞ்சை அழுத்தி அழுத்தி பம்ப் செய்துக் கொண்டிருந்தார்.

என்ன நடக்கிறது என்று என்னால் யூகிப்பதற்குள் என்தாயாரும் என் மனைவியும் அழுதுக் கொண்டிருக்க டாக்டரை நகரச் சொல்லி என் தந்தையின் நெஞ்சத்தை என் கைகளால் இறைவனின் பெயரைச் சொல்லி அழுத்தினேன். என் தந்தையின் கண்கள் மூடியேயிருந்தன புரிந்துவிட்டது பால் வாங்க சென்ற சில வினாடிகளில் அவசர அவசரமாக முன்கர் நக்கீர் வந்துபோய்விட்டார்..
“தாருல் பனாவைவிட்டு தாருல்பகாவை என் தந்தை அடைந்துவிட்டார்கள்.

வாழ்க்கையின் பெரும்பகுதி குடும்பத்திற்காகவே வாழ்ந்தவர்களில் என் தந்தையும் ஒருவர். தன் சுகத்தைவிட குழந்தைகளின் நலனையே தனது வாழ்க்கையாக்கி வாழ்ந்தவர்.
என் தந்தையின் தியாகங்களை முழுமையாக இங்கு விவரிக்கவில்லை என்றாலும் நான் உங்களோடு பகிர்ந்துக் கொண்டதில் விளங்கி இருப்பீர்கள் இவ்வளவு தூரம் என் சொந்தக் கதையை வாசித்த உங்களுக்கு என்றும் நன்றியுடன்…

Friday, February 24, 2012

தந்தைக்கு ஒரு தாலாட்டு

ஒரு நாட்டின் தலைவர் மரணமடைந்தால் நாடே துக்கத்தை அனுஷ்டிக்கும். ஒரு வீட்டின் தலைவன் இறந்தால் அந்த குடும்பமும் அதன் உறவுகளும் துக்கத்தை அனுபவிக்கும். நம் வாழ்க்ககையில் நம் குடும்பத்தில் நம் உறவினர்களில் யாரோ ஒருவரின் மரணத்தை நாம் சந்தித்திருப்போம் அதன் தாக்கம் நம் மனதை பாதித்திருக்கும் அப்படித்தான் என் வாழ்க்கையிலும் என் தந்தையைப் பற்றிய இடுக்கைதான் இது.

2004 ஜூன் எனது விடுமுறை மாதம் ஆண்டு தோறும் இந்த மாதத்தில் தான் துபாயிலிருந்து தாயகம் செல்வேன். முந்தைய ஆண்டில் எனது மனைவி குழந்தைகளை தாயகத்திலே விட்டுவந்திருந்தேன். வெளிநாட்டு வாழ்க்கையில் விடுமுறையில் தாயகம் செல்வதென்பது இமயமலை உச்சியில் ஏறிய சந்தோசத்தைப் போல மனம் மகிழ்ச்சியின் பிரவேசமாகவே இருக்கும்.

எத்தனை அறிவியல் வளர்ச்சி வளர்ந்திருந்தாலும் நம் உறவுகளை நேரில் கண்டு உண்டு
பேசி சிரிப்பதைப் போல் உள்ள மகிழ்வு எதிலும் இல்லை.

மாலை ஐந்து மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து இல்லம் வந்து சேர்ந்த என்னை என் தந்தை கட்டி தழுவி வரவேற்றார். இதுவே கடைசி தழுவல் என்பது எங்கள் யாருக்கும் தெரியாத இறை இரகசியமாக இருந்தது.

ஐம்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக சிங்கையிலே தனது வாழ்க்கையை கழித்தவர் என் தந்தை. சக்கரைநோயின் தாக்குதலினால் காலில் புண் ஏற்பட்டு அதையும் பொருட்படுத்தாமல் அலட்சியமாகவே சிங்கையில் வணிகம் புரிந்த என் தந்தையை வழுக்கட்டாயமாக மருத்துவ மனையில் சீனர்கள் சேர்த்து விட்ட போது மருத்துவர்கள் ஒரு காளை வெட்டி எடுக்கவேண்டும் என்று கூறிய போதுதான் நோயின் தாக்குதலை உணர்ந்திருந்தார்.
அதுவரையில் அவர் உள்ளத்திலும் எண்ணத்திலும் நோயின் பாதிப்பு இல்லை. குடும்பத்தின் மீது அவர் வைத்திருந்த அதீத பாசம் மட்டுமே இருந்தது.


சிங்கை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தியறிந்து சிங்கைக்கு விரைந்தேன் தன்னந்தனியே மருத்துவமனையில் படுத்துக் கிடந்த என் தந்தையை இரண்டாவது நாளில் அதிகாலை ஐந்து மணிக்கு உறக்கத்திலிருந்து அவர் கண்விழித்த போது அவரருகில் நான் நின்றதைக் கண்டதும் அவர் முகத்திலும் கண்களிலும் பெருக் கெடுத்த கண்ணீர். இந்த மரம் காய்த்து ஒய்ந்திடுச்சிப்பா இனி காய்க்காது என்று சொல்வதைப் போல்…

உங்க விதையில் முளைத்த மரங்கள் உங்களை சுமக்கும் என்ற ஆறுதலோடு என் தந்தையின் கரங்களைப் பற்றி பிடித்த நான் …

வந்துட்டேன் கவலை வேண்டாம் என்ற போது
துபாயிலேந்து எப்போ வந்தே ?
வந்து ஒரு மணிநேரமாச்சு என்றதும்
என்னை எழுப்பி இருக்கலாமே என்றார்.

ஐம்பதாண்டு சிங்கை வாழ்க்கையில் என் தந்தைக்கு அதிகமான தொந்தரவுகளை கொடுத்துருக்கிறேன். உறக்கத்தில் கூட இனி தொந்தரவு செய்யக் கூடாது என்ற உணர்வில் இருந்தேன் என்பதை என்னால் இங்கு எழுதத்தான் முடிந்தது.

ஆண்பிள்ளைகள் பெற்றால் நிறைய சம்பாதித்து போடுவார்கள் என்ற கனவு பல பெற்றோர்களிடம் இருக்கிறது. சம்பாதித்து போடுகிறார்களோ இல்லையோ பெற்றோர்களை பேணுகின்றார்களா ? என்பதே இன்றைய காலக்கட்டத்தில் கேள்விக் கணைகளாக இருக்கிறது.

ஐந்து ஆண்மக்களையும் இரு பெண் மக்களையும் பெற்றிருந்தாலும் எங்களை யெல்லாம் பெண்பிள்ளைகளை வைத்து காப்பதுபோல் தான் காத்து நின்றார்.
சுயமாக பறப்பதற்கு இறக்கைகள் முளைத்தாலும் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதானே.

சிங்கையில் எந்த உறவினர்களின் வீட்டுக்கும் அடிக்கடி செல்லாதவர். நடைபாதை கடையிலேயே தனது இளமைக்கு விடைக் கொடுத்தவர். அவருக்கு தெரிந்ததெல்லாம் சிங்கையின் விமான நிலையமும் தான் தங்கிருக்கும் வாடகை வீடு மட்டுமே. தனக்காக வாழ்ந்ததை விட தனது குடும்பத்திற்காக வாழ்ந்த வாழ்க்கை அதிகம்.

பொருள் சம்பாதிக்கலாம் சிலவும் செய்யலாம் மீண்டும் சம்பாதிக்கலாம் ஆனால் இளமையை சிலவு செய்யத்தான் முடியுமே தவிர சம்பாதிக்க முடியுமா?

ஓரு ரூபாயாக இருந்தாலும் அதை ஒரு லட்சமாக எண்ணி சேமிக்கும் குணங்கொண்டவர் அதனால் தான் அந்த ஒரு ரூபாய் பல லட்சங்களாய் கோடிகளாய் என் தந்தையின் பெயரை இன்றும் உச்சரித்துக்கொண்டிருக்கிறது.
என் தந்தை J.கமாலுதீன்

இந்த கடையை நிறுவுவதற்கு அவர் பட்டக் கஸ்டங்கள் எவ்வளவு இதோ இந்த கடையை நான் கலைந்துக் கொண்டிருக்கின்றேனே இந்த கடை ஈட்டித்தந்த வருமானத்தில் வளர்ந்தவன் தானே நான் எங்கள் குடும்பம். ஐம்பதாண்டு கால கூட்டை ஐம்பது நிமிடங்களில் கலைத்துவிட்டேனே… இவைகளை பார்க்கமல் எனது தந்தை மருத்துவ மனையில் இருந்தார். அவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இவைகளை என்னால் செய்திருக்க முடியுமா? அவரால் அதனைக் காணத்தான் முடியுமா?நான் கலைத்தது கடையல்ல என் தந்தையின் கனவு.

பதிவு பெரியதாக இருப்பதினால் இதன் தொடர்ச்சியை நாளை வாசிக்கலாமே...

தொடர்வோம்...


Thursday, February 23, 2012

நேசப் பயணம்

இந்த மாதம் துவக்கத்தில் அமீரகத்திலிருந்து சுமார் முப்பத்தைந்து பேர்கள் சேர்ந்து ஒரு குழுவாக இலங்கைக்கு பயணமானோம். இது சுற்றுலா பயணம் அல்ல. அண்ணல் நபிகள் மீது கொண்ட நேசப்பயணம். இங்கு நான் பகிர்வது பயணத்தின் நோக்கத்தை அல்ல. பயணத்தில் ஏற்றபட்ட சில அனுவத்தை பகிரந்துக் கொள்கிறேன்.
இந்த குழுவை ஒருங்கிணைத்த பொருப்பாளர்களில் நானுமிருந்தேன்.

துபாயிலிருந்து இரவு 10.55 மணிக்கு சிரிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் எங்களின் பயணம் நிச்சயமாகி இருந்தது. அனைவரிடமும் 8.30 மணிக்கு விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்ற தகவல் கூறப்பட்டிருந்தது.

8.30 மணிக்கு விமான நிலையத்தில் சிலர் மட்டுமே நின்றுக் கொண்டிருந்தோம். மற்றவர்களின் நிலை தெரிந்துக் கொள்ள கைபேசியில் தொடர்புக் கொண்டு துரிதப்படுத்தினேன். வழியில் இருக்கிறோம் வாகன நெரிசலில் மாட்டியிருக்கிறோம் என்றார்கள் அவர்கள் வரும் வரையில் காத்திருந்து எல்லோரும் ஒன்றாக சேர்ந்தே போடிங் கவுண்டருக்கு சென்றோம்.

ஒவ்வொருவரிடமும் தங்களுக்கு தேவையான லக்கேஜ் மற்றும் சிலரிடம் 40 கிலோவிற்கும் அதிகமான லக்கேஜ் இருந்தது. அதை அதிக எடை இல்லாதவர்களோடு சேர்த்து போட்டு போடிங் பெறுவதற்குள் 10 மணி ஆகிவிட்டது.

அடுத்து இமிக்கிரேஷன் முடிக்கவேண்டும் கூட்டம் அதிகமாக நின்றுக் கொண்டிருந்தது. அப்படி இருந்தும் 15 நிமிடங்களில் இமிக்கிரேஷன் என்னோடு நின்றவர்களுக்கு முடிந்துவிட்டது. அங்கிருந்து விமானத்தை நோக்கி நடந்து செல்வதற்கு குறைந்தது 10 நிமிடங்கள் ஆகும். பேட்டரிகார் வசதியும் இருக்கிறது அதில் நாங்கள் அமர்ந்துக் கொண்டோம்.
இறங்குமுன் எனக்கு டெலிபோன் வந்தது எங்கள் குழுவில் உள்ள ஒரு குடும்பத்தை இமிக்கிரேஷனில் திருப்பி விட்டார்கள். என்றார் ஏன் என்று வினவியதற்கு அவருடைய பையன் பாஸ்போர்ட் மிஸ்சிங் என்றார்!

எனக்கு ஒன்றுமே புரியவில்லை எங்கு எப்படி தொலைந்தது என்றேன்.
போடிங் கவுண்டரில் அவர் கொடுத்த பாஸ்போர்ட் பழைய மற்றும் புதுப்பித்த பாஸ்போர்ட்டும் சேர்த்து பின் செய்திருந்தது. திரும்ப வாங்கும்போது பின் கலண்டு இருந்ததால் பழைய பாஸ்போர்ட்டை பேக்கில் வைத்து லக்கேஜில் போட்டுவிட்டு புதிய பாஸ்போர்ட்டுடன் இமிக்கிரேஷன் சென்றிருக்கிறார். இமிக்கிரேஷன் அதிகாரி பாஸ்போர்ட்டை வாங்கி அமீரக குடியுரிமை பக்கத்தை தேட அது பழைய பாஸ்போர்ட்டில் உள்ளதால் அதை அதிகாரி கேட்க அதை லக்கேஜில் போட்டுவிட்டேன் என்று கூற அந்த பாஸ்போர்ட்டை எடுத்துவா என்று அதிகாரி திரும்ப அனுப்பிவிட்டார்.

அவசரஅவசரமாக போடிங் கவுண்டருக்கு சென்று விசயத்தை கூறி லக்கேஜை கேட்டால் அது இன்னேரம் விமான தளத்திற்கு சென்றிருக்கும் அதை திரும்ப பெற்று இந்த விமானத்தில் பயணம் செய்வது முடியாதது என்று கூறிவிட்டார்கள்.
இந்த லக்கெஜ் இலங்கை சென்று அங்கிருந்து பாஸ்போர்டை எடுத்து கூரியர் மூலம் துபாய் வந்து பிறகு தான் பயணிக்க முடியும் என்றும் நீங்கள் குரூப் டிக்கேட் ஆதலால் ரீபுக்கிங் செய்யஇயலாது என்றும் கூறினார்கள்.

நான்கு தினங்கள் பயணமாக செல்லும் எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியாத சூழலில் எங்கள் குழுவில் உள்ளவரில் ஒருவர் துபாய் விமான நிலையத்தில் பணிப்புரியக் கூடியவர் அவர் உடனே அவருடைய பணிப் பழக்கத்தை வைத்து ஏர்லைன்ஸ் அதிகாரியிடம் பேசியதில் இந்த விமானத்தில் பயணிக்கவில்லை என்றாலும் அவருடைய லக்கேஜ் எடுத்து கொடுத்துவிடுகிறோம் அதை அவர் பெறுவதற்கு சில மணிநேரங்கள் ஆகும் அது வரையில் விமானம் காத்திருக்க முடியாது இந்த லக்கேஜ் கொடுப்பதற்கே முப்பது நிமிடங்கள் தாமதமாகக்கூடிய சூழ்நிலை இருக்கிறது என்றார். அதுபோதும் அவருக்கு பாஸ்போர்ட் கிடைத்துவிட்டால் அடுத்த விமானத்தில் மறுதினம் வரட்டும் என்று முடிவுசெய்தோம்.

10.55மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 11.25 மணிக்கு புறப்பட்டது.ஆனால் அவரும் அவர் குடும்பமும் வர முடியவில்லை.

அவர் மறுதினம் ஏர்லைன்ஸ் அலுவலகம் சென்று அவர்களிடம் பேசி அதே விமான டிக்கேட்டில் பயணம் செய்து எங்களுடன் சேர்ந்துக் கொண்டார்.

பயணத்தின் போது சிலருக்கு பதட்டம் இருப்பது இயல்பு ஆனால் என்ன செய்கிறோம் என்றே தெரியாமலும் கவனமில்லாமலும் பதட்டப்பட்டால் இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு ஆளாக நேரிடும்.
கவனம் எப்போதும் தேவை.

Tuesday, February 21, 2012

கபீர்தாசரின் காந்தன் காதல்


என் நண்பர் திருச்சி சையது சில நூல்கள் எழுதியும், தொகுத்தும் உள்ளார். அதில் சமீபத்தில் வெளியீட்ட “கபீரின் 100 பாடல்கள்” என்ற நூலை எனக்கு தந்தார்.
படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது 100 பாடல்களும் நம்மிலே சுய சிந்தனையை ஏற்படுத்தக்கூடிய வரிகள்… இந்த பாடல்களை படிக்கும்போது எனக்கு நினைவில் தோன்றிய நபி மொழி
“தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிவான்”
இறைவனை அறியவேண்டுமானால் மனிதன் தன்னை அறிய வேண்டும் என்ற தத்துவத்தையே அந்த நூல் கூறுகிறது.

கபீர்தாசன் என்று பெயர் வைத்திருக்கும் இவர்
வாழ்ந்த காலம் (கி.பி.1398 - 1518) இவருடைய கவிஞானங்கள் இந்தி பக்தி இலக்கியத்தில் தனி சிறப்புக்குரியதாகும்.
கபீர் என்பது அரபிச் சொல்லாகும் அதற்கு பெரியது என்று பொருளாகும். பெரியது என்பது இறைவனைக் குறிப்பிடுகிறது

இவரை சிறுவயதில் ஓர் இஸ்லாமிய நெசவாளர் எடுத்து வளர்த்ததாக கூறப்படுகிறது. மனைவியோடும், குடும்பத்தோடும் இஸ்லாமியச் சூழலில் நெசவுத் தொழிலைச் செய்து வாழ்ந்த இவர் இளமை முதலே இறைநேயம் உடையவராய் விளங்கினார் என்று அவருடைய வரலாறு கூறுகிறது.

இவருடைய பாடல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் பேராசிரியர் எழில்முதல்வன் எளிய தமிழில் நமக்கு தந்துள்ளார்.
கபீர்தாசரின் சிந்தனையை அறிவதற்கு இந்நூல் வாய்ப்பை அளித்திருக்கிறது. அதிலிருந்து சில வரிகள்..

ஓ!
பணியாளனே என்னை நீ எங்கே தேடுகிறாய்?
இதோ நான் உன் அருகிலேயே இருக்கிறேன்.

நான் திருக்கோயிலிலும் இல்லை மசூதியிலும் இல்லை காஃபாவிலும் இல்லை கைலாயத்திலும் இல்லை.

நான் சடங்குகளிலோ அவை சார்ந்த சம்பிரதாயங்களிலோ இல்லை. யோகப் பயிற்சியிலோ துறவிலோ இல்லை.

நீ என்னை நாடும் உண்மை ஆர்வலனாக இருப்பின் உடனடியாகக் காணமுடியும். கண்ணிமைப் போதிலோ கைநொடிப் போதிலோ என்னைச் சந்திக்க முடியும்.
கபீர் கூறுகிறார். ஓ சாதுவே இறைவன் உயிரினுக்கும் உயிராக விளங்குகிறான்.!

இறைவனைப் பற்றி மிகத் தெளிவாக இந்த கவிதை வரிகள் கூறுகிறது. இறைவனை நாம் எங்கே தேடுகிறோம் என்பதை இக்கவிதை சொல்கிறது.
இதையே திருமறையில் “உம் பிடரி நரம்பிற்கும் மிக சமீபமாக இருக்கிறேன்” என்று இறைவன் கூறியுள்ள நுன்மைமிக்க
அந்த திருவசனம் நம் சிந்தையில் நிழலாடுகிறது.

ஒவ்வொரு கவிதையிலும் இறைக்காதலை வெளிப்படுத்தியுள்ளார். கவிதையின் இறுதி வரிகளில் கபீர் சொல்கிறார் என்ற “நச்” வரிகள்..

சில உதாரண கவிதைகளையும் விளக்கத்திற்காக கூறியுள்ளார்

ஆறும் அதன் அலைகளும் ஒரே நுரைத்திரள் கொண்டனவே. அங்ஙனம் இருக்க ஆறும் அலைகளும் வேறு வேறாக முடியுமா?

அலைகள் மேலெழும் போதும் தண்ணீர். அது கீழே விழும் போதும் தண்ணீர்தான். சொல்லுங்கள் ஐயா வேறுபாடு என்ன இருக்கிறது?

அலைகள் என்று பெயர் பெற்றிருப்பதாலேயே அது தண்ணீரல்ல என்று யாராவது கருதுவார்களா?

தனிமுதலாம் பிரம்மத்தினுள் உலகங்கள் யாவும் மணிமிடைப் பவளம்போல் கோக்கப்பட்டுள்ளன. ஞானக்கண் உடையோர்க்கு இது ஜெபமாலையாகவே காட்சிதரும் என்கிறார்.

இறைவன் எங்கோ தனித்து இல்லை அனைத்திலும் சூழ்ந்துள்ளான் ஒவ்வொரு பொருளிலும் ஞானக் கண்ணுடன் பார்த்தால் இறைவனை கண்டுக் கொள்ள முடியும் ஜாதிமத வேறுபாடுகளினால் பிளவுபட்டிருக்கும் மனித சமுதாயம் ஒர் உண்மையிலிருந்து வெளியானவை நாமரூபங்களில் வேறுப்பட்டிருந்தலும் உண்மை ஒன்றுதான் என்பதையே கூறுகிறார்.

ஒருவர் இறைஞானத்தை யாரிடமிருந்து எப்படி பெறுவது அதை போதிக்கக் கூடிய குரு எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுப்படுத்துகிறார்.

ஓ!
சகோதரனே ஓர் உண்மையான குருநாதருக்காக என் இதயம் ஏங்கி நிற்கிறது. அவரே உண்மை அன்பாம் கோப்பையை முற்றிலும் நிரப்பி தானும் பருகி எனக்கும் தருகிறார்.

என் விழிகளை மறைக்கும் படலத்தை விலக்கி பிரம்மத்தைத் தரிசிக்கும் பார்வையை வழங்குகிறார்.

அவர் தன்னுள்ளே அண்டங்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிறார். மீட்டப்படாத பரம்பொருளின் இராகத்தை நான் செவிமடுக்கும்படி செய்கிறார்.

சுகமும் துக்கமும் ஒன்றே என எனக்கு உணர்த்துகிறார். அன்பில் தோய்ந்த சொற்களால் என் இதயத்தை நிரப்புகிறார்.

கபீர் சொல்கிறார்… பாதுகாப்பான புகலிடம் நோக்கிப் பரிவோடு அழைத்தேகும் குருநாதரைப் பெற்றவனே பயமற்றவன் பாக்கியவான் என்று கூறுகிறார்.

மனித வாழ்க்கையில் எந்த ஒரு செயலும் குருயின்றி நடப்பதில்லை ஒவ்வொன்றிலும் ஒன்று சம்பந்தப்பட்டிருக்கிறது.
குரு என்பது மனித வாழ்க்கையின் வழிகாட்டல்.

கபீர்தாசன் போன்ற ஞானிகளும், சூஃபியாக்களும் இன்றும் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேடல் உள்ளவர்களின் கண்களுக்கு மாத்திரமே தென்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
ஞானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை!

நல்லதொரு நூலை வெளியீட்ட அன்பு நண்பர் திருச்சி சையது அவர்களுக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் தந்த பேராசிரியர் எழில்முதல்வன் அவர்களுக்கும்தமிழ்அலை இஷாக் அவர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.

Monday, February 20, 2012

மின்னுவதெல்லாம் நட்சத்திரமல்ல!



இந்த வாரத்தின் நட்சத்திரப் பதிவராக இருப்பதற்கு தேர்வு செய்த தமிழ்மணத்திற்கு மனமார்ந்த நன்றியுடன்…

தமிழ்மணம் உறவு சுமார் மூன்றாண்டுகளைக் கடந்தது.
அங்கு கற்றுக் கொண்டது கொஞ்சம் கற்க வேண்டியது மிச்சம்.
நான்கு ஆண்டு காலமாக வலைதளத்தை சுற்றி வருகிறேன். சாலையைப் போல எத்தனையோ மேடுப் பள்ளங்கள்.
அறிவுமிருக்கிறது அழிவுமிருக்கிறது, கற்றுக் கொள்வதற்கும், கற்க கூடாததற்கும் ஒரே இடம் இணையதளம்.

யாருக்கு எது தேவையோ அது கிடைக்கிறது. குடுமிபிடி சண்டையும் குழாயடி சண்டையும் தெருக்களில் மட்டுமல்ல வலைகளில் வளைகுடா போரைப் போல அவ்வபோது காணமுடிகிறது.

பேனா நண்பர்கள் மறைந்து இன்று வலைதள நண்பர்கள் மிகைத்தமைக்கு தமிழ்மணம் போன்ற இணையதளங்கள் பாலமாக இருப்பதே காரணம் என்று சொல்லலாம்.

பல நண்பர்களை இந்த இணையதளம் எனக்கு கொடுத்திருக்கிறது. அவர்களிடம் பழகுவதற்கு தினம் என்னைப் படித்துக் கொண்டிருக்கிறேன் தேர்வுகளில் “நான்” தோற்றுப்போய் விடுவதற்காக…

அமீரகத்தில் வாழும் தமிழன்பர்கள் பலர் பதிவு எழுதினார்கள் அவர்களுடைய பதிவுகள் என்னை ஊக்கப்படுத்தி இருக்கிறது.
பதிவர்கள் சந்திப்பின் மூலம் அறிமுகங்கலாகி பதிவர் சுற்றுலா, குறும்படம் என்று கலக்கிய அமீரகப்பதிவர்களின் நட்பின் வரலாறு சுவாரஸ்யமானது.

சத்திரத்தில் சித்திரம் சமைத்தோம், நோன்பில் இஃப்தார் படைத்தோம், பிரியமுடன் பிரியாணி சுவைத்தோம், விழாக்களில் விலகிய நாட்களை எண்ணி வருந்தினோம்,
ஆனால் தற்போது அமீரகப்பதிவர்களின் சிலருடைய பக்கங்கள் வெண்மையாகவே இருக்கிறது.
பதிவர்களின் சந்திப்பு என்பது அமீரகத்தை பொருத்தவரையில் இன்னொரு கல்லூரி அனுபவம்போல் என்றாலும் நகைச்சுவை உணர்வுமிக்கவர்கள் நிறைய இருப்பதினால் நன்றாக சிரிக்க முடிகிறது சந்திப்பு என்னவோ மொக்கைதான்.

விஞ்ஞானத்தின் மீதும் மெய்ஞ்ஞானத்தின் மீதும் ஆர்வம் கொண்ட நிலாமலர்கள் என்ற பெயரில் பதிவு எழுதும் நண்பர் நாசர் சொன்னார் தரமான பதிவுகளுக்கு ஓட்டுகள் கிடைப்பதில்லையே மொக்கைப் பதிவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்றார்…

உண்மைதான் அது படிப்பவர்களைப் பொருத்திருக்கிறது… தரம் என்று நாம் நினைப்பது சிலருக்கு மொக்கையாக இருக்கலாம் மொக்கை என்று நாம் நினைப்பது சிலருக்கு தரமானதாக இருக்கலாம். படிப்பவரின் தேடலைப் பொருத்தே பின்னூட்டமும் ஓட்டளிப்பும் நடைபெறுகிறது.

நூறு பேர்கள் படித்துவிட்டு ஐந்து பேர்கள் பின்னூட்டமும் ஒருவர் மட்டும் ஓட்டும் அளித்துவிட்டு அல்லது எதுவுமில்லாமல் செல்லலாம்…

எதிர்பார்ப்பு இல்லாமல் எழுதினால் நம்மை எதுவும் கைது செய்யமுடியாது. சுதந்திரமான எண்ணம்தான் உண்மைகளை எழுத முடியும்.  

எனது வலைதளத்திற்கு புதிதாக வந்த அன்பர்களுக்கு

அதிகமாக பயணக்கட்டுரைகளை எழுதியிருக்கிறேன் மற்றும் அமீரக அனுபவங்களையும் எழுதியுள்ளேன் படித்துப்பாருங்கள்.
தங்கத்தைப் பற்றிய பதிவுமிருக்கிறது அது உங்களுக்கு தேவையான செய்திகளை தரக்கூடியதாக இருக்கலாம். எனது பதிவுகளுக்கு காலாவதி தேதி கிடையாது.  

இந்த ஒரு வாரக்காலத்திற்கு தினம் ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது முடிந்தவரையில் முயற்சிக்கிறேன்  

நன்றி!