உங்கள் வருகைக்கு நன்றி...
Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Sunday, October 7, 2012

நான் என்னை அறிந்தால்...

மீள் பதிவு
அமீரக வாழ்க்கை எனக்கு படிப்பியலில் ஆர்வத்தைக் கொடுத்தது. சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், ஜெயகாந்தன், சிவசங்கரி, பாலகுமாரன், அப்துற்றஹீம், எம்.எஸ்.உதயமூர்த்தி, கவிகோ, கவியரசு, மு.மேத்தா இன்னும் பலரின் எழுத்து என்னை எழுத தூண்டுவதற்கு காரணமாகியது.

தத்துவங்களை படிக்கும்போது மனதில் ஒருவித ஈர்ப்பு என்னை ஆட்கொள்ளும்.சிறுவயதில் திருக்குர்ஆனின் தமிழாக்கம் என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது. என் செயல்களில் திருப்பத்தைக் கொடுத்தது. பைபிளிலும் பகவத்கீதையும் ஆழமாக சிந்திக்க வைத்தது. அதன் தாக்கங்களே எனக்கு ஆன்மீகத்தை அறிமுகம் செய்தது.

ஆன்மீகம் என்றால் அதில் ஈடுபடுபவர்கள் தாடிவைத்து, காவி உடுத்தி, வணக்கத்திலேயே சதாக் காலமும் வாழவேண்டும் என்றும், குடும்பப்பற்று இன்றி எந்நேரமும் இறைசிந்தனையோடு இருக்கவேண்டும் என்றும், பலர் எண்ணிக் கொண்டிருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். ஆன்மீகத்திற்கு உடைமாற்றம் தேவை இல்லை மன மாற்றம் தான் தேவை.
ஆன்மீகம் என்றால் பலருக்கு பயம். பயத்தைக் கொடுப்பது ஆன்மீகமல்ல அதை தெளிவுபடுத்துவதே ஆன்மீகம். அது அறிவுக் களஞ்சியம் அது அன்பை ஊற்றெடுக்க வைக்கும் அமுதசுரபி. மனிதனை மனிதனாக வாழவைக்கும் வழிகாட்டி.

வாழ்க்கையே வணக்கம் என்கிறான் இறைவன்.அந்த வணக்கமான வாழ்க்கையை புரிந்துக் கொள்வதற்கு ஆன்மீகத்தின் ஞானம் உதவி புரிகிறது.

ஆன்மீகத்தின் நுழைவாயிலில் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.அந்த கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. எத்தனையோ நூல்களை படித்தும் என்னிடம் பதில் இல்லாமல் போனது எப்படி? ஏட்டு கல்வியில் கிடைக்காத பதில்கள் ஞானக்கல்வியில் கிடைக்கிறது.

ஞானிகள் அதிகம் யோசிக்கக் கூடியவர்கள். ஒரு கருத்தை கூறினால் அதில் பலவிதமான பொருள்கள் இருக்கும். பல ஞானக்கதைகளை வாசிக்கும் போது அது நமக்கு வெளிச்சப் படுத்துகிறது.

ஆன்மீகம் என்பது ஆன்மாவைப்பற்றிய விளக்கம் அந்த விளக்கம் தான் ஞானம்.
விஞ்ஞானிகள் எதையும் ஆராய்ந்து கூறும் போது உலகம் உடனே ஏற்றுக் கொள்ளும். ஆனால் மெய்ஞ்ஞானி ஒன்றை கூறினால் இந்த உலகம் யோசிக்கும். காரணம் அறியாமை ,விளங்காமை.

ஞானம் வெளியிலிருந்து தொடங்கப்படுவதல்ல.தன்னிடமிருந்து ஆரம்பிக்கப் படுவது. சுய சிந்தனையை தன்னில் ஏற்படுத்தக் கூடியது. ஞானம் கற்பதில் என்ன பயன் இருக்கிறது? என்ற சிந்தனை அதனுள் நுழையுமுன் என்னிடம் எழுந்தது.

ஒரு மருத்துவரிடம் நீங்கள் மருத்துவரானதால் உங்களுக்கு என்ன பயன்? என்று கேட்பதைபோல் தான் ஞானமும் என்று விளங்கப்படும் போது உணரப்பட்டேன்.

இந்த உலகில் எத்தனையோ விதமான அறிவுகள் படித்துக் கொடுக்கப்படுகின்றன அவைகளெல்லாம் பொருளீட்டலை மையமாக வைத்தே போதிக்கப்படுகிறது. ஆனால் மனிதனைப் பற்றி படித்துக் கொடுக்கப்படுவது தான் ஆன்மீகஞானம்.

ஒருமுறை குருநாதரிடம் ஓரு கேள்வி கேட்கப்பட்டது. பாவம் என்பது என்ன?

மனிதன் தன்னை தான் அறியாமல் இருப்பது தான் பாவம் என்று பதிலுரைத்தார்கள். ஒரு வரி பதிலாக இருந்தாலும் இதில் ஓராயிரம் விளக்கம் இருக்கிறது.

ஒரு மனிதன் இறைவனைத் தேடி காடு மேடெல்லாம் அலைந்து களைத்து போய் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கிறான். அருகிலிருந்த மனிதர் அவருக்கு களைப்பு நீங்க உணவு கொடுத்திருக்கிறார். உணவை உண்டதும் மீண்டும் இறைவனைத்தேட புறப்பட்டார். புறப்பட்டவரிடம் எங்கே செல்கிறீர்? என்று உணவு தந்தவர் வினவ நான் இறைவனைத் தேடி போய் கொண்டிருக்கிறேன் என்று பதில் கூறினார்.

இறைவனின் முகவரி என்னிடம் இருக்கிறது நீங்கள் அலையவேண்டாம் என்றார். உண்டவனுக்கோ ஆச்சரியம்…எங்கு இருக்கிறான் சொல்லுங்கள்?, என்று ஆர்வத்துடன் கேட்க அவரை அமைதிப்படுத்தி அமரவைத்தார்.

ஐயா! ஒன்றை அறியவேண்டுமானால் அதைப்பற்றி தெரிய வேண்டும். தெரிவது எப்படி? தெரிந்தவரிடம் கேட்க வேண்டும். இறைவனை அறியவேண்டுமானால் இறைவனின் படைப்பை அறியவேண்டும். நீயே இறைவனின் படைப்புதானே உன்னை நீ அறிய முற்படு நீ தேடும் இறைவனை நீ காணலாம் என்றார். இந்த அறிவுதான் குருவாக நிற்கிறது.
கையிலே வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைகின்ற கதைதான்.
பொறியியல் கல்லூரியில் மருத்துவம் படிப்பது எப்படி.? எதையும் சரியானவர்களிடம் சார்ந்தால்தான் நம்மை சரிசெய்துக் கொள்ள முடியும்.

ஞானத்தேடல் உள்ள மனிதனிடம் குருத்தேடல் இருக்கும். அறிந்தவரிடமிருந்து தான் அறிவைப் பெறமுடியும். குரு என்பது அறிவு . இந்த உலகமே குருத்துவமாக தான் இருக்கிறது.

ஒன்றிலிருந்து புறப்பட்டதுதான் இந்த உலகம் இரண்டு என்பது பேதம். இரண்டு ஒன்றாகும் போது அங்கு ஏற்படுவது ஏகத்துவம் . ஆதமும் ஏவாளும் (ஹவ்வா)ஒன்றிணைந்தபோது மனிதம் உற்பத்தியானது. அந்த வழிமுறைதான் நேற்றும், இன்றும், நாளையும்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறோம். குழந்தையிடம் எந்த பாரபட்சமுமில்லை. நாமும் குழந்தையாக இருந்துதானே வளர்ந்திருக்கிறோம் நம்மிடமும் தெய்வத்தன்மை இருக்கவேண்டுமே இருக்கிறதா? இருக்கிறது அது மறைந்திருக்கிறது. இருந்தது எப்படி மறைந்தது?

நாம் படித்த நூல்களை அடிக்கி வைத்து வருகிறோம் நிறைய புத்தகங்கள் நம்மிடம் சேர்ந்துவிட்டன என்னென்ன நூல்கள் இருக்கிறது என்பதே சில நாட்களில் மறந்தும் போய்விடுகிறது. ஒரு குறிப்பிட்ட நூலைத் தேடுவதற்கு அடுக்கிவைத்த நூலை ஒவ்வொன்றாக எடுத்து இடமாற்றுவோம். நாம் தேடும் நூல் அடியில் இருக்கிறது இதை கண்டுபிடித்து எடுப்பதற்கு அடுக்கப்பட்டிருந்த அத்தனை நூட்களையும் எடுக்கவேண்டி இருந்தது அல்லவா? அதுபோல்தான் நாம் குழந்தையாக இருந்தபோது தெய்வத் தன்மையில் இருந்தோம் நாம் வளரவளர புத்தகங்களை அடிக்கியது போல நம் மனதில் அடிக்கி வைக்கப்பட்ட அத்தனையும் கிளறவேண்டும், தேடவேண்டும் தேவையானதை வைத்துக் கொண்டு தேவையற்ற எண்ணங்களை சிந்தனைகளை களையவேண்டும் அப்படி களையப்படும்போது தேடப்படுவது கிடைக்கும்.

எப்படி தேடுவது என்பதை சொல்லிக் கொடுப்பவர்தான் குரு. நம் முகத்தை நமக்கு காட்டும் கண்ணாடி போல. பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்தான் முதல் குருவாக இருக்கிறாள். தாய்க் கல்விக்கு பின்தான் கல்விக்கூடங்கள் மற்ற அனைத்தும்.

எதையும் கற்றுக் கொடுக்கப்படாமல் ஒரு குழந்தை வளர்ந்தால் அது மிருகமாகிவிடும். மிருகத்திற்கு ஒன்றை கற்றுக் கொடுத்தால் அது மனிதனாக முடியாது. படைப்புகளில் மிக சிறந்த படைப்பு மனிதன் என்கிறான் இறைவன்.

மனிதனிடம் எல்லா குண அதிசியங்களும் இருக்கின்றன. அதனால்தான் அவனுக்கு அதிகமாக போதனை தேவைப்படுகிறது.

மனிதன் மனிதனாக வாழ்வதற்கு ஞானஅறிவுத் தேவை…அந்த அறிவு மனிதனிடம் இருக்கிறது அதை அடையாளப்படுத்தவே குருத்துவம் தேவைப்படுகிறது.

பொருள் வாங்கச் சென்றவர்கள் கடையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கக் கூடாது வாங்கப்போகும் பொருளில் குறியாக இருப்பது போல் குருவிடம் சென்றவர்கள் ஞானத்தை பெறுவதில் குறியாக இருக்கவேண்டும் குருவிடம் குறையை தேடிக் கொண்டிருந்தால் நிறைவு பெற முடியாது.

Sunday, February 26, 2012

ஒரு பாட்டில் "அன்பு" ஆயிரம் ரூபாய்!

இன்று காலை பணிக்கு புறப்படுமுன் தொலைக்காட்சியில் மகளிர் அரங்கத்தில் ஒரு சிறுமி பேசிக்கொண்டிருந்தாள் வயது அநேகமாக பத்துக்குள்ளாக இருக்குமென நினைக்கிறேன் கல்வியே அறிவைத் தரும் என்ற தலைப்பில் ஆவேசமாக பேசினாள்.

பணிக்கு புறப்பட்ட நான் ஐந்து நிமிடம் அந்த சிறுமியின் பேச்சை கேட்டுவிட்டு புறப்பட்டேன். சிந்தனை அந்த சிறுமியின் பேச்சில் சுழன்றது.

கல்வி மட்டுமே மனித சமுதாயத்தை மேம்படுத்தும் கல்வி ஒன்றே மனிதனை உயர்வடையச் செய்யும் என்றெல்லாம் பலரும் பேசுகிறார்கள் அவர்களின் பேச்சு உண்மையானதுதான் ஆனால் கற்கும் கல்வி?

ஒரு மாணவனின் வாழ்க்கை முன்னேற்றம் என்பது அவன் படித்து முடித்து வேலைக்கு சென்று நன்கு சம்பாதித்து எல்லா வசதிகளுடனும் வாழும்போது அவனை உயர்ந்த நிலையில் இருக்கிறான் என்று சமுதாயம் சொல்கிறது.

கல்வியினால் சமுதாயம் முன்னேறுகிறது என்பது மச்சி வீடு மாடி வீடாகவும், மாடி வீடு பங்களாக்களாகவும் இப்படி வசதிகள் கல்வியினால் மாற்றம் காண்கிறதே தவிர, மனித நேயத்தில், மனிதர்களின் குண நலன்களில் இன்றைய கல்வி மாற்றத்தை அதிகம் தருகிறதா(?) என்பது கேள்வியாகும்.

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் கிராமம் வரையில் இணையதளம் வளர்ந்து விட்டது என்னவோ உண்மைதான் ஆனால் கிராமத்தில் வாழ்ந்த பெற்றோர்கள் இன்று முதியோர் இல்லங்களில் வாழ்ந்து வருவதும், முதியோர் இல்லங்கள் வளர்ந்து வருவதும் கல்வியின் முன்னேற்றமா?

பொருளாதாரத்தை முன்வைத்து கல்விச் சாலைகளும், கற்பிக்கப்படும் ஆசிரியர்களும், கற்கும் மாணவர்களும், பெற்றோர்களும் செல்கிறார்கள் அவர்களின் சமுதாயம் எப்படிபட்டாதக இருக்கிறது என்றால் மனிதனுக்கு மனிதன் உதவி செய்வது என்பது மறந்து உதவி செய்வதற்கு ஆதாயம்தேடும் வியாபார சமுதாயமாக மாறி வருகிறது என்பதை கண்கூடாகக் காணமுடிகிறது.

அண்ணன் தம்பிக்கு மத்தியில் பாசத்தைவிட தங்களிடமுள்ள பணம்தான் யார் அண்ணன் யார் தம்பி என்பதையே இன்றை சூழல் நிர்ணயிக்கிறது.

இந்திய அரசியல்வாதிகள் எல்லாம் படிக்காதவர்களா? கல்வி கற்றவர்கள்தானே? இன்று பொறுப்பில் இருக்கக்கூடியவர்களின் சுரண்டல்கள் எத்தனை கோடிகள் என்பதை ஊடகத்துறை வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறதே இவர்களிடம் பொருளாதார ஆசையை மட்டுமே வளர்த்திருப்பது எது?

இன்றைய காலத்தில் பெரிய தவறுகளை எல்லாம் கல்வி கற்கும் சில மாணவர்கள் சர்வ சாதரணமாக செய்கிறார்கள் அவர்களுக்கு கற்பிக்கும் அந்த ஆசிரியர்கள் எப்படிபட்டவர்களாக இருப்பார்கள்?

கல்விச் சாலைகளை மிக அழகாக வடிவமைத்து வருவதில் இன்று கவனமாக இருக்கும் இவர்கள் அதில் படிக்கும் மாணவர்களின் குண நலன்களை அழகுபடுத்த வேண்டிய பணி கல்விச் சாலைகளுக்கு இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.

அறிவைக் கற்கும் அனைத்துமே கல்விதான் ஆனால் இன்றைய சூழலில் பெரும்பாலோர் அறிவு பெறுவதற்காக கல்வி கற்கவில்லை பொருளீட்டுவதற்காக மட்டுமே கல்வி கற்கிறார்கள். இந்த பொருள் கல்வியானால் இந்த சமுதாயத்தில் வசதிகள் பெருகலாம் ஆனால் ஒரு இயந்திரதனமான வாழ்க்கைமுறை வளர்ந்து மனிதம் ஏழையாகவே இருக்கும்.

பொருளாதாரத்தை வைத்து எதையும் செய்யமுடியும் என்ற எண்ணம் வளர்ந்து வரும் சமுதாயத்தில் அன்பு என்பது மினரல் வாட்டரைபோல பாட்டல்களில் அடைத்து ஒரு பாட்டில் அன்பு ஆயிரம் ரூபாய் என சூப்பர் மார்கெட்டுகளில் விற்பனை செய்யக்கூடிய காலம் நம்மை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது.

மனிதனை மனிதனாக வாழவைக்கக்கூடிய தன்னை அறியும் ஞானக்கல்வியை இணைத்து கல்லூரிகளில் அனைவரும் கற்பதற்கு வழிவகை செய்யவேண்டும். அன்பும் நேயமும்மிக்க இந்த கல்வியினால் மட்டுமே இந்த சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றங்களை நிகழ்த்த முடியும்.

“சீன தேசம் சென்றாயினும் சீரான கல்வியைத்தேடு” என்று கூறும் அண்ணல் நபிகள் ஏட்டுக் கல்வியை கற்காதவர்கள். இறைவன் கற்பித்துக் கொடுத்த கல்வியைகற்று இந்த உலகத்திற்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் ஒரு கல்விச்சாலையாகவே இருக்கிறான் அவன் அதை அறிந்துக் கொண்டானேயானால் மனிதம் மலரும் அன்பு ஓங்கும்.தினம் அரைமணித் துளியேனும் நம்மை நாம் சிந்திக்க முற்பட்டால் நம்மிலே மாற்றங்கள் நிகழும் அந்த மாற்றம் இந்த சமுதாயத்தை மாற்றும்.!

Tuesday, February 21, 2012

கபீர்தாசரின் காந்தன் காதல்


என் நண்பர் திருச்சி சையது சில நூல்கள் எழுதியும், தொகுத்தும் உள்ளார். அதில் சமீபத்தில் வெளியீட்ட “கபீரின் 100 பாடல்கள்” என்ற நூலை எனக்கு தந்தார்.
படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது 100 பாடல்களும் நம்மிலே சுய சிந்தனையை ஏற்படுத்தக்கூடிய வரிகள்… இந்த பாடல்களை படிக்கும்போது எனக்கு நினைவில் தோன்றிய நபி மொழி
“தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிவான்”
இறைவனை அறியவேண்டுமானால் மனிதன் தன்னை அறிய வேண்டும் என்ற தத்துவத்தையே அந்த நூல் கூறுகிறது.

கபீர்தாசன் என்று பெயர் வைத்திருக்கும் இவர்
வாழ்ந்த காலம் (கி.பி.1398 - 1518) இவருடைய கவிஞானங்கள் இந்தி பக்தி இலக்கியத்தில் தனி சிறப்புக்குரியதாகும்.
கபீர் என்பது அரபிச் சொல்லாகும் அதற்கு பெரியது என்று பொருளாகும். பெரியது என்பது இறைவனைக் குறிப்பிடுகிறது

இவரை சிறுவயதில் ஓர் இஸ்லாமிய நெசவாளர் எடுத்து வளர்த்ததாக கூறப்படுகிறது. மனைவியோடும், குடும்பத்தோடும் இஸ்லாமியச் சூழலில் நெசவுத் தொழிலைச் செய்து வாழ்ந்த இவர் இளமை முதலே இறைநேயம் உடையவராய் விளங்கினார் என்று அவருடைய வரலாறு கூறுகிறது.

இவருடைய பாடல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் பேராசிரியர் எழில்முதல்வன் எளிய தமிழில் நமக்கு தந்துள்ளார்.
கபீர்தாசரின் சிந்தனையை அறிவதற்கு இந்நூல் வாய்ப்பை அளித்திருக்கிறது. அதிலிருந்து சில வரிகள்..

ஓ!
பணியாளனே என்னை நீ எங்கே தேடுகிறாய்?
இதோ நான் உன் அருகிலேயே இருக்கிறேன்.

நான் திருக்கோயிலிலும் இல்லை மசூதியிலும் இல்லை காஃபாவிலும் இல்லை கைலாயத்திலும் இல்லை.

நான் சடங்குகளிலோ அவை சார்ந்த சம்பிரதாயங்களிலோ இல்லை. யோகப் பயிற்சியிலோ துறவிலோ இல்லை.

நீ என்னை நாடும் உண்மை ஆர்வலனாக இருப்பின் உடனடியாகக் காணமுடியும். கண்ணிமைப் போதிலோ கைநொடிப் போதிலோ என்னைச் சந்திக்க முடியும்.
கபீர் கூறுகிறார். ஓ சாதுவே இறைவன் உயிரினுக்கும் உயிராக விளங்குகிறான்.!

இறைவனைப் பற்றி மிகத் தெளிவாக இந்த கவிதை வரிகள் கூறுகிறது. இறைவனை நாம் எங்கே தேடுகிறோம் என்பதை இக்கவிதை சொல்கிறது.
இதையே திருமறையில் “உம் பிடரி நரம்பிற்கும் மிக சமீபமாக இருக்கிறேன்” என்று இறைவன் கூறியுள்ள நுன்மைமிக்க
அந்த திருவசனம் நம் சிந்தையில் நிழலாடுகிறது.

ஒவ்வொரு கவிதையிலும் இறைக்காதலை வெளிப்படுத்தியுள்ளார். கவிதையின் இறுதி வரிகளில் கபீர் சொல்கிறார் என்ற “நச்” வரிகள்..

சில உதாரண கவிதைகளையும் விளக்கத்திற்காக கூறியுள்ளார்

ஆறும் அதன் அலைகளும் ஒரே நுரைத்திரள் கொண்டனவே. அங்ஙனம் இருக்க ஆறும் அலைகளும் வேறு வேறாக முடியுமா?

அலைகள் மேலெழும் போதும் தண்ணீர். அது கீழே விழும் போதும் தண்ணீர்தான். சொல்லுங்கள் ஐயா வேறுபாடு என்ன இருக்கிறது?

அலைகள் என்று பெயர் பெற்றிருப்பதாலேயே அது தண்ணீரல்ல என்று யாராவது கருதுவார்களா?

தனிமுதலாம் பிரம்மத்தினுள் உலகங்கள் யாவும் மணிமிடைப் பவளம்போல் கோக்கப்பட்டுள்ளன. ஞானக்கண் உடையோர்க்கு இது ஜெபமாலையாகவே காட்சிதரும் என்கிறார்.

இறைவன் எங்கோ தனித்து இல்லை அனைத்திலும் சூழ்ந்துள்ளான் ஒவ்வொரு பொருளிலும் ஞானக் கண்ணுடன் பார்த்தால் இறைவனை கண்டுக் கொள்ள முடியும் ஜாதிமத வேறுபாடுகளினால் பிளவுபட்டிருக்கும் மனித சமுதாயம் ஒர் உண்மையிலிருந்து வெளியானவை நாமரூபங்களில் வேறுப்பட்டிருந்தலும் உண்மை ஒன்றுதான் என்பதையே கூறுகிறார்.

ஒருவர் இறைஞானத்தை யாரிடமிருந்து எப்படி பெறுவது அதை போதிக்கக் கூடிய குரு எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுப்படுத்துகிறார்.

ஓ!
சகோதரனே ஓர் உண்மையான குருநாதருக்காக என் இதயம் ஏங்கி நிற்கிறது. அவரே உண்மை அன்பாம் கோப்பையை முற்றிலும் நிரப்பி தானும் பருகி எனக்கும் தருகிறார்.

என் விழிகளை மறைக்கும் படலத்தை விலக்கி பிரம்மத்தைத் தரிசிக்கும் பார்வையை வழங்குகிறார்.

அவர் தன்னுள்ளே அண்டங்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிறார். மீட்டப்படாத பரம்பொருளின் இராகத்தை நான் செவிமடுக்கும்படி செய்கிறார்.

சுகமும் துக்கமும் ஒன்றே என எனக்கு உணர்த்துகிறார். அன்பில் தோய்ந்த சொற்களால் என் இதயத்தை நிரப்புகிறார்.

கபீர் சொல்கிறார்… பாதுகாப்பான புகலிடம் நோக்கிப் பரிவோடு அழைத்தேகும் குருநாதரைப் பெற்றவனே பயமற்றவன் பாக்கியவான் என்று கூறுகிறார்.

மனித வாழ்க்கையில் எந்த ஒரு செயலும் குருயின்றி நடப்பதில்லை ஒவ்வொன்றிலும் ஒன்று சம்பந்தப்பட்டிருக்கிறது.
குரு என்பது மனித வாழ்க்கையின் வழிகாட்டல்.

கபீர்தாசன் போன்ற ஞானிகளும், சூஃபியாக்களும் இன்றும் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேடல் உள்ளவர்களின் கண்களுக்கு மாத்திரமே தென்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
ஞானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை!

நல்லதொரு நூலை வெளியீட்ட அன்பு நண்பர் திருச்சி சையது அவர்களுக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் தந்த பேராசிரியர் எழில்முதல்வன் அவர்களுக்கும்தமிழ்அலை இஷாக் அவர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.

Monday, December 21, 2009

மகான்கள்...நவீன மகான்கள்.!


பிறந்ததிலிருந்து எல்லோருமே ஏதோ ஒரு சமயத்தைச் சார்ந்தோ அல்லது ஒரு கொள்கையை பின்பற்றியோ வளர்க்கப்பட்டிருக்கின்றோம்.வெகு சிலர்தான் தாங்கள் ஏற்ற சமயத்தை, கொள்கையை தங்களின் சுயசிந்தனைக்கு பரிசீலனைச் செய்து அதன் அகம், புறங்களை ஆழமாக ஆய்ந்து, அதன் மெய்களை உணர்ந்து சமயங்களை அல்லது கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அல்லது மாற்றிக் கொண்டு வாழ்கிறார்கள்.

தேடல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத உள்ளுணர்வு. தேடப்படுவதில் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறோம். பலருக்கு பொருளாக இருக்கும், சிலருக்கு அருளாக இருக்கலாம் இன்னும் சிலருக்கு காதல் இப்படி நிறைய இருக்கும். யாருக்கு எது தேவையோ அதைத் தேடிக் கொள்கிறோம்.

ஆன்மீகத்தேடல் என்பது எல்லோருக்கும் ஏற்படுவதல்ல. ஏற்படாததற்கு காரணமும் இருக்கிறது தங்களுடைய அன்றாட நடைமுறை வாழ்க்கையில் சில செயல்பாடுகளை கைவிடப்பட வேண்டி இருக்கலாம் என்ற பயத்திலேயே பலர் ஆன்மீக சிந்தனையின் பக்கம் நெருங்குவதில்லை.

ஆனால் ஆன்மீக குருமார்களின் உரையாடல்கள், கட்டுரைகள், நூல்கள் இன்று பலரால் வாசிக்கப்படுகிறது, நேசிக்கப்படுகிறது. விலகிச் சென்றவர்கள் இப்பொழுது திரும்பிப் பார்க்கிறார்கள் விரும்பி ஏற்கிறார்கள் அதற்கு உறுதுணையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ஊடகங்கள்.போதிக்கக் கூடியவர்களில் பலர் நவின மகான்களாகவே இருக்கிறார்கள்.

சாதரண மனிதர்களிலிருந்து சாமானிய மனிதர்கள் வரை இன்று மகான்களின் சந்திப்புக்காக காத்திருக்கிறார்கள். சந்திக்கப்படுபவர்கள் எல்லாம் மகான்களா?
மகான்களை எதற்காக சந்திக்க வேண்டும்?

இறைத் தேடலினால் சூஃபிகளையோ, மகான்களையோ பலர் சந்திப்பதில்லை. இந்த உலக ஆதாயத்தின் நிமித்தத்தினால், தங்களின் இல்வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தேவையினால், பிரச்சனைகளினால் மகான்களை சந்திக்க செல்கிறார்கள்.

செல்லக் கூடியவர்களின் பிரச்சனைகள் உலகதாயமாக இருப்பதினால் பதில் சொல்லக்கூடியவர்கள் மட்டும் முற்றும் துறந்த முனிவராக இருப்பார்களா என்ன?
கள்ளத்தனமும், வில்லத்தனமும் கொண்டவர்களால் உண்மைத்தனமான மகான்களை எப்படி அடையாளங் காணமுடியும்.?

குடும்பப் பிரச்சனைக்கு கோவிலுக்கு செல்வதைவிட குடும்பத்தார்களுடன் கூடி பேசினால் பிரச்சனை முடிந்துவிடும் அல்லவா? பிரச்சனை எங்கிருக்கிறதோ அங்கு பேசுவதை விட்டு விட்டு எங்கோ போய் பேசிக் கொண்டிருந்தால் பிரச்சனை எப்படித் தீரும்?

நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை எல்லோரும் நம்புகின்றோம்; நம்பிக்கைக்குரிய அந்தசக்தியை வாழ்நாள் முழுவதும் நம்பிக் கொண்டே இருக்கின்றோமே தவிர அதை அறிந்திட முனைவதில்லை. அந்த அறியாமைதான் பல நவீன மகான்களிடம் நம்மை சிக்கவைக்கிறது. உண்மையான இறைத்தேடல் இருந்தாலே சிறந்த குருவிடம் மகானிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும்.

மகானைப்பற்றி யாரும் கூறினால் அவர் என்ன அதிசயத்தை நிகழ்த்தக் கூடியவர் என்பதை சொல்லக்கூடியவரின் விரிவுரையில் கேட்பவரின் செவிகள் நம்பமறுக்கும் அளவிற்கு கைகளைத் திறந்தால் மலர் வருகிறது, மணம் வருகிறது, வாயைத் திறந்தால் ஆப்பிள் வருகிறது, அல்வா வருகிறது என்றும் அடுக்குவார்கள். அப்படிப்பட்டவர்களிடமிருந்து ஞானத்தைத் தவிர மற்ற அனைத்தும் வெளிவருவது அதிசயமில்லை.

இன்று பல மகான்கள் என்று சொல்லக்கூடியவர்களிடமிருந்து உண்மையைத்தவிர மற்ற எல்லாமும் வருகிறது என்பதுதான் உண்மை.
மகான்களிடம் அதிசயத்தைத் தேட வேண்டுமா? அறிவைத் தேட வேண்டுமா? என்பது பலருக்கு தெரிவதேவே இல்லை.

பெரும்பாலும் தோற்றங்களைக் கண்டு ஏமாந்து விடுகிறோம்; காவியும், தாடியும் பலரின் மனதை நம்பவைத்துவிடுகிறது. சில அபாரமான செயல்களைக் கண்டு மனதை ஒப்படைத்து விடுகிறோம்; அவரை மகானாக ஏற்றுக் கொண்டு விடுகிறோம்.பிரச்சனைகளை கொட்டிவிடுகிறோம், நோய்களை சுட்டிக்காட்டுகிறோம். மருத்துவத்தினால் குணமடைய வேண்டிய பிணிகளை மகான்களினால் குணப்படுத்த முயலுகிறோம்.

வைத்தியருக்கும் மகான்களுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களும்
ஜோசிருக்கும் மகான்களுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களும் நிறைந்திருப்பதினால் மகான்யார் ? மகன் யார்? என்ற வித்தியாசம் தெரியாதவர்களாய் இருக்கிறார்கள்.

ஒரு சூஃபி கூறினார்
அறிவைத் தேடுபவர் ஆயிரத்தில் ஒருவர்; குருவைத் தேடுபவர் கோடியில் ஒருவர்; கருவை அறிந்தவரை காண்பதும் அறிது என்று.

இன்று மகான்களாக, மகரிசிகளாக, மார்க்க வித்தகர்களாக பல பட்டங்களோடு பவனி வருபவர்கள் கருவை அறிந்தவர்களா? என்ற கேள்விகள் நம்முள் எழுவதே இல்லை என்றால் நம்மில் அதைப்பற்றிய தேடலோ, அறிவோ இல்லை என்பது தானே உண்மை.

வேதத்தை வைத்து எவ்வளவு வேண்டுமானாலும் வியாக்கியானம் செய்யலாம் வியாக்கியானம் செய்பவர்களெல்லாம் கருவை அறிந்தவர்களா?

மகானிடமிருந்து பெறவேண்டிய அறிவை நாம் பெறவேண்டுமே தவிர
நம்மிடமுள்ள குப்பைகளை அவரிடம் கொண்டிக் கொண்டிருந்தால்
எதையும் பெற்று வரமுடியாது.

ஒரு மகானிடம் சென்று நாம் அறிவுப் பெறவில்லை என்றால் நம்மிடம் அறிவுத்தேடல் இல்லை என்பதா? மகானுக்கு இல்லை என்பதா?
மகானுக்கு இல்லை என்பதை அறிந்து கொள்ளக் கூடிய அறிவு நம்மிடம் இருந்தால் …மகான் யார்?

இன்று பலர் இப்படித்தான் இருக்கிறார்கள் அறிவைத்தேடி குருவை நாடியவர்கள் குருவுக்கு கட்டுப்படவேண்டும் அப்போதுதான் நம் அறிவுத்தேடல் நிறைவு பெறும்.
குருவை மிஞ்சுபவர்களாக இருந்தால் எதையும் கற்றுக் கொள்ள முடியாது.
அறிவுத்தேடலின்றி வேறு ஏதும் தேடுபவர்களாக இருந்தால் கருவை அறிந்த மகான்களிடம் நிலைத்து நிற்க முடியாது. விரட்டப்படுவார்கள் அல்லது விலகிச்செல்வார்கள்.

உண்மையான மகானைத் தேடுங்கள்…உண்மையைத் தெளிவுபெறுங்கள்….!

Thursday, December 10, 2009

மனித நேயத்தைக் காக்கும் மனிதர்கள்


இறை என்பது வாழ்க்கையின் அங்கம். சிலர் மறுக்கலாம் பலர் ஏற்கலாம்.
மறுக்கப்படுவதும்,ஏற்கப்படுவதும் அவரவர்களின் நம்பிக்கையும்,அறிவுத் தெளிவையும் பொருத்தது.
இருப்பதை இல்லை என்று கூறுவதும்,இல்லையை இருக்கிறது என்று வாதிப்பதும் இன்று பலருக்கு வாழ்க்கையாக இருக்கிறது. இருப்பது இருக்கிறதுதானே அதை எவ்வளவு காலத்திற்கு இருக்கிறது,இருக்கிறது என்று வாதிப்பது இல்லையும் அப்படித்தான்.

இருந்தாலும் இல்லை என்றாலும் மனிதன் மனிதனாக வாழ்ந்தாக வேண்டும்.ஒரு கட்டுப்பாட்டுக்குள் மனிதன் அடங்கவேண்டும். தனது செயல்களை யாரோ கண்காணிக்கின்றார்கள் அது இறையோ அல்லது இயற்கையோ என்ற உள் உணர்வு அவனை உசுப்பிக் கொண்டிருக்க வேண்டும். ஒன்றைச் சார்ந்து வாழக்கூடியவர்கள் நூறு சதவீதம் அதைச் சார்ந்து வாழ்ந்து விட்டால் அவர்களால் மற்றவர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை. அதை முழுமையாகப் கடைபிடிக்காமல் நானும் மனிதன் தான் தவறு செய்யக் கூடியவன்தான் என்று வாதம் செய்யக் கூடியவர்களால் பலருக்கு தொந்தரவு இருக்கிறது.

மனிதன் மனிதனாக வாழ்வதற்காக இன்று வரையில் எத்தனையோ உபதேசங்கள், எத்தனையோ வழிகாட்டல்கள், எத்தனையோ வழிபாடுகள் இத்தனை இருந்தும் இன்னும் கிமு, கிபி, ஹிஜ்ராவையும் தாண்டி நவீனம், அறிவியல் என்று மனித அறிவு வளர்ச்சி அடைந்துக் கொண்டிருக்கின்ற பின்பும் முழுமையாக மனிதம் வளரவில்லை, மனித நேயம் மலரவில்லை என்றால் குறை எங்கிருக்கிறது.

மனித நேயத்திற்கு பாதகம் விளைவிக்க கூடியவர்கள் இறைநம்பிக்கை அற்றவர்களா?, இறை நம்பிக்கையாளர்களா?, மதங்களை சார்ந்தவர்களா?, மதமே இல்லாதவர்களா ? யார் என்று ஆய்வு செய்தால் ஏதோ ஒன்றை சார்ந்தவர்களாக ஒரு காரணத்தை கற்பிப்பவர்களாகதான் இருக்கிறார்கள்.

எங்கோ ஒரு இடத்தில் மனிதநேய மாநாடு போடுவதை விளம்பரம் செய்கின்றோம்.
மதநல்லிணக்க விழாவை பிரகடணம் படுத்துகின்றோம் எதற்காக?
ஒற்றுமையை மனித நேயத்தை வளர்ப்பதற்கு அல்லவா?

உலகம் தோன்றி எத்தனைஆண்டுகள்?,
உயிர்கள் தோன்றி எத்தனை ஆண்டுகள்?,
தீர்க்கதரிசிகள் மறைந்து எத்தனை ஆண்டுகள்?,
வேதங்கள் தோன்றி எத்தனை ஆண்டுகள்?
ஆனால் இன்றும் தீர்க்கதரிசிகளின் வேலையை பல மதத்தவர்களும் செய்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆண்டுகள் கடந்து விட்டன; ஆனால் மனித நேயம் இன்னும் தத்தளித்துக் கொண்டுதானே இருக்கிறது. எல்லா மதங்களும் மனிதநேயத்தை தான் போதிக்கிறது என்பது திண்ணம். மதங்களை பின்பற்றக் கூடியவர்கள் முழுமையாக பேனாததின் வெளிப்பாடுதான் இன்று மனிதநேய மாநாடுகள் மத நல்லிணக்க விழாக்கள்.

பெரும்பாலான உபநியாசர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கொள்கைகளை அல்லது கருத்துக்களை முழுமையாக உள்வாங்கி விளங்கி அதை தங்களின் வாழ்க்கையாக்கிய பின்னரே மற்றவர்களுக்கு போதனை செய்ய வேண்டும்; ஆனால் பெரும்பாலோர் மற்றவர்களுக்கு போதிப்பதோடு சரி. கருத்து விவாதங்களுக்காக காலங்களை கடத்துகிறார்களே தவிர பேணுதல் என்பது நம்மிடையே மிகக் குறைவாகதான் இருக்கிறது.

மனிதன் மனிதர்களை நேசிக்கவேண்டுமானால் அவன் தன்னை முழுமையாக அறியவேண்டும். அறிதலில் மேம்புல் மேய்ந்தால் நேசம் என்பது வேசமாகவே இருக்கும். வாழ்க்கை நாடகத்தில் ஒவ்வொரு பாத்திரத்திற்க்காக நடித்துக் கொண்டிருக்க வேண்டும். இன்று பலரும் நடித்துக் கொண்டிருக்கின்றோம். உண்மையான அன்போ நேசமோ பண்போ நம் எல்லோரிடமும் குறைந்தே இருக்கிறது.

இறைவணக்கத்தை முழுமையாக கடைப்பிடிக்க கூடிய ஒருவர் தாகத்துடன் நிற்கும் ஒரு நாய்க்கு தண்ணீர் கொடுக்காமல் சென்றால் அவரின் வணக்கம் யாரை திருப்தி படுத்துவற்காக வணங்கப்பட்டது?

எந்த வேதங்களை வாசித்தாலும் வாசிப்பவரின் அறிவுக்கேற்ப அவரின் புரிதல் இருக்கும். வேதத்திற்கு வியாக்கியானம் சொல்லக் கூடியவர்களிடமும் அப்படித்தான். நானும் படித்தேன், நானும் புரிந்தேன் என்று வாதங்கள் தான் வழுவாகிக் கொண்டிருக்கிறதே தவிர உண்மையை உணர்வதற்கு முயற்சிகள் என்பது மிக மிக குறைவு.

பிறந்த குழந்தை தாயின் மார்பகத்தில் பாலை சப்பிக் குடிக்கிறது. ஆனால் சப்பினால்தான் பால் வரும் என்று அந்த குழந்தைக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்.

பிறக்கும் குழந்தை அறிவுடன் பிறக்கிறது, அன்பை நேசக்கிறது, கவுடு, சூது தெரியாது. கோபத்தை நாம் வெளிப்படுத்தினால் குழந்தை அழும். வன்மையை விரும்புவதில்லை அதன் தொடக்கமே அன்பு பாசம் நேசம் ஆனால் நாளடைவில் அது மறந்து போனது எப்படி? அன்பே உருவான குழந்தைக்கு மனித நேயத்தை போதிக்க வேண்டிய அவசியம் ஏன்? எது மறக்கடித்தது?

ஒரு மகான் தன் மாணவர்களுடன் காட்டுக்குள் செல்கிறார். செல்லும் வழியில் மலங்கள் கிடக்கிறது இதைப் பார்த்த மாணவர்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒடினார்கள். இதைக் கண்ட மகான் அங்கேயே நின்றார் மாணவர்கள் தூரம் சென்று மகானைப் பார்க்கிறார்கள். மலத்தின் பக்கத்திலேயே மகான் நிற்பதைக் கண்ட மாணவர்களுக்கு வியப்பாக இருந்தது.

மாணவர்கள் மகானை நோக்கி வந்தார்கள் ஒரு மாணவர் மகானிடம் கேட்டார்.
இந்த அசிங்கத்தின் துர்நாற்றம் தாங்க முடியாமல் நாங்களெல்லாம் ஒடிப்போனோம் நீங்கள் மட்டும் எப்படி இங்கேயே நிற்கிறீர்கள்? என்றார்.

அதற்கு அந்த மகான் இந்த மலம் என்னுடன் பேசியது என்றார்.மாணவர்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. என்ன பேசியது? என்று ஆர்வத்துடன் கேட்டார்கள்.

நேற்று கடைகளில் அரிசியாக, காய்கனிகளாக, உணவு பண்டங்களாக இருந்தேன் இந்த மனிதர்கள் என்னை வாங்குவதற்கு ஆசையாக ஆவலாக ஒடோடி வந்து பணம் கொடுத்து வாங்கி என்னை சமைத்து, ருசித்து, ரசித்து அருகில் வைத்து உண்டார்கள். ஒரே ஒரு இரவு மட்டும் அவர்களின் வயிற்றில் தங்கினேன் காலையில் வெளியில் வந்த என்னைக் கண்டு மூக்கை பிடித்துக் கொண்டு ஒடுகிறார்கள் துர்நாற்றம், அசிங்கம் என்கிறார்கள் என்று என்னுடன் பேசியது என்றார்.
ஒரு மகானின் வாழ்க்கை சரித்திரத்தில் படித்தக் கதை.

நாம் இன்னும் மாணவர்களாகதான்த் இருக்கிறோம்.எதை அசிங்கம் என்று நினைக்கின்றோமோ அதில் எத்தனை உண்மை இருக்கிறது. எதையும் ஆழமாக சிந்திப்பதில்லை. வலி என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். ஒரு உண்மையின் கீழ்தான் இந்த உலகம்.
மதங்களை நேசிக்குமளவு அதை முழுமையாக புரிதலும் அவசியம்.
மறந்துபோன அன்பை நினைவுக் கொள்வோம் மனிதர்களை நேசிப்போம் மதங்கள் நம்மை நேசிக்கும்.