உங்கள் வருகைக்கு நன்றி...

Sunday, December 26, 2010

ஆடும் பொறுமையும்

சென்ற 24/12/2010 துபாய் வானலை வளர் தமிழ் இலக்கிய அமைப்பின் தமிழ்தேரின் 47வது மாதஇதழ் வெளியீட்டு விழாவில் எனது இலக்கிய நண்பர் கீழைராஸா தனது உரையிலே நான் எழுதிவரும் இந்த பாலை அனுபவ கட்டுரையைப் பற்றி அறிமுகம் கொடுத்தார்.
அவர் கூறிய சிலவரிகள் “எதையும் மறைக்காமல் எழுதிவருகிறார் நானாக இருந்தால் மறைத்துதான் எழுதி இருப்பேன்” - என்று என்னைவிட வெளிப்படையாக அவர் சொன்னவிதம் அவரை உயரப்படுத்தியது.

மறைத்து எழுதினால் அதில் அனுபவம் வெளிப்படாது கற்பனை மிகைத்து கதையாக இருக்கும். எதை மறைப்பது? மறைக்குமளவு அதில் என்ன இருக்கிறது. மறைக்கப்பட வேண்டிய விசயங்கள் எத்தனையோ அம்மணமாக உலாவரும்போது அம்மணமாக சொல்லவேண்டிய விசயங்களுக்கு ஏன் பட்டுத்திரை? தமிழ்தேர் நிகழ்ச்சியில் அறிமுகம் தந்தமைக்கு நன்றி ராஸா.

* அத்திக்கடை சிகாபுதீன் எனக்கு டெலிபோன் செய்து பேசினான். இவன் பேசும்போது
நாசூகா எழுதக்கூடாதா? என்றான்.
செய்த வேலையை சொல்வதில் என்ன நாகரிகம்? நாம் நாகரிகமாக செய்தவேலைகள்தானே அது! இன்று வேலைமாறினாலும் நம்முடைய நினைவில் அது மறையவில்லையே. அதை நினைத்துப்பார்க்கும்போது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது நண்பா!
*************************************************************************************

எனக்கு 30 அமீரகத்திற்கு 39

இது ஒரு பாலை அனுபவம்

நண்பன் சிகாபுதீன் வேலைசெய்யும் அரபியின் உறவினர்ருக்கு ஆள் தேவைப்பட்டதால் அங்கு பணியில் அமர்ந்தேன். இது வீட்டுவேலை அல்ல ஆட்டு மந்தை அதாவது ஆடு வியாபாரம்.
துபாய் ஹமரியா போர்ட் பக்கத்தில் ஆட்டுச் சந்தை இருந்தது பெரும்பாலும் இதில் ஈரானியர்கள் தான் அதிகமாக வேலைசெய்தார்கள் அதில் சில இந்தியர்களில் நானும் ஒருவன்.

ஆட்டுமந்தையில் என்னுடன் பணிப்புரிந்த மதுக்கூர் ஜலீல் இவரை எனது அரபி கேப்டன் என்று தான் அழைப்பார். இவரை மதுக்கூர் மக்கள் எம்ஜியார் என்று அழைப்பார்கள். இவர் எம்ஜிஆரின் தீவிர விசிறி அதனாலேயே இவருக்கு இந்த செல்லப்பெயராம். ஏதாவது நான் எழுதிக் கொண்டே இருப்பதினால் என்னை குருஜி என்று அழைக்கும் பழக்கம் கேப்டனிடம் இருந்தது. இப்பவும் இவர் துபையில் தான் இருக்கிறார் சில தருணங்களில் சந்தித்துக் கொள்வதுண்டு இப்பவும் அதே குருஜி தான்.

பலநாடுகளிலிருந்து ஆடுகள் இறக்குமதி செய்து வணிகம் செய்வோம். பெரும்பாலம் இந்தியா குஜராத்திலிருந்தும் பாக்கிஸ்தானிலிருந்தும் தான் ஆடுகள் அதிகமாக கப்பலில் வரும்.

இந்திய ஆட்டைவிட பாக்கிஸ்தான் ஆடு விலை அதிகம்; அதேபோல் இந்திய ஆட்டைவிட ஆஸ்தேரிலியா ஆட்டின்விலை குறைவு; ஆஸ்தேரிலியா ஆடு கம்பளி போர்த்தியதைபோல இருக்கும் ஆனால் கொழுப்பு ரொம்ப அதிகம் அதனாலேயே இந்தியர்களை அவ்வபோது தாக்குகிறது.

ஹவுஸ்பாய் வேலையைவிட இந்த வேலை பிடித்தமானதாக இருந்தது வெளிஉலகை பார்க்க ஏதுவாக இருந்தது. தீர்க்கதரிசிகள், மகான்கள் எல்லாம் பெரும்பாலும் ஆடுகள் மேய்த்திருக்கிறார்கள் என்று படித்திருக்கிறேன்; பொறுமையுடையவர்கள் மட்டுமே ஆடுகள் மேய்க்க தகுதியானவர்கள் என்பதை அனுபவரீதியாக தெரிந்துக் கொண்டேன் அதனாலேயே நீண்டநாள் இந்த வேலையில் நீடிக்கவில்லை.

இந்த பணிகளுக்கிடையே முதன்முதலாக 23வது வயதில் “டெலிபோன் டைரி” என்ற நாவலை எழுதினேன். இது முழுக்க முழுக்க ஆட்டு மந்தைகளுக்கிடையில் எழுதப்பட்ட துப்பறியும் நாவல்.

அதை நூல் வடிவில் கொண்டுவருவதற்கு மயிலாடுதுறை அசோகன் என்ற ஆசிரிய நண்பர் பெரிதும் உதவினார். இன்று அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை அவருடைய தொடர்பு தொடரவுமில்லை. அந்த நாவல் நூலாக கொண்டு வந்து துபையில் பல கடைகளில் விற்பனைக்கு போட்டுள்ளேன். அந்த நூல் சிலரை கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் மாற்றி இருக்கிறது.

அப்படி என்ன பெரிய விசேசமான நூல்ன்னு நினைக்கிறீங்களா? எந்த விசேசமுமில்ல இவனெல்லாம் நாவல்ன்னு எதையோ கிறுக்கிருக்கான்னு என்னை விமர்சித்து புனைப்பெயரில் கடிதம் எழுதிய தஞ்சைக்கு அருகில் வல்லத்தைச் சேர்ந்த ஷேக்அப்துல்லா துபையில் நல்ல நண்பனாக மாறினார். எனது நாவலைக்கண்டு அவர் ஒரு கவிதை நூல் வெளியிட்டார்.

எனது சகோதரனின் திருமணத்திற்காக மற்றும் விடுமுறையை கழிப்பதற்கும் தாயகம் செல்ல தயாரானேன் சென்னைக்கு நேரடி விமானம் அப்போது இல்லை.

பம்பாய் (மும்பை) வழி செல்வதற்கு PANAM AIRLINE சில் பயணச்சீட்டு தயாரானது.(இப்போது இந்த விமானச் சேவை இல்லை) இரவு 10.30 மணிக்கு என்னை வழியனுப்ப வந்த நண்பன் சிகாபுதீன் மற்றும் சில நண்பர்களுடன் விமான நிலையத்தில் உடமைகளை எடைபோட்டு விமானத்தில் அமர்வதற்கான இருக்கை எண் அட்டையை பெற்றுக் கொண்டு நண்பர்களிடமிருந்து பிரியா விடைப்பெற்று செல்லுமுன் சிகாபுதீன் சொன்னான் "டேய் எங்க வீட்டுக்கு மறக்காமல் போய்வரனும்" என்று சம்பர்தாயமாக அவன் கூறினாலும் அவனுடைய வீட்டுக்கு வாங்கித்தந்த சாமான்களை கொடுப்பதற்கு மட்டுமல்ல சிகாபுதீனின் அன்பு தகப்பனார் செவத்தப்பிள்ளை முஹம்மது ஹனீபா அவர்களின் அன்பை கடிதத்தின் மூலம் பெற்றவன் என்பதினாலும் அவரை தந்தையாக நான் எண்ணுவதனாலும் கட்டாயம் சென்று வருவேன் என்ற உறுதி மொழியுடன் நண்பர்களிடமிருந்து விடைப்பெற்று சுங்க பரிசோதனைக்கு தாயகம் செல்கிறேன் என்ற சந்தோச எண்ண அலையில் சென்றேன்.

என்னை வழியனுப்பிவிட்டு கனத்த மனதுடன் நண்பர்கள் வீடு திரும்பினார்கள். நான் எல்லா சோதனைகளிலிருந்தும் விடுபட்டு விமானத்தில் அமர்ந்தேன். குறித்த நேரத்தில் விமானம் புறப்பட்டது அரைமணி நேரம் பறந்திருப்பேன் உணவு வழங்கிக் கொண்டிருந்தவர்கள் திடீரென நிறுத்திவிட்டு எல்லோரையும் பெல்ட் போடும்படி அறிவுறுத்தினார்கள் விமானப் பணிப் பெண்களிடம் ஒருவித பதட்டம் தெரிந்தது.

அவசரமாக விமானம் மீண்டும் துபை விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்டது…

ஏதோ பிரச்சனை இருக்கு தொடர்வோம்….

Tuesday, December 21, 2010

வேதம் தந்த வேகம்

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 தொடர்- 7

இது ஒரு பாலை அனுபவம்

தாயகத்தை விட்டு வந்து இரண்டு ஆண்டுகளை கடத்தி விட்டேன் ஆனால் சம்பாதிப்பு ஒன்றும் பெரிதாக இல்லை பெரிதாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆவல் ஆர்வமும் இல்லை அலைச்சல் தான் அதிகம் இருந்தது என்றாலும் இளம் கன்றுக்கு களைப்பு தெரியவில்லை.

இந்த நேரத்தில் சரியாக எனக்கு யாரும் வழிகாட்டவுமில்லை அப்படிபட்டவர்களை நான் சந்திக்கவுமில்லை.

அந்த இளம்வயதில் யாருடைய கட்டுப்பாட்டையும் அறிவுரையும் ஏற்றுக்கொள்ளும் மனோ நிலை எனக்கு இல்லை ஆனால் மற்றவர்கள் அறிவுரை சொல்லி திருந்தக்கூடிய வழியில் என் வழி இல்லை.
இப்படி இல்லை இல்லை என்று நாத்திகர் மாதிரி சொன்னாலும் ஏதும் இல்லாமல் இல்லை என்று சொல்லவில்லை.அதாவது இருந்தால்தானே எதையும் இல்லை என்று சொல்லமுடியும்.

வெறும்பாறையில் தான் சிற்பம் இருக்கிறது என்பார்கள் நான் பாறையாக இருக்கிறேன் என்னை செதுக்குவது யார்?

இதோ அன்னையின் மடியில் சப்பி பால் குடித்திக் கொண்டிருக்கும் சிசுவிடம் சப்பினால்தான் பால் வரும் என்ற வழிகாட்டலை சொல்லிகொடுத்தது யார்?

இப்படி வழிகாட்டல் என்னிடமே வைத்துக்கொண்டு எனக்கு யாரும் வழிகாட்டவில்லை என்று இங்கு நான் புலம்புவது எவ்வளவு பெரிய அபத்தம்.
என் பிடரியின் நரம்பிற்கும் மிக சமீபமாக இப்பவனைவிட எனக்கு சமீபம் வேறு யார் இருக்கமுடியும்?

மேல்நோக்கியே சிந்தனையையும், எண்ணத்தையும் வளர்க்க பழக்கப்பட்டிருக்கிறோம். அதனால்தான் இறைவா என்ற வார்த்தை வெளியில் வந்த உடனே கைகள் ஆகாயத்தை நோக்குகிறது. உலகக் கல்விக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஆன்மக் கல்விக்கு கொடுக்கப்படாததால் அனாச்சாரங்களும், அவநம்பிக்கைகளும் சமுதாயத்தில் மலிந்துவிட்டன.

துபை நைப் தமிழ்பஜாரில் ஒரு வெள்ளிக்கிழமை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது ஒருநபர் கையில் திருக்குர்ஆன் இருந்தது அது குர்ஆன்தானா என்று உறுதி செய்வதற்கு அவரை அனுகியபோது அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட குர்ஆன் என்று அவர் கூறியதும் என்னை மீறிய ஆவல் அதை ஆட்கொண்டது அதை எனக்கு கொடுக்கும்படி கேட்டபோது அதை இந்தியாவிலிருந்து வரவழைத்தது என்றும் இதற்காக நீண்டநாட்கள் காத்திருந்ததாகவும் அந்த சகோதரர் கூறவே அதே ஆவல் என்னிடம் மிளிர்வதைக் கண்டு அந்த சகோதரர் என்னிடம் குர்ஆனைக் கொடுத்துவிட்டார்.

அன்று எனக்கு கிடைத்த ஆனந்தத்தை இங்கு வரிகளில் வார்த்தைகளில் கொண்டுவர முடியவில்லை. வீட்டு வேலையின் ஓய்வு நேரங்களில் திருக்குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பை வாசிக்கத் தொடங்கினேன்.

அதுவரையில் அலட்சியமாக இருந்த தொழுகை அச்சத்தை ஏற்படுத்தியது.பொழுது போக்கு பட்டியலில் இருந்த சினிமாவிற்கு திரையிடப்பட்டது. தமிழ் குர்ஆன் என்னை ரொம்பவும் பயமுறுத்தியது. ஐந்து நேரத்தொழுகையை கண்ட நண்பன் சகாபுதீனுக்கு ஆச்சர்யம் அவ்வபோது அவனிடம் ஆலிமாக நடந்துக் கொண்டேன்.

எனது அரபு என்னிடம் மிக மரியாதையாக நடந்துக் கொள்ள ஆரம்பித்தார். இறைவணக்கம் என் இதயத்தை சுத்தம் செய்தது மனம் போனபோக்கில் சென்ற சிந்தனைக்கு கடிவாளம் போடப்பட்டது.

ஒருநாள் எனது அரபு மகளுக்கு முதல் பிரசவத்தின் வலி ஏற்பட திருக்குர்ஆனிலிருந்து சூரத்துல் மரியத்தை (அத்தியாயம்) ஓதி தண்ணீர் கேட்டார்கள்.ஓதிக் கொடுத்தேன். என் மீது அவர்களுக்கு நன் நம்பிக்கையை திருக்குர்ஆன் பெற்றுத்தந்தது.

எனது சகோதரர் திருமணத்திற்கு செல்ல விடுமுறைக்கிடைத்து மூன்று ஆண்டுகளுக்குப்பின் தாயகம் செல்ல தேதி முடிவானது. தாயகம் செல்ல அனைவருக்கும் துணிமணிகள் வாங்க பட்ஜெட் போட்டபோதுதான் பொருளாதாரத்தில் எனது பலஹீனம் என்ன என்பதை யோசிக்க முடிந்தது. நான் நினைத்தமாதிரி எனது குடும்பத்தினருக்கு சமான்கள் வாங்கமுடியவில்லை அப்படி வாங்க வேண்டுமானால் அதற்காக வாங்கப்படுகின்ற கடனை அடைக்க இரண்டு ஆண்டுகள் உழைக்க வேண்டும் என்ற கணக்கு புரிந்தது.

விளையாட்டுதனமான வாலிப வாழ்க்கையில் எதிர்கால லட்சியங்கள் என்னவென்று கேட்டால் ஒரு தீர்மானமும் இல்லாத நிறைய சம்பாதிக்கனும் என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் சொல்லக்கூடிய இளைஞர்களை இன்றும் நான் பார்க்கிறேன்.

எல்லோருக்கும் பணக்காரனாக வாழ லட்சியமிருக்கிறது ஆனால் அவர்களில் பத்துகோடி சம்பாதிக்கனும் என்று குறிப்பிட்டு சொல்லக்கூடிய வாலிபர்கள் படித்தவர்களில் கூட குறைவாகதான் இருக்கிறர்கள்.

வாலிபம் தொடரும்....

Thursday, December 16, 2010

பாலை எல்லையில் கைதான தமிழர்கள்

எனக்கு 30 அமீரகத்துக்கு 39 - தொடர் 6

இது ஒரு பாலை அனுபவம்



என்கையை பிடித்த அதே நேரம் எனது அரபியும் இன்னொரு அதிகாரியுடன் பேருந்தினுள் நுழைந்தார். என்னை அவருடைய பணியாள் என்று கூறி பார்டரை கடப்பதற்கு பாஸ்சயும் காண்பித்தார் என்னை விட்டார்கள் இந்த பத்தூ அரபிக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது என்பதை அப்போது விளங்கிக் கொண்டேன்.
மீண்டும் அபுதாபியிலிருந்து அல்சிலா வரும்போது டெலிபோன் செய்யும் படி கூறினார் ஒருவழியாக பார்டரைக் கடந்து அபுதாபி சிட்டி வந்து சேர்வதற்கு சுமார் ஐந்து மணிதுளிகள் ஆகிவிட்டன.

பல நண்பர்கள் பணியின்றி ரூமில் இருக்கவே அவர்களிடம் அல்சிலாவின் மகிமையை எடுத்துக் கூறி உசுப்பேத்தினேன்.பலரும் அல்சிலாவிற்கு வருவதாக கூறினார்கள் அவர்களும் என்னைபோல கல்லி வல்லி கேஸ்.

அதென்ன கல்லி வல்லி என்கிறீர்களா? பாஸ்போர்ட் ஐடி ஏதும் இல்லாதவர்களை இப்படி அழைப்பது வழக்கம் இதன் பொருள் விட்டுதள்ளு என்பதே.

இந்த கல்லி வல்லி நண்பர்கள் பணியின்றி இருப்பதை பார்த்து சிலரைமட்டும் அழைத்துப்போக முடிவு செய்தேன் பார்டர் பிரச்சனையால் அனைவரையும் அழைத்துப்போக முடியவில்லை. அடுத்தக்கட்ட பயணத்தில் இன்னும் சிலரை அழைத்துப்போக ஏற்பாடு செய்தேன்.

மீண்டும் அல்சிலா செல்வதற்கு முன் அரபிக்கு டெலிபோன் செய்து நான் வருவதை உறுதி கூறவே அவரும் பார்டரில் நின்றார் எனது புதிய நண்பர்களையும் அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் சேர்த்து பாஸ் வாங்கி சென்றோம்.

புதிய நண்பர்களுக்கு உடனடியாக வேலையும் கிடைத்தது அல்சிலா ஏரியாவில் தமிழ் அலை வீசத் தொடங்கியது. மலையாள சகோதரர்களுக்கு பெருத்த ஆச்சரியம்
ஒரு அண்ணா வந்த இடத்துல இப்போ இத்தன அண்ணாவ அழைத்து வந்துறிக்கீங்களே ஆச்சரியமாக கேட்டார்.

இது ஒன்னும் அச்சரியமில்ல அண்ணா! சந்திரமண்டலத்துக்கு போன நீல் ஆர்ம்ஸ்டிராங் அங்கு ஆச்சிரியப்பட்டு போனாராம்…ஏன்னா அவருக்கு முந்தி மலையாளி அங்கு சாயா வித்தாரதாம். நாங்க இங்கு வருவதற்கு முந்தி நீங்கதானே இருக்கீங்க. அதனால உங்களுக்குதான் லாபம் எங்களிடமிருந்து வியாபாரம் நடக்குமே என்றதும் ஆமா ஆமா என்று அமோதித்தார்.

சில தினங்களில் அபுதாபியிலிருந்து சில புதிய தமிழ் நண்பர்கள் அல்சிலா வருவதற்கு முன் அறிவிப்பின்றி பஸ்சில் வந்து பார்டரில் இறங்கி பாஸ் வாங்காமல் அதைக் கடந்து செல்ல அதை பார்த்த சிஐடி அவர்களை கைது செய்தார் என்ற செய்தி கிடைத்தது உடனே எனது பத்தூ இடம் கூறினேன் அவரும் அவர்களை வெளியில் எடுக்க முயற்சித்து ஒரே ஒருவரை மட்டும் விடுவதாக கூறினார்கள்.

ஏன் ஒருவரை மட்டும் என்றால் அந்த ஒருவர் இங்கு பணி புரிகிறார் அவர் அபுதாபி சென்று திரும்பும்போது வேலை இல்லாதா புதியவர்களை அழைத்து வந்துள்ளார் வருவதற்கு முன் சொல்லி இருக்கவேண்டும் மாட்டிக்கொண்டார்கள்.

அவர்களை வெளி எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மனசுக்கு ரொம்பவும் கஸ்டமாக இருந்தது மலையாள சகோதரர்கள் கிண்டல் அடித்தார்கள் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக அல்சிலா வளர ஆரம்பித்தது நிறை அரபு குடும்பங்கள் அங்கு வாழ்வதற்கு வருகைத்தந்தார்கள். பள்ளிக்கூடம் மருத்துவமனை எல்லா இயங்கத் தொடங்கின.
வெறும் பாலைவனமாக இருந்த அந்த இடம் மனித நடமாட்டங்களை பெற்றது.
அங்குள்ள அரபிகள் தங்களுக்கு தேவையான சாமான்களை மாதம் ஒருமுறை அபுதாபியிலும் சிலர் டோஹா கத்தாரிலும் சென்று வாங்கி வருகிறார்கள்.

அபுதாபி நகரத்தைவிட அல்சிலாவிலிருந்து டோஹா கத்தார் மிக நெருக்கம்.
அரபு சிறுவர்கள் கார் ஓட்டும் அதிசயத்தை அங்குதான் பார்த்தேன். சுமார் பத்து பன்னிரெண்டு வயது சிறுவர்கள் படு சூப்பராக நின்றுக் கொண்டு அதாவது லேண்ட் குரோஸர் 4 வீல் டைரைவ் கார்களை ஓட்டினார்கள் அதன் தாக்கத்தில் ஓருமுறை எனது அரபு காரை எடுத்து ஒட்டி சுவற்றில் மோதவேண்டிய கட்டத்தில் எப்படியோ தப்பித்தேன்.

அந்த அல்சிலா கிராமத்தில் பலரும் கார் ஓட்டுகிறார்கள் சிலருக்கு லைசன்சு கிடையாது அந்த கிராமத்திற்குள் லைசன்சு சோதனைக் கிடையாது.

அங்குள்ள கட்டுமான பணியாளர்கள் தங்கும் இடங்களில் வீடியோவில் திரைப்படங்கள் திரையிடுவார்கள் பெரும்பாலும் ஹிந்திப்படங்கள் மட்டுமே. நாங்கள் சிரத்தை எடுத்து அபுதாபியிலிருந்து தமிழ்பட கேஸட்டுகளை வாங்கி அங்கு திரையிட்டோம் 300க்கும் அதிகமானவர்கள் படம் பார்ப்பார்கள் அதில் தமிழர்கள் பத்துபேர்கள் மட்டுமே.
கமல்ஹாசன் அப்போது ஹிந்திக்கு வந்த புதிது என்பதால் பலரும் கமலை நன்றாக தெரிந்திருந்தார்கள். அவர்கள் படம் பார்த்து இரசிக்கும்போது எனக்கு சந்தோசமாக இருக்கும் ஏதோ நானே ஹீரோவாக நடிப்பதுபோல எண்ணிக்கொள்வேன்.

சிலமாதங்களுக்குப் பின் அல்சிலாவிற்கு குட்பை சொல்லிவிட்டு நான் மட்டும் துபாய் வந்தேன். நண்பன் அத்திக்கடை சகாபுதீனைக் கண்டதும் சந்தோசம் கொண்டேன் நீண்ட நாள் பிரிந்த அந்த நட்பின் வலியும் மீண்டும் சந்தித்ததில் மனம் உண்டாக்கிய அதிர்வில் ஏற்பட்ட ஒளியும் எங்களின் நட்பை பலப்படுத்தியது.

இனிதான் எனது வாழ்க்கையின் திருப்புமுனைகள் அதனால் தொடர்வோம்.

Sunday, December 12, 2010

தமிழனைச் சந்தித்த தமிழர்கள்

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 - தொடர் 5


இது ஒரு பாலை அனுபவம்


மீண்டும் அண்டாவில் முழு ஆடுகளை வேகவைத்து தனியாக எடுத்து, பின் அரிசியை கொட்டி தம்போட்டு, இரண்டு நாட்களாக தண்ணீரில் ஊறிய கோதுமையை கறியுடன் கிளறி, ஹரீஸ் என்ற ஒருவகை கஞ்சி செய்து அதை துடுப்பால் நெஞ்சு வலிக்க கறியின் முள் கரையும் வரையில் கிண்டி, பதம் பார்த்து இரண்டு நாட்களில் இரண்டு மாதவேலையை மூன்று பேர்கள் செய்து முடித்தோம்.

வேர்வை உளருமுன் அவர்களின் கூலியை கொடுத்துவிடுங்கள் என்று அருமை நபிகள் நாயகம் (ஸல் அலை)கூறி இருக்கிறார்கள் அவர்களின் பொன்மொழிக்கேற்ப அந்த கூலியை நாங்கள் கையில் பெற்றதும் எங்களின் உழைப்பு கலைப்பு அத்தனையும் பறந்து மறந்து போயின.

இந்த திருமண அனுபவம் புதியவை முன் அனுபவமே இல்லாமல் ஒரு கல்யாணத்தை முடித்துவிட்டோம் நம் ஊர்களில் பல திருமண இல்லங்களில் உணவு அருந்தியிருக்கிறோம் சமைப்பவர்களின் கஸ்டம் தெரியவில்லை அதை உணரும் வாய்ப்பு அரபு திருமணத்தில் கிடைத்தது

வழக்கம்போல சின்ன பண்டாறியாய் மாறிவிட்டோம். இனி எங்கு கல்யாணம் நடந்தாலும் எங்களை சமையலுக்கு அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தோம் ஆனால் ஏமாற்றமடைந்தோம்.
ஒருமுறை எங்கள் சமையலை உண்டவர்கள் மறுமுறை கூப்பிடுவார்களா என்ன?
(பாவம் அமீரகப்பதிவர் கூட்டம் என்னை பிரியாணிபாய் என்று இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்)

அல்சிலாவில் பொழுதுபோவது கஸ்டமாக இருந்தது அங்கு முனிசிபாலிட்டி கேம்பில் தமிழர் இருக்கிறார் என்ற செய்தியை மலையாளி கூறினார்.
எங்களுக்கு ஆர்வமாக இருந்தது நாம் அவரைபோய் பார்க்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனால் அவரே எங்களைத்தேடி வந்துவிட்டார். எங்களுக்கு ஆச்சர்யம் எப்படி? என்று வினவினோம் அவருக்கும் மலையாளிதான் சொன்னாராம் ஊர் கும்பகோணம் என்றார்.

ஒரு தமிழன் இனனொரு தமிழனை சந்திப்பதில் எவ்வளவு ஆர்வமிருக்கிறது இவ்வளவு ஆர்வமிருந்தும் ஈழத்தமிழர்களை இழந்துவிட்டோமே என்ற வருத்தமிருக்கத்தான் செய்கிறது.
அவருடைய பேச்சில் தமிழைவிட மலையாள வாடை அதிகமாகவே வீசியது அவரிடம் கேட்டேன் நீங்கள் தமிழரா? மலையாளியா?

ஏன் அப்படி கேட்கிறீங்க? நான் மலையாளிகளுடன் கலந்திருப்பதால் மலையாளமே சரளமாக வந்துவிடுகிறது தாயகம் சென்றபோது என் குடும்பத்தினர்களிடமும் இப்படிதான் பேசினேன் இப்போது நீங்கள் வந்துட்டீர்கள் இனி தமிழ் நன்றாக பேசுவேன் என்று தன் தாய் மொழியை மறந்த வேதனையை வெளிப்படுத்தினார்.

அந்த புதிய நண்பரிடம் பழைய வார இதழ்கள் கிடைத்தது மூன்று மாதத்திற்கொரு முறை அபுதாபி சென்று வருவாராம் அந்த சமயங்களில் தேவையான பொருட்களை வாங்கி வருவார் என்றார்.

எங்களைக் கண்டு ஆச்சர்யப்பட்டார் பாஸ்போர்ட், ஐடி ஏதும் இல்லாமல் இப்படி நீங்கள் வேலைப் பார்ப்பது ஆபத்தானது இந்த ஏரியாக்களில் சிஐடி அதிகம். இந்த பார்டரிலிருந்து சவூதி கத்தார் ஜோர்டான் செல்லக்கூடியது அதனால் வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார் உங்களுக்கு ஏதும் தேவை என்றால் என்னிடம் கூறுங்கள் நான் வாங்கி வருகிறேன் என்று சகோதர பாசத்துடன் பழகிய அவரை என்மனம் மறக்கவில்லை.

எங்களை அழைத்து அவருடைய கேம்பில் விருந்தும் கொடுத்தார் அவருடன் அவருடைய அறை தோழர்கள் மலையாள சகோதரர்களும் அவருடன் இணைந்து விருந்தில் கலந்து எங்களை அவர்களுடைய உறவினர்களைப் போல் கவனித்தார்கள்.

அல்சிலாவில் இருந்த சிலமாதங்கள் வரையில் அடிக்கடி நாங்கள் சந்தித்துக் கொண்டோம்.
அரபு இளைஞர்களுடன் ஒருமுறை கொமட்டிப் பழம் (வாட்டர் மிலான்) தோட்டத்திற்கு சென்றேன். நம்ம ஊரில் யாரு வீட்டு கொல்லையிலே யாரோ மாங்காய் பறிப்பார்களே அப்படி கொமட்டிப் பழம் பறிக்க அரபு இளைஞர்களுடன் சென்று பறித்து காவலில் இருந்த பாக்கிஸ்தானி சாச்சா எங்களை விரட்ட நாங்கள் ஓட அந்த வயது ஜாலி எல்லாம் இப்போ கிடைக்காது கிடைத்தாலும் இனிக்காது.

ஒருமுறை விடுமுறை எடுத்துக் கொண்டு அபுதாபி செல்வதற்கு ஆயத்தமானோம். எப்படி செல்வது என்று புரியவில்லை. அல்சிலாவிலிருந்து அபுதாபிக்கு பஸ் செல்கிறது ஆனால் கையில் ஐடி இருக்கனும் இருந்தால் மட்டுமே பஸ்சில் பார்டரை கடக்க முடியும் அதனால் அரபியிடம் கூறினேன்.

நான் பார்டர் வரையில் வருகிறேன் என்றார் நாங்கள் தயாரானோம் பஸ்சில் ஏறி பார்டர் வந்தோம் பஸ் நின்றதும் எங்களுடன் வந்த அரபி இதோ வருகிறேன் என்று கூறிவிட்டு இறங்கினார்.

சற்று நேரத்தில் பஸ்சில் ஐடியை பரிசோதிக்க பார்டர் செக்யூரிட்டி ஏறி ஒவ்வொருவராக சோதனைச் செய்ய எங்களுக்கு பயம் வந்தது கூடவே செக்யூரிட்டியும் வந்து விட்டார்.
ஐடியை கேட்க நான் கையை விரிக்க செக்யூரிட்டி என்கையைப் பிடித்தார்…

தொடர்வோம்..

Friday, December 10, 2010

பாலைவனத்தில் தமிழ் பறவை

எனக்கு 30 அமீரகத்துக்கு 39 -தொடர் 4

இது ஒரு பாலை அனுபவம்
அபுதாபியிலிருந்து சவூதி பார்டர் அல்சிலா என்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். சுமார் நாலரை மணிநேரம் காரில் பிரயாணம் செய்ய நேர்ந்தது. இந்த பார்டருக்கு வரவேண்டுமானால் பாஸ்போர்ட் அல்லது லேபர் கார்ட் என்ற அடையாள அட்டைகள் வைத்திருக்க வேண்டும் ஆனால் அரபி தனது செல்வாக்கை பயன்படுத்தி எங்களை அல்சிலா பாடருக்குள் அழைத்துச் சென்றுவிட்டார்.

அது ஒரு சின்ன கிராமம் மொத்தமே இருநூறு வீடுகள் அனைத்தும் புதிதாக கட்டப்பட்ட வீடுகள் இன்னும் முழுமையாக குடிகள் வரவில்லை. அங்கு வீடுகள் வருவதற்கு முன் மலையாள சகோதரர்கள் வந்துவிட்டார்கள். அங்கு மலையாள டீ கடையும், ஒரு சின்ன குரோசரி கடையும் வைத்திருந்தார்கள்.

அந்த இடத்திற்கு வீட்டு சமையளுக்கென்று முதன்முதலாக நாங்கள் இருவர் மட்டுமே சென்றுள்ளோம் என்பதை பிறகு தெரிந்துக் கொண்டோம்.அழைத்து வந்த அரபி தனது வீட்டுக்கு ஒரு ஆளையும் அவருடைய நண்பர்களின் வீட்டுக்கு ஒரு ஆளையும் அனுப்ப திட்டமிட்டுள்ளார்.

எங்களை மஜ்லிஸில் (விருந்தினர் ஹால்) அமர வைத்துவிட்டு அவருடைய நண்பர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டார். நண்பர்களின் துணைவிமார்கள் நாங்கள் இருந்த இடத்திற்கு படையெடுத்து வந்துவிட்டார்கள்.

அவர்கள் எங்களை பார்த்தவிதம் நமது ஊரில் மாப்பிள்ளை பார்க்கும் பட்டாளம் போல இருந்தது இதில் போட்டிவேறு எனக்கு வேண்டும் உனக்கு வேண்டும் என்று!
ஏதோ ஒரு வழியாக முடிவாகி என்னையும் ஒரு அரபியும் எனது உறவினரான இக்பாலை ஒரு அரபியும் பக்கத்து பக்கத்து வீடுகளுக்கு பணியில் அமர்த்தினார்கள் எங்களின் பணிகள் துவங்கியது.

இந்த அரபிகளை காட்டுவாசிகள் அதாவது ஒரிஜினல் நாட்டுவாசிகள் என்று கூறுவார்கள் அதாவது பத்துஉ என்று அரபி மொழியில் கூறுவார்கள். பத்துஉ என்றால் கிட்டதட்ட ஒன்றுமே தெரியாதவர்கள் என்றும் நகரங்களை விரும்பாதவர்கள் என்றும் கூறுகிறார்கள்.
இந்த அல்சிலாவில் வாழக்கூடிய பெரும்பாலோர் பத்துஉ அரபிகள்தான். தினம் மாலையில் தங்களின் குடும்பத்தாருடன் பாலைவனத்திற்குள் சென்று விடுகிறார்கள்.

ஒவ்வொரு அரபிகளுக்கும் ஒரு எல்லையை வகுத்து கூடாரங்கள் அமைத்து அங்கு அவர்கள் ஒட்டகங்கள் வளர்த்து வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கும் கூடாரங்கள் அமைத்திருக்கிறார்கள் மாலையில் வந்து தங்கிவிட்டு காலையில் புறப்பட்டு கிராமத்திற்கு வந்துவிடுவார்கள் இதுதான் இவர்களின் தின வேலையாக இருந்தது.

இதனால் எங்களுக்கு பெரிதும் வேலையில்லை நாங்கள் பாலைவனத்திற்குள் செல்வதில்லை. எங்கள் பணி சமையல் அதைசெய்துக் கொடுத்தால் போதும் அதிகமாக ஓய்வு கிடைத்தது அதனால் லைசன்சு இல்லாமல் கார் ஓட்டக் கற்றுக் கொண்டேன்.

அரபிக்கு திருமண ஏற்பாடு நடந்தது அப்போது எங்களை பாலைவனத்திற்கு அழைத்துச் சென்று சமைப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள். நாங்கள் யோசித்தோம் கல்யாணம் என்றால் கூட்டம் அதிகம் இருக்கும், முழு ஆடுகள், ஒட்டகம் என்று சமைக்க சொல்வார்கள் வேலை அதிகம் இருக்கும் நாம் இருவர் மட்டும் போதாது ஆதலால் அபுதாபியில் உள்ள எனது நண்பர் தேரிழந்தூர் பஷீர் (கொல்லி) அவரை அழைத்துவர ஏற்பாடு செய்தோம் அரபி அபுதாபி சென்று அவரை அழைத்தும் வந்தார்.

இந்த கல்யாணத்திற்கு சீப்கொக் நாங்கள் மூவர்தான் பெரிய தொகையை அரபியிடம் பேசி அட்வாண்ஸ் வாங்கியாச்சு ஆனால் கல்யாணம் பாலவனத்திற்குள் அங்குதான் சமைக்கவும் வேண்டும் நினைக்கவே பயமாக இருந்தது.

நம்பள நம்பி இவ்வளவு பெரிய பொறுப்ப கொடுத்திருக்கானுங்களே என்ற ஒரு பதட்டம் இருந்தது. பத்துஉ என்பது சரியாகதான் இருக்கு இவன்களுக்கு ரூசி, மணம், பதம் என்பது எல்லாம் தேவையில்லை எதை ஆக்கி வைக்கின்றோமோ அதை சாப்பிடுவார்கள். என்பது அனுபவப்பட்ட உண்மை அதனால் இப்போதைக்கு அவங்களுக்கு நாமதான் பெரிய கொக் என்று நாங்கள் எங்களுக்குள் தீர்மானித்துக் கொண்டு பாலைவனத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டோம்.

சிலமணி நேரங்களில் பாலைவனத்தின் மையப்பகுதியில் விடப்பட்டோம். எங்கு திரும்பினாலும் மணல் திட்டுக்கள் இங்கிருந்து தப்பித்து போகவேண்டுமென்றால் ரொம்ப சிரமம் இந்த சூழ்நிலையை பார்த்த பஷீருக்கு பயம் வர ஆரம்பிச்சது “மாப்பள இவ்ளோபேருக்கும் நம்மாள சமைக்க முடியுமா? ஏதாவது இசுகு பிசகா ஆனா நம்பள இங்கேயே புதைச்சுடுவானுவோ” என்று என்னை பயமுறுத்துகிற வார்த்தையை சொன்னதும் அதுவரையில் தைரியமாக இருந்த எனக்கு உள்ளுக்குள் சின்ன பயம் வரஆரம்பிச்சது.
டேய் ஏண்டா இப்படி பயப்புடுறீங்க தைரியமா வாங்கடான்னு இக்பால் வார்த்தைகளால் தைரியம் ஊட்டினாலும் பஷீருக்கு பயம் போகவில்லை. சரி அடுப்பை ரெடிபண்ணுவோம் வா என்று பெரிய கற்களை முக்கோணத்தில் வைத்து ராட்சஷ அண்டவை அதன் நடுவில் வைத்தோம்.சமையலை கிண்டுவதற்கு அகப்பை பெரிது எங்களிடம் இல்லாததால் சதுரமான மரச்சட்டத்தை அகப்பையாக மாற்றினோம்.


முதலில் எட்டு ஒட்டகம் அறுத்து சமையலுக்கு வரவே பஷீர் அலறினான். எனக்கு தலை சுற்றியது. எட்டு ஒட்டகத்தை எப்ப சமைச்சு முடிக்கிறது? இரண்டு கிலோ ஆட்டுக்கறிய ஆக்குவதறதுக்கே இரண்டு மணிநேரம் ஆகும் என்று புலம்பினேன்.

இக்பால் தைரியம் கொடுத்தான் முடியும் என்று சொல்லி அண்டாவில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டோம்.தண்ணீர் சூடு வந்ததும் மூன்று ஒட்டகத்தை அதனுல் இறக்கி உப்பு மஞ்சள் தூள் பிஜார் பொடி போட்டு வேகவைத்தூம்.அவ்வபோது மரச்சட்டத்தால் ஒட்டகத்தை பிறட்டி பிறட்டி வேக வைத்தோம்.

சிலமணி நேரங்களில் ஒட்டகம் வெந்தமாதிரி தெரியவே மீதி உள்ள ஒட்டகத்தையும் அது மாதிரி செய்தோம்.ஒரு வழியாக ஒட்டகத்தை அவிச்சு பிரியாணிக்கு மேல் வைப்பதற்கு தயாராக இருந்தது.

அடுத்து ஆடுகள் வந்தது அதை பஷீர் எண்ணிக் கொண்டிருந்தான். டேய் எத்தனைடா என்றதும் இருப்பதஞ்சு என்றான். விழி பிதிங்கியது.

தொடர்வோம்...

Wednesday, December 8, 2010

எனக்கு 30 அமீரகத்துக்கு 39 - தொடர் 3

இது ஒரு பாலை அனுபவம்

ஒரு நபருடன் அன்சாரி எங்கள் அருகில் வந்து இவர்தான் எனது தம்பி என்று சொன்னபோது எங்களால் நம்பமுடியவில்லை. நாங்கள் திட்டம் தீட்டிய விசயத்தை கூறியபோது அன்சாரி நம்பவில்லை அவர் தம்பியிடமே நீங்க போன் செய்தீங்களா? என்று கேள்விகள் கேட்டு விளக்கம் அளித்து இறுதியாக ஏர்போர்ட் வந்துபோன சிலவை நாங்கள் ஏற்றுக் கொண்டோம் அதாவது நானே ஏற்றுக் கொண்டேன்.

இப்படி கலாட்டாக்கள் நிறைய நடந்தேறியக் காலம் அது. அரபி வீடுகளில் இரவு பத்து மணிக்கு மேல் எங்கும் வெளியில் செல்ல இயலாது சில நேரங்களில் வெள்ளிக்கிழமை அல்லாத நாட்களில் திரையிடப்படும் திரை படங்களுக்கு செல்வது கடினமாக இருக்கும் என்றாலும் அன்சாரி இடம் சினிமா டிக்கேட் பணத்தை லஞ்சமாக கொடுத்து விட்டு நான் கம்பியை நீட்டிவிடுவேன் அரபிகள் கேட்டால் நான் உறங்குவதாக சொல்லி சமாளிக்க கொடுத்த லஞ்சம் அது.

சினிமாவைப்பார்த்து விட்டு சுவர் ஏறிக் குதித்துதான் வீட்டுக்குள் வரவேண்டி இருக்கும் பலநாள் திருடன் ஒரு நாள் மாட்டுவதுபோல நானும் அரபி இடம் மாட்டி உள்ளேன்.
நமது ஊர்களில் அப்பாவிடம் திட்டுவாங்குவதுபோல இவர்களிடம் வாங்கிக் கொள்வது வழமையாகிவிட்டது.

எனது ஊர் நண்பர்கள் பக்கத்தில் ஓர் ஏரியாவில் பணிப்புரிவதாக சில நண்பர்கள் கூற அவர்களைத் தேடி கண்டுப்பிடித்து அலாவுவதில் எத்தனை இன்பம்.
சில ஹவுஸ்பாய்கள் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆவலில் தங்களின் ஸ்பான்சரை விட்டு வேறு இடத்தில் தெரியாமல் அதாவது ஓடிப்போய் வேலை செய்வார்கள் அப்படி செய்வதினால் மாதச்சம்பளம் ஸ்பான்சர் தருவதைவிட இரு மடங்கு மூன்று மடங்கு கூடுதலாக கிடைக்கும்.

அப்படி ஒருநாள் நண்பன் சிஹாபுதீன் சகோதரர் ஒடிப்போய் வேலைப்பார்த்த அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ள எனக்கும் அன்சாரிக்கும் அதே சிந்தனையாக இருந்தது.
இந்த சம்பளத்தில் வேலைப்பார்த்து நாம் எப்போது முன்னுக்கு வருவது அதனால் கம்பியை நீட்டிவிடலாம் என்று திட்டம் வகுத்தோம் நண்பன் சிஹாபுதீன் இடம் இதனால் உனக்கு ஏதும் பாதிப்புகள் வருமா? காரணம் நீ அடிக்கடி இங்கு வந்துபோவதினால் உனக்கு தெரியும் என்று அரபுகள் நம்புவார்கள் அல்லவா அப்படி வந்தால் நீ எப்படி சமாளிப்பாய் என்று பலவாறு கேள்விகள் கேட்டு அவன் கொடுத்த பதிலும் தைரியமும் அங்கிருந்து புறப்படுவதற்கு ஏதுவாக இருந்தது.

அன்சாரி சகோதரர் அபுதாபியில் பணிபுரிகிறார் அவருக்கு தகவல் சொல்லி எங்களை அழைத்துப்போவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஒருவெள்ளிக்கிழமை எப்பவும்போல் மதியம் பஜார் புறப்படுவதுபோல் சில பைகளில் மட்டும் துணிகளை எடுத்துக் கொண்டு - கொண்டு வந்த பேக்குகளை அங்கேயே விட்டு சென்றோம். பேக்குகளை மட்டுமா விட்டுச் சென்றோம் எங்கள் பாஸ்போர்ட்களையும் தானே விட்டுச் சென்றோம்.

இரவு புறப்பட்டு அபுதாபி வந்தடைந்தோம் தமிழர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து ஒரு பிளாட்டில் தங்கிருந்ததை பார்த்த மனம் சந்தோசமடைந்தது. தாயகத்தில் இருப்பதைப்போன்ற உணர்வைக் கொடுத்தது.

அங்கிருந்தவர்கள் பலரும் பல கம்பெனிகளில் வேலைப்பார்த்தார்கள் யார் யாருக்கு என்ன வேலை என்று கேட்டறிந்தேன். ஒவ்வொருவர்களும் ஒரு வேலையில் இருக்கிறார்கள் அவர்களுக்கென்று ஒரு வேலை இருக்கிறது ஆனால் எனக்கு நான் என்ன படித்தேன் எனக்கு என்ன வேலைத் தெரியும்? என்னுடைய எதிர்காலம் என்ன? எனக்கு யார் வழிகாட்டி? அப்போது தான் அம்மா சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

“படிப்புடைய அருமை உனக்கு இப்பத் தெரியாது நீ கஸ்டப்படும்போது நீ உணர்ந்து பார்ப்பாய். உன்னை சம்பாதிக்க வேண்டி வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை புத்திபடிக்கத்தான் அனுப்புகின்றோம்” என்ற வார்த்தைகள் என் எண்ணத்தில் வந்துபோயின.
தனது பிள்ளைகள் நன்றாக படிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு பெற்றோர்களிடமும் இருக்கிறது ஆனால் அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றமாக மாற்றிக் கொள்வதும் பெற்றோர்களே தான்.

பிள்ளைகளின் மேல் எதிர்பார்ப்புகளை மட்டும் வைத்திருந்தால் போதுமா? அவர்களுக்கு ஆர்வம் கொடுத்து வழிகாட்டுவது யார்? பிள்ளையை கண்கானிப்பது யார்? பள்ளிக்கூடம் சென்றானா? அல்லது வெளியில் சுற்றுகிறானா? படிக்கிறானா? பிட்அடிக்கிறானா? கட் அடிக்கின்றானா? அவனுக்கு அல்லது அவளுக்கு எதன் மீது அளவுகடந்த ஆர்வம்?அவனுடைய நண்பர்கள் யார்? அதிகமாக எந்த விளையாட்டை விளையாடுகிறான்? இப்படி ஒவ்வொன்றையும் ஆய்வு செய்த பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை அளிக்கவில்லை.

இப்படி எல்லாம் இன்று எனது பிள்ளைகளுக்கு நாளை அவர்கள் பதிவுபோடாத வண்ணம் செயல்படுவதற்கு முயற்சிக்கிறேன்.

அபுதாபியில் அன்சாரியின் சகோதரர் யாரிடமோ விசாரித்து எங்களை பெனியாஸ் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு சமையல் வேலைக்கு சேர்த்துவிட முயற்சி செய்தார்.
அந்த பெனியாஸ் என்ற ஊர் யமனிகள் அதிகம் வாழக்கூடிய இடமாக இருந்தது நம்மூர் அரசு காலனிகளைப்போல அபுதாபி மன்னர் அரசு ஊழியர்களுக்கு காலனிகள் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேல் கட்டிக் கொடுத்துள்ளார் அங்கு பல வீடுகளில் தமிழ் நண்பர்கள் தான் சமையல்காரர்களாக பணிபுரிகிறார்கள்.அங்குதான் எங்களுக்கும் வேலை கிடைத்தது.
இங்கு எனது முன்னால் நண்பர்களும் பணிபுரிந்ததினால் அவர்களுடன் ஜாலியாக பொழுது போனது.
ஆனால் அங்கு புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்தது அப்படிபட்ட நண்பர்கள் அங்கு குறைவு அதனாலயே அதிக நாட்கள் அங்கு எனக்கு தாக்குபிடிக்கவில்லை.

அங்கிருந்து இன்னும் கூடுதலான சம்பளத்திற்கு அபுதாபி பார்டருக்கு என்னையும் எனது உறவினரையும் ஒரு அரபி அழைத்துச் சென்றார்.

தொடர்வோம்…

Saturday, December 4, 2010

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 - தொடர் 2


இளமைப் பருவம் அதாவது 17 முதல் 21 வயது வரையில் உள்ள இளைஞர்கள், இளைஞிகளிடம் கவனமாக பெற்றோர்கள் இருக்கவேண்டும்; அந்த வயதில் எடுக்கக்கூடிய முடிவுதான் அவர்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்கும் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த வயதில் இளைஞர்கள் பெரும்பாலோர் தங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என்ற மனோபாவத்தில் தங்களது பெற்றோர்களுக்கு ஒன்றும்தெரியாது என்ற எண்ணத்தில் மிதப்பார்கள்.

இளைஞிகளோ தங்களைவிட அழகான பெண்கள் இந்த உலகில் யாரும் இல்லை என்ற மனோநிலையில் அடிக்கடி தங்களை அலங்கரித்துக் கொண்டு கண்ணாடிமுன் நின்று தங்களின் அழகை இரசித்துக் கொண்டு நிற்பார்கள்.
என்று மனோதத்துவ நிபுணர் டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் ஒருமுறை தனது உரையில் கூறினார்.

பெற்றோர்கள் என்செயல்களை கவனிக்க வேண்டிய வயதில் அவர்களிடமிருந்து வெகுதூரத்தில் நான் சம்பாதிப்பு என்ற பெயரில் இருந்துக் கொண்டிருந்தேன்.

இறைவனின் கருணையினால் எனக்கு கிடைத்த நல்ல நட்பும், எனது பெற்றோர்கள் நல்ல சூழ்நிலையில் வளர்த்த வளர்ப்பும், எனது மனோநிலையில் நல்ல சிந்தனைகள் தோன்றிக் கொண்டுடிருந்தன.

அந்த சிந்தனையின் தூண்டுதலே நல்ல நூல்களை படிக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டேன்.

பருவ வயது குறும்புகள் நிறையவே என்னிடம் இருந்தது.

ஒரே வீட்டில் என்னுடன் ஹவுஸ்பாயாக சீர்காழியை அடுத்த கோவில்புத்தூரைச் சார்ந்த அன்சாரி என்பவரும் வேலைப்பார்த்தார். நாங்கள் ஒரே வயதுடையவர்கள் அதனாலேயே எங்களுக்குள் அடிக்கடி போட்டிகள் நிறைய வரும்.

ஒருமுறை காலைநேரம் அரபு முதலாழி எங்கள் இருவரையும் அழைத்து காரில் பழங்கள் இருக்கிறது எடுத்துவாருங்கள் என்று அனுப்பிவைத்தார்.இருவரும் சென்று பழங்களை தூக்கிவருவதற்கு முன் ஒரு வாழைப்பழத்தை அன்சாரி சாப்பிட்டார், அதைப்பார்த்த நானும் ஒன்றை சாப்பிட்டேன், மீண்டும் அவர் இன்னொரு பழத்தை சாப்பிட்டார், உனக்கு இரண்டா நானும் சாப்பிடுகிறேன் என்று இப்படி போட்டி போட்டு அந்த இடத்தில் ஒருடஜன் பழத்தை சாப்பிட்டு முடித்தோம்.

பழங்களை கொண்டு வந்து வைத்ததும் அரபி எங்களை பார்த்தார். ஒருடஜன் வாழைப்பழம் குறைகிறதே என்று கேட்க; அன்சாரி என்னை கையை காண்பிக்க, நான் அவரைக் காண்பிக்க, அரபி எங்கள் இருவரையும் முறைக்க, இப்படி உண்பதிலிருந்து, உடுத்துவது வரையில் எங்களுக்குள் போட்டிகள் நிகழ்ந்துக் கொண்டே இருந்தது.

ஒருநாள் இரவு சாப்பாட்டுக்குப் பின் பழங்கள் சாப்பிடும் போது போட்டி வளர்ந்து ஒரு காட்டன் ஆரஞ்சு பழமும் காலியாகிவிட, காலையில் அரபுக்காரர் சாப்பிட்ட தோல்களை எல்லாம் வரிசையாக பரப்பி வைத்து “சூஆதா” என்று அரபுமொழியில் என்னஇது என்று கேட்க, நாங்கள் இருவரும் காட்டிலிருந்து பிடித்துவந்த குரங்கு குட்டியைப்போல பேந்த பேந்த விழிக்க, அந்த நேரத்தில் எனது நண்பன் அத்திக்கடை சிஹாபுதீன் அங்கு வர, அவனைக் கூப்பிட்டு இதோ பாரு உனது நண்பர்கள் எப்படி சாப்பிட்டு இருக்காங்க பாரு என்று காண்பிக்க..

டேய்! எனக்கு வெட்கமாக இருக்குடா! என்று என் நண்பன் சொல்ல, எல்லாம் அன்சாரியினால வந்துச்சு; நான் ஒன்னு சாப்பிட்டா அவன் இரண்டு சாப்பிடுகிறான், அவன் ரெண்டு சாப்பிட்டானேன்னு நானும் ரெண்டு சாப்பிட்டா அவன் மூனு சாப்பிடுகிறான் என்று நண்பனிடம் விளக்கம் கொடுக்க, அவன் எங்கள் இருவரையும் திட்ட இப்படியே திண்டிங்கன்னா சம்பளம் கொடுக்க மாட்டான் ஜாக்கிரதை என்று எச்சரித்தான்.

உணவு சமைப்பதில் ஒருநாள் நானும் ஒருநாள் அன்சாரியும் செய்யவேண்டும் இது அரபுகாரரின் கட்டளை.யார் சமைக்கிறார்களோ அவர் தான் சாப்பாட்டை பறிமாற வேண்டும். இந்த பறிமாற்றத்தில் அரபுகளுக்கு வைப்பதற்கு முன்னாடியே ஒருதட்டையில் சாப்பாட்டை வைத்து நல்ல துண்டுகளாக கோழி வருவல் அல்லது மீன் வருவல் என்றால் சோற்றுக்கு அடியில் மறைத்து ஒரு துண்டும் சோற்றுக்கு வெளியில் ஒரு துண்டும் வைப்பது எங்கள் இருவரின் அப்போதைய போட்டிச் செயல்.

ஒருநாள் மதியம் நான் சமைத்த மீன் வருவல். முன் சொன்னதுபோல சோற்றுக்கு அடியில் ஒரு துண்டும் சோற்றுக்கு மேல் ஒருதுண்டும் வைத்து எடுத்து போய் எங்கள் ரூமில் அன்சாரிவைத்துவிட்டு வர வேலைகளை முடித்துக் கொண்டு நாங்கள் இருவரும் சாப்பிட செல்ல எனது தட்டையில் சோற்றுக்கு வெளியில் வைத்த மீன் துண்டு காணமல்போக அன்சாரியிடம் கேட்க எனக்கு தெரியாது என்று சொல்ல அவன் தட்டையை பரிசோதிக்க அவன் கோபப்பட அந்த பதினெட்டு வயதில் நாங்கள் இருவரும் சோற்றுதட்டையுடன் கட்டி புரல சப்தம் கேட்டு அரபுகள் ஓடி வர ஒன்னுமே நடக்காத மாதிரி நாங்கள் மேல்மூசு;ச கீழ்மூச்சு வாங்கி நிற்க அங்கு இரைந்து கிடந்த சோற்றைப் பார்த்துவிட்டு அரபுகள் எங்களை திட்ட என் தட்டையில் வைத்த மீன் வருவளை பூனை தூக்கிச் சென்ற செய்தியை அரபு கிழவி சொல்ல நாங்கள் ஒருவரை ஒருவர் கடிந்துக் கொள்ள இப்படி சென்ற அந்த இளமைக் காலத்தை நான் எப்படி மறப்பேன்.

இதுமட்டுமல்ல இன்னும் இருக்கிறது அன்சாரிக்கு சிலவை உண்டாக்க வேண்டும் என்று எனது நண்பன் சிஹாபுதீனிடம் கூற ஆமா எப்படி வைப்பது என்று யோசிக்கையில் அவனுடைய தம்பி ஊரிலிருந்து துபாய் வர இருந்த நேரம் அப்போதெல்லாம் நம்தமிழ்நாட்டு கிராமங்களில் தபால் ஆபிசைத் தவிர தொலைபேசி வேறு எங்கும் இருக்காது. அந்த சமயங்களில் டெலிகிராம் தந்தி கொடுப்பது வழக்கம்.

துபாயிலிருந்து ஊருக்கு செல்வதாக இருந்தாலும் வருதாக இருந்தாலும் நம்மை அழைப்பதற்கு தந்திக் கொடுப்போம் அதைப் பார்த்துதான் ஏர்போர்ட் சென்று அழைத்து வருவது வழக்கம்.

அன்சாரியின் தம்பி துபாய் வந்து இறங்கி ஏர்போரட்;டிலிருந்து அன்சாரி வேலைப்பார்க்கும் அரபு வீட்டுக்கு டெலிபோன் செய்வதை போல சிஹாபு இடம் நீ டெலிபோனில் பேசனும் என்று கூறி செட்டப் செய்தோம்.

மதியம் 3 மணிக்கு எங்களுக்கு ஒய்வு நேரம் அந்த நேரத்தில் சிஹாபுதீன் போன் செய்து அன்சாரியிடம் அவன் தம்பி பெயரைச் சொல்லிப் பேச அன்சாரி பதட்டத்துடன் ஏர்போர்ட்டிலேயே இரு கொஞ்ச நேரத்தில் நான் வந்திடுகிறேன் என்று கூறி பரப்பரப்பாக என்னிடம் செய்தியைச் சொல்லிவிட்டு வா ஏர்போர்ட் போகலாம் என என்னை ஆர்வத்துடன் கூப்பிட சரி சிஹாபுதீனையும் அமைத்துப்போவோம் என்று நான் சொல்ல பக்கத்து தெருவில் வேலைப்பார்க்கும் சிஹாபுதீனை அழைத்துக் கொண்டு டெக்ஸி பிடித்து ஏர்போர்ட் வரும் வரையில் நானும் சிஹாபுதீனும் ஒருவரை யொருவர் பார்த்து சிரித்துக் கொண்டு வந்துச் சேர்ந்தோம்.

நாங்கள் ஏன் சிரிக்கின்றோம் என்று யூகிக்க முடியாத அன்சாரி உண்மையாகவே தனது தம்பி ஏர்போர்ட்டில் நிற்பதாக எண்ணி அங்கும் இங்கும் விமான நிலையத்தில் அலைந்ததைப் பார்த்த எங்களுக்கு அப்போது வேடிக்கையாக இருந்தது.

அந்த நேரத்தில் ஏர் இந்தியா விமானமும் பம்பாயிலிருந்து வந்திருந்தது. ஒருமணி நேரத்திற்குப் பின் அன்சாரி ஒரு நபருடன் எங்கள் அருகில் வந்தான்....

தொடர்வோம்......

Wednesday, December 1, 2010

எனக்கு 30 அமீரகத்துக்கு 39

டிசம்பர் 2 இது ஐக்கிய அரபு எமிரெட்ஸ் அமீரகத்தின் தேசியதினநாள் ஆனால் எனக்கும் அமீரகத்திற்கும் உறவு ஆரம்பித்தநாள் 1980 டிசம்பர் 2 அப்போது எனக்கு வயது 17.

கல்லூரிக்குள் பதிக்க வேண்டிய கால்களை பாலைவனத்தில் பதித்த அந்த வயதில் என்னிடம் எது இருந்திருக்கும் என்று இன்று நினைவுப் படுத்திப் பார்க்கின்றேன்.

அன்னை ஊட்டிய அமுதத்துடன் அன்னை மொழியாம் தமிழ்மொழியைத் தவிர ரொம்பவும் குறைவான ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு எந்த தைரியத்தில் வந்தேன் என்பது இன்னும் தெரியவில்லை.

வீட்டுவேலைக்கு பெண்கள் மட்டுமல்ல நான் அமீரகம் வந்தபோது என்னைப்போன்ற தமிழ் இளைஞர்கள் பெரும்பாலோர் ஹவுஸ்பாய்கள் தான். இதை இங்குபதிவு செய்வதில் நான் வெட்கப்படவில்லை.

முன் அனுபவமே இல்லாத எனக்கு இந்த வேலையை கற்றுக் கொள்வதற்கு கஸ்டமாக இருக்கவில்லை வேலையுடன் அரபு மொழியையும் கற்றுக் கொண்டேன்.

துபாய் விமானநிலையத்தை விட்டு வெளியில் வந்தபோது கண்ணெதிரே தெரிந்த பெரிய கட்டிடம் டிரேட் சென்டர்.(இன்று அது சிறிய கட்டிடமாக ஆகிவிட்டது) எங்கு பார்த்தாலும் மணல் திட்டுகள்.


இந்த 30 ஆண்டுகளில் அமீரகத்தின் வளர்ச்சி அபரிமிதமானது.பாலைவனத்தின் மணல் சோலைவனமாக சொர்க்க பூமியாக மாறிப்போனது.இந்த மாற்றத்திற்கு கடுமையான உழைப்பை இந்தியர்களைப் போல பலநாட்டவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

பாலைவனம் மட்டும் சோலைவனமாக மாறும்போது அதைமாற்றியவர்களின் வாழ்க்கையும் சோலைவனம்தான்.

எத்தனையோ வீடுகளில் கன்னியர்கள் கரையேறினார்கள் பலர் கடனிலிருந்து விடுதலையடைந்தார்கள் வாடகை வீடு சொந்த வீடானது வாகனங்கள் சொந்தமாகின விளைநிலங்கள் வீட்டுமனைகளாகின வங்கிக் கணக்குகள் அதிகரித்தன வாழ்க்கையில் ஆடம்பரங்களும் ஆர்பரித்தன இத்தனையும் இந்த வளைகுடாவிற்குள் நுழைந்தவர்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல் அன்னிய சிலவானி அதிகரிப்பில் அவர்களின் நாடுகளும் வளம்மடைந்துக் கொண்டிருக்கிறது.

இந்த முப்பது ஆண்டுகளில் என் நிலை என்ன?
கல்லூரி கற்றுத்தரவேண்டிய பாடங்களை பாலைவனம் கற்றுத்தந்தது.
ஹவுஸ்பாய் வேலை ஆனால் அதுதான் எனக்கு கற்றலின் ஆர்வத்தை கற்றுத்தந்தது எனக்குள் தேடலை ஏற்படுத்தியது தாய்மொழியை தழுவதற்கு தடம் அமைத்தது.


அமீரகத்தில் 1980-ல் அறிமுகமான முதல் நண்பன் அத்திக்கடை சிஹாபுதீன் இவனிடமிருந்து கற்றுக் கொண்டது பொறுமை பெற்றுக் கொண்டது நட்பு. அவனுடைய நண்பன் அஜீஸ்ரஹ்மான் சென்னைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான் இவன் நட்பை கடிதங்களில் வளர்த்து வளமாக்கினேன்
இவர்களின் தொடர்புகள் இன்றுமிருக்கிறது.

ஹவுஸ்பாய்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பண்டிகையாய் இருக்கும் அன்று மதியத்திற்கு பிறகு அரைநாள் விடுமுறையுடன் பத்து திரஹம் சிலவுக்கு தருவார்கள் நண்பனுடன் அல்சாப் தியேட்டரில் தமிழ்படம் பார்க்க ஆர்வத்துடன் செல்வோம். வரிசையில் நின்று டிக்கேட் எடுக்கும் பழக்கும் 3ஜி காலத்திற்குள் வந்தும்கூட அன்றும் மரபு மாறவில்லை.

நைப்ரோட் தமிழ் பஜாரில் மாலை 6.00 மணியிலிருந்து திருவிழா கூட்டம்போல் எங்குப் பார்த்தாலும் பிரமச்சாரிகளின் கூட்டமும் கூச்சலுமிருக்கும் மொத்த இந்தியாவையும் வெள்ளிக்கிழமை நைப் பஜாரில் கண்டுகளிக்கலாம்.

இரவு பத்து மணிக்குள் மீண்டும் ஹவுசுக்குள் பாய்கள் சென்றுவிடவேண்டும் நண்பர்களுடன் ஊர்கதைகளை ஒவ்வொருவரும் பறிமாறிக் கொள்வோம் ஊரில் இருக்கும் நண்பர்களின் கடிதங்கள் தங்களையும் ஹவுஸ்பாய்களாக அழைத்துக் கொள்ள வேண்டுவார்கள் விசாவிற்கு பேரம்பேசப்பட்டு வியாபாரம் நடக்கும்.

படிக்க வேண்டிய 17 18 வயது நிரம்பிய இளைஞர்கள் பறப்பதற்கு ஆசைப்பட்டு ஹவுஸ்பாய் வேலைகளில் அகப்பட்டு அவதிப்பட்டவர்களின் கதைகள் ஏராளம்.

அரபிகளின் அடக்கு முறைகளும் மனிதாபிமான மற்ற செயல்முறைகளும் சிலருக்கு முதலாழியாக வாய்த்திருக்கிறது அவர்களின் கதைகளைக் கேட்டால் கண்களில் கண்ணீரல்ல செந்நீர் வரும்.

ஹவுஸ்பாய் வாழ்க்கையில் எனது ஒய்வுநேர பொழுதுபோக்கு புத்தகம் வாசித்தலாக இருந்தது வார இதழ்களை தவறால் வாசிப்போம் சில நேரங்களில் சிறுவயதில் அம்மா சொன்ன கதைகளை நினைவுப் படுத்தி எழுதுவேன்.

அந்த எழுத்துப்பழக்கம் எழுத்தாளனாகவேண்டும் என்ற எண்ணத்தை துளிரவிட்டது.1979 – 80 களில் தமிழகத்தில் பெரும்பாலான இஸ்லாமிய இல்லங்களில் டேப்ரிக்காடரில் கிஸாக்கள் ஒலித்துக் கொண்டிருந்தது இரவு நேரத்தில் அந்த கிஸாக்களை அம்மாவுடன் கேட்பேன் அந்தத் தருணங்களில் மனம் பதிவு செய்த கதைகளை நினைவுப் படுத்தி கதைகளாக எழுதினேன்.

1984 –லில் டெலிபோன்டைரி என்ற நாவலை 140 பக்கங்களில் எழுதி புத்தகமாக்கி துபாயில் தமிழ் கடைகளில் விற்பனைக்கு போட்டேன் அதற்கு விளம்பரம் செய்யவேண்டி அல்சாப் தியேட்டரில் சிலேடு போட்டேன்.

இந்த நாவல் பல நண்பர்களை அறிமுகப்படுத்தியது.எல்லா தரப்பு நண்பர்களுடன் நட்பு இருந்தாலும் மனம் எல்லா நட்புகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒருமுறை வெள்ளிக்கிழமை தமிழ்பஜாரில் ஒருநபர் கைகளில் சில புத்தகங்களை வைத்துக் கொண்டு நின்றார் அது என்கண்களை உருத்தியது அவரிடம் சென்று அந்த நூல்களை எங்கு வாங்குனீர்கள் என்று கேட்க ஊரிலிருந்து வரவழைத்தேன் என்றார் படிப்பதற்கு தருகிறீர்களா? என்று கேட்டதும் என்கையில் உள்ள புத்தகங்களை வாங்கிக் கொண்டு கொடுத்தார் அது பெரியவர் ராம்மூர்த்தி என்பவர் எழுதிய மனமே நீவா என்ற நூல்.

இந்த நூல் என்னிடம் ஒரு மாற்றத்தை தேடலை கொடுத்தது.

குறிப்பு – முப்பதாண்டு அமீரக வாழ்க்கை அனுபவங்களை தொடராக தொடர்கிறேன்.

Monday, November 1, 2010

வலைச்சரம்

வலைச்சரத்தில் முதல்நாள்
வலைச்சரத்தில் 2 நாள்
வலைச்சரத்தில் 3 நாள்
வலைச்சரத்தில் 4 நாள்
வலைச்சரம் 5வது நாள்
வலைச்சரம் 6வது நாள்
வலைச்சரம் 7வது நாள்
வலைச்சரம் 8வது நாள்




முதற்பேறு

வலைச்சரத்திற்கு வாசகனாக வந்து சென்றுள்ளேன் ஆனால் வாசகனே வாத்தியாரக வருவது என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று.

பதிவர்களை பட்டைதீட்டுவதற்கு இப்படியொரு பாட்டையை அமைத்திருப்பது வரவேற்கதக்கது.
இந்த வாய்ப்பைத் தந்த ஐயா சீனா அவர்களுக்கும் குழுமத்தினர்களுக்கும் இனி ஒரு வாரக்காலத்திற்கு வாசிக்கப்போகும் பதிவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை சமர்பித்துக் கொண்டு...

மாணவ அனுபங்களை ஆசிரியராக உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

என்னைப்பற்றி சொல்வதற்கு இருந்தாலும் இல்லை என்றாலும் நான் என்னை அறிந்த விதத்தை இங்கு கூறலாம்.

நிகழ்வுகளின் நிழல்கள் இது எனது வலைதளம் பல அனுபவங்களை சுற்றுலாக்களை தொடராக தொட்டிருக்கிறேன் அப்படி தொட்டதில் என் மனதை கவர்ந்த நாடுகளை சுற்றிருக்கிறேன்.கதைகளையும் கட்டுரைகளையும் கட்டிருக்கிறேன்.
நகைச்சுவை உணர்வு என்பது எல்லோருக்கும் உண்டு ஆனால் என்னால் சிரிக்கத்தான் முடியும் உங்களை சிரிக்கவைக்க முடியுமா? என்றால் ஒரே ஒரு இடுக்கையில் முயற்சி செய்தேன் சிரித்தீர்களா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.

கவிதை எழுதவேண்டும் என்ற ஆர்வம் அதிகம் எனக்கு இருந்தாலும் கவிதைக்கும் என்னுடன் வருவதற்கு ஆர்வம் இருக்கவேண்டும் அல்லவா
6வது அறிவு இது கவிதைக்காக ஆரம்பிக்கப்பட்ட வலை. அதில் விளைந்திருப்பது கவிதைதானா? என்பதெல்லாம் அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிட்டேன். (அப்பா..தப்பிச்சேன்)

கிளிக்..கிளிக்..கிளிக்.. யாரோ எடுத்த புகைப்படங்களாக இருந்தாலும் நானும் நீங்களும் இரசிப்பதற்கு இந்த வலையை விரித்திருக்கிறேன்.
(ஓசில பிளாக் கொடுக்குறாங்கங்குறதுனால இத்தனையான்னு கேட்கப்படாது)
இந்த மூன்றும் என் எண்ணங்களை பிரதிபலிக்கும் தளமாக இருக்கிறது.
மனிதர்களுக்கு இருக்கும் மகா திறமைகளை வார்த்தைகளால் மட்டுமல்ல புகைப்படங்களிலும் வண்ணமலர்களாய் வடிவம் காட்ட முடிகிறது.

இந்த வலைதளங்களின் மூலமாக எனக்கு நல்ல இதயங்கள் கிடைத்திருக்கிறது. இதோ(ஐயா சீனாவின் மூலம்) கிடைக்கவும் போகிறது.
நமக்கு கிடைக்ககூடிய நண்பர்களை பொருத்துதான் நமது வாழ்க்கையில் பெறக்கூடிய நன்மைகள்.

எழுத்தின் மீது சிறு வயதிலிருந்தே ஆர்வம் இருந்தாலும் அந்த ஆர்வத்திற்கு தண்ணீர் ஊற்றி கலையெடுத்து உரம்போட்டது வளர்ந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் என்று சொல்வது மிகையல்ல.

புத்தருக்கு ஞானம் வந்தது போதிமரம் என்பார்கள் ஆனால் என்னைப்போன்ற பலர் கற்பதற்கு பாலைவனம் இன்றும் போதித்துக் கொண்டுதானிருக்கிறது.
மனிதநேயத்தை காக்கும் மனிதர்களாய்.

பாலை எனக்கும் தமிழுக்கும் சாலைப்போட்டது இங்கு பொருள் சம்பாதித்தோமோ இல்லையோ தமிழை சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம் என்ற மனதிருப்தி அமீரகப் பதிவர்களின் உள்ளத்தில் இல்லம் அமைத்திருக்கிறது.

பெருசா தத்துவம் சொல்றதா யாரும் நினைக்க வேண்டாம் இதெல்லாம் பாலைவன உலறல்கள். வறட்சியான பூமியாக இருந்தாலும் பலருக்கு வளமான வாழ்க்கையை தந்துக் கொண்டிருக்கிறது.

இதுமுதல்பேறு
அது சுகப்பேறாக இருக்கவேண்டும் என்பதில்
அக்கரை எனக்கு
இக்கரை வந்து
நீங்கள் தரும் சக்கரையை
சுவைப்பதற்கு நான்
வைகரை வருகிறேன்.

நன்றி.........என்னுடன் இவ்வளவு தூரம் வந்தமைக்கு.!
--------------------------------------------------------------

வலைச்சரம் 2வது நாள்
2.இகுளையின் எண்ணங்கள்

வலைசரத்திற்குள் நுழைந்ததுமே வரவேற்ற அன்பு நெஞ்சங்களுக்கும்
முதல்நாளில் தைரியமூட்டிய பாசக்கார பதிவர்களுக்கும் இதயம் நிறைந்த நன்றின்னு மட்டும் சொல்லிட்டு போய்விடாமல்...

உங்கள் அனைவருக்கும் ஏதாவது அன்பளிப்பு கொடுக்கனும்னு நினைக்கிறேன் அது மின்னூலாக கொடுக்கலாம்னு இருக்கிறேன்...
அது எப்போன்னு கேட்கிறீங்களா? ஏழாம்நாள் அதுவரைக்கும் பின் தொடருங்கள்.

மின்னூல் பிடிஎப்(PDF) பைலில் இருப்பதினால் உங்கள் கணினியில் இடம் சேகரித்து வையுங்கள் நான் கொடுக்கப்போகும் மின்னூல் எவ்வளவு தெரியுமா? முன்னூருக்கும் அதிகமானது.

அதெல்லாம் சரி.. அதென்ன இகுளை புரியாத வார்த்தையாக இருக்கிறதேன்னு எனக்கு தோணுவதைப்போல உங்களுக்கும் தோணும். இதற்குதான் நம் கையில எப்பவும் தமிழ் அகராதி வைத்திருக்கனும். இப்பல்லாம் அகராதி பிடித்தவர்கள் என்னைமாதிரி அதிகமாக இருக்காங்க அதனால நீங்களும் அகராதி வைத்துக்கொள்ளுங்கள். இகுளை என்றால் நட்பு என்னைச் சூழ்ந்த நட்புகளை கொஞ்சம் காட்டப்போறேன்.

என்னுடன் பணிப்புரியும் சிரியா நாட்டைச் சார்ந்த மைக் மிக்காலியன் என்ற இளைஞனின் முன்னோர்கள் அர்மீனியா நாட்டைச் சார்ந்தவர்கள். இந்த இளைஞன் சிரியாவில் பிறந்து வளர்ந்து அறபு மொழியை பேசினாலும் இல்லத்தில் அர்மீனிய மொழியைத்தான் தாய்மொழியாகப் பேசுகிறான்.
தங்கள் நாட்டின்மீதும் மொழியின் மீதும் அதீத பற்றுடையவர்களாக அர்மீனியர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த இளைஞன் சாட்சியாகின்றான்.
அர்மீனியர்களுக்கும் நமது சென்னையின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக படித்தேன்.1772 ல் கட்டப்பட்ட புனித மேரி தேவாலயம் சென்னையில் இருக்கிறது.

இந்த செய்தியை மைக் மிக்காலியனிடம் கூறியதும் மிகுந்த சந்தோசமடைந்து என்னைத் தழுவிக் கொண்டான்.

காரணம் புனிதமேரி தேவாலயம் இந்தியாவில் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இந்தியாவில் எங்கு என்று தெரியவில்லை சென்னையில் இருக்கிறது என்ற செய்தி எனக்கு மகிழ்வைத்தருகிறது நான் சென்னைக்கு வருவேன் என்றான். எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நன்றிச் சொன்னேன்.

வலைப்பதிவர்கள் ஒவ்வொரு கோணத்தில் தங்களின் படைப்புகளை பதிவுசெய்கிறார்கள் ஆனால் ஒரே தளத்தில் எல்லாவிதமான பதிவுகளையும் பதிவிட்டவரின் பெயருடன் பார்க்கவேண்டுமானால் நீடூர்சீசனில் பார்த்துக் கொள்ளலாம்.
வேறுபாடு இல்லாத வேரான மனிதரிவர் என்பதை நேரில் சந்தித்தபோது விளங்கிக்கொண்டேன்.
சிலருக்கு காடுவாவா என்று அழைக்கும் ஆனால் இந்த இளைஞருக்கு இணையதளம் வாவா என்று அழைத்துக் கொண்டிருக்கிறது நம் அகத்திலும் முகபுத்தகத்திலும் இருப்பார் நீர்மைக் கொண்ட நீடூர் முதியவரை நீங்களும் சந்திக்கதான் வேண்டும்.

பூ ஒன்று புயலானது என்று படித்திருக்கிறேன் ஆனால் இந்த பூ ஒன்றல்ல இரண்டு. இது பூங்காவனம் சஞ்சிகையாக மலர்ந்திருக்கிறது. பொருள்ளவில் ஏழைகளாக இருந்தாலும் இலக்கிய உள்ளத்தில் மகாஇராணிகளாய் தமிழ் இவர்களை வாழவைத்திருக்கிறது. முட்களுக்கு மத்தியில் ரோஜாக்களின் ராஜாங்கம் நடத்துகிறார் ரிம்ஸா. காதல் இல்லாத காலம் இல்லை என்று சொல்லுமளவு காதல் இவர்களின் எழுத்துக்களில் மலிந்திருக்கிறது காதலுக்குதடையாயிருக்கும் கடிகாரம் மீது ரிஸ்னா கடும்கோபம் கொண்டிருக்கிறார் சிறுகதைகளும், கவிதைகளும் இவர்களின் வலைகளில் கொட்டிக்கிடக்கின்றன. இவர்களின் முயற்சி வெல்லும்.

நம் உடலை சேதப்படுத்தவோ அதன் உறுப்புகளை குழைப்பதற்கோ நமக்கு எந்த உரிமையும் இல்லை என்று உரிமையுடன் கூறுவது நிலாமலர்கள் நண்பர் ராஜாகமால்.
விஞ்ஞானத்தின் மீதும் மெய்ஞ்ஞானத்தின் மீதும் அதிகம் ஆர்வம் கொண்டவர் மனித உடல்களைப் பற்றிய பல தகவல்களை தந்துக் கொண்டிருக்கிறார்.
இவருடைய கவிதைகளில் எதார்த்தமும் ஞானமும் மிளிரும்.

இறக்கவேமாட்டோம்
என்பதுபோல்
வாழும் மனிதர்கள்
வாழவே இல்லை
என்பதுபோல்
இறக்கும் மனிதர்கள்
என்று வாழ்க்கையின் வழுக்கல்களை கூறுகிறார்.

நிலவுக்கு மலர்சூட்டி அழகுபார்க்கும் இவர் காதல் என்பது கருத்து பறிமாற்றம் அல்ல என்கிறார்.
இவருடைய வலைக்குள் சென்றால் கதை கவிதை கட்டுரை என பல்சுவையும் நாம் பருகலாம்.

ஒரு எழுத்தாளனின் அவதார் என்ற தலைப்பில் சிறுகதையை எழுதிய ஆசிரியர் மட்டுமல்ல திறமையான குறும்பட இயக்குனர். அமீரகப்பதிவர்களின் சுற்றுலாவை குறும்படமாக மாற்றி அதற்கு அண்ணாச்சி அழைக்கிறார் என்று தலைப்பும் வைத்து வெளியீட்டுவிழாவும் செய்தவர். கவிஞரான இவர் சாருகேசி என்று வலைவிரித்திருக்கும் இவர் கீழைராஸா.

குண்டப்பா மண்டப்பா அப்படின்னா என்னப்பா? வேறென்ன நகைச்சுவைதான் கலக்கி இருக்கிறார் நிஜாம் பல்சுவை பக்கங்கள். பதிவர்களுக்கு பின்னூட்டமிட்டு அவர்களை உற்சாகப்படுத்துவதில் மிகுந்த ஆர்வமிக்கவர்.


நாகூர் மண்வாசனையில் 1929 ல் எழுத்துலகில் பிரவேசித்த இஸ்லாமிய முதல் பெண் எழுத்தாளர் சித்தி ஜூனைதாபேகத்தின் அறிமுகம் படிக்ககிடைத்தது. அதுமட்டுமின்றி தமிழில் வெளியான முதல் சிறுகதை நாவல்கள் என பலதகவல்களை உள்ளடக்கி இருக்கிறார்.

வலைதளங்களில் இதுபோன்ற அறியாவிசயங்களை அறியமுடிகிறது அதற்காக வேண்டியே இப்படி வலைச்சரத்தில் ஒவ்வொரு பதிவரும் பவனி வருவது வரவேற்கத்தக்கது ஐயா சீனா அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

எனது நண்பர் பரிந்துரைத்த வலை இது சென்று பார்த்தேன் இரு வரிகளில் இதயத்தை துளைக்கும் தோட்டாக்கள்

இது ஈழத்தமிழர்களின்
கண்ணீர்...
நீங்கள் குடைப்பிடித்தே
செல்லுங்கள்.!

என்கிறாள் தமிழினி.

இரண்டாம் நாளை கடந்துவிட்டேன் நாளை ஞானத்தை தொடுவேன்!

-------------------------------------------------------------------
வலைச்சரம் 3வது நாள்

3.மூதறிவாளன்


டெல்லி சாந்தினி சௌக்கில் மத்திய அரசில் பணிப்புரியும் ஒருவர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.வழியில் இரண்டுபேர் பேசிக்கொண்டிருந்ததை கவனித்தார்.
கடவுளைக் காணமுடியுமா? என்று ஒருவன் கேட்க, ஓ... முடியுமே! உன் கோட்டை கழட்டிவிட்டு பத்தடி முன்னால் சென்று பார் கடவுள் தெரிவார் என்றான்.
அவனும் அப்படியே செய்து திரும்பி வந்து பிரகாசமான முகத்துடன் தாங்க்ஸ். நீங்கள் என் கண்களை திறந்துவிட்டீர்கள். கடவுளை நன்றாக பார்க்க முடிந்தது என்றானாம்.இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அரசு அலுவலர் கடவுளைப் பார்த்தவனை அணுகி எனக்கும் பார்க்க வேண்டும் என தன் கோட்டைக் கழற்றி அவனிடம் தந்துவிட்டு பத்தடி முன்னால் சென்று பார்த்தார். காக்காய் கூடுகட்டிய டெலிவிசன் ஆன்டெனாக்களைத் தவிர ஏதும் தெரியவில்லை. திரும்பிப் பார்த்தால் அவர்கள் இருவரையும் காணவில்லை கோட்டில் அந்த மாதச் சம்பளம்.(சுஜாதா எழுதிய நூலில்)
இப்படித்தான் எதை எங்கு பார்ப்பது தேடுவது என்று தெரியாமல் இருப்பதையும் இழந்துவிடுகிறோம்.

ஓன்றை வாங்குவது என்றால் அதைப்பற்றி பெரும்பாலோர் அலசி ஆராய்ந்து நேரம், காலம், வாஸ்த்து இப்படி நிறைய சம்பர்தாயங்கள் பார்த்து வாங்குவார்கள்.
ஒரு பொருளுக்கே இவ்வளவு பார்க்கின்ற நாம் நம்மைப்படைத்த இறைவனை(?) அறியாமலேயே இருப்பது அமைதிக்கு பாதகம்.
இப்படி அறியாமலேயே இருப்பதுதான் பல பிரச்சனைகளுக்கு காரணமாகவும் இருக்கிறது.அப்படி அறிவதற்கு வாய்ப்பை நமக்கு தருவது ஞானிகள்
ஞானத்தை விளக்குவதற்கு பல கதைகள் உண்டு அதில் முல்லா நசூருதீன் கதைகளும் ஒன்று.

வாழ்வியல் என்பது கிட்டதட்ட ஞானம். பலர் வாழ்வியலை போதிக்கும் குருமார்களிடம் கூட்டம் கூட்டமாக கூடுகிறார்கள்.காரணம் இந்த அவசர உலகில் அமைதி என்பதை ஒருவருக்கொருவர் தொலைத்துவிட்டு பொருள்தேடலில் அதைத் தேடுகிறார்கள்.அதை எங்கு தொலைத்தோமோ அங்குதான் தேடவேண்டும்.

நம்மில் தொலைத்துவிட்டு வெளியில் தேடினால் கிடைக்குமா?
எதைத் தேடுகிறோம் என்றே தெரியமால் தேடுகிறோம்
நம்மை நாம் அறிவதற்கு இந்ததளம் தன்னம்பிக்கையை ஊட்டுகிறது.

மூதறிவாளன் இறைவன் அவனின் முகவரியை ஞானிகளிடமிருந்துதான் இவ்வுலகம் பெற்றுக்கொண்டிருக்கிறது.
சுயத்தேடல் நிறைந்தவர்கள் சிதாகாசத்தை சித்தரித்து நம் சித்தம் தெளியத்தருகிறார்கள்.

ஞானம் என்றால் என்ன வென அறிந்துக்கொள்ள துடிப்பவர்களுக்கும் சூபியிசம் என்றால் என்ன என்றறிய துடிப்பவர்களுக்கும் ஞானவெட்டியானின் பதிவுகள் சம்பூரணத்தை விளக்குகிறது.ஞானத்தாகம் கொண்டவர்களுக்கு தாகிப்பிரபம் நீருற்றாய் விளங்குகிறது.

இந்திய விமானப்படையில் ஐந்தாண்டுகள் பணிமுடித்து ஸ்டேட் பேங்ஆப் இந்தியாவில் மேலாளராக பணிப்புரிந்து ஓய்வு பெற்ற
செயச்சந்திரன் B.SC A.M.I.E.R.E.(LOND).,C.A., I.C.W.A., M.B.A
இவர் சித்தன்னாக எல்லோருக்கும் சுயச்சிந்தனை ஊட்டுகிறார். ஞானிகளின் எழுத்துக்களுக்கும் சித்தர்களின் பாடல்களுக்கும் விளக்கம் கொடுத்து மின்னூலாக பதிவிடுகிறார்
இது ஞான ஊற்று மெய்ஞானக்காற்று அனுபவித்துப்பாருங்கள்.

புல்லாங்குழல் என்பது ஒரு மகத்தான ஆன்மீகக் குறியீடு நீங்களும் நானும் ஒருவகையில் புல்லாங்குழலைப் போன்றவர்கள் என்று மௌலானா ரூமி கூறுகிறார்கள் அதைதான் நூருல்அமீன் தனது வலைதளத்தில் ஞானமணம் பரப்புகிறார். படிக்க படிக்க நம் சிந்தனை சிறகில்லாமலேயே பறக்கிறது. விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் என சந்தேகங்களுக்கு பின்னூட்டதில் கட்டுரையே வரைந்திருக்கிறார். பல ஆன்மீக சந்தேகங்களுக்கு இந்த வலைதளம் தெளிவு தருகிறது.


ஆபிதீன் பக்கங்கள் அழிந்துக்கொண்டிருக்கும் இலக்கியங்கள் அழியாத மனிதர்கள் என பட்டியலிட்டு வைத்திருக்கிறார். நிறைய விசயங்களையும் வண்ணமில்லா மனிதர்களையும் வகைப்படுத்தியுள்ளார்.நிறைய விசயங்களை நிறைத்திருக்கிறார். பேதமில்லாமல் எதார்தத்தை எழுதுகிறார்.இவரின் பதிவுகளில் ஞானமும் ஞானிகளும் நிழலாடுகிறார்கள்.


தினம் ஒரு தகவல் என நல்லதொரு சிந்தனையை தினம் தந்து கொண்டிருக்கின்றார்
இவருடைய பதிவுகளில் பல பொக்கிசங்கள் பொதிந்திருக்கிறது.ஞானியும்குழந்தையும் நல்லதொரு சிந்தைமிக்க கதையாக தந்திருக்கிறார்.
கொல்லிமலைச் சாரல் ஆனந்த் பிரசாத். இமெயில் மூலம் சிலருக்கு மட்டும் பகிர்ந்த தகவலை வலைதளம் அமைத்து அனைவருக்கும் வழங்குகிறார்.

ஞானத்தில் சிறந்த ஞானம் எது? என்று தமிழ் நண்பர்கள் கேட்டனர் அவர்களின் இந்த கேள்விக்கு ஒரு கதை பதிலாகிறது.

உணரமுடியா மர்மங்களின்...
ஆதி முடிச்சிலும்...,
கற்பனைக்குள் எட்டா காரியங்களின்
கருவிலும், விளங்க முடியா விந்தைகளிலும்
பிணைந்திருக்கும் பருமனில்
புகுந்திருப்பது நானின்றி வேறு யார்?

தேடலில் கேட்பவர் தேவா



தொடர்வோம் நன்றி.!

--------------------------------------------------------------
வலைச்சரம் 4வது நாள்
4.பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை


நேற்று அருளைப் பற்றி பார்த்தோம்
இன்று பொருளைப் பற்றி பார்ப்போம்.

வியாபாரிகள் தான் இந்த உலகத்தில் பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
நாம் வசதியுடன் வாழவே இத்தனை சிரமங்களை எடுக்கின்றோம் ஆனால் நாம் எப்போது வசதியுடன் வாழ்வது ? எப்படி வசதியுடன் வாழ பொருளீட்டுவது? அதை எப்படி வளர்ப்பது? என்பது தெரிந்தால் நாமும் பணக்காரர்களாக வாழலாம்தானே!

வேலை செய்தால் ஆயுல் முழுவதுமே வேலை செய்யவேண்டும் ஆனால் வியாபாரம் செய்தால் சில காலம் வேலைப்பார்ப்போம் அதன் பிறகு நாம் சம்பாதித்த பணம் நமக்கு வேலைப்பார்க்கும் என்கிறார் பங்குச் சந்தை நிபுணர்.

பங்கு சந்தை என்பது ஒரு சூதாட்ட கிளப்போ அல்லது லாட்டரி கம்பனியோ அல்ல என்பதை நாம் முதலில் தெளிவடைய வேண்டும்.
தெளிவான திட்டமிடலும் நேர்த்தியான அணுகுமுறை தொடர்ச்சியான ஆர்வமும் தளராத மனநம்பிக்கை இதனோடு கொஞ்சமே கொஞ்சமாய் பணமிருந்தால் போதும் சாதித்துவிடலாம் வாங்க ன்னு நிபுணர்கள் கைதட்டி கூப்பிடுகிறார்கள்.

இந்தியர்கள் தங்களின் சம்பாத்தியத்திலிருந்து 25 சதவீதம் சேமிக்கிறார்கள் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. நமது சேமிப்பு பலன் தரக்கூடியதாக இருக்கவேண்டும்.

நாம் சேமிக்கிறோமா அல்லது முதலீடு செய்கிறோமா என்பதை திட்டவட்டமாக தீர்மானிக்க வேண்டும் சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் நிறைய வித்தியாமிருக்கிறது.

1985-ல் விப்ரோ என்ற சாப்ட்வேர் கம்பெனியில் 10000 ரூபாய் யாரேனும் முதலீடு செய்திருந்தால் இந்த ஆண்டில் அவர்களிடம் எவ்வளவு இருக்கும் தெரியுமா?
400 கோடி என்றதும் நம்பமுடிகிறதா? உங்களைப்போல நானும் நம்பவில்லை ஆனால் நிபுணர்கள் 400 கோடியாக எப்படி வளர்ந்தது என்று புள்ளிவிபரத்துடன் கணக்கு கொடுக்கிறார்கள்.

நமது சேமிப்பை பொருத்தே நமது பொருளாதார வளரச்சி இருக்கிறது.

சேமிப்பு என்பது வங்கியிலும் எல்ஐசியிலும் மனைகளாக வாங்கி வைப்பதிலும் மட்டுமில்லை அதையும் தாண்டி அதிகமான லாபங்களை தரக்கூடிய பங்குகள் தரமான கம்பெனிகள் நிறைய இருக்கிறது.

தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் இன்று நூறு சதவீத லாபத்தை ஒன்னரை ஆண்டுகளுக்கு முன் செய்தவர்கள் பெற்றார்கள்.

பங்கு சந்தையைப் பற்றி நமக்கு பயம் இருக்கிறது அதைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்கு பல நூல்கள் தமிழில் வந்துவிட்டது.மதிப்பிற்குரிய நிபுணர் சோமவள்ளியப்பனின் நூல்கள் என்னைப் போன்ற ஆர்வலர்களுக்கு வழிகாட்டுகிறது.
கோகுல் மாமாவிடம் பங்குசந்தையைப்பற்றி கேட்டால் நிறைய தளங்களை அள்ளித்தருகிறார்;.

சமீபகாலத்தில் யூலிப் என்ற ஒரு திட்டம் பங்கு சந்தையின் வாயிலாக அறிமுகம் செய்யப்பட்டது பலர் அதில் முதலீடு செய்துவிட்டு தற்போது பங்குசந்தையை குறைக் கூறுகிறார்கள்.

மியூச்சுவல் பண்ட் பங்குசந்தையில் இன்னொரு முதலீடு. நாம் வங்கியில் மூன்றாண்டு ஐந்தாண்டு என்று டெபாஸிட் செய் வோமே அதுபோல் அதிக லாபம் தரக்கூடிய திட்டங்கள் நிறைந்தது.

தினசரி வர்த்தகம் என்பது எல்லோருக்கும் கைகூடாது அதில் பலர் கையை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பங்கு சந்தையில் பணத்தை இழப்பது ஏன் என்பதைப் பற்றி இவர் தெளிவுபடுத்துகிறார்.

எனக்கு பங்கு சந்தையில் ஆர்வம் அதிகமிருப்பதால் கடந்த சனவரியில் டிமேட் கணக்கை துவங்கி நேரடியாக பங்கு வணிகத்தில் இறங்கினேன். இந்த 11 மாதத்தில் நிதானமாக நான் சென்றுக் கொண்டிருப்பதால் லாபத்தை மட்டுமே அறுவடை செய்து வருகிறேன்.

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதுபோல என்னுடன் பணிப்புரியும் நண்பர்களுக்கும் பங்குசந்தையைப் பற்றி பாடம் நடத்த ஆரம்பித்தேன்.
முதலில் அவர்களுக்கு மணிக்கண்ட்ரோல் என்ற தளத்தில் போர்ட்போளியோவை நிறுவி டம்மியாக அவர்களுடைய விருப்பத்திற்கு சில கம்பெனிகளை வாங்கியதைப்போன்று ஆட் பண்ணச் சொன்னேன் தினம் அதை பார்த்தார்கள் விலையில் ஏற்றம் இறக்கம் இருந்துக்கொண்டே இருந்தது மூன்று மாதத்திற்குப் பின் நண்பர் சொன்னார் எனது போர்ட்போலியோவில் நான் டம்மியாக வாங்கிவைத்த பங்குகள் சுமார் நாற்பது சதவீதம் லாபத்தை காட்டுகிறது என்றார் அதே என்னுடைய போர்ட்போலியோவில் இருபதுக்கும் குறைவான சதவீதமே லாபம் காட்டியது.

நாம் தேர்ந்தெடுக்கும் கம்பெனியை பொருத்தமட்டில் நமது லாபமும் இருக்கிறது இன்று ஒவ்வொரு கம்பெனியைப் பற்றியும் இணையத்திலும் தொலைக்காட்சியிலும் விபரமாக கூறுகிறார்கள்.ஆதலால் நாம் முதலில் டம்மியாக ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் அதில் பலனைக் கண்டதும் நமக்கு தானாகவே ஆர்வம் வந்துவிடும். இது எல்லோருக்கும் அல்ல நம்பிக்கை இல்லாதவர்களுக்கு மட்டும் இந்த வழி.

ஏஸ்ஐபி(SIP) என்ற திட்டத்தில் முதலீடு செய்வதில் பலன் அதிகம் என்று நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அதென்ன எஸ்ஐபி என்கிறீர்களா?
அதாவது சிஸ்டமெட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான்.
தினம் ஒரு தொகை அல்லது வாரம் ஒரு தொகை அல்லது மாதம் ஒரு தொகை அல்லது வருடம் ஒரு தொகை என்று நம்மால் எப்படி முடியுமோ அந்தவகையில் நமது சேமிப்பை தொடங்கலாம்.

ஒருவர் மாதம் 5000 எஸ்ஐபி முறையில் சேர்த்தால் மாதமாதம் நாம் செலுத்துகின்ற தொகைக்கு ஏதாவது ஒரு பங்கை வாங்குவார்கள் ஒரு மாதம் இறங்கியும் ஒருமாதம் ஏறியும் இருக்கலாம் ஒரு ஐந்தாண்டு அல்லது பத்தாண்டு சேமிப்பை தொடர்ந்தால் நமது சேமிப்பின் அளவு மிகப்பெரிதாக வளர்ந்திருக்கும் என்பது உறுதி

எனவே இதுவரையில் சேமிக்காதவர்கள் பங்குசந்தை பக்கம் வராதவர்கள் இனி வரலாம் நாணயவிகடனில் பங்கைப்பற்றிய பரிந்துறைகள் கிடைக்கின்றன்.
வரும் நவம்பர் 14ம் தேதி அன்று தி.நகர் வாணி மகாலில் முதலீட்டாளர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது அதில் கலந்துக் கொள்ள NAVCH(space) 562636 என்ற எண்னுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி உங்கள் இருக்கையை பதிவுசெய்துக் கொள்ளுங்கள்.

120 கோடி மக்கள் தொகையை எட்டிருக்கும் நம் இந்தியாவில் ஒருகோடி நபர்கள் மட்டுமே பங்குசந்தையில் முதலீடு செய்கிறார்கள் என்பது ஒரு சதவீதத்திற்கும் குறைவானது. ஆதலால் இந்த சதவீதத்தை கூட்டுவதற்கும் உங்கள் வாழ்க்கையின் அமைப்பை வசதிகளை பெருக்கிக் கொள்வதற்கும் நீங்கள் முதலீட்டாளராக ஆகுங்கள் அதற்கு அதைப்பற்றிய அறிதலில் ஆர்வம் காட்டுங்கள்.

ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தைரியமாக இவரைப்போன்று.

நாளை சந்திப்போம்.

--------------------------------------------------------------

வலைச்சரம் 5வது நாள்
5.சுற்றுலா தரும் சுகங்கள்

(இன்றைய தினம் தீபாவளி கொண்டாடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்)

நேற்று பொருளாதாரத்தைப் பற்றி பார்த்தோம்
சம்பாதித்துக் கொண்டே இருந்தால் எப்படி கொஞ்சம் மூளைக்கும் மனசுக்கும் ஓய்வு கொடுக்கனும்தானே அதற்கு சுற்றுலாதான் சரியான வழி.

சுற்றுலா சென்றுவிட்டு திரும்பினால் மனம் ப்ரெஸ் ஆகிவிடும் புதிதாய் பிறந்த உணர்வுக் கூட சிலருக்கு ஏற்படும் என்று சுற்றுலா பிறந்தக் கதையைச் சொல்கிறார் நெல்லைச்சாரல்.

சுற்றுலா என்பது மனசுக்கு சுகமான ஒன்று பலரும் சுற்றுலா செல்ல வேண்டும் என்று மனசுக்குள் பெரிதும் விரும்புவார்கள் ஆனால் விருப்பத்திற்கு மாற்றமாக வேலை அல்லது வேறு ஏதாவது காரணங்கள் சம்பவங்கள் நடந்து சுற்றுலா செல்லமுடியாமல் சில காலங்கள் அதை மறந்தே கூட போயிருப்போம். சுpல தருணங்களில் நமது நண்பர்கள் சென்று வந்த சுற்றுலாவைப் பற்றி சுவாரஸ்யமாக பேசும்போது நாமும் செல்ல வேண்டும் என்ற ஆசை நமக்கு வரும். வருகின்ற ஆசைகள் அனைத்தையுமே நாம் நிறைவேற்றி விடுகின்றோமா?

சிறுவயதிலிருந்தே சுற்றுவதற்கு எனக்கு மிக விருப்பம் ஆசை. நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் புறப்பட்டேன் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் என்னையும் சென்னையும் சுற்றிப்பார்க்க சென்றேன்.இதுதான் எனது முதல் சுற்றுலா.

என்னுடன் பணிப்புரியும் மும்பையைச் சார்ந்த நண்பன் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு நாட்டுக்கு சுற்றுலா சென்றுவிட்டு வருவான் அவன் சுற்றிய இடங்களை புகைப்டத்தில் பார்க்கும்போது எனக்கு ஆசையாக இருக்கும் ஆனால் ஆண்டு விடுமுறையில் சுற்றுலா செல்ல திட்டம் இல்லாமல் அது தட்டிபோகும்.

அமீரகத்தில் குடும்பத்துடன் வாழ்க்கையை துவங்கிய பிறகு சுற்றுவதற்கு வாய்ப்புகள் நிறையவே கிடைக்கிறது. விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் கூட்டு குடும்பம் போல அண்டை நாடுகளுக்கும் தூரமான ஊர்களுக்கும் காரில் சென்று வருவது அலாதியான நிகழ்வு.

அதுபோல் அமெரிக்க வாழ்க்கையைப் பற்றி தொடர்கதை எழுதுகிறார் அன்புடன் ஆனந்தி அதில் ஆனந்த அனுபவம் இருக்கிறது.

எப்பவுமே வேலை வேலை என்று பார்த்துக் கொண்டிருந்தால் நிறைய சம்பாதிக்கலாம் ஆனால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது சம்பாதித்ததை நமக்காக கொஞ்சமாவது சிலவு பண்ணக்கூடிய இடம் சுற்றுலாவில்தான். கணவன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரு வாரம் சுற்றுலா சென்றால் அந்த ஒருவாரக் காலத்திற்கு ஒருவரையொருவர் பிரியாமல் ஒவ்வொரு மணித்துளியிலும் இணைந்தே இருப்பதற்கு சுற்றுலா மிகப்பெரிய வாய்ப்பை கொடுக்கிறது.

பள்ளியில் கல்லூரியில் என சக நண்பர்களுடன் அரட்டை அடித்து சுற்றிருப்போம் அந்த நிகழ்வை அசைபோட்டால் இன்றும் கூட அது சுகமாகவே இருக்கும். அப்படி அசைப்போடுகிறார் பூமகளின் பூக்களம்.

கல்லூரியில் சுற்றுலா செல்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தில்லை ஆனால் அமீரகப்பதிவர்களுடன் சென்ற சுற்றுலா மறக்க முடியாதது.

இன்று நாம் இருக்கும் இடத்திலிருந்தே நமது சுற்றுலா தளங்களை தேர்வு செய்யலாம் அங்கு தங்குவதற்கு விடுதி மற்றும் வாகனங்களை ஏற்பாடு செய்யலாம் நாம் தேர்வு செய்திருக்கும் சுற்றுலா தளத்திற்கான சிலவினங்கள் எவ்வளவு? ஆகும் என்பதையும் முன்கூட்டியே தீர்மானித்துவிடக் கூடிய அளவிற்கு இணையதளத்தில் வழிகாட்டிகள் நிறைந்து இருக்கிறார்கள்.

சென்ற ஆண்டு எனது குடும்பத்தார்களுடன் சிங்கப்பூர் மற்றும் மலேசியா சென்றேன். மூன்று மாதத்திற்கு முன்பாகவே ஆன்லைன் மூலமாக எனது பயணத்தினை பதிவு செய்தேன் அந்த சுற்றுலாவின் அனுபவம் தான் மனம்கவர்ந்த மலேசியா கட்டுரை.

இந்த ஆண்டு ஜூலையில் நமது இந்தியாவின் வடமாநில சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டு இரயில் டிக்கெட்களை ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்து திட்டமிட்டபடி சுற்றுலாவை நிறைவு செய்தேன்.

இவைகளைப் பற்றி இங்கு குறிப்பிடக் காரணம் சுற்றுலா செல்வது கடினமல்ல அதற்காக நேரத்தை நாம் ஒதுக்கினால் எந்த நாட்டுக்கும் செல்லலாம் அதுமட்டுமல்ல அந்த நாட்டைப் பற்றிய விபரங்களையும் முன்னரே நாம் தயார் செய்துக் கொள்ளலாம் அவ்வளவும் எளிமையே.

இந்த உலகம் நமது உள்ளங்கையில் இருக்கிறது அமெரிக்கா முதல் ஆப்ரிக்காவரை எங்கு செல்லவேண்டுமோ அங்கு சென்று வரலாம் பணமும் மனமும் இருந்தால் மட்டும்.

அந்தமான் சுற்றுவதற்கு ஆசை நேபாளும் சுற்றுவதற்கு ஆசை ஆனால் இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஆண்டு தோறும் சுற்றிக் கொண்டிருப்பது மனசுக்கும் உடலுக்கும் வயசு குறையும் என்று சொல்வது உண்மை.

தமிழர்களின் சிந்தனை களத்திற்குள் சென்றால் தமிழகத்தின் சுற்றுலாத் தளங்களை முழுமையாக காணமுடிகிறது.

இந்த சுட்டிகளை முழுவதும் படித்தீர்கள் என்றால் சுற்றுலா இதுவரையில் செல்லாதவர்கள் இனி செல்வார்கள் என்று உறுதியுடன் என்னால் கூறமுடியும்.

-----------------------------------------------------------------

வலைச்சரம் 6வது நாள்
6.அமுதம் வற்றாத அன்னை

பல்வேறு கலாச்சாரங்கள் உலகநாடுகளில் அவ்வபோது தலைத் தூக்கினாலும் அம்மா என்கிற அந்தஸ்ததும் பாசமும் பெருகிவரும் கலாச்சாரங்களால் வெற்றிக் கொள்ளமுடியாதவை என்கிறார் ஹிசாம்.

பத்துமாதம் சுமந்து
பெற்றெடுத்த அன்னையை
நெஞ்சம் கொள்ளளவு நேசிக்க
என்நெஞ்சத்தில்
இடம் போதவில்லையே
இறைவா!
என்று பிரார்தித்தவனாய்…
தாயைப் பற்றி பலரும் தங்களின் பாச எண்ணங்களை பதிவுகளில் பதித்திருக்கிறார்கள். அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள வலைச்சரத்தில் ஆறாம் நாளில் அடிவைக்கிறேன்.

சம்பாதிப்பதற்காக வேண்டி தாயையும் தாய்நாட்டையும் பிரிந்து வேலைப்பார்ப்பவர்களுக்கு மத்தியில் தாயைவிட எனக்கு வேலை முக்கியமல்ல என்று உதறிய நல்உள்ளத்தின் உண்மைக்கதைதான் தாயிற் சிறந்ததோர் வேலையுமில்லை.

இம்சை அரசி தனது 100வது பதிவில் என் அம்மாவிடம் முதல் சம்பளத்தில் முதல்முதலாய் உங்களுக்குத்தான் வாங்கினேன் என்று தரும்போது அந்த முகத்தில் வரும் சந்தோசத்தைப் பார்க்க காலமெல்லாம் கம்மல் வாங்கவும் நான் தயாரானது யாருக்குத் தெரியப்போகிறது என்கிறார்.

காய்ச்சலில் நெற்றித் தொடும்போதும்
மழையில் நனைந்து தலைதுவட்டும் போதும்
தோல்விகளில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்த
ஆளில்லாத போதும்
நினைவுகளில் நிழலாடுகிறது அம்மாவின் அன்புக்கை…
ராஜவம்சத்தில்
நிலாரசிகனின் பாசக்கவிதை இது.

அம்மா என்றால் அன்புமட்டும்தானா? அதையும் தாண்டி யோகிராமானந்த குரு தனது அனுபவக் கவிதையை நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்.

ஒருமுறை நமது முன்னால் ஜனாதிபதி மரியாதைக்குரிய அப்துல்கலாம் அவர்கள் ஆஸ்தெர்லியா நாட்டுக்கு பயணம் சென்றிருந்தார். மாணவ மாணவிகள் நமது ஜனாதிபதியிடம் கேள்விகள் கேட்னர். அதில் ஒரு மாணவி அப்துல்கலாம் அவர்களிடம் நீங்கள் பிறந்த ஊர் எது என்று கேள்வி கேட்டார் அதற்கு அப்துல்கலாம் சொன்ன பதில் சொர்க்கம் என்று!
இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத மாணவி திகைப்புடன் ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு இந்திய வரைப்படத்தை காண்பித்து இது எங்களின் தேசத்தாய் இதில் எனது பிறந்த ஊர் வரைப்படத்தில் கீழே இராமேஸ்வரம் இருப்பதினால் தேசத்தாயின் காலடியில் எனது ஊர் இருக்கிறது தாயின் காலடியில்தானே சொர்க்கம் இருக்கிறது என்று விளக்கம் அளித்துள்ளார்கள்.

தாயின் காலடியில்தான் சுவர்க்கமிருக்கிறது என்று அருமை நபிகள் நாயகம் (ஸல் அலை) அவர்கள் கூறினார்கள்.அந்த காலடிகளை கலங்கப்படுத்திய கால்களின் நிலையை இந்தச் சிறுகதை விளக்குகிறது

அன்னையின் அன்பைப் பற்றி எவ்வளவு உதாரணங்கள் சொன்னாலும் அது முடிவில்லாதது இவர் கவிதையில் தாய்யன்பை இப்படி எல்லாம் ஒப்பிடுகிறார்.

தாயின் வயிற்றில் கருதோன்றிய சிலவாரங்களிலேயே கருவின் மூளையில் நியுரான்களின் உற்பத்தி ஆரம்பமாகி விடுகிறது. அதனால்தான் என்னவோ இன்றைய மருத்துவ உலகம் குழந்தை வயிற்றில் இருக்கும் போழுதே ஆக்கப்பூர்வமான சில பல செயல்களை கருவுற்ற தாய்மார்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது. குழந்தை பிறந்து உலகின் முதல் சுவாசத்தை ஆரம்பித்த உடனேயே நமது கடமைகளும் ஆரம்பமாகிவிடுகிறது என்று சகோதரி ஸாதிகா அறிவான சந்ததிகளை உருவாக்க ஆலோசனை வழங்குகிறார்.

ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு ஒரு தாய் எப்படி எல்லாம் கஸ்டப்படுகிறாள் என்பதை அம்மான்னா சும்மாவா? அபிஅப்பா எழுதுகிறார்.

என் ஒவ்வொரு அணுவிலும்
கலந்த என்னுயிர் அன்னையே
எப்படி மறப்பேன்
ஒரு நொடியிலும் நின்னையே!

எனக்கு தேவையில்லை தனியொரு தினம்.! என்கிறார்.



குழந்தைகள் நன்கு படிப்பதற்கும் நல்ல பண்புகளுடன் விளங்குவதற்கும் தாயே முக்கியக் காரணம். ஆவளின் அதி கவனமும் கவனிப்பும் இல்லையேல் குழந்தைகள் சிறப்புறவளர மாட்டார்கள்.என்று தன்னம்பிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.




அந்தளவு தாயுடைய பொருப்பும் கவனமும் தன் பிள்ளையின் மீது சதா இருந்துக்கொண்டே இருக்கிறது ஒரு தாய் தனது பிள்ளையை அன்னை என்ற ஸ்தானத்தில் வளர்க்கும் பொருப்பைவிட இந்த உலகில் எந்த ஒரு பதிவியும் உயர்ந்தது அல்ல.

இப்படி எண்ணெற்ற பதிவுகளை தாயைப்பற்றி உள்ளத்திலும் எண்ணத்திலும் எழுத்திலும் எழுதுகிறார்கள் தங்களின் தாய்மேல் வைத்திருக்கும் அன்பை செயலில் காண்பித்தால் முதியோர் இல்லங்களின் தேவை தேவையற்றதாக ஆகிவிடும்.

மீண்டும் நாளை நன்றி.

------------------------------------------------------------------
வலைச்சரம் 7வது நாள்

7.மானிடம் தேடும் மனிதநேயம்

இன்றைய காலத்தில் விஞ்ஞானத்தின் வளர்ச்சி மிகக்கடினமாக இருக்கிறது. ஆனால் மனிதநேயம் தளர்ச்சியடைந்து வருகிறது. நமது தேவைகளுக்காக வேண்டி எத்தனையோ மறியல்களை போராட்டங்களை செய்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் நம்மிடம் மனிதநேயத்தை வளர்க்க பேதங்களை களைக்க இன்னும் போதிய போராட்டங்கள் நம்மிடம் இல்லை என்பதுதான் உண்மை.

தேடல் இன்றி வந்தப் பொருள்
வாழ்வில் நிலைப்பதுமில்லை
தேடிதேடி கிடைத்தப் பொருள்
எளிதில் தொலைந்ததுமில்லை
என்பது பாடல் வரிகள்

இன்று தேடப்படுவது மனிதநேயம்
அது கிடைப்பதற்கு அனைவரும் சேரவேண்டும்;.
அனைவரும் ஒன்று சேருவதற்கு மனம் வேண்டும்
அந்த மனதில் தெளிவுவேண்டும்
இவைகளை பெறுவதற்கு மனிதன் மனிதனாக வேண்டும்.

மனிதர்களிடத்தில் இருக்கும் மனிதமும் மனிதநேயமும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து சுயநலம் மட்டுமே இருந்துவருவதாக எனக்கு பட்டது நீங்கள் சொல்லுங்கள் இந்த மனித நேயமில்லாத உலகில் வருங்கால சந்ததிகள் எப்படி வாழப்போகிறார்கள்? என்ற கேள்வியுடன் சாலை விபத்தில் நடந்த சம்பவத்தை விவரிக்கிறார் சக்திவேல்.

ஒரு கவிஞன் சொல்கிறான்
சாதிக் கலவரத்தில்
மனிதர்கள் சாகும் முன்னே
அவர்களுக்குள் செத்துப்போனது
மனிதநேயம்.

உலகின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாக காட்டிக் கொள்ளும் அமெரிக்கா உலகுக்கெல்லாம் நீதி சொல்ல ஆயுதங்களோடு புறப்பட்டுக் கொண்டிருக்கிறது வீட்டுக்குள்ளே நிறவெறியும் இனவெறியும் மரித்துப்போன மனிதாபிமானமுமாக வீச்சமடிக்கிறது என்று அமெரிக்காவின் மனிதநேயத்தைப் பற்றி அலசல் செய்திருக்கிறார்.

இளங்கோவனுக்கும் கார்த்திக்காயனிக்கும் பிறந்ததால் இந்துவானேன்.
டேவிட்டிற்கும் எலிசபத்திற்கும் பிறந்ததால் கிறிஸ்துவனானேன்
அன்சாரிக்கும் பேகத்திற்கும் பிறந்ததால் முஸ்லிம்மானேன்
யாருக்கும் யாருக்கும் பிறந்தால் மனிதனாவேன்.!
என்று செப்புப்பட்டயம் செப்புகின்றார்.

சென்ற ஆகஸ்ட்டில் சிலி நாட்டில் சுரங்கத்தில் நடந்த விபத்தில் மாட்டிக்கொண்ட மனித உயிர்களை அந்நாடு மனிதநேயத்துடன் கொடுக்கப்பட்ட கால அளவைவிட துரிதமாக காப்பாற்றிய நிகழ்வை இந்த உலகமே கண் கொண்டுப்பார்த்தது. இந்த மனிதநேய உணர்வு எல்லா நாடுகளிலும் பேதமில்லாமல் பேணப்படவேண்டும். சுரங்கமே வீடாக மாற்றிக் கொண்டு வாழ்ந்த நிகழ்வை விவரிக்கிறார் ஹுஸைனம்மா.

மனிதநேயமென்பது அடிப்படையில் தனிமனிதனின் கௌரவம் மற்றும் பெருமதியைக்குறித்த ஒரு தத்துவப்பார்வை அதன் அடிப்படைக்கூறு மனிதர்களுக்குள் செய்யப்படும் அறிவார்ந்த தன்மையையும் நல்லனவற்றிக்கும் உண்மைக்கும் பொறுப்பாக இருக்கும் குணங்களையும் கண்டறிந்து சொல்வதுமாகும் என்று ஒரு ஆய்வு கட்டுரையை வரைந்துள்ளார் அ.ராமசாமி.

முன்னேற்றத்திற்கு பல்வேறு மூலதளங்கள் என்றால் அவற்றுக்கெல்லாம் அடித்தளமாக இருக்கக்கூடியது மனிதநேயமாகும். ஆப்படி என்றால் மனிதநேயம் என்றால் என்ன? என்றக் கேள்வி எழுகிறதல்லவா?
சகமனிதர்களை நேசிக்கின்ற மாண்பு சகமனிதனை மனிதனாகப் பார்க்கின்ற அணுகுமுறை தனக்கு இருக்கிற அனைத்து உணர்வுகளும் தனக்குள்ள அனைத்து அடிப்படைத் தேவைகளும் அடுத்தவருக்கும் வேண்டும் என்று எண்ணி ஏற்று அங்கீகரிக்கின்ற தன்மை சகமனிதனைப் பாசத்தோடும் பரிவோடும் கருணையோடும் நோக்கும் அன்புநிலையே மனிதநேயம் என்கிறார் கடலோரம்.

மதம் மொழி நிறம் இவைகளுக்கு அப்பால் ஆழ்மனதிலிருந்து பொங்கிவரும் நேயத்தை பகிருபவர்கள்தான் மனிதர்கள்.ஆதலால் என்றும் எப்போதும் நம்மிடம் வளர்ப்போம் மனிதநேயம்.

இதோ விரைவில் நன்றியுரையுடன் …

-------------------------------------------------------------------------

நிறைவுடன் நவிழ்கின்றேன் நன்றி!

பதிவர்களுக்கு இலவச மின்னூல் தருவதாக கூறியிருந்தேன்.இந்த மின்நூல்களை மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்
பல அரிய நூல்களை மின்நூலாக பிடிஎப் பைலில் கொடுத்துள்ளார்கள் அந்த மின் நூல்களை பெறுவதற்கு சில விதிமுறைகளை தற்போது ஏற்படுத்தி உள்ளார்கள் தங்களுக்கு தேவையான நூல்களை சுட்டி கொடுக்கப்பட்ட சுட்டியை கிளிக் செய்யவும்.

இந்த ஒரு வாரக்காலத்தில் ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவுடன் நிறைவு செய்தேனா? என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் இந்த ஒரு வாரம் அதிகமாக இணையதளத்தில் நேரங்களை சிலவு செய்திருக்கிறேன். பல புதிய பதிவர்களையும் நற்கருத்துக்களையும் அறிந்துக் கொள்ள பகிர்ந்துக் கொள்ள வாய்ப்பு பெற்றிருக்கிறேன்
அதற்கு வலைச்சரக் குழுமத்தினர் ஐயா சீனா மற்றும் கயல்விழி முத்துலெட்சுமி
பொன்ஸ் பூர்ணா அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.

இந்த ஒரு வாரக்காலத்தில் எனது இடுக்கைகளுக்கு பின்னூட்டமிட்டு வாழ்த்துக்களை வழங்கிய நல்லுள்ளங்கள்
ஐயா சீனா,
கலாநேசன்,
ராஜாகமால்,
நிஜாமுதீன்,
சகோதரி சாதிகா,
சகோதரி ஹ_ஸைனம்மா,
சகோதரி சித்ரா,
சகோதரி துளசி கோபால்,
சகோதரி பாத்திமா ஜொஹ்ரா,
சகோதரிஆசியா உமர்,
தேவா,
ஜோதிஜி,
ஒ.நூருல்அமீன்,
அன்பரசன்,
ஸ்டார்ஜன்,
நிகழ்காலத்தில்,
ஜெய்லானி,
சென்ஷி,
சே.குமார்,
அரவிந்தன்,
இராமசாமி கண்ணன்,
நட்புடன் ஜமால்,
அப்துல் மாலிக்,
செல்வராஜ் ஜெகதீசன்,
இராகவன் நைஜிரியா,
விஜய் ,
சுல்தான்
ஒருவரை மனம்விட்டு பாராட்டுவதும் வாழ்த்துச் சொல்வதும் மனிதநேயம்.!

அனைவருக்கும் நன்றி!

Friday, October 22, 2010

கண்ணாமூச்சி ரேரே…





சின்னபிள்ளையில் விளையாடிய கண்ணாமூச்சி ரேயை நாம் மறந்திருக்க முடியாது இப்பவும் கூட சிலர் அல்லது பலர் விளையாடலாம் நமது குழந்தைகள் விளையாடுவதை நாம் பார்க்கவும் செய்யலாம்.

கண்ணாமூச்சி ரேரே என்பது ஒரு விளையாட்டு ஒருவர் கண்ணை பொத்திக்கொள்ள வேண்டும் மற்றவர்கள் ஓடி ஒளிந்துக்கொள்வார்கள். ஒளிந்துக்கொண்டவர்கள் ஜூட் சொன்னதும் அவர்களை கண்டுப்பிடிப்பதுதான் இந்த விளையாட்டின் சுவாரஸ்யம்.

ஓளிந்துக்கொண்டிருப்பவர்களை கண்டுபிடிப்பது கஸ்டமில்லை என்றாலும் அவர்களை கண்டுப்படிக்கும் வரையில் களத்தில் உள்ளவர் அங்குமிங்கும் தேடிக்கொண்டிருப்பார். அந்தத்தேடலில் ஆர்வமும் நம்பிக்கையும் மிகைத்திருக்கும் .

இதைபோலதான் வாழ்க்கையும்; கண்ணாமூச்சி விளையாடுவதைபோல நாம் கண்களை மூடிக்கொண்டு இருக்கிறோம் வாழ்க்கை ஒளிந்துக்கொண்டு இருக்கிறது அதைக் கண்டுபிடிப்பதில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வழியில் செல்கின்றோம்.
நம்மில் எத்தனைபேர்கள் ஒளிந்திருக்கும் வாழ்க்கையை கண்டுபிடித்துக் கொண்டோம் என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம்.

மனிதன் தனது உண்மையை அவன் தன்னிடம் தேடப்படுவானாகில் அவனிடம் ஒளிந்திருக்கும் சுயம் வெளிப்படும் தன்னைவிட்டு வெளியில் தேடினால் அவன் ஆயுட்காலம் அவனுக்குபோதாது.

கண்ணை பொத்திக் கொள்வது அறியாமை தேடலில் கண்டுப்பிடிக்கப்படுவது அறிவுடமை.
நம் வாழ்க்கை கண்ணாமூச்சிதான் அதனால் நம்மை வெளியில் தேடவேண்டாம் நம்மில் தேடுவோம்.
நாம் தொலைந்துவிட்டிருக்கிறோம் அதனால்தான் ஒவ்வொன்றிலும் வித்தியாசங்களை காணுகின்றோம் எல்லாவற்றையும் பிரித்துப்பார்க்கின்றோம் ஒருவருக்கு துன்பம் என்றால் இன்னொருவர் சந்தோசப்படுவதை பார்க்கிறோம்.

நம்மிடம் நிறையசுயநலம் இருக்கிறதே தவிர கொஞ்சம்கூடசுயம் இல்லை; சுயம் ஒன்று நம்மிடம் இருப்பதே பலருக்கு தெரியவில்லை. இப்படி தெரியாத விசயங்கள் எவ்வளவோ இருக்கிறது. தெரியாத விசயங்கள் தெரியாமலேயே போவதினால் தெரியாதவர்களிடம் தெரிந்ததை பேசும்போதுகேட்பவர்களுக்கு பேதமாக தெரிகிறது.

தனக்கு புரியாத விசயங்களை நாம் மறுப்பதால் அவைகள் இவ்வுலகில் இல்லாமலில்லை இன்று புரியாத ஒரு விசயம் இன்னொரு நாள் புரியும்போது புலங்காயிதம் அடைவோம்.
இதுவும் அப்படியாகக்கூட இருக்கலாம் புரியும்போது பூரித்துக்கொள்ளுவோம்.

அதுவரையில் இது மொக்கைதானே?

Tuesday, October 19, 2010

தங்கம் விலை இன்னும் ஏறுமா? இறங்குமா?


இந்த கேள்வி பல மக்களிடையே தோன்றிக்கொண்டிருக்கிறது தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டே போகிறது இதன் போக்கு எப்படி இருக்கும் எங்கு முடியும் என்று யாருக்குமே தெரியாமல் மக்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். தங்க மார்கெட்டில் பணிப்புரிவதால் எனக்கு கிடைத்த தகவலின்படி சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் உங்களுக்கு பிரயோஜமாக இருக்கலாம்.

சென்ற ஆண்டு தங்கத்தில் முதலீடு சம்பந்தப்பட்ட தொடர் கட்டுரை எழுதியிருந்தேன் அந்த சமயம் தங்கத்தின் போக்கை சுட்டிக்காட்டி அதில் முதலீடு செய்யலாம் என பரிந்துரையும் செய்திருந்தேன் அதில் யாரேனும் முதலீடு செய்திருந்தார்களேயானால் இன்று அவர்கள் நூறு சதவீதம் லாபத்தை ஈட்டி இருப்பார்கள்.

2008 நவம்பரில் அவுன்ஸ்(31.10 கிராம்) 715 டாலராக விலை குறைந்திருந்தது (இந்திய ரூபாய் 1 கிராம் 1015 சுத்தமான் 24 கேரட் தங்கம்)அச்சமயத்தில் துபாய் தங்கமார்க்கெட்டில் தங்ககட்டிகள் (டிடி பார் 116.64 கிராம்) 24கேரட் தங்கம் ஸ்டாக் இல்லாமல் இருந்தது. பலர் என்னைத் தொடர்புக் கொண்டு வாங்கி கேட்டார்கள் அப்படி கேட்டவர்களுக்கு வாங்கிக் கொடுத்துள்ளேன். இன்று அதை விற்காமல் வைத்திருப்பவர்கள் இன்னும் ஏறுமா? என்று கேட்கிறார்கள்.

முதலீடு என்ற பெயரில் தங்கத்தை வாங்கி வைத்திருப்பவர்கள் அவர்களுக்கு பணம் எப்பொழுது தேவைப்படுகிறதோ அதுவரையில் வைத்திருக்கலாம் தங்கத்தின் தேவை அதிகமாகவே இருக்கிறது ஆனால் தங்கசுரங்கத்தில் தேவைக்கேற்ற தங்கம் கிடைக்கவில்லை. ஆப்பிரிக்காவில் சில சுரங்கங்களை மூடிவிட்டதாக செய்திகள் சொல்கின்றன.

இன்னும் இத்தனை ஆண்டுகளாக சீனா தங்கத்தை ஆன்லைனில் வர்த்தகம் புரியாமல் வைத்திருந்தது ஆனால் சென்ற இரு மாதங்களுக்கு முன் ஆன்லைன் தங்க வர்த்தகத்தை சீனா ஆரம்பித்துள்ளது அதனால் தங்கத்தின் விலை இன்னும் கூடும் என்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.

பெரிய பணமுதலைகள் தங்களின் முதலீடுகளை அவ்வபோது டாலருக்கும் தங்கத்திற்கும் ஈரோவிற்குமாக மாற்றி மாற்றி சந்தையின் போக்கை அவர்களின் இஸ்டத்திற்கு நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது தங்கத்தின் முதலீடுதான் பாதுகாப்பானது என்று பெரிய முதலைகள் முதலீடுகள் செய்துக்கொண்டே செல்வதால் இன்னும் சில நாட்களுக்கு தங்கம் மேலே ஏறிக்கொண்டே இருக்கும்.

சென்ற பிப்ரவரி மாதத்தில் தங்கசப்ளையர் கூறினார் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் அவுன்ஸ் விலை 2000 டாலரைத் தொடும் என்றார். எனது நிறுவனத்தில் பலர் அவருடைய வாதத்தை ஏற்கவில்லை ஆனால் இன்று கிட்டத்தட்ட அவர் சொன்னது போலவே 1500 டாலரைத் தொட்டுவிடும் தூரத்தில் தான் இருக்கிறது.

தங்க சந்தையை பொருத்தவரையில் கிட்டதட்ட பங்குசந்தையை போலவே இயங்கிறது இந்த சந்தையும் அவ்வபோது ஏறுவதும் இறங்குவதும்மாகவே இருக்கிறது இது சர்கில்முறைதான்.

ஏழு ஆண்டுக்கு ஒருமுறை தங்கத்தின் விலை கடுமையாக சரியும் என்று ஒரு நிபுணர் கூறுகிறார்.அப்படி பார்த்தால் 2003 –ல் ஒரு அவுன்சின் விலை 323 டாலராக இருந்தது இன்று 1370 டாலராக இருக்கிறது சரிவு என்பது பெரிய அளவில் இல்லை என்றாலும் 2008 நவம்பரில் ஒரு சிறிய சரிவு ஏற்பட்டது உண்மையே.

இன்று காலை எனது நண்பர் தங்கத்தில் மூன்று ஆண்டுக்கு முதலீடு செய்யப்போவதாக என்னிடம் ஆலோசனைக் கேட்டார்.ஓ...தராளமாக முதலீடு செய்யுங்கள் என்றேன். 2007- ல் தங்கத்தின் விலை அவுன்ஸ் 650 டாலர் அன்று மூன்று ஆண்டுக்கு முதலீடு செய்தவர்களுக்கு இன்று 110 சதவீதம் லாபத்தை தங்கம் தந்திருக்கிறது.

ஒரு சிறிய சரிவு வரும் சமயத்தில் தங்கம் வாங்கக்கூடியவர்கள் உள்ளே நுழையலாம். துபாயில் ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 155 திரஹம் இன்று விற்பனை ஆகிறது இது தீபாவளிக்குள் 160 திரஹம் வரையில் செல்லலாம் என நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

தங்கத்தில் முதலீடாக செய்யக்கூடியவர்கள் எப்போதுமே ஆபரண நகைகளை வாங்கி முதலீடு செய்யவேண்டாம் அப்படி செய்தால் நஷ்டம் ஏற்படும் அதாவது நகைகள் வாங்கும்போது அதற்கு செய்கூலி சேதாரம் சேர்க்கப்படும் அதை மீண்டும் விற்கும்போது செய்கூலி சேதாரம் கழிக்கப்படும் அதனால் உங்கள் முதலீட்டில் கிடைக்ககூடிய லாபம் செய்கூலியிலும் சேதாரத்திலும் போய்விடும் ஆதலால் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் 24 கேரட் பிஸ்கட் என்று சொல்லப்படிகின்ற டிடிபார்(டென் தோலா பார் 116.64 கிராம் ) அதை வாங்கி வைத்துக்கொள்ளலாம் தற்போது இந்திய ரூபாயில் அதன் மதிப்பு இரண்டு லட்சத்திற்கும் அதிகம் என்பதினால் இவ்வளவு முடியாதவர்கள் 4 கிராம் அல்லது 8 கிராம் தங்க நாணயங்களை வாங்கி சேமிக்கலாம்.

ஆதலால் தங்கத்தின் விலை ஏறுமா? இறங்குமா? என்று யோசிப்பதைவிட தேவை உடையவர்கள் வாங்குவதே நலன்.!

தங்கத்தைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1.தங்கத்தில் முதலீடு
2.தங்கத்தில் முதலீடு
3.தங்கத்தில் முதலீடு
4.தங்கத்தில் முதலீடு
5.தங்கத்தில் முதலீடு
6.தங்கத்தில் முதலீடு
7.தங்கத்தில் முதலீடு

Thursday, October 14, 2010

தேகப்பயிற்சியும் தேற்றவேண்டிய மனமும்



நாளைமுதல் காலையில் எழுந்து உடற்பயிற்சி கட்டாயமாக செய்யனும் என்று நம் மனசுக்கு ஆர்டர் போடுவோம்.
மனசும் சரி நாளைக்கு செய்யலாம் என்று சம்மதிக்கும். காலையில் அலாரம் அடிக்கும்போது கண்விழித்து பார்ப்பதற்கு மனம் அனுமதி கொடுக்காது. கையால தடவி அலாரத்தை அடக்கிவிட்டு இன்னும் நன்றாக உறங்குவதற்கு ஒரு சுகத்தை மனம் நமக்கு காண்பிக்கும் அந்த சுகத்துடன் நாளைக்கு பார்த்துக்கலாம்ன்னு மீண்டும் உறங்கிவிடுவோம்.
சிலர் மனதிற்கு போக்கு காண்பித்துவிட்டு எழுந்து விடுவார்கள் சிலர் மனம் சொல்லுக்கு மாறமால் நடந்துக் கொள்வார்கள்.

அமீரகத்தில் கோடைகாலம் மாறி வாடைக்காலம் ஆரம்பமாகிறது அதனால் வாக்கிங் ஜாக்கிங் என்று பலரும் செய்துவருகிறார்கள்.

பெரும் முயற்சிக்கு பிறகு இந்த வாரத்திலிருந்து நடைபயிற்சி செய்துவருகிறேன். அதிகாலையில் இறைவணக்கத்திற்குப் பின் மம்ஸர் பார்க்கில் தினம் நடக்கின்றேன்.அங்கு கூட்டம் அதிகமில்லை நடந்து செல்வதற்கும் தேகப்பயிற்சி செய்வதற்குக்காண சாதனங்களும் கடற்கரையோரம் மணலில் வைத்திருக்கிறார்கள்
இரு தினங்களாக குளிர்ந்த காற்றுவீசுகிறது நடப்பதற்கு ஆனந்தமாக இருக்கிறது.
எல்லா வசதிகளும் இலவசமாக இருந்தாலும் நம்முடைய மனதை அதிகாலையில் தட்டி எழுப்புவதற்கு கஸ்டமாக இருக்கிறது என்பது உண்மை.

தொடர்ந்து செய்துவருகின்ற ஒரு செயலில் இருந்து மாறுவது என்பது மனதிற்கு பிடிக்காது. எப்பவும் எட்டு மணிவரை உறங்கிவிட்டு திடீரென ஐந்து மணிக்கு விழிக்கவேண்டும் என்றால் மனதிற்கு பிடிக்காது நாம் இழக்கும் சுகங்களை நமக்கு சொல்லிகாண்பிக்கும் அதை காதில்வாங்காமல் நாம் செய்யப்போகின்ற செயலில் கிடைக்கக்கூடிய சுகங்களை மனதில் நிறுத்தினால் அந்த மனம் நம் செயலுக்கு உடன்படும்.

மனம் எப்பவும் இச்சையை நோக்கியேதான் போகும் அதன் தன்மையே அப்படிதான். அதற்கு கடிவாளமிட்டு வைக்கவேண்டும்.
ஒன்றை மனம் ஆசைப்பட்டு விரும்பி விட்டால் அதை அடையும்வரை மனம் தூங்காது. மனம் ஆசைப்பட்ட ஒன்றை அறிவு ஆராயவேண்டும் அதில் நன்மை இருக்குமேயானால் மனதிற்கு நாம் கட்டுப்பட்டு அதன் விருப்பத்தை நிறைவேற்றலாம். அதில் தீமை இருக்கிறது என்று எண்ணிணால் அதை தவிர்க்கலாம் ஆனால் மனம் அதை ஏற்றுக் கொள்ளாது.

மனதை நம்கட்டுப்பாட்டில் வைப்பதற்கு யோகா தியானம் தொழுகை என பலவிதமான பயிற்சிகள் இருக்கிறது. பலர் இந்த பயிற்சியை நாடுகிறார்கள்.
பயில்கிறார்கள் மனம் ஒன்றித்தலுடன் செய்யப்படும் பயிற்சிகளில் மடடுமே வெற்றிகிடைக்கிறது.

மனதை பற்றி தீர்க்கதரிசிகளும் ஞானிகளும் நிறைய சொல்லி உள்ளார்கள்
மனம் சரியாக இருந்தால்தான் நம்முடைய வாழ்க்கை மணக்கும் மனம் சரியாக இல்லை என்றால் நமக்கு எதுவும் சரியாக இருக்காது
அதனால் மனதிற்குள் நல்ல அறிவுகளை வழங்கவேண்டும் அந்த அறிவுகளை மனம் அறியவேண்டும்.

மனதிற்கு பயிற்சி என்பது நல்ல விசங்களை நாம்படிப்பதும் சிந்திப்பதும் செய்வதும்தான் அதன் மூலம் நம்மனதை நம்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் முயற்சிப்போம்.!

Monday, October 11, 2010

மறதி இல்லையெனில் இந்த உலகம் மயானம்


மரணம் எங்கிருந்து தொடங்குகிறது?
என்ற கேள்விக்கு பிறப்பு எங்கிருந்து தொடங்கியதோ அங்கிருந்துதான் மரணமும் தொடங்குகிறது என்ற பதில் கிடைக்கும்.

மரணம் என்பது பயமா? என்று கேட்டால் கிட்டதட்ட பலருக்கும் பயமாகவே தான் இருக்கிறது.
ஒன்றைப் பற்றி அறியாத போது பயமே அறிவாக இருக்கும்.பாம்பை கண்டு "பாம்"மை கண்டு
அச்சப்படுதலின் ஆணிவேர் என்ன? மரணம்தான்.

ஆனால் மரணத்தைக் கண்டு அச்சப்படாதவர்கள் யார்?

சூபியாக்கள் மஹான்கள். இவர்கள் அச்சத்தை அறிந்தவர்கள் துக்கத்தை துறந்தவர்கள்.
மரணம் என்பது ஒரு மாற்றம் ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறுவது.

மகான் தாஹிர்பாவா கூறினார்கள்
“இருப்பது அழியாது இல்லாதது உருவாகாது”- இதுதான் இந்த பிரபஞ்சத்தின் தாரக மந்திரம். அழிவென்பது எதற்குமே இல்லை அனைத்திற்கும் மாற்றம் மட்டும்தான் உண்டு.
என்னதான் மரணம் ஒரு மாற்றம் என்று சொன்னாலும் அது நம்மைச் சார்ந்தவருக்கு நிகழும்போது நம்மையறியாத ஒரு அதிர்ச்சி கலக்கம் துக்கம் நமக்குள் ஏற்படத்தானே செய்கிறது.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மரணத்தின் நிகழ்வை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.நாம் நடக்கும் போது நமக்கு முன்னும் பின்னும் வருவது நிழல் அல்ல மரணம்.

மரணம் என்பது நிச்சயம் என்பதை நாம் உணர்ந்திருந்தாலும் நமக்குள் இருக்கும் ஈகோ நம்மைவிட்டு மரணமாவதில்லையே. மனிதனுக்கு மறதி இல்லை எனில் இந்த உலகம் மயானம்தான். மறதியால் தான் மனிதன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.

எதைமறக்க வேண்டுமோ அதை மறந்து விட்டால் துக்கமும் துயரமும் பறந்துபோகும் நல்ல தூக்கமும் நிம்மதியும் நம்மிடம்நிறைந்துபோகும்.

முயற்சிப்போம் நம்மிடம் நிறைந்திருக்கிறது.

Thursday, October 7, 2010

உருப்படியான உரையாடல்


பலவருடங்களுக்கு முன் துபாயிலிருந்து தாயகத்திற்கு சென்றேன்.என்னை அழைப்பதற்கு எனது நண்பரும் எனது சகோதரரும் விமான நிலையம் வந்திருந்தனர்.

என்னை அழைத்துக் கொண்டு எக்மோர் வந்தார்கள். இரவு 10 மணிக்கு புறப்படும் இரயிலில் எங்கள் ஊருக்கு செல்லலாம் என்பது திட்டம் ஆனால் முன்பதிவு ஏதும் செய்திருக்கவில்லை.
நாங்கள் இரயில் நிலையம் வருவதற்கும் இரயில் புறப்படுவதற்கும் சரியாக இருந்ததினால் அவசரமாக ஏதோ ஒரு பொட்டியில் சாமான்களுடன் ஏறிவிட்டோம்.

சிறது நேரத்தில் டிடிஆர் வந்ததும்தான் எங்களுக்கு தெரிந்தது இது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி என்று.
டிடிஆரிடம் விசயத்தை கூற அவரும் அலட்சியமாக சீட்டு இருக்கு என்றார்.

உடனே எனது நண்பர் டிக்கேட்டை கொடுத்து பதிவுசெய்யப்பட்டதைப் போல் மாற்றி அதற்கான தொகையை கொடுத்து அத்துடன் டிடிஆருக்கு லஞ்சமாக அவர்கேட்ட தொகையும் கொடுத்துவிட்டோம்.

எனது நண்பருடன் பல அனுபவங்களை உரையாடிக் கொண்டிருந்தேன்.படித்தது படித்ததில் பிடித்தது பழகியது என பல விதமான தலைப்பில் எங்கள் உரையாடல் நிகழ்ந்துக் கொண்டிருந்தது.

டிடிஆர் தனது பரிசோதனையை முடித்துக் கொண்டு நாங்கள் அமர்ந்திருந்த வரிசையில் அவரும் அமர்ந்தார். எங்களின் சுவாரஸ்யமான உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தார்.

சாதரணமாக சோதனையை முடித்துக் கொண்டு உறங்கும் அவர் எங்களின் உரையாடலில் உற்சாகமடைந்ததாக கூறினார்.

அதே தருணத்தில் இளைஞர்களான நீங்கள் இப்படிபட்ட உரையாடலை செய்வது அதை நான் கேட்பதும் எனக்கு புதிய அனுபவமாக இருக்கிறது என்றார்.

அப்படி என்ன நாங்கள் பெருசா உரையாடினோம் என்று நீங்கள் கேட்கிறீர்களா?

ஆன்மீகம்.! ஆமாங்க.... இரு வாலிபர்கள் சினிமாவைப்பற்றி காதலைப்பற்றி பேசினால் அது ஆச்சரியமில்லை திருக்குர்ஆனைப் பற்றியும், பைபிளைப் பற்றியும், பகவத்கீதையை பற்றியும் பேசினால் யாருக்குதான் ஆச்சிரியமாக இருக்காது.

விழுப்புரம் ஸ்டேஷனில் டிடிஆரின் வற்புறுத்தலில் உணவகத்தில் விருந்தே வைத்துவிட்டு சொன்னார் உங்களிடம் லஞ்சம் வாங்கியது தவறு அதற்கு பிராயச்சித்தமாக இந்த விருந்து என்றார்.

எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது படித்ததை நாம் விவாதித்தோம் அது மற்றவர்களுக்கு எவ்வளவு பெரிய மாற்றத்தை கொடுக்கிறது புரிதல் சரியாக இருந்தால் எல்லா மனிதர்களும் இந்த டிடிஆரைப்போலதான் இருப்பார்கள் என்பதை அந்த தருணத்தில் எங்களால் விளங்க முடிந்தது.(கொடுத்த லஞ்சம் திரும்பிடுச்சில்ல)