உங்கள் வருகைக்கு நன்றி...

Sunday, October 7, 2012

நான் என்னை அறிந்தால்...

மீள் பதிவு
அமீரக வாழ்க்கை எனக்கு படிப்பியலில் ஆர்வத்தைக் கொடுத்தது. சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், ஜெயகாந்தன், சிவசங்கரி, பாலகுமாரன், அப்துற்றஹீம், எம்.எஸ்.உதயமூர்த்தி, கவிகோ, கவியரசு, மு.மேத்தா இன்னும் பலரின் எழுத்து என்னை எழுத தூண்டுவதற்கு காரணமாகியது.

தத்துவங்களை படிக்கும்போது மனதில் ஒருவித ஈர்ப்பு என்னை ஆட்கொள்ளும்.சிறுவயதில் திருக்குர்ஆனின் தமிழாக்கம் என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது. என் செயல்களில் திருப்பத்தைக் கொடுத்தது. பைபிளிலும் பகவத்கீதையும் ஆழமாக சிந்திக்க வைத்தது. அதன் தாக்கங்களே எனக்கு ஆன்மீகத்தை அறிமுகம் செய்தது.

ஆன்மீகம் என்றால் அதில் ஈடுபடுபவர்கள் தாடிவைத்து, காவி உடுத்தி, வணக்கத்திலேயே சதாக் காலமும் வாழவேண்டும் என்றும், குடும்பப்பற்று இன்றி எந்நேரமும் இறைசிந்தனையோடு இருக்கவேண்டும் என்றும், பலர் எண்ணிக் கொண்டிருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். ஆன்மீகத்திற்கு உடைமாற்றம் தேவை இல்லை மன மாற்றம் தான் தேவை.
ஆன்மீகம் என்றால் பலருக்கு பயம். பயத்தைக் கொடுப்பது ஆன்மீகமல்ல அதை தெளிவுபடுத்துவதே ஆன்மீகம். அது அறிவுக் களஞ்சியம் அது அன்பை ஊற்றெடுக்க வைக்கும் அமுதசுரபி. மனிதனை மனிதனாக வாழவைக்கும் வழிகாட்டி.

வாழ்க்கையே வணக்கம் என்கிறான் இறைவன்.அந்த வணக்கமான வாழ்க்கையை புரிந்துக் கொள்வதற்கு ஆன்மீகத்தின் ஞானம் உதவி புரிகிறது.

ஆன்மீகத்தின் நுழைவாயிலில் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.அந்த கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. எத்தனையோ நூல்களை படித்தும் என்னிடம் பதில் இல்லாமல் போனது எப்படி? ஏட்டு கல்வியில் கிடைக்காத பதில்கள் ஞானக்கல்வியில் கிடைக்கிறது.

ஞானிகள் அதிகம் யோசிக்கக் கூடியவர்கள். ஒரு கருத்தை கூறினால் அதில் பலவிதமான பொருள்கள் இருக்கும். பல ஞானக்கதைகளை வாசிக்கும் போது அது நமக்கு வெளிச்சப் படுத்துகிறது.

ஆன்மீகம் என்பது ஆன்மாவைப்பற்றிய விளக்கம் அந்த விளக்கம் தான் ஞானம்.
விஞ்ஞானிகள் எதையும் ஆராய்ந்து கூறும் போது உலகம் உடனே ஏற்றுக் கொள்ளும். ஆனால் மெய்ஞ்ஞானி ஒன்றை கூறினால் இந்த உலகம் யோசிக்கும். காரணம் அறியாமை ,விளங்காமை.

ஞானம் வெளியிலிருந்து தொடங்கப்படுவதல்ல.தன்னிடமிருந்து ஆரம்பிக்கப் படுவது. சுய சிந்தனையை தன்னில் ஏற்படுத்தக் கூடியது. ஞானம் கற்பதில் என்ன பயன் இருக்கிறது? என்ற சிந்தனை அதனுள் நுழையுமுன் என்னிடம் எழுந்தது.

ஒரு மருத்துவரிடம் நீங்கள் மருத்துவரானதால் உங்களுக்கு என்ன பயன்? என்று கேட்பதைபோல் தான் ஞானமும் என்று விளங்கப்படும் போது உணரப்பட்டேன்.

இந்த உலகில் எத்தனையோ விதமான அறிவுகள் படித்துக் கொடுக்கப்படுகின்றன அவைகளெல்லாம் பொருளீட்டலை மையமாக வைத்தே போதிக்கப்படுகிறது. ஆனால் மனிதனைப் பற்றி படித்துக் கொடுக்கப்படுவது தான் ஆன்மீகஞானம்.

ஒருமுறை குருநாதரிடம் ஓரு கேள்வி கேட்கப்பட்டது. பாவம் என்பது என்ன?

மனிதன் தன்னை தான் அறியாமல் இருப்பது தான் பாவம் என்று பதிலுரைத்தார்கள். ஒரு வரி பதிலாக இருந்தாலும் இதில் ஓராயிரம் விளக்கம் இருக்கிறது.

ஒரு மனிதன் இறைவனைத் தேடி காடு மேடெல்லாம் அலைந்து களைத்து போய் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கிறான். அருகிலிருந்த மனிதர் அவருக்கு களைப்பு நீங்க உணவு கொடுத்திருக்கிறார். உணவை உண்டதும் மீண்டும் இறைவனைத்தேட புறப்பட்டார். புறப்பட்டவரிடம் எங்கே செல்கிறீர்? என்று உணவு தந்தவர் வினவ நான் இறைவனைத் தேடி போய் கொண்டிருக்கிறேன் என்று பதில் கூறினார்.

இறைவனின் முகவரி என்னிடம் இருக்கிறது நீங்கள் அலையவேண்டாம் என்றார். உண்டவனுக்கோ ஆச்சரியம்…எங்கு இருக்கிறான் சொல்லுங்கள்?, என்று ஆர்வத்துடன் கேட்க அவரை அமைதிப்படுத்தி அமரவைத்தார்.

ஐயா! ஒன்றை அறியவேண்டுமானால் அதைப்பற்றி தெரிய வேண்டும். தெரிவது எப்படி? தெரிந்தவரிடம் கேட்க வேண்டும். இறைவனை அறியவேண்டுமானால் இறைவனின் படைப்பை அறியவேண்டும். நீயே இறைவனின் படைப்புதானே உன்னை நீ அறிய முற்படு நீ தேடும் இறைவனை நீ காணலாம் என்றார். இந்த அறிவுதான் குருவாக நிற்கிறது.
கையிலே வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைகின்ற கதைதான்.
பொறியியல் கல்லூரியில் மருத்துவம் படிப்பது எப்படி.? எதையும் சரியானவர்களிடம் சார்ந்தால்தான் நம்மை சரிசெய்துக் கொள்ள முடியும்.

ஞானத்தேடல் உள்ள மனிதனிடம் குருத்தேடல் இருக்கும். அறிந்தவரிடமிருந்து தான் அறிவைப் பெறமுடியும். குரு என்பது அறிவு . இந்த உலகமே குருத்துவமாக தான் இருக்கிறது.

ஒன்றிலிருந்து புறப்பட்டதுதான் இந்த உலகம் இரண்டு என்பது பேதம். இரண்டு ஒன்றாகும் போது அங்கு ஏற்படுவது ஏகத்துவம் . ஆதமும் ஏவாளும் (ஹவ்வா)ஒன்றிணைந்தபோது மனிதம் உற்பத்தியானது. அந்த வழிமுறைதான் நேற்றும், இன்றும், நாளையும்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறோம். குழந்தையிடம் எந்த பாரபட்சமுமில்லை. நாமும் குழந்தையாக இருந்துதானே வளர்ந்திருக்கிறோம் நம்மிடமும் தெய்வத்தன்மை இருக்கவேண்டுமே இருக்கிறதா? இருக்கிறது அது மறைந்திருக்கிறது. இருந்தது எப்படி மறைந்தது?

நாம் படித்த நூல்களை அடிக்கி வைத்து வருகிறோம் நிறைய புத்தகங்கள் நம்மிடம் சேர்ந்துவிட்டன என்னென்ன நூல்கள் இருக்கிறது என்பதே சில நாட்களில் மறந்தும் போய்விடுகிறது. ஒரு குறிப்பிட்ட நூலைத் தேடுவதற்கு அடுக்கிவைத்த நூலை ஒவ்வொன்றாக எடுத்து இடமாற்றுவோம். நாம் தேடும் நூல் அடியில் இருக்கிறது இதை கண்டுபிடித்து எடுப்பதற்கு அடுக்கப்பட்டிருந்த அத்தனை நூட்களையும் எடுக்கவேண்டி இருந்தது அல்லவா? அதுபோல்தான் நாம் குழந்தையாக இருந்தபோது தெய்வத் தன்மையில் இருந்தோம் நாம் வளரவளர புத்தகங்களை அடிக்கியது போல நம் மனதில் அடிக்கி வைக்கப்பட்ட அத்தனையும் கிளறவேண்டும், தேடவேண்டும் தேவையானதை வைத்துக் கொண்டு தேவையற்ற எண்ணங்களை சிந்தனைகளை களையவேண்டும் அப்படி களையப்படும்போது தேடப்படுவது கிடைக்கும்.

எப்படி தேடுவது என்பதை சொல்லிக் கொடுப்பவர்தான் குரு. நம் முகத்தை நமக்கு காட்டும் கண்ணாடி போல. பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்தான் முதல் குருவாக இருக்கிறாள். தாய்க் கல்விக்கு பின்தான் கல்விக்கூடங்கள் மற்ற அனைத்தும்.

எதையும் கற்றுக் கொடுக்கப்படாமல் ஒரு குழந்தை வளர்ந்தால் அது மிருகமாகிவிடும். மிருகத்திற்கு ஒன்றை கற்றுக் கொடுத்தால் அது மனிதனாக முடியாது. படைப்புகளில் மிக சிறந்த படைப்பு மனிதன் என்கிறான் இறைவன்.

மனிதனிடம் எல்லா குண அதிசியங்களும் இருக்கின்றன. அதனால்தான் அவனுக்கு அதிகமாக போதனை தேவைப்படுகிறது.

மனிதன் மனிதனாக வாழ்வதற்கு ஞானஅறிவுத் தேவை…அந்த அறிவு மனிதனிடம் இருக்கிறது அதை அடையாளப்படுத்தவே குருத்துவம் தேவைப்படுகிறது.

பொருள் வாங்கச் சென்றவர்கள் கடையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கக் கூடாது வாங்கப்போகும் பொருளில் குறியாக இருப்பது போல் குருவிடம் சென்றவர்கள் ஞானத்தை பெறுவதில் குறியாக இருக்கவேண்டும் குருவிடம் குறையை தேடிக் கொண்டிருந்தால் நிறைவு பெற முடியாது.

Sunday, March 18, 2012

“கின்னஸ் புத்தகத்திற்கு கிடைத்த கின்னஸ் ரிக்காட்”

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் செய்த சாதனையைப் போல் யாரும் செய்தது இல்லை என்பது இந்த உலகத்தின் பல நாடுகளில் வாழும் பல அறிஞர்களின் கருத்தாகும்.
மனித குலத்திற்கு விடிவெள்ளியாக மனித நேயத்திற்கு மாணிக்கமாகத் திகழ்ந்த கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு புதையலாகவே இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி அறிந்துக் கொள்ளவதற்கு செய்யப்படும் ஆய்வுகள் அதிகமதிகம். அந்த ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருந்தது இல்லை என்பதே உண்மை.
தினம் பல்லாயிரம் கோடி மக்களால் அதிகமாக உச்சரிக்கப்படும் ஒரே பெயர் “முஹம்மத்”(ஸல்) அவர்கள். அந்தளவு மக்களின் அன்பையும் மக்களின் ஆர்வத்தையும் பெற்றிருக்கிறார்கள்.
அவர்களின் பெயரில் செய்யப்படும் ஒவ்வொரு வெளியீடும் அந்த வெளியீட்டாளருக்கே அல்லாஹ் கண்ணியத்தையும் கௌரவத்தையும் தந்துக் கொண்டிருக்கிறான்.

அந்த வகையிலே ஐக்கிய அரபு அமீரகம் பதினோரு மில்லியன் திரஹம் சிலவில் (இந்திய ரூபாய் மதிப்பு பதிநான்கு கோடியே என்பத்தைந்து லட்சம்) நானூற்று இருபது பக்கங்களில் ஆயிரம் கிலோ கிராம் எடையில் ஐந்து மீட்டர் நீலம் நான்கு மீட்டர் அகலம் கொண்ட இந்த உலகின் மிகப்பெரிய நூல் ஒன்றை அதிகமான செலவில் தயாரித்துள்ளது.
அந்த நூல் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பற்றி கூறும் நூலாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த நூலை ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியமைச்சர் ஷேக்ஹம்தான் பின் அல்மக்தூம் அவர்கள் திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சிக்கு உயர் அரசு அலுவலர்களும் மன்னர் குடும்பத்தினர்களும் மற்றும் பன்னாட்டு தொழிலதிபர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் நிதியமைச்சர் ஷேக்ஹம்தான் பின் அல்மக்தூம் அவர்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் முன்மாதிரியான வாழ்வைப் சமூகம் அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஐம்பதாயிரம் சாதாரன பிரதிகளை தனது சொந்த செலவில் வெளியிடுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நூலை வெளியீட்டாளர்களின் கருத்தானது “இஸ்லாத்தின் இறுதி நபியாக முஹம்மத்(ஸல்) அவர்கள் காணப்படுவதுடன்,சர்வதேச மற்றும் மனிதாபிமான ரீதியில் மிகவும் செல்வாக்குவாக்குச் செலுத்தியவர்களாகவும் நபி(ஸல்) அவர்கள் விளங்குகின்றார். நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையை முன்னிலைப் படுத்துவதன் மூலம் இஸ்லாத்தையும்,முஸ்லிம்களையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இச்செயல்திட்டத்தின் நோக்கமாகும் என இப்புத்தகத்தின் வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கின்னஸ் புத்தகம் இந்த உலகத்தில் நடந்த எத்தனையோ விசயங்களை சாதனைகளாக பட்டியலிட்டிருக்கிறது. ஆனால் முதல் முறையாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கின்னஸ் தனது புத்தகத்தில் இடம் பெறச்செய்து தனது புத்தகத்திற்கு கின்னஸ் ரிக்காட்டை தனக்கே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று கூறுவதே சாலச் சிறந்தது.

இந்நூலை வெளியீட்டு பெருமானார் (ஸல்) அவர்களின் மீது கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்தி இவ்வுலகிற்கு இஸ்லாமிய நபிநேச விழிப்புணர்வை ஏற்படுத்திய ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு மற்றும் நூல் குழுவினர்களுக்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Sunday, February 26, 2012

ஒரு பாட்டில் "அன்பு" ஆயிரம் ரூபாய்!

இன்று காலை பணிக்கு புறப்படுமுன் தொலைக்காட்சியில் மகளிர் அரங்கத்தில் ஒரு சிறுமி பேசிக்கொண்டிருந்தாள் வயது அநேகமாக பத்துக்குள்ளாக இருக்குமென நினைக்கிறேன் கல்வியே அறிவைத் தரும் என்ற தலைப்பில் ஆவேசமாக பேசினாள்.

பணிக்கு புறப்பட்ட நான் ஐந்து நிமிடம் அந்த சிறுமியின் பேச்சை கேட்டுவிட்டு புறப்பட்டேன். சிந்தனை அந்த சிறுமியின் பேச்சில் சுழன்றது.

கல்வி மட்டுமே மனித சமுதாயத்தை மேம்படுத்தும் கல்வி ஒன்றே மனிதனை உயர்வடையச் செய்யும் என்றெல்லாம் பலரும் பேசுகிறார்கள் அவர்களின் பேச்சு உண்மையானதுதான் ஆனால் கற்கும் கல்வி?

ஒரு மாணவனின் வாழ்க்கை முன்னேற்றம் என்பது அவன் படித்து முடித்து வேலைக்கு சென்று நன்கு சம்பாதித்து எல்லா வசதிகளுடனும் வாழும்போது அவனை உயர்ந்த நிலையில் இருக்கிறான் என்று சமுதாயம் சொல்கிறது.

கல்வியினால் சமுதாயம் முன்னேறுகிறது என்பது மச்சி வீடு மாடி வீடாகவும், மாடி வீடு பங்களாக்களாகவும் இப்படி வசதிகள் கல்வியினால் மாற்றம் காண்கிறதே தவிர, மனித நேயத்தில், மனிதர்களின் குண நலன்களில் இன்றைய கல்வி மாற்றத்தை அதிகம் தருகிறதா(?) என்பது கேள்வியாகும்.

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் கிராமம் வரையில் இணையதளம் வளர்ந்து விட்டது என்னவோ உண்மைதான் ஆனால் கிராமத்தில் வாழ்ந்த பெற்றோர்கள் இன்று முதியோர் இல்லங்களில் வாழ்ந்து வருவதும், முதியோர் இல்லங்கள் வளர்ந்து வருவதும் கல்வியின் முன்னேற்றமா?

பொருளாதாரத்தை முன்வைத்து கல்விச் சாலைகளும், கற்பிக்கப்படும் ஆசிரியர்களும், கற்கும் மாணவர்களும், பெற்றோர்களும் செல்கிறார்கள் அவர்களின் சமுதாயம் எப்படிபட்டாதக இருக்கிறது என்றால் மனிதனுக்கு மனிதன் உதவி செய்வது என்பது மறந்து உதவி செய்வதற்கு ஆதாயம்தேடும் வியாபார சமுதாயமாக மாறி வருகிறது என்பதை கண்கூடாகக் காணமுடிகிறது.

அண்ணன் தம்பிக்கு மத்தியில் பாசத்தைவிட தங்களிடமுள்ள பணம்தான் யார் அண்ணன் யார் தம்பி என்பதையே இன்றை சூழல் நிர்ணயிக்கிறது.

இந்திய அரசியல்வாதிகள் எல்லாம் படிக்காதவர்களா? கல்வி கற்றவர்கள்தானே? இன்று பொறுப்பில் இருக்கக்கூடியவர்களின் சுரண்டல்கள் எத்தனை கோடிகள் என்பதை ஊடகத்துறை வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறதே இவர்களிடம் பொருளாதார ஆசையை மட்டுமே வளர்த்திருப்பது எது?

இன்றைய காலத்தில் பெரிய தவறுகளை எல்லாம் கல்வி கற்கும் சில மாணவர்கள் சர்வ சாதரணமாக செய்கிறார்கள் அவர்களுக்கு கற்பிக்கும் அந்த ஆசிரியர்கள் எப்படிபட்டவர்களாக இருப்பார்கள்?

கல்விச் சாலைகளை மிக அழகாக வடிவமைத்து வருவதில் இன்று கவனமாக இருக்கும் இவர்கள் அதில் படிக்கும் மாணவர்களின் குண நலன்களை அழகுபடுத்த வேண்டிய பணி கல்விச் சாலைகளுக்கு இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.

அறிவைக் கற்கும் அனைத்துமே கல்விதான் ஆனால் இன்றைய சூழலில் பெரும்பாலோர் அறிவு பெறுவதற்காக கல்வி கற்கவில்லை பொருளீட்டுவதற்காக மட்டுமே கல்வி கற்கிறார்கள். இந்த பொருள் கல்வியானால் இந்த சமுதாயத்தில் வசதிகள் பெருகலாம் ஆனால் ஒரு இயந்திரதனமான வாழ்க்கைமுறை வளர்ந்து மனிதம் ஏழையாகவே இருக்கும்.

பொருளாதாரத்தை வைத்து எதையும் செய்யமுடியும் என்ற எண்ணம் வளர்ந்து வரும் சமுதாயத்தில் அன்பு என்பது மினரல் வாட்டரைபோல பாட்டல்களில் அடைத்து ஒரு பாட்டில் அன்பு ஆயிரம் ரூபாய் என சூப்பர் மார்கெட்டுகளில் விற்பனை செய்யக்கூடிய காலம் நம்மை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது.

மனிதனை மனிதனாக வாழவைக்கக்கூடிய தன்னை அறியும் ஞானக்கல்வியை இணைத்து கல்லூரிகளில் அனைவரும் கற்பதற்கு வழிவகை செய்யவேண்டும். அன்பும் நேயமும்மிக்க இந்த கல்வியினால் மட்டுமே இந்த சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றங்களை நிகழ்த்த முடியும்.

“சீன தேசம் சென்றாயினும் சீரான கல்வியைத்தேடு” என்று கூறும் அண்ணல் நபிகள் ஏட்டுக் கல்வியை கற்காதவர்கள். இறைவன் கற்பித்துக் கொடுத்த கல்வியைகற்று இந்த உலகத்திற்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் ஒரு கல்விச்சாலையாகவே இருக்கிறான் அவன் அதை அறிந்துக் கொண்டானேயானால் மனிதம் மலரும் அன்பு ஓங்கும்.தினம் அரைமணித் துளியேனும் நம்மை நாம் சிந்திக்க முற்பட்டால் நம்மிலே மாற்றங்கள் நிகழும் அந்த மாற்றம் இந்த சமுதாயத்தை மாற்றும்.!

Saturday, February 25, 2012

தந்தைக்கு ஒரு தாலாட்டு - 2

சிங்கை மருத்துவரிடம் இந்தியாவிற்கு என்தந்தையை அழைத்துச் செல்கிறேன் என்று அனுமதி கேட்டதும் அவர்களும் அனுமதி அளித்தனர்.

ஐம்பதாண்டு காலம் வாழ்ந்த சிங்கப்பூர் அந்த நாட்டின் குடிமகன் என் தந்தையை அந்த நாட்டைவிட்டு அழைத்துச் செல்லும்போது என்தந்தையின் மனம் பட்ட கஷ்டங்களை என்னால் காணமுடிந்தது.

உறவினர்கள் அனைவரும் விமான நிலையத்தில் திரண்டு நின்று தள்ளு வண்டியில் அமர்ந்திருந்த என்தந்தைக்கு வழியனுப்பு விழாவைப் போல வாழ்த்துச் சொல்லி அனுப்பிய அந்த கணம் இனி நான் சிங்கப்பூர் வரவே மாட்டேனோ(?) என்ற கேள்விப் பார்வையோடு அனைவரையும் பார்த்து கண்ணீரோடு விடைபெற்ற அந்த தருணங்கள் வரையில் இவர் மறுஉலக வாழ்க்கைக்கு செல்ல விடைபெறுகிறார் என்ற இரகசியம் எங்கள் யாருக்குமே தெரியாது.

சென்னை விமான நிலையத்தில் எங்கள் குடும்பம் தந்தையின் வருகைக்காக காத்திருக்க தள்ளு வண்டியில் தள்ளிக் கொண்டு வந்ததைப் பார்த்த என்தாயார் மற்றும் சகோதர சகோதரிகள் கதறி அழுதனர்.

சர்கரை வியாதிக்கு நல்ல முறையில் சிகிச்சை செய்யக்கூடியவர் நாகப்பட்டினம் அன்சாரி டாக்டர் என்பதை கேள்விப்பட்டிருந்ததால் சென்னையிலிருந்து நாகைக்கு விரைந்தோம்… டாக்டர் பார்த்துவிட்டு புண்ணை குணமாக்கி விடலாம் என்று ஆறுதலான வார்த்தைகளை உதிர்த்தார். இரண்டு தினங்களில் தைரியத்துடன் நான் பணிக்கு துபாய் திரும்பிவிட்டேன்.

சரியாக மூன்று மாதத்தில் பெருவிரலிலும் கால் பாதத்திலும் ஏற்பட்ட புண்ணை குணமாக்கி என் தந்தையை நடமாடவிட்ட பெருமை டாக்டர் அன்சாரியை சாரும். இரண்டாண்டுகள் இறைவணக்கத்திலேயே அதிகமாக பொழுதை கழித்தார் அவ்வபோது சர்க்கரை வியாதியின் தாக்குதலும் இருந்துக் கொண்டு இருந்தது.

2004 லில் விடுமுறையில் தாயகம் வந்தபோது சில தினங்களில் என் தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். மாதம் ஒருமுறை உடல் பரிசோதனை செய்வதற்கு செல்லும் தஞ்சாவூர் ரோகினி மருத்துவமனைக்கு என்தந்தையை அழைத்துச்செல்ல தயாரானோம். அந்த தருணத்தில் என் தந்தையின் உடன்பிறந்த சகோதரி வந்திருந்தார் என் தந்தைக்கு சட்டை அணிவித்து பொத்தான் மாட்டிவிட்டு அண்ணே நல்லபடி திரும்ப வருவேண்ணே என்ற வார்த்தையை கூறியபோது அந்த வார்த்தை என்மனத்தில் ஏதோ ஒரு நெருடலை கொடுத்தது.

ரோகினி மருத்துவமனையில் எங்கள் உறவினர் ஒருவரை சேர்த்து இருந்தார்கள். அவர்களும் என் தந்தையைக் கண்டு நலம் விசாரித்துவிட்டு சிங்கப்பூரின் பழைய கதைகளை பேசி கலகலப்பாக இருந்தார்.
மூன்று தினங்களாக வாடிய முகத்துடன் இருந்த என் தந்தை அவரின் பழைய நிகழ்வுகள் நினைவுகள் அவர் மனதை உற்சாகப்படுத்தியது.

இரவு அங்கு தங்கியிருக்கும் சூழல் ஏற்படவே என்னை வீட்டு போகும்படி என் தந்தைக் கூற, வேண்டாம் நான் இங்கு இருக்கிறேன் தம்பி வீட்டுக்கு போகட்டும் என்று கூறி தம்பியை அனுப்பி விட்டேன்.

பின்னிரவில் மூச்சுத்தினரல் ஏற்பட்டது உறங்கிக் கொண்டிருந்த என்னை என்தாயார் எழுப்ப நான் அவசரமாக மருத்துவரை கூப்பிட்டேன் வந்து பார்த்துவிட்டு ஆக்ஸிஜன் கவரை உபயோகிக்க கொடுத்துவிட்டு சென்றார்.

சற்று நேரத்தில் மூச்சுத்திணறல் சரியானது கட்டிலில் அமர்ந்திருந்த என் தந்தை கீழே அமரவேண்டும் எனக்கேட்க கீழே அமர்த்தினேன். மீண்டும் கட்டிலில் அமர வேண்டும் எனச் சொல்ல தந்தையைத் தூக்கி கட்டிலில் அமர வைப்பதற்கு சிரமப்பட்டேன்.

காலை ஆறு மணிக்கு என் தந்தையை பரிசோதிக்க டாக்டர் அறைக்குள் வரவே நான் பக்கத்து அறையில் உள்ள உறவினருக்காக மருத்துவமனையின் கீழ்தளத்தில் உள்ள உணவகத்தில் பால் வாங்க சென்று சில வினாடிகளில் என் மனைவி பதற்றத்துடன் என்னை அழைக்க ஓடிப்போய் என் தந்தையை கண்டபோது கட்டிலில் உறக்க நிலையில் கிடக்க டாக்டர் என் தந்தையின் நெஞ்சை அழுத்தி அழுத்தி பம்ப் செய்துக் கொண்டிருந்தார்.

என்ன நடக்கிறது என்று என்னால் யூகிப்பதற்குள் என்தாயாரும் என் மனைவியும் அழுதுக் கொண்டிருக்க டாக்டரை நகரச் சொல்லி என் தந்தையின் நெஞ்சத்தை என் கைகளால் இறைவனின் பெயரைச் சொல்லி அழுத்தினேன். என் தந்தையின் கண்கள் மூடியேயிருந்தன புரிந்துவிட்டது பால் வாங்க சென்ற சில வினாடிகளில் அவசர அவசரமாக முன்கர் நக்கீர் வந்துபோய்விட்டார்..
“தாருல் பனாவைவிட்டு தாருல்பகாவை என் தந்தை அடைந்துவிட்டார்கள்.

வாழ்க்கையின் பெரும்பகுதி குடும்பத்திற்காகவே வாழ்ந்தவர்களில் என் தந்தையும் ஒருவர். தன் சுகத்தைவிட குழந்தைகளின் நலனையே தனது வாழ்க்கையாக்கி வாழ்ந்தவர்.
என் தந்தையின் தியாகங்களை முழுமையாக இங்கு விவரிக்கவில்லை என்றாலும் நான் உங்களோடு பகிர்ந்துக் கொண்டதில் விளங்கி இருப்பீர்கள் இவ்வளவு தூரம் என் சொந்தக் கதையை வாசித்த உங்களுக்கு என்றும் நன்றியுடன்…

Friday, February 24, 2012

தந்தைக்கு ஒரு தாலாட்டு

ஒரு நாட்டின் தலைவர் மரணமடைந்தால் நாடே துக்கத்தை அனுஷ்டிக்கும். ஒரு வீட்டின் தலைவன் இறந்தால் அந்த குடும்பமும் அதன் உறவுகளும் துக்கத்தை அனுபவிக்கும். நம் வாழ்க்ககையில் நம் குடும்பத்தில் நம் உறவினர்களில் யாரோ ஒருவரின் மரணத்தை நாம் சந்தித்திருப்போம் அதன் தாக்கம் நம் மனதை பாதித்திருக்கும் அப்படித்தான் என் வாழ்க்கையிலும் என் தந்தையைப் பற்றிய இடுக்கைதான் இது.

2004 ஜூன் எனது விடுமுறை மாதம் ஆண்டு தோறும் இந்த மாதத்தில் தான் துபாயிலிருந்து தாயகம் செல்வேன். முந்தைய ஆண்டில் எனது மனைவி குழந்தைகளை தாயகத்திலே விட்டுவந்திருந்தேன். வெளிநாட்டு வாழ்க்கையில் விடுமுறையில் தாயகம் செல்வதென்பது இமயமலை உச்சியில் ஏறிய சந்தோசத்தைப் போல மனம் மகிழ்ச்சியின் பிரவேசமாகவே இருக்கும்.

எத்தனை அறிவியல் வளர்ச்சி வளர்ந்திருந்தாலும் நம் உறவுகளை நேரில் கண்டு உண்டு
பேசி சிரிப்பதைப் போல் உள்ள மகிழ்வு எதிலும் இல்லை.

மாலை ஐந்து மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து இல்லம் வந்து சேர்ந்த என்னை என் தந்தை கட்டி தழுவி வரவேற்றார். இதுவே கடைசி தழுவல் என்பது எங்கள் யாருக்கும் தெரியாத இறை இரகசியமாக இருந்தது.

ஐம்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக சிங்கையிலே தனது வாழ்க்கையை கழித்தவர் என் தந்தை. சக்கரைநோயின் தாக்குதலினால் காலில் புண் ஏற்பட்டு அதையும் பொருட்படுத்தாமல் அலட்சியமாகவே சிங்கையில் வணிகம் புரிந்த என் தந்தையை வழுக்கட்டாயமாக மருத்துவ மனையில் சீனர்கள் சேர்த்து விட்ட போது மருத்துவர்கள் ஒரு காளை வெட்டி எடுக்கவேண்டும் என்று கூறிய போதுதான் நோயின் தாக்குதலை உணர்ந்திருந்தார்.
அதுவரையில் அவர் உள்ளத்திலும் எண்ணத்திலும் நோயின் பாதிப்பு இல்லை. குடும்பத்தின் மீது அவர் வைத்திருந்த அதீத பாசம் மட்டுமே இருந்தது.


சிங்கை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தியறிந்து சிங்கைக்கு விரைந்தேன் தன்னந்தனியே மருத்துவமனையில் படுத்துக் கிடந்த என் தந்தையை இரண்டாவது நாளில் அதிகாலை ஐந்து மணிக்கு உறக்கத்திலிருந்து அவர் கண்விழித்த போது அவரருகில் நான் நின்றதைக் கண்டதும் அவர் முகத்திலும் கண்களிலும் பெருக் கெடுத்த கண்ணீர். இந்த மரம் காய்த்து ஒய்ந்திடுச்சிப்பா இனி காய்க்காது என்று சொல்வதைப் போல்…

உங்க விதையில் முளைத்த மரங்கள் உங்களை சுமக்கும் என்ற ஆறுதலோடு என் தந்தையின் கரங்களைப் பற்றி பிடித்த நான் …

வந்துட்டேன் கவலை வேண்டாம் என்ற போது
துபாயிலேந்து எப்போ வந்தே ?
வந்து ஒரு மணிநேரமாச்சு என்றதும்
என்னை எழுப்பி இருக்கலாமே என்றார்.

ஐம்பதாண்டு சிங்கை வாழ்க்கையில் என் தந்தைக்கு அதிகமான தொந்தரவுகளை கொடுத்துருக்கிறேன். உறக்கத்தில் கூட இனி தொந்தரவு செய்யக் கூடாது என்ற உணர்வில் இருந்தேன் என்பதை என்னால் இங்கு எழுதத்தான் முடிந்தது.

ஆண்பிள்ளைகள் பெற்றால் நிறைய சம்பாதித்து போடுவார்கள் என்ற கனவு பல பெற்றோர்களிடம் இருக்கிறது. சம்பாதித்து போடுகிறார்களோ இல்லையோ பெற்றோர்களை பேணுகின்றார்களா ? என்பதே இன்றைய காலக்கட்டத்தில் கேள்விக் கணைகளாக இருக்கிறது.

ஐந்து ஆண்மக்களையும் இரு பெண் மக்களையும் பெற்றிருந்தாலும் எங்களை யெல்லாம் பெண்பிள்ளைகளை வைத்து காப்பதுபோல் தான் காத்து நின்றார்.
சுயமாக பறப்பதற்கு இறக்கைகள் முளைத்தாலும் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதானே.

சிங்கையில் எந்த உறவினர்களின் வீட்டுக்கும் அடிக்கடி செல்லாதவர். நடைபாதை கடையிலேயே தனது இளமைக்கு விடைக் கொடுத்தவர். அவருக்கு தெரிந்ததெல்லாம் சிங்கையின் விமான நிலையமும் தான் தங்கிருக்கும் வாடகை வீடு மட்டுமே. தனக்காக வாழ்ந்ததை விட தனது குடும்பத்திற்காக வாழ்ந்த வாழ்க்கை அதிகம்.

பொருள் சம்பாதிக்கலாம் சிலவும் செய்யலாம் மீண்டும் சம்பாதிக்கலாம் ஆனால் இளமையை சிலவு செய்யத்தான் முடியுமே தவிர சம்பாதிக்க முடியுமா?

ஓரு ரூபாயாக இருந்தாலும் அதை ஒரு லட்சமாக எண்ணி சேமிக்கும் குணங்கொண்டவர் அதனால் தான் அந்த ஒரு ரூபாய் பல லட்சங்களாய் கோடிகளாய் என் தந்தையின் பெயரை இன்றும் உச்சரித்துக்கொண்டிருக்கிறது.
என் தந்தை J.கமாலுதீன்

இந்த கடையை நிறுவுவதற்கு அவர் பட்டக் கஸ்டங்கள் எவ்வளவு இதோ இந்த கடையை நான் கலைந்துக் கொண்டிருக்கின்றேனே இந்த கடை ஈட்டித்தந்த வருமானத்தில் வளர்ந்தவன் தானே நான் எங்கள் குடும்பம். ஐம்பதாண்டு கால கூட்டை ஐம்பது நிமிடங்களில் கலைத்துவிட்டேனே… இவைகளை பார்க்கமல் எனது தந்தை மருத்துவ மனையில் இருந்தார். அவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இவைகளை என்னால் செய்திருக்க முடியுமா? அவரால் அதனைக் காணத்தான் முடியுமா?நான் கலைத்தது கடையல்ல என் தந்தையின் கனவு.

பதிவு பெரியதாக இருப்பதினால் இதன் தொடர்ச்சியை நாளை வாசிக்கலாமே...

தொடர்வோம்...


Thursday, February 23, 2012

நேசப் பயணம்

இந்த மாதம் துவக்கத்தில் அமீரகத்திலிருந்து சுமார் முப்பத்தைந்து பேர்கள் சேர்ந்து ஒரு குழுவாக இலங்கைக்கு பயணமானோம். இது சுற்றுலா பயணம் அல்ல. அண்ணல் நபிகள் மீது கொண்ட நேசப்பயணம். இங்கு நான் பகிர்வது பயணத்தின் நோக்கத்தை அல்ல. பயணத்தில் ஏற்றபட்ட சில அனுவத்தை பகிரந்துக் கொள்கிறேன்.
இந்த குழுவை ஒருங்கிணைத்த பொருப்பாளர்களில் நானுமிருந்தேன்.

துபாயிலிருந்து இரவு 10.55 மணிக்கு சிரிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் எங்களின் பயணம் நிச்சயமாகி இருந்தது. அனைவரிடமும் 8.30 மணிக்கு விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்ற தகவல் கூறப்பட்டிருந்தது.

8.30 மணிக்கு விமான நிலையத்தில் சிலர் மட்டுமே நின்றுக் கொண்டிருந்தோம். மற்றவர்களின் நிலை தெரிந்துக் கொள்ள கைபேசியில் தொடர்புக் கொண்டு துரிதப்படுத்தினேன். வழியில் இருக்கிறோம் வாகன நெரிசலில் மாட்டியிருக்கிறோம் என்றார்கள் அவர்கள் வரும் வரையில் காத்திருந்து எல்லோரும் ஒன்றாக சேர்ந்தே போடிங் கவுண்டருக்கு சென்றோம்.

ஒவ்வொருவரிடமும் தங்களுக்கு தேவையான லக்கேஜ் மற்றும் சிலரிடம் 40 கிலோவிற்கும் அதிகமான லக்கேஜ் இருந்தது. அதை அதிக எடை இல்லாதவர்களோடு சேர்த்து போட்டு போடிங் பெறுவதற்குள் 10 மணி ஆகிவிட்டது.

அடுத்து இமிக்கிரேஷன் முடிக்கவேண்டும் கூட்டம் அதிகமாக நின்றுக் கொண்டிருந்தது. அப்படி இருந்தும் 15 நிமிடங்களில் இமிக்கிரேஷன் என்னோடு நின்றவர்களுக்கு முடிந்துவிட்டது. அங்கிருந்து விமானத்தை நோக்கி நடந்து செல்வதற்கு குறைந்தது 10 நிமிடங்கள் ஆகும். பேட்டரிகார் வசதியும் இருக்கிறது அதில் நாங்கள் அமர்ந்துக் கொண்டோம்.
இறங்குமுன் எனக்கு டெலிபோன் வந்தது எங்கள் குழுவில் உள்ள ஒரு குடும்பத்தை இமிக்கிரேஷனில் திருப்பி விட்டார்கள். என்றார் ஏன் என்று வினவியதற்கு அவருடைய பையன் பாஸ்போர்ட் மிஸ்சிங் என்றார்!

எனக்கு ஒன்றுமே புரியவில்லை எங்கு எப்படி தொலைந்தது என்றேன்.
போடிங் கவுண்டரில் அவர் கொடுத்த பாஸ்போர்ட் பழைய மற்றும் புதுப்பித்த பாஸ்போர்ட்டும் சேர்த்து பின் செய்திருந்தது. திரும்ப வாங்கும்போது பின் கலண்டு இருந்ததால் பழைய பாஸ்போர்ட்டை பேக்கில் வைத்து லக்கேஜில் போட்டுவிட்டு புதிய பாஸ்போர்ட்டுடன் இமிக்கிரேஷன் சென்றிருக்கிறார். இமிக்கிரேஷன் அதிகாரி பாஸ்போர்ட்டை வாங்கி அமீரக குடியுரிமை பக்கத்தை தேட அது பழைய பாஸ்போர்ட்டில் உள்ளதால் அதை அதிகாரி கேட்க அதை லக்கேஜில் போட்டுவிட்டேன் என்று கூற அந்த பாஸ்போர்ட்டை எடுத்துவா என்று அதிகாரி திரும்ப அனுப்பிவிட்டார்.

அவசரஅவசரமாக போடிங் கவுண்டருக்கு சென்று விசயத்தை கூறி லக்கேஜை கேட்டால் அது இன்னேரம் விமான தளத்திற்கு சென்றிருக்கும் அதை திரும்ப பெற்று இந்த விமானத்தில் பயணம் செய்வது முடியாதது என்று கூறிவிட்டார்கள்.
இந்த லக்கெஜ் இலங்கை சென்று அங்கிருந்து பாஸ்போர்டை எடுத்து கூரியர் மூலம் துபாய் வந்து பிறகு தான் பயணிக்க முடியும் என்றும் நீங்கள் குரூப் டிக்கேட் ஆதலால் ரீபுக்கிங் செய்யஇயலாது என்றும் கூறினார்கள்.

நான்கு தினங்கள் பயணமாக செல்லும் எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியாத சூழலில் எங்கள் குழுவில் உள்ளவரில் ஒருவர் துபாய் விமான நிலையத்தில் பணிப்புரியக் கூடியவர் அவர் உடனே அவருடைய பணிப் பழக்கத்தை வைத்து ஏர்லைன்ஸ் அதிகாரியிடம் பேசியதில் இந்த விமானத்தில் பயணிக்கவில்லை என்றாலும் அவருடைய லக்கேஜ் எடுத்து கொடுத்துவிடுகிறோம் அதை அவர் பெறுவதற்கு சில மணிநேரங்கள் ஆகும் அது வரையில் விமானம் காத்திருக்க முடியாது இந்த லக்கேஜ் கொடுப்பதற்கே முப்பது நிமிடங்கள் தாமதமாகக்கூடிய சூழ்நிலை இருக்கிறது என்றார். அதுபோதும் அவருக்கு பாஸ்போர்ட் கிடைத்துவிட்டால் அடுத்த விமானத்தில் மறுதினம் வரட்டும் என்று முடிவுசெய்தோம்.

10.55மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 11.25 மணிக்கு புறப்பட்டது.ஆனால் அவரும் அவர் குடும்பமும் வர முடியவில்லை.

அவர் மறுதினம் ஏர்லைன்ஸ் அலுவலகம் சென்று அவர்களிடம் பேசி அதே விமான டிக்கேட்டில் பயணம் செய்து எங்களுடன் சேர்ந்துக் கொண்டார்.

பயணத்தின் போது சிலருக்கு பதட்டம் இருப்பது இயல்பு ஆனால் என்ன செய்கிறோம் என்றே தெரியாமலும் கவனமில்லாமலும் பதட்டப்பட்டால் இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு ஆளாக நேரிடும்.
கவனம் எப்போதும் தேவை.

Tuesday, February 21, 2012

கபீர்தாசரின் காந்தன் காதல்


என் நண்பர் திருச்சி சையது சில நூல்கள் எழுதியும், தொகுத்தும் உள்ளார். அதில் சமீபத்தில் வெளியீட்ட “கபீரின் 100 பாடல்கள்” என்ற நூலை எனக்கு தந்தார்.
படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது 100 பாடல்களும் நம்மிலே சுய சிந்தனையை ஏற்படுத்தக்கூடிய வரிகள்… இந்த பாடல்களை படிக்கும்போது எனக்கு நினைவில் தோன்றிய நபி மொழி
“தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிவான்”
இறைவனை அறியவேண்டுமானால் மனிதன் தன்னை அறிய வேண்டும் என்ற தத்துவத்தையே அந்த நூல் கூறுகிறது.

கபீர்தாசன் என்று பெயர் வைத்திருக்கும் இவர்
வாழ்ந்த காலம் (கி.பி.1398 - 1518) இவருடைய கவிஞானங்கள் இந்தி பக்தி இலக்கியத்தில் தனி சிறப்புக்குரியதாகும்.
கபீர் என்பது அரபிச் சொல்லாகும் அதற்கு பெரியது என்று பொருளாகும். பெரியது என்பது இறைவனைக் குறிப்பிடுகிறது

இவரை சிறுவயதில் ஓர் இஸ்லாமிய நெசவாளர் எடுத்து வளர்த்ததாக கூறப்படுகிறது. மனைவியோடும், குடும்பத்தோடும் இஸ்லாமியச் சூழலில் நெசவுத் தொழிலைச் செய்து வாழ்ந்த இவர் இளமை முதலே இறைநேயம் உடையவராய் விளங்கினார் என்று அவருடைய வரலாறு கூறுகிறது.

இவருடைய பாடல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் பேராசிரியர் எழில்முதல்வன் எளிய தமிழில் நமக்கு தந்துள்ளார்.
கபீர்தாசரின் சிந்தனையை அறிவதற்கு இந்நூல் வாய்ப்பை அளித்திருக்கிறது. அதிலிருந்து சில வரிகள்..

ஓ!
பணியாளனே என்னை நீ எங்கே தேடுகிறாய்?
இதோ நான் உன் அருகிலேயே இருக்கிறேன்.

நான் திருக்கோயிலிலும் இல்லை மசூதியிலும் இல்லை காஃபாவிலும் இல்லை கைலாயத்திலும் இல்லை.

நான் சடங்குகளிலோ அவை சார்ந்த சம்பிரதாயங்களிலோ இல்லை. யோகப் பயிற்சியிலோ துறவிலோ இல்லை.

நீ என்னை நாடும் உண்மை ஆர்வலனாக இருப்பின் உடனடியாகக் காணமுடியும். கண்ணிமைப் போதிலோ கைநொடிப் போதிலோ என்னைச் சந்திக்க முடியும்.
கபீர் கூறுகிறார். ஓ சாதுவே இறைவன் உயிரினுக்கும் உயிராக விளங்குகிறான்.!

இறைவனைப் பற்றி மிகத் தெளிவாக இந்த கவிதை வரிகள் கூறுகிறது. இறைவனை நாம் எங்கே தேடுகிறோம் என்பதை இக்கவிதை சொல்கிறது.
இதையே திருமறையில் “உம் பிடரி நரம்பிற்கும் மிக சமீபமாக இருக்கிறேன்” என்று இறைவன் கூறியுள்ள நுன்மைமிக்க
அந்த திருவசனம் நம் சிந்தையில் நிழலாடுகிறது.

ஒவ்வொரு கவிதையிலும் இறைக்காதலை வெளிப்படுத்தியுள்ளார். கவிதையின் இறுதி வரிகளில் கபீர் சொல்கிறார் என்ற “நச்” வரிகள்..

சில உதாரண கவிதைகளையும் விளக்கத்திற்காக கூறியுள்ளார்

ஆறும் அதன் அலைகளும் ஒரே நுரைத்திரள் கொண்டனவே. அங்ஙனம் இருக்க ஆறும் அலைகளும் வேறு வேறாக முடியுமா?

அலைகள் மேலெழும் போதும் தண்ணீர். அது கீழே விழும் போதும் தண்ணீர்தான். சொல்லுங்கள் ஐயா வேறுபாடு என்ன இருக்கிறது?

அலைகள் என்று பெயர் பெற்றிருப்பதாலேயே அது தண்ணீரல்ல என்று யாராவது கருதுவார்களா?

தனிமுதலாம் பிரம்மத்தினுள் உலகங்கள் யாவும் மணிமிடைப் பவளம்போல் கோக்கப்பட்டுள்ளன. ஞானக்கண் உடையோர்க்கு இது ஜெபமாலையாகவே காட்சிதரும் என்கிறார்.

இறைவன் எங்கோ தனித்து இல்லை அனைத்திலும் சூழ்ந்துள்ளான் ஒவ்வொரு பொருளிலும் ஞானக் கண்ணுடன் பார்த்தால் இறைவனை கண்டுக் கொள்ள முடியும் ஜாதிமத வேறுபாடுகளினால் பிளவுபட்டிருக்கும் மனித சமுதாயம் ஒர் உண்மையிலிருந்து வெளியானவை நாமரூபங்களில் வேறுப்பட்டிருந்தலும் உண்மை ஒன்றுதான் என்பதையே கூறுகிறார்.

ஒருவர் இறைஞானத்தை யாரிடமிருந்து எப்படி பெறுவது அதை போதிக்கக் கூடிய குரு எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுப்படுத்துகிறார்.

ஓ!
சகோதரனே ஓர் உண்மையான குருநாதருக்காக என் இதயம் ஏங்கி நிற்கிறது. அவரே உண்மை அன்பாம் கோப்பையை முற்றிலும் நிரப்பி தானும் பருகி எனக்கும் தருகிறார்.

என் விழிகளை மறைக்கும் படலத்தை விலக்கி பிரம்மத்தைத் தரிசிக்கும் பார்வையை வழங்குகிறார்.

அவர் தன்னுள்ளே அண்டங்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிறார். மீட்டப்படாத பரம்பொருளின் இராகத்தை நான் செவிமடுக்கும்படி செய்கிறார்.

சுகமும் துக்கமும் ஒன்றே என எனக்கு உணர்த்துகிறார். அன்பில் தோய்ந்த சொற்களால் என் இதயத்தை நிரப்புகிறார்.

கபீர் சொல்கிறார்… பாதுகாப்பான புகலிடம் நோக்கிப் பரிவோடு அழைத்தேகும் குருநாதரைப் பெற்றவனே பயமற்றவன் பாக்கியவான் என்று கூறுகிறார்.

மனித வாழ்க்கையில் எந்த ஒரு செயலும் குருயின்றி நடப்பதில்லை ஒவ்வொன்றிலும் ஒன்று சம்பந்தப்பட்டிருக்கிறது.
குரு என்பது மனித வாழ்க்கையின் வழிகாட்டல்.

கபீர்தாசன் போன்ற ஞானிகளும், சூஃபியாக்களும் இன்றும் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேடல் உள்ளவர்களின் கண்களுக்கு மாத்திரமே தென்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
ஞானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை!

நல்லதொரு நூலை வெளியீட்ட அன்பு நண்பர் திருச்சி சையது அவர்களுக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் தந்த பேராசிரியர் எழில்முதல்வன் அவர்களுக்கும்தமிழ்அலை இஷாக் அவர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.

Monday, February 20, 2012

மின்னுவதெல்லாம் நட்சத்திரமல்ல!



இந்த வாரத்தின் நட்சத்திரப் பதிவராக இருப்பதற்கு தேர்வு செய்த தமிழ்மணத்திற்கு மனமார்ந்த நன்றியுடன்…

தமிழ்மணம் உறவு சுமார் மூன்றாண்டுகளைக் கடந்தது.
அங்கு கற்றுக் கொண்டது கொஞ்சம் கற்க வேண்டியது மிச்சம்.
நான்கு ஆண்டு காலமாக வலைதளத்தை சுற்றி வருகிறேன். சாலையைப் போல எத்தனையோ மேடுப் பள்ளங்கள்.
அறிவுமிருக்கிறது அழிவுமிருக்கிறது, கற்றுக் கொள்வதற்கும், கற்க கூடாததற்கும் ஒரே இடம் இணையதளம்.

யாருக்கு எது தேவையோ அது கிடைக்கிறது. குடுமிபிடி சண்டையும் குழாயடி சண்டையும் தெருக்களில் மட்டுமல்ல வலைகளில் வளைகுடா போரைப் போல அவ்வபோது காணமுடிகிறது.

பேனா நண்பர்கள் மறைந்து இன்று வலைதள நண்பர்கள் மிகைத்தமைக்கு தமிழ்மணம் போன்ற இணையதளங்கள் பாலமாக இருப்பதே காரணம் என்று சொல்லலாம்.

பல நண்பர்களை இந்த இணையதளம் எனக்கு கொடுத்திருக்கிறது. அவர்களிடம் பழகுவதற்கு தினம் என்னைப் படித்துக் கொண்டிருக்கிறேன் தேர்வுகளில் “நான்” தோற்றுப்போய் விடுவதற்காக…

அமீரகத்தில் வாழும் தமிழன்பர்கள் பலர் பதிவு எழுதினார்கள் அவர்களுடைய பதிவுகள் என்னை ஊக்கப்படுத்தி இருக்கிறது.
பதிவர்கள் சந்திப்பின் மூலம் அறிமுகங்கலாகி பதிவர் சுற்றுலா, குறும்படம் என்று கலக்கிய அமீரகப்பதிவர்களின் நட்பின் வரலாறு சுவாரஸ்யமானது.

சத்திரத்தில் சித்திரம் சமைத்தோம், நோன்பில் இஃப்தார் படைத்தோம், பிரியமுடன் பிரியாணி சுவைத்தோம், விழாக்களில் விலகிய நாட்களை எண்ணி வருந்தினோம்,
ஆனால் தற்போது அமீரகப்பதிவர்களின் சிலருடைய பக்கங்கள் வெண்மையாகவே இருக்கிறது.
பதிவர்களின் சந்திப்பு என்பது அமீரகத்தை பொருத்தவரையில் இன்னொரு கல்லூரி அனுபவம்போல் என்றாலும் நகைச்சுவை உணர்வுமிக்கவர்கள் நிறைய இருப்பதினால் நன்றாக சிரிக்க முடிகிறது சந்திப்பு என்னவோ மொக்கைதான்.

விஞ்ஞானத்தின் மீதும் மெய்ஞ்ஞானத்தின் மீதும் ஆர்வம் கொண்ட நிலாமலர்கள் என்ற பெயரில் பதிவு எழுதும் நண்பர் நாசர் சொன்னார் தரமான பதிவுகளுக்கு ஓட்டுகள் கிடைப்பதில்லையே மொக்கைப் பதிவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்றார்…

உண்மைதான் அது படிப்பவர்களைப் பொருத்திருக்கிறது… தரம் என்று நாம் நினைப்பது சிலருக்கு மொக்கையாக இருக்கலாம் மொக்கை என்று நாம் நினைப்பது சிலருக்கு தரமானதாக இருக்கலாம். படிப்பவரின் தேடலைப் பொருத்தே பின்னூட்டமும் ஓட்டளிப்பும் நடைபெறுகிறது.

நூறு பேர்கள் படித்துவிட்டு ஐந்து பேர்கள் பின்னூட்டமும் ஒருவர் மட்டும் ஓட்டும் அளித்துவிட்டு அல்லது எதுவுமில்லாமல் செல்லலாம்…

எதிர்பார்ப்பு இல்லாமல் எழுதினால் நம்மை எதுவும் கைது செய்யமுடியாது. சுதந்திரமான எண்ணம்தான் உண்மைகளை எழுத முடியும்.  

எனது வலைதளத்திற்கு புதிதாக வந்த அன்பர்களுக்கு

அதிகமாக பயணக்கட்டுரைகளை எழுதியிருக்கிறேன் மற்றும் அமீரக அனுபவங்களையும் எழுதியுள்ளேன் படித்துப்பாருங்கள்.
தங்கத்தைப் பற்றிய பதிவுமிருக்கிறது அது உங்களுக்கு தேவையான செய்திகளை தரக்கூடியதாக இருக்கலாம். எனது பதிவுகளுக்கு காலாவதி தேதி கிடையாது.  

இந்த ஒரு வாரக்காலத்திற்கு தினம் ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது முடிந்தவரையில் முயற்சிக்கிறேன்  

நன்றி!

Tuesday, January 31, 2012

விருது பெற்ற தீரன் திப்புசுல்தான்

கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் பிறந்த மாதத்தை கௌரவிக்கும்முகமாக துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ரபீஉல் அவ்வல் மாதம் முழுவதும் சுப்ஹான மௌலிது நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த சிறப்புமிகு மவ்லிது மஜ்லிஸில் நேற்றைய தினம் (30/01/2012) சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட கண்ணியமிக்க சகோதரர் டாக்டர் காவியத்திலம் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களுக்கு சையதுஅலி மௌலானாவும் ஜாஹித் அலி மௌலானாவும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்கள்.
இவர்களைப் பற்றி ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் என்றாலும்
சாதனையளர்களை ஒவ்வொரு சாதனையின் போது எழுதுவதில் எழுதக்கூடியவர்களுக்கு ஊக்கமளிக்கிறது என்பதே உண்மை. அதனாலே என்னை ஊக்கப்படுத்திக் கொள்வதற்கு இதோ...

இருபதுக்கும் அதிகமான தமிழ் நூல்களை எழுதியவர் அதில் எட்டு காவியங்களை படைத்திருப்பவர். குறிப்பாக கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் சரிதையை “திருநபி காவியம்” என்ற பெயரில் எழுதி அமீரகத்தில் வெளியிட்டார்கள்.
அமர்ந்த இடத்தில் ஆயிரம் பாக்களை எழுதும் ஆற்றலைப் பெற்றவர்.
தமிழ்மீது கொண்ட ஆர்வத்தினால் மருத்துவ சேவையும் அத்துடன் தமிழ் இலக்கிய சேவையும் செய்பவர். தற்போது மருத்துவ சேவையிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு தமிழ் இலக்கிய சேவையை மட்டும் தொடர்ந்து செய்துக் கொண்டு வருபவர்.

இலங்கையில் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையமும் நீர்கொழும்பு இந்து மாமன்றமும் மன்னாரு தமிழ் சங்கமும் இவருக்கு “வாழ்நாள் சாதனையாளர்” என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளார்கள்.

மதம் கடந்த மனிதநேயமிக்க மனிதராக திகழக்கூடிய இவர் பண்டாரவன்னியன் காவியத்தையும் படைத்துள்ளார்.

இந்திய சுதந்திர வீரர் தீரன் திப்புச்சுல்தானைப் பற்றி எழுதிய காவியத்திற்காக சென்ற ஆண்டு “அரச இலக்கிய விருது” இலங்கை அரசாங்கம் வழங்கி கௌரவித்தது. (இது இந்தியாவில் வழங்கப்படும் சாகித்ய அகடாமி விருதுக்கு சமமானது).

இனி அடுத்து மூஸா நபி அவர்களைப் பற்றிய காவியத்தை எழுதி முடித்துள்ளார்கள். விரைவில் இந்த காவியம் நூல் வடிவம் பெறும். கிடைக்கும் ஒய்வு நேரத்தில் பல காவியங்களை படைத்துக் கொண்டிருக்கும் காவியத்திலகம் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள் ஒரு மருத்துவர்.

தமிழ் இஸ்லாமிய இலக்கிய உலகில் ஒன்பது காவியங்களை படைக்கும் ஆற்றலை எல்லாம் வல்ல இறைவன் இவர்களுக்கு வழங்கியுள்ளான் எல்லா புகழும் இறைவனுக்கே!

அமீரகத்தில் இயங்கும் பல தமிழ் அமைப்புகளுக்கு பரிச்சயம் பெற்ற இவர்கள் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகம் என்ற அமைப்பை அமீரகத்தில் அமைப்பதற்கு காரணமாக இருந்து அந்த அமைப்பின் அங்குரார்பணராக இன்று வரை இருந்து செயல்பட்டு கொண்டிருப்பவர்.

அமைதியும், அடக்கமும், இனிமையும் எளிமையும் இவரின் சொத்துக்களாக வைத்திருப்பவர்.
இவரின் எழுத்துப் பணி தமிழ் உலகிற்கு என்றென்றும் தேவைக் கொண்டதாகவே இருக்கிறது. இன்னும் இன்னும் காவியங்களை தந்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்திக்கிறேன்…!

Thursday, January 19, 2012

தொல்.திருமாவளவனுடன் அமீரகத் தோழர்கள் சந்திப்பு


அமீரகத்தில் நான்கு தினங்கள் சுற்றுப் பயணமாக ஊடகத்துறையை தங்களுக்கென அமைத்துக் கொள்வதற்கு விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வருகைப் புரிந்திருந்தார்.

தாய்மண் வாசகர் வட்டத்தின் சார்பாக அவருக்கு துபாய் கராமாவில் உள்ள சுவிஸ்ட் ஸ்டார்பவனில் 18/1/2012 அன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இந்நிகழ்சிக்கு நண்பர் குத்தாலம் அசரப்அலி அவர்களுடன் சென்றிருந்தேன். தொல்.திருமாவளவனுடைய சொற்பொழிவை அதிகம் நான் கேட்டதில்லை. தலித்துக்கள் முன்னேற்றத்திற்காக சட்டம், சமூகம், அரசியல் என பாடுபடக்கூடிய செயல் வீரர் என்பதை அறிந்திருக்கிறேன்.

பல அமைப்புகளிலிருந்தும் நிர்வாகிகள் வந்திருந்தனர். நிகழ்ச்சியின் துவக்கம் ஏழு மணி என்று அழைப்பு கொடுத்திருந்தனர்; ஆனால் ஏழு மணிக்கு பலர் வரவில்லை சொன்ன நேரத்திற்கு திருமாவளவன் வந்துள்ளார்; ஆனால் ஆட்கள் வராததினால் அரை மணி நேரத்திற்குள் மற்றொரு வேலையை முடித்து விட்டு வந்துவிட்டார் திருமா.
நேரத்தின் மீது அவர் கொண்டிருக்கும் பேணுதலை அறிய முடிந்தது.

அதே போன்று மேடையில் அமரும்போது தனது கட்சிக்காரர்களை மட்டும் அமரச் செய்யாமல் தன்னுடன் குத்தாலம் அசரப்அலியையும் அமர வைத்து இஸ்லாமிய சகோதரர்களுடன் நாங்கள் சமத்துவமாக சகோதரத்துமாக நட்புத்துவமாகவும் இருக்கிறோம் என்பதை அவர் வாய்வழி சொல்லாமல் நிலைநாட்டினார்.

தொல்.திருமாவளவனின் உரை மனம் திறந்த மடலாகவே இருந்தது. வளைகுடாவில் வாழும் தமிழர்களின் பிரச்சனைகள் மற்றும் நலனுக்காக எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் வயலார் ரவி ஆகியோருடன் பேசி இருப்பதாக கூறினார். சவூதி அரேபியா ஜித்தாவில் பாதிக்கப்பட்ட 200 க்கும் அதிகமான தமிழர்களை மீட்பதற்கு முயற்சி எடுத்து மீட்டுள்ளார் என்பதை தெரிவித்தார்.
என்னோடு S.M.பாரூக் மற்றும் ஹனீபா

இந்திய ஊடகங்கள் எங்கள் கட்சிகளின் நலப் பணிகளை மக்களுக்கு மத்தியில் எடுத்துச் செல்ல மறுக்கிறது காரணம் நாங்கள் தலீத் என்பதற்காகவா? தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், சிதம்பரம் ஊர்களில் நான்கு தினங்கள் முகாமிட்டு ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று, நேரடியாக பாதிப்புகளை கண்டு உரிய நிவாரணங்கள் பெறுவதற்கு போராடி இருக்கிறோம் இதை எந்த ஊடகம் செய்தியில் வெளியிட்டது? ஒரு பண்டிகையின் காலத்திலும் கூட வாழ்த்துச் செய்தியை பத்திரிக்கைகாரர்களை அழைத்து சொல்லும்போதும் கூட அனைவரும் அந்த செய்தியை வெளியிடுவதில்லை இருட்டடிப்பு செய்கிறார்கள்.

திருவாரூர் செல்லும் வழியில் ஒரு பத்து நிமிடங்கள் காரை நிறுத்தி காரிலிருந்தவாறு புயலால் பாதிக்கப்பட்ட கடலூரில் கை அசைத்த தலைவரின் காட்சியை நாள் முழுவதும் அவர்களின் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள்.

நேற்று வந்த கட்சிகளின் செய்திகளை முதல் பக்கத்தில் முதல் வரியில் போடக்கூடிய ஊடகங்கள் அவர்களுக்கு முன்பிருந்தே இயங்கக் கூடிய எங்கள் கட்சி செய்திகளை இரண்டாம் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படுவது ஏன்? (ஒரு சீனியாரிட்டி கிடையாதா?)

கண்ணியமிக்க காயிதேமில்லத் அவர்களின் பெயரில் அரசு விருது வழங்க வேண்டும் என பல முறை கலைஞரிடம் மனு கொடுத்துள்ளேன் ஆனால் இன்று வரையில் அதை நிறைவேற்ற வில்லை ஆனால் எங்கள் விடுதலை சிறுத்தை அமைப்பு சார்பாக நான்கு ஆண்டுகளாக கண்ணியமிக்க காயிதேமில்லத் அவர்களின் பெயரில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு விருது வழங்கி வருகிறோம். அதுமட்டுமல்ல ஆண்டுதோறும் நோன்புக் காலங்களில் இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பதற்கு பல கட்சிக்காரர்களை அழைப்பார்கள் ஆனால் நாள் முழுவதும் நோன்பு வைத்திருக்கும் இஸ்லாமியர்களுக்கு நாங்கள் கட்சியின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம் என்று இஸ்லாமியர்களுடன் தங்களுக்கு இருக்கும் இணக்கத்தை சொல்லிக் காண்பித்தார்.

தமிழர்களிடம் ஒற்றுமை என்பது இல்லை; முல்லை பெரியார் விசயத்தில் கேரளா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 பேர்களிடம் உள்ள ஒற்றுமை, 40 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழர்களிடம் இல்லை. முல்லை பெரியார் விசயத்தில் அனைத்து கட்சிகளும் ஒரே கருத்தில்தான் இருக்கிறார்கள் ஆனால் அந்த கருத்தை பிரதமரிடம் வலியுறுத்துவதற்கு தனித்தனியே செல்கிறார்கள் எல்லா கட்சிகளும் ஒன்றாக செல்லலாம் என அழைத்தால் யாரும் முன்வரவில்லை என தனது ஆதாங்கத்தை வெளிப்படுத்தினார்.

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனையைப் பற்றி கேட்டபோது நாங்கள் அணு சக்திக்கு எதிரானவர்கள் ஆனால் மின் சக்திக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை ஆணித்தரமாகக் கூறினார்.

ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளே அணு உலையை 2020 க்குள் மூடப்போவதாக செய்தி வெளியிட்டுள்ளது. அவர்கள் ஏன் மூடவேண்டும்? அணு உலையின் கழிவுவை 15ஆயிரம் ஆண்டுகள் வரை பாதுகாக்க வேண்டுமாம். இல்லையெனில் மிகப்பெரிய ஆபத்துகள் மனித இனத்திற்கு இருக்கிறது. இன்று நாம் சொகுசாக வாழ வேண்டும் என்பதற்கா வரக்கூடிய புதிய முறையினருக்கு மிகப்பெரிய ஆபத்தை கொடுத்துவிட்டு போக வேண்டுமா? மின் சக்தி தயாரிப்பதற்கு மாற்று வழிகள் எவ்வளவோ இருக்கிறது காற்றாலை, சூரிய வெப்பத்திலிருந்தும் தயாரிக்கலாம்.

அணு உலையின் மூலம் கிடைக்கக் கூடிய பலன் வெறும் இரண்டரை சதவீதம் மட்டுமே? அணு உலையின் மூலம் அணு குண்டகள் தயாரிப்பதற்காக அணு உலைகளை அரசுகள் பயன்படுத்துகின்றன.

எப்படி இருந்தாலும் கூடங்குளம் அணுமின் நிலையம் அரசு செயல்படுத்தும். இந்த அணு மின் நிலையத்தை முதலில் கேரளா கொச்சியில் போடுவதற்கு இடமெல்லாம் தேர்வு செய்து முடிவானது ஆனால் கேரள மக்கள் அதை எதிர்க்கவே தமிழகத்தில் கூடங்குளத்தை தேர்வு செய்தார்கள். அப்போது அதை பத்து பேர்கள் கொண்ட ஒரு குழு மட்டுமே எதிர்த்தார்கள். வேறு யாரும் எதிர்க்கவில்லை. இன்று பலரும் எதிர்பதற்கு காரணம் அதில் அரசியலும் இருக்கிறது வியாபாரமும் இருக்கிறது.

ரஷ்யாவுடன் உள்ள அணுமின் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு இத்தாலியுடன் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த உள் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. என்று வெளிப்படையாக பேசினார்.

ஈழத்தமிழர்களின் கேள்விகளும் கேட்டார்கள். தமிழ் மற்றும் தமிழ் தேசியம் இரண்டிற்குமுள்ள வித்தியாசத்தை தெளிவுப் படுத்தினார்.
குத்தாலம் அசரப்அலி

இந்நிகழ்ச்சியின் இறுதியில் குத்தாலம் அசரப்அலி பேசுகையில் கேரளர்களிடம் ஒற்றுமை இருந்ததினால் அணுமின் நிலையம் அங்குவரவில்லை தமிழர்களிடம் ஒற்றுமை இல்லாததினால் கூடங்குளம் இன்று பிரச்சனையாக இருக்கிறது என்று கூறினார்.

ஒரு அரசியல் தலைவரை பார்த்த திருப்பதியை விட ஒரு மனித நேயமிக்க மனிதரை சந்தித்த திருப்தியுடன் நன்றியுரையைக் கேட்களாளேன்.