உங்கள் வருகைக்கு நன்றி...

Wednesday, December 30, 2009

சென்னையும் என்னையும் சுற்றிப்பார்க்கச் சென்றேன்.!

சென்னையை பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏழாம் வகுப்பு படிக்கும் போது எனக்குள் அதிகம் இருந்தது. ஆனால் எப்படி போய் பார்ப்பது யார் அழைத்துச் செல்வார்கள் என்றுதான் புரியவில்லை.

படிக்கும் காலங்களில் அதிகமாக ஊர் சுற்றமுடியாது. பள்ளியை காரணம் காண்பித்து பயணங்கள் நிராகரிக்கப்படும போது மனசு கஸ்டப்படும்.

குழந்தைகளுடன் எங்கயாவது வெளியூருக்கு பயணம் புறப்பட்டால் அந்த குழந்தைகளுக்கு குதுகுலமாக இருக்கும். குழந்தைகள் பயணத்தை பெரிதும் விரும்புவார்கள்.

பயணங்கள் முடிவதில்லை ஒவ்வொரு மனிதரும் பயணித்து கொண்டுதானிருக்கிறோம். இடம் விட்டு இடம் பெயர்வதுமட்டுமல்ல பயணம் .புறம் விட்டு அகத்தை சிந்திப்பதும் பயணம் தான் இது ஆத்ம பயணம்.

புறப் பயணங்களில் தேடிச் செல்வது எப்படி கிடைக்கிறதோ அது போல
அகப் பயணத்தில் தேடப்படுவதும் கிடைக்கிறது. எதையும் தேடினால்தான் கிடைக்கும் என்பது உயிர்களின் நியதி.

இப்போ நான் சொல்ல வருகிற விசயம் அகப்பயணமல்ல.புறப் பயணம் !
இது பல ஆண்டுகளுக்கு முன் சின்ன வயதில் நான் செய்த பயணம்.எல்லா நிகழ்வுகளிலும் ஆன்மீகம் கலந்துதான் இருக்கிறது. ஆன்மா இல்லாத நிகழ்வு பயணம் எங்கும் நடப்பதில்லை.

சென்னைத் தேடல் என் மனதுள் ஆழமாக பதிந்து இருந்தது. ஒருநாள் பக்ரீத் பண்டிகைக்கும் சில தினங்களுக்கு முன் எனது பெரியம்மா வீட்டில் 500 ரூபாய் பணமும் கொஞ்சம் கறியும் கொடுத்து வர அம்மா கூறினார். பெரியம்மா வீடு 40 கிமீ.

நானும் கொடுப்பதற்கு புறப்பட்டு சென்று விட்டேன். செல்லும்போதே மனதில் சென்னையின் தேடல் வழுவானது. பெரியம்மாவிற்கு கொடுக்கவேண்டிய பணம் கையில் இருந்ததினால் அந்தப் பணத்தில் சென்னையை பார்த்து வந்துவிடலாம் என்ற சிந்தனை உசுப்பேத்தியது. கையில் கறி இருக்கிறதே அதை என்னச் செய்வது என சிந்தனையிடம் கேட்டபோது அதை பெரியம்மாவிடம் கொடுத்துவிட்டு கிளம்பிடலாம் என்று மனசு சொல்ல அப்படியே நடந்தது.

எனது தகப்பனார் சிங்கப்பூரில் இருந்ததினால் அவர் தாயகம் வரும்போது அழைப்பதற்கு சென்னைக்கு எனது உறவினர்கள் தான் செல்வார்கள் நானும் செல்கிறேன் என்றால் அம்மா விட மாட்டார்கள். பள்ளிக்கூடம் இருக்கிறது என்ற காரணத்தைக் காட்டுவார்கள். அந்த தாக்கமே என்னை தனியாக செல்லவைத்திருக்கிறது.

மயிலாடுதுறையிலிருந்து இரவு 12 மணி இரயிலில் சென்னைக்கு புறப்பட்டேன் . வீட்டில் அம்மா தேடுவார்கள் என்ற எண்ணமோ அதனால் அவர்களுக்கு ஏற்படக் கூடிய சிரமம் எவ்வளவு மன உளச்சல் எவ்வளவு என்ற கணக்கெல்லாம் எனக்கு தெரியவில்லை என்பதை விட சிந்தனை செய்யவில்லை என்பதுதான் சரி.

இரயிலில் செல்லும்போது ஒரு தம்பதி எனது இருக்கைக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்தனர். என்னுடன் பேசிக் கொண்டு வந்தார்கள். எதற்காக சென்னை செல்கிறாய் என்று அவர்கள் கேட்ட போது எனது தந்தை சிங்கப்பூரிலிருந்து வருகிறார் அவரை அழைக்கப்போகிறேன் என்று பொய்யை கூறினேன்.
எக்மோர் ஸ்டேசன்தான் கடைசி என்பது தெரியாமல் எக்மோர் வந்தும் இரயிலில் அமர்ந்திருந்தேன். எனது எதிரில் இருந்த தம்பதியினர் இறங்கலையா என்று கேட்க நான் சென்னையில தான் இறங்கனும் என்று கூற அப்படி ஒரு ஸ்டேசன் இருக்குமோ என்ற சந்தேகத்திலேயே அவர்கள் இறங்கினார்கள்.

சற்று நேரத்தில் போர்ட்டர் ஏன் தம்பி உட்காந்திருக்கீங்க லக்கேஜ் இருக்கா என்று கேட்க இல்லீங்க சென்னையில தான் இறங்கனும்னு சொன்னதும் தம்பி நீ புச்சா ன்னு கேட்க நான் பேந்த பேந்த விழிச்சு ஆமான்னு சொன்னதும் இதான் மெட்ராசுன்னு சொல்லி இறக்கி விட்டாங்க.

எக்மோரை சுற்றிப் பார்த்து விட்டு நடந்தேன் . சென்னையின் நெரிசல் என்னை இரசிக்க வைத்தது. எங்கும் கூட்டம் யாரிடமும் எதையும் கேட்க பயம். ஏன்னை சென்னை வாசியாய் காண்பித்துக் கொள்ள கேப்பெல்லாம் வாங்கி தலையில் மாட்டிக் கொண்டேன். எங்கேச் செல்வது என்று புரியவில்லை நடந்தேன் நடந்துக் கொண்டே அண்ணாசமாதி வந்தேன். அதைப் பார்த்ததும் நாம் மெட்ராசுலதான் இருக்கிறோம் என்ற உணர்வு சந்தோசத்தைக் கொடுத்தது. இன்றும் தமிழகத்தில் எத்தனையோ மனிதர்கள் சென்னையை பார்க்காதவர்களாக பலர் தன்னையும் பார்க்காதவர்களாக வாழ்ந்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.


பர்மா பஜார் சென்று கேமரா வாங்கி மீண்டும் அண்ணா சமாதி வந்து போட்டோ எடுத்துக் கொண்டேன். செல்லும் வழியில் சட்டமன்றத்தைப் பார்த்தேன் அந்த ரோட்டில் அதிகம் வாகன நெரிசல் இல்லை. இரவு வந்தது அதனூடே தூக்கமும் வந்தது. எங்கு தூங்குவது என்று புரியவில்லை. கால் போன போக்கில் நடந்த போது ஹோட்டலில் தங்கலாம் என்ற யோசனையில் திருவல்லிக்கேணியில் ரூம் போட்டு தங்கி விட்டு காலையில் எழுந்து குளித்துவிட்டு எங்கு செல்வது என்று தெரியாமல் தஞ்சாவூர் போகலாம் என்று முடிவு செய்து பஸ்டாண்ட் வந்தேன்.

சென்னையில் பிட்பாக்கேட் அடிப்பார்கள் என்று சினிமாவில் பார்த்ததால் மணிபர்சை மட்டும் பனியனுக்குள் போட்டுக் கொண்டேன். தஞ்சை பஸ்சில் அமர்ந்ததும் கண்டெக்டர் டிக்கேட் கொடுக்க நான் பர்சை எடுக்க பனியனுக்குள் கையை விட்டால் பர்சைக் காணவில்லை. பதறிப்போனேன் கையில் வைத்திருந்த பெட்டியிலும் தேடிவிட்டேன். கிடைக்கவில்லை என்ன தம்பி பர்சை அடிச்சுட்டாங்களான்னு கண்டக்டர் கேட்டதும் எனக்கு அழுகை வந்துவிட்டது. பஸ் இன்னும் புறப்படவில்லை பலர் இருக்கையில் அமர்ந்துக் கொண்டிருந்தார்கள். அனைவருக்கும் செய்தி பரவவே எல்லோரும் எனக்காக இறக்கப்பட்டார்கள். ஐயோ பாவம் சின்ன பையனா இருக்குறான் இவனிடம் பர்சை அடிச்சுருக்காங்களேன்னு அனுதாபப்பட்டார்கள்.

இறங்கி தேடிப்பாரு ன்னு ஒருவர் அட்வைஸ் பண்ண முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் என்னைக் கூப்பிட்டார். உன் பேரென்ன எந்த ஊரு என்று விசாரித்தார். நான் அழுதுக் கொண்டே ஊர் பெயரைச் சொன்னதும் பர்சுல எவ்வளவு பணம் வைத்திருந்தாய் எனக்கேட்டார். 300 ரூபாய்கு அதிகம் என்றேன்.நீ தனியாவா வந்தே எனக்கேட்டார் ஆமாம் என்றதும் அவர்கையில் வைத்திருந்த பையிலிருந்து எனது பர்சை எடுத்துக் கொடுத்தார். பஸ்சுக்குள்ள தான் கிடந்தது என்றதும் எனக்கு சந்தோசமாக இருந்தது.

என் மீது அனுதாப்பட்ட எல்லோரும் அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்கள். பர்சை எடுத்துக் கொடுத்த நல்ல மனிதர் எல்லோராலும் பாராட்டுப் பெற்றார்.

தஞ்சையில் வந்து இறங்கி எங்கு செல்வது என்று தெரியாமல் கடைத்தெருக்களில் சுற்றி விட்டு இரவு மாநகராட்சி விடுதியில் தங்கி விட்டு காலையில் புறப்பட்டு கும்பகோணம் சென்றேன்.அங்கும் இப்படித்தான் ஒரே நாளில் மீண்டும் சென்னைக்கு கிளம்பினேன் இன்னொரு முறை பார்க்கவேண்டும் என்ற ஆவல் என்பதைவிட கையில் காசு இருந்தது. சரியான பைத்தியக்காரனா இருப்பான் போலிருக்கேன்னு நீங்க நினைக்கலாம்.

பைத்தியம்தான் குறிக்கோள் இல்லாத பயணம் செய்பவர்களும் வாழ்க்கையை வாழ்பவர்களும் பைத்தியம்தான்.

நாலு காசு சம்பாதிச்சா அதன் வலி என்னன்னு தெரியும் என்று சொல்வார்கள். அப்பா சம்பாதிச்ச காசுல பெத்தவங்களுக்கு வலியை மட்டும் கொடுத்திட்டு என்னை மாதிரி ஊர்சுற்றியவர்கள் இன்னும் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் நிறைய பேர்கள் இருந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.சரியான வழிக்காட்டல் இல்லாமையே இது போன்ற நிகழ்வுகள் நடந்தேறுகிறது.

ஒருவழியாக காசு கறைய கறைய சில தினங்களில் உறவினர் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அப்போது தான் தெரிந்தது நான் காணாமல் போய்விட்டதாக என்னைத் தேடி பல ஊர்களுக்கு அழைந்ததும் பெருநாளையும் கொண்டடாமல் துக்கம் அனுஷ்டித்ததும் எல்லாவற்றையும் உறவினர்கள் கூற அந்த நிமிடமே ஒரு ஆளை அனுப்பி நான் கிடைத்துவிட்டேன் என்ற செய்தியை எங்க வீட்டுக்கு சொல்லி அனுப்ப எனக்கு பயம் வந்தது.

உறவினர்களில் சிலர் என்னைப் பாராட்டினார்கள் இந்த வயசுல இவ்வளவு தைரியமா நீ மெட்ராஸ் வரைக்கும் தனியா போய் விட்டு வந்திருக்கிறே உனக்குள்ள துணிச்சல் யாருக்கும் வராதுப்பா என்றும் …
சிலர் நீ யெல்லாம் ஒரு புள்ள இதுவே என் புள்ளயா இருந்தால் வெட்டி காவுக் கொடுத்திருப்பேன் என்று சிலரும் சலித்தனர்.

எல்லோருடைய பேச்சையும் புதுப் பெண்ணைப்போல் தலைக்குனிந்து கேட்டுக் கொண்டு பதில் சொல்லாமல் நின்றிருந்தேன்.தவறு செய்தால் தலைக் குனிந்துதானே ஆகவேண்டும்.

சில தவறுகள் செய்யும் போது அது தவறாகத் தெரிவதில்லை செய்ததற்கு பிறகு தான் தெரியும். காரணம் அனுபவயின்மையும் அறிதலின்மையும்.

வாழ்க்கையும் கிட்டதட்ட என் கதைமாதிரிதான். வாழ்க்கை பயணத்தில் சம்பாதிப்பைதான் பலர் வாழ்க்கை என்கிறோம். அதற்காக வேண்டி எதையும் இழக்க தயாராக இருக்கிறோம்.

தேடித்தேடிப் பயணிக்கிறோம் பொருள்களை குவிக்கிறோம் ஆனால் தேடப்பட்டதில் நிறைவு கண்டோமா ?. கைத்தடியை குடையென்று ஏந்தினால் நனைந்து விடுவோம் அல்லது காய்ந்து விடுவோம். ஆனால் குடையை கைத்தடியாக பயன்படுத்தலாம். குடைன்னு நான் சொல்வது அகப் பயணம்.

புறப்பயணம் பொருளைக் கொடுக்கும் அகப்பயணம் அமைதியைக் கொடுக்கும்
எல்லோரும் பொருள்தேடுவது சந்தோசமாக வாழ்வதற்கு ஆனால் சந்தோசம் எதில் இருக்கிறது.?

Saturday, December 26, 2009

வானலையில் கலந்த நீரோடை


அமீரகம் துபாயில் ஐந்தாண்டுகளாய் இயங்கிவரும் வானலை வளர் தமிழ் அமைப்பு கவிஞர்களை உருவாக்கியும் எழுத்துலகில் ஆர்வமுள்ளவர்களை ஊக்கவித்தும் வருகிறது.
சுவிஸ்டார் பவன் உணவகத்தின் உரிமையாளர் திரு.கோவிந்தராஜ் அவர்களின் தலைமையில் மாதந்தோரும் ஒன்றுக் கூடல் நிகழ்வும் அதன் நிமித்தம் சிறப்பு விருந்தினர்களை அழைத்து அவர்களை கௌரவித்து தமிழ்த்தேர் என்ற தனிச்சுற்று பத்திரைக்கையும் வெளியீட்டு வருகிறது.


இது வரையில் 44 தலைப்புகளில் கவிதைகள் அரகேற்றப்பட்டிருக்கிறது. சமயங்கள் சார்பற்ற தமிழ் ஆர்வம் கொண்ட அன்பர்கள் சங்கமிக்கும் அமைப்பு இது என்று கூறுவதில் பெருமிதம் கொள்ளலாம்.

புலவர் ஜின்னா அளிக்கும் விருதை தன் கணவருடன் பெரும் மலிக்கா


இந்த அமைப்பில் 25.12.2009 அன்று நடந்த மாதாந்திர நிகழ்வில் கவிஞர் திருமதி மலிக்கா பாருக் அவர்களுக்கு விருது ஒன்றை தனிப்பட்ட முறையில் சிறுகதை எழுத்தாளர்கள்; ஷேக்மதார், திருச்சி சையது, கமால் ஆகியோரும் அவர்களுடன் இலங்கை புலவர், காவியத்திலகம் ஜின்னா ஷரிபுத்தீன் அவர்களும் இணைந்து வழங்கி திருமதி மலிக்காவை உற்சாகமூட்டினார்கள்.

திருமதி மலிக்கா பாருக் எழுதிய கவிதைகளைப் பற்றியும் புலவர் ஜின்னா ஷரிபுத்தீன் அவர்கள் அவருக்கு பிடித்த கவிதைகளை வாசித்து கவிஞரைப் பாராட்டினார்.

திருமதி மலிக்கா பாருக் அவர்கள் நீரோடை என்ற தனது வலைதளத்தில் கவிதைகளை எழுதிவருபவர். நூறு கவிதைகளை இதுவரையில் எழுதிஉள்ளார். விரைவில் கவிதை நூல் ஒன்றை வெளியிட உள்ளார்.

சமூகம் சார்ந்த கவிதைகளை அதிகம் எழுதிவருபவர்.இவரின் எழுத்துநடையும் சொல்லவரும் கருத்து நடையும் படிப்பவருக்கு எளிதில் விளங்கிக் கொள்ளும் விதமாக அமைந்திருக்கிறது.

இவர் வானலை வளர் தமிழ் அமைப்பில் அங்கத்தினராக இருந்து வருகிறார். மற்றும் அமீரகப்பதிவர் வட்டத்திலும் வலம் வருபவர்.இவரின் எழுத்து திறமைக்கு
தனியொரு விழாவினை விருது வழங்கியவர்கள் செய்திருந்தால் இன்னும் மெருகூட்டப்பட்டிருப்பார் என்பது எனது ஆதாங்கம்.

நானும் வானலை வளர் தமிழின் அங்கத்தினர் என்றாலும் அவரை அந்த அமைப்பின் சார்பாகவும் அமீரகப்பதிவர்களின் சார்பாகவும் வாழ்த்துகிறேன்.

மென்மேலும் இன்னும் நிறைய கவிதைகளை எழுதி பல விருதுகளை பெறவேண்டும் என்பதே எமது பிரார்த்தனை.

புலவர்ஜின்னா, பாருக், மலிக்கா

கவிஞர் திருமதி மலிக்கா அவர்களின் எழுத்துப் பணிக்கு முக்கியமான முதல் உற்சாகர் என்றால் அவருடைய அன்புக் கணவர் பாருக் அவர்கள்.அவருடைய தூண்டுதலும் மலிக்காவின் எழுத்துக்கும் விருதுக்கும் காரணமாக இருக்கிறது என்று கூறினால் மிகையாகாது.

திருமதி மலிக்காவை போன்ற வலைதள பெண்எழுத்தாளர்கள் அமீரகத்தில் நிறைய பேர்கள் இருந்தாலும் சில பெண்பதிவர்களின் எழுத்தும் அவர்களின் மேடைப் பேச்சும் என்னை பாதித்திருக்கிறது.
அப்படிப்பட்டவர்களில் பட்டிமன்ற பேச்சாளர் திருமதி ஜெஸிலா ரியாஸ் இவரின் பேச்சாற்றல் அமீரகத் தமிழர்கள் நன்கு அறிவார்கள் பல மேடைகளை கலக்கியவர் பல விருதுகளை வென்றவர்.
மற்றும் ஐந்தரைப் பெட்டி ஹுசேனம்மா அவர்களின் எதார்த்த எழுத்து நடை பல பதிவர்களை கலக்கிருக்கிறது என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன்.

அந்த வரிசையிலே கவிஞர் திருமதி மலிக்கா அவர்களும் இடம்பெறுகிறார் என்கின்ற போது அவரை உளமாற வாழ்த்தி இன்னும் நிறைய எழுதி பதிவுலகில் விருதுகள் பல பெற வேண்டும் என்பது அமீரகப்பதிவர்களின் ஒட்டுமொத்த குரலாக இருக்கிறது.

திருமதி மலிக்கா அவர்களுக்கு உற்சாகமூட்டி விருது வழங்கிய நல் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.

Tuesday, December 22, 2009

எகிப்து பேரழகி பேசும் தமிழ் அழகு


DANA
எனது இலக்கிய ஆர்வத்தின் ஊடாக பல நல்ல நண்பர்களின் அறிமுகங்கள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இது எனக்கு சந்தோசமான விசயம்.சென்ற ஆண்டு எனது கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு முன் அறிமுகமானார் திருவிடச்சேரி எஸ்.முஹம்மது பாருக். இவர் துபாய் தீவாவில்(Dewa) கணக்கு அதிகாரியாக பல ஆண்டுகளாய் பணிபுரிந்து வருபவர். ஈமான் என்ற அமைப்பில் தணிக்கையாளராக செயல்பட்டு வருபவர்.

பழகுவதற்கு நல்ல மனிதர்.பல அமைப்புகளின் விழாக்களில் பேச அழைத்தால் சுறுக்கமாக தெளிவாகப்பேசக் கூடியவர். இந்தளவில் தெரிந்துக் கொண்ட எனக்கு அவர்களின் குடும்பத்துடன் பழகும் வாய்ப்பும் ஏற்பட்டது.
இவரின் துணைவியாரின் சாதனையை சொல்வதற்குதான் இந்தக் கட்டுரை.

வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழக்கூடிய தமிழர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தமிழ் ஒரு பாடமாக உள்ள பள்ளிகளைத் தேடி குழந்தைகளை சேர்ப்பவர்கள் மிகக் குறைவு என்று தான் சொல்லவேண்டும்.பலரும் ஆங்கிலம் மட்டும் தன் குழந்தைப் படித்தால் போதுமானது என்ற கருத்தில் இருப்பதால் தங்களின் இல்லங்களில் கூட குழந்தைகளிடம் தமிழ் பேசுவதை தவிர்த்து ஆங்கிலம் பேசி வருகிறார்கள்.

அமீரகத்தில் கிரஸண்ட் இங்கிலீஸ் ஹைஸ்கூலில் பத்தாம் வகுப்பு வரையில் தமிழ் பாடத் திட்டத்தை வைத்துள்ளார்கள் என்று அதன் தலைமை ஆசிரியர் கலீபுல்லா கூறியபோது ஆச்சரியமாக இருந்தது.வரும் வருடங்களில் மேல் நிலை வகுப்புகளுக்கும் தமிழ் கொண்டு வருவதற்கு முயற்சிப்பதாக கூறினார். அந்தப் பள்ளிக்கூட நிர்வாகிகளுக்கு நல்வாழ்த்துக்களை சமர்ப்பிக்கின்றேன்.(எனது இரு பெண்பிள்ளைகளும் அந்தப் பள்ளியில்தான் படித்து வருகிறார்கள்)

S.முஹம்மது பாருக் உடன் டானா(DANA)

எஸ்.முஹம்மது பாருக் அவர்களின் குடும்பத்தார் துபையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். கீழ்தளத்தில் எகிப்து நாட்டைச் சார்ந்த அகமது முஹம்மது ரிஸ்வான்னும் அவரது மனைவி ஜஹானும் அவர்களின் மூன்று பெண் குழந்தைகளும் அவர்களுக்கு அறிமுகம் ஏற்பட்டது. அவர்களின் மூன்றாவதாக பிறந்த டானா என்ற இரண்டுமாத பெண் கைக் குழந்தை அவர்களின் மனதை கொள்ளைக் கொண்டாள் . அடிக்கடி அந்த டானாவைப் பார்ப்பதற்கு பாருக் மகள் வருவார்.

குழந்தை டானாவிடம் ஏற்பட்ட அன்பினால் தன் வீட்டுக்கு அடிக்கடி தூக்கி வந்து விளையாடுவதும் அந்தக் குழந்தையிடம் தமிழில் பேசுவதுமாய் வளர்ந்த டானாவிற்கு தற்போது வயது எட்டு. இன்று டானா சுத்தமான தமிழில் உரையாடுகிறாள்.
உரையாடுவதுமட்டுமல்ல தினமும் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்ப்பதும் அந்தக் கதைகளை பாருக் துணைவியாரிடம் சொல்வதுமாய் இருக்கிறாள். சின்னத்திரை நட்சத்திரங்களும் திரைப்பட நாயகர்கள் நாயகிகள் என பிரபலங்கள் அனைவரையும் தெரிந்து வைத்திருக்கிறாள்.


டானாவிடம் அம்மா யார் என்று கேட்டால் பாருக் துணைவியாரைத்தான் காட்டுகிறாள்.
அரபு மொழியை தாய் மொழியாகக் கொண்ட டானா தனது பள்ளிப் படிப்பும் அரபாக இருக்க தனது வீட்டில் தனது பெற்றோர்களுடன் அரபு பேசுகிறாள். குழந்தைகளுடன் விளையாடும்போது ஆங்கிலத்திலும் பாருக் வீட்டில் மட்டும் சுத்தமான தமிழ் பெண்ணாய் காட்சி அளிக்கும் டானா மிகவும் அழகான பெண்.
மற்றவர்களுடன் பேசும்போது கூட ரொம்பவும் மரியாதையுடன் பேசுவதும் நம் தமிழ் கலாச்சாரத்தை டானாவிற்கு கற்றுக் கொடுத்த பாருக் துணைவியாரின் தமிழ்பற்றை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

தான் பெற்ற குழந்தையை பராமரிப்பது போல் டானாவின் மேல் அளவிலா அன்பை வைத்துள்ளார். பாருக் தம்பதியருக்கு ஒரு பெண்குழந்தையும் இருக்கிறது.
வெளியில் எங்கு சென்றாலும் டானாவிற்கு மறக்காமல் ஏதாவது திண்பண்டங்கள் வாங்காமல் வருவதே இல்லை. டானாவை விட்டு அவர்களாலும் பிரிந்து இருக்கமுடியவில்லை.வீட்டில் எந்த தேவை வைத்தாலும் டானா இல்லாமல் எதையும் செய்வதில்லை என்று பாருக் துணைவியார் கூறுகிறார்கள்.

சென்ற ஈத்விடுமுறையில் பாருக் குடும்பத்தினருடன் எனது குடும்பத்தார்களும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தார்களுடன் மஸ்கட் சென்று ஒருநாள் தங்கி வந்தோம். அந்த சமயத்தில் பாருக்கின் துணைவியார் டானாவை நினைவு கூர்ந்துக் கொண்டே இருந்தது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. அதன் நிமித்தம் சில தினங்களுக்கு முன் பாருக் அவர்களின் இல்லத்திற்கு டானாவை சந்திக்க எனது குடும்பத்தார்களுடன் சென்றிருந்தேன்.

விளையாடிக் கொண்டிருந்த டானா பாருக் கூப்பிட்டதும் ஓடிவந்து நின்றாள். என்னை அறிமுகம் செய்ய கைகுலுக்கிய டானாவிடம் நீ நலமா என்றேன். அவள் புன்முறுவலுடன் நலம் என்றாள். எனது குழந்தைகளிடமும் கைக் குலுக்கிக் கொண்டாள். கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு வருகிறேன் என்று பாருகிடம் கூறிவிட்டு செல்ல சற்று நேரத்தில் வீட்டுக்குள் வந்தாள் டானா.

நான் டானாவிடம் பேசினேன் புன்முறுவலுடன் பதில் பேசினாள். உன்னைப் பற்றி வலைதளத்தில் எழுதப்போகிறேன் அதனால் புகைப்படம் எடுக்கவேண்டும் என்று கூறியதும் சில வினாடிகளில் பாருக் மகளாரிடம் சென்று தலை சீவிக் கொண்டு ரெடியானாள்.

புதிதாக என்னைக் கண்டதால் அவளுக்கு வெட்கம்.அரபு பிள்ளைகள் அதிகம் வெட்கப்படுவதில்லை டானாவை பொருத்தவரையில் அரபு குலமாக இருந்தாலும் தமிழர்களிடம் பழுகும் போது தமிழ் கலதச்சாரம் அவளிடம் நிறைந்திருப்பதை காணமுடிந்தது.

பெரும்பாலோருக்கு தாய்மொழி என்பது ஒன்று தான் ஆனால் டானாவிற்கு இரண்டாக இருக்கிறது. தமிழ் பேசுவதற்கு பிரியப்படுகிறாள். அவளின் பெற்றோர்கள் இதற்கு எப்படி சம்மதித்தர்கள் என்று பாருக் துணைவியாரிடம் கேட்டேன்.
அவர்கள் ஒன்றுமே சொல்லவில்லை தனது மகள் இன்னொரு மொழியை கற்றுக் கொள்வதில் அவர்களுக்கு சந்தோசம்தான். காலையில் பள்ளிக் கூடம் சென்று விட்டு வந்ததுமே எம்புள்ள அம்மா என்று கூப்பிட்டபடி வந்துவிடுவாள். அவளுக்கு கோழிகறி ரொம்பவும் பிடிக்கும்.நான் கோழிக்கறி ஆக்கும்போதெல்லாம் எம்மகளை கூப்பிட்டு கொள்வேன்.தமிழ்நாட்டு உணவு மீது என்புள்ளைக்கி ரொம்ப பிரியம் என்று பாருக் துணைவியார் கூறினார்.

டானா மீது பாருக் குடும்பம் வைத்திருக்கும் அன்பு டானாவிடம் தெரிகிறது.
தமிழை தாய்மொழியாய் கொண்ட தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஆங்கில மோகத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் எகிப்து நாட்டின் பேரழகிக்கு தமிழை ஊட்டி வளர்த்த பாருக் துணைவியார் நம் அனைவர் நெஞ்சிலும் நிற்கிறார்கள்.

உடல் நலம் சரியில்லாத நிலையில் டானாவை தன் பிள்ளைப் போல் பாவித்துவரும் பாருக் துணைவியார் அவர்கள் எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல் அருளால் சுகமடைந்து எந்த நோயுமின்றி நீடோடி வாழ வேண்டுமாய் இறைஞ்சுகின்றேன்.

காலம் கடந்தாலும் டானா தமிழையும் பாருக் குடும்பத்தையும் மறந்திட மாட்டாள். பசுமரத்தாணியாய் தன்பிஞ்சு மனதில் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் பதித்து வைத்திருக்கிறாள்.

டானாவை அமீரகத்தில் இயங்கும் தமிழ் அமைப்புகள் தங்களின் விழாக்களில் மேடை ஏற்றி அவளுக்கு உற்சாகம் வழங்க முன் வர வேண்டுமாய் இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

Monday, December 21, 2009

மகான்கள்...நவீன மகான்கள்.!


பிறந்ததிலிருந்து எல்லோருமே ஏதோ ஒரு சமயத்தைச் சார்ந்தோ அல்லது ஒரு கொள்கையை பின்பற்றியோ வளர்க்கப்பட்டிருக்கின்றோம்.வெகு சிலர்தான் தாங்கள் ஏற்ற சமயத்தை, கொள்கையை தங்களின் சுயசிந்தனைக்கு பரிசீலனைச் செய்து அதன் அகம், புறங்களை ஆழமாக ஆய்ந்து, அதன் மெய்களை உணர்ந்து சமயங்களை அல்லது கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அல்லது மாற்றிக் கொண்டு வாழ்கிறார்கள்.

தேடல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத உள்ளுணர்வு. தேடப்படுவதில் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறோம். பலருக்கு பொருளாக இருக்கும், சிலருக்கு அருளாக இருக்கலாம் இன்னும் சிலருக்கு காதல் இப்படி நிறைய இருக்கும். யாருக்கு எது தேவையோ அதைத் தேடிக் கொள்கிறோம்.

ஆன்மீகத்தேடல் என்பது எல்லோருக்கும் ஏற்படுவதல்ல. ஏற்படாததற்கு காரணமும் இருக்கிறது தங்களுடைய அன்றாட நடைமுறை வாழ்க்கையில் சில செயல்பாடுகளை கைவிடப்பட வேண்டி இருக்கலாம் என்ற பயத்திலேயே பலர் ஆன்மீக சிந்தனையின் பக்கம் நெருங்குவதில்லை.

ஆனால் ஆன்மீக குருமார்களின் உரையாடல்கள், கட்டுரைகள், நூல்கள் இன்று பலரால் வாசிக்கப்படுகிறது, நேசிக்கப்படுகிறது. விலகிச் சென்றவர்கள் இப்பொழுது திரும்பிப் பார்க்கிறார்கள் விரும்பி ஏற்கிறார்கள் அதற்கு உறுதுணையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ஊடகங்கள்.போதிக்கக் கூடியவர்களில் பலர் நவின மகான்களாகவே இருக்கிறார்கள்.

சாதரண மனிதர்களிலிருந்து சாமானிய மனிதர்கள் வரை இன்று மகான்களின் சந்திப்புக்காக காத்திருக்கிறார்கள். சந்திக்கப்படுபவர்கள் எல்லாம் மகான்களா?
மகான்களை எதற்காக சந்திக்க வேண்டும்?

இறைத் தேடலினால் சூஃபிகளையோ, மகான்களையோ பலர் சந்திப்பதில்லை. இந்த உலக ஆதாயத்தின் நிமித்தத்தினால், தங்களின் இல்வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தேவையினால், பிரச்சனைகளினால் மகான்களை சந்திக்க செல்கிறார்கள்.

செல்லக் கூடியவர்களின் பிரச்சனைகள் உலகதாயமாக இருப்பதினால் பதில் சொல்லக்கூடியவர்கள் மட்டும் முற்றும் துறந்த முனிவராக இருப்பார்களா என்ன?
கள்ளத்தனமும், வில்லத்தனமும் கொண்டவர்களால் உண்மைத்தனமான மகான்களை எப்படி அடையாளங் காணமுடியும்.?

குடும்பப் பிரச்சனைக்கு கோவிலுக்கு செல்வதைவிட குடும்பத்தார்களுடன் கூடி பேசினால் பிரச்சனை முடிந்துவிடும் அல்லவா? பிரச்சனை எங்கிருக்கிறதோ அங்கு பேசுவதை விட்டு விட்டு எங்கோ போய் பேசிக் கொண்டிருந்தால் பிரச்சனை எப்படித் தீரும்?

நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை எல்லோரும் நம்புகின்றோம்; நம்பிக்கைக்குரிய அந்தசக்தியை வாழ்நாள் முழுவதும் நம்பிக் கொண்டே இருக்கின்றோமே தவிர அதை அறிந்திட முனைவதில்லை. அந்த அறியாமைதான் பல நவீன மகான்களிடம் நம்மை சிக்கவைக்கிறது. உண்மையான இறைத்தேடல் இருந்தாலே சிறந்த குருவிடம் மகானிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும்.

மகானைப்பற்றி யாரும் கூறினால் அவர் என்ன அதிசயத்தை நிகழ்த்தக் கூடியவர் என்பதை சொல்லக்கூடியவரின் விரிவுரையில் கேட்பவரின் செவிகள் நம்பமறுக்கும் அளவிற்கு கைகளைத் திறந்தால் மலர் வருகிறது, மணம் வருகிறது, வாயைத் திறந்தால் ஆப்பிள் வருகிறது, அல்வா வருகிறது என்றும் அடுக்குவார்கள். அப்படிப்பட்டவர்களிடமிருந்து ஞானத்தைத் தவிர மற்ற அனைத்தும் வெளிவருவது அதிசயமில்லை.

இன்று பல மகான்கள் என்று சொல்லக்கூடியவர்களிடமிருந்து உண்மையைத்தவிர மற்ற எல்லாமும் வருகிறது என்பதுதான் உண்மை.
மகான்களிடம் அதிசயத்தைத் தேட வேண்டுமா? அறிவைத் தேட வேண்டுமா? என்பது பலருக்கு தெரிவதேவே இல்லை.

பெரும்பாலும் தோற்றங்களைக் கண்டு ஏமாந்து விடுகிறோம்; காவியும், தாடியும் பலரின் மனதை நம்பவைத்துவிடுகிறது. சில அபாரமான செயல்களைக் கண்டு மனதை ஒப்படைத்து விடுகிறோம்; அவரை மகானாக ஏற்றுக் கொண்டு விடுகிறோம்.பிரச்சனைகளை கொட்டிவிடுகிறோம், நோய்களை சுட்டிக்காட்டுகிறோம். மருத்துவத்தினால் குணமடைய வேண்டிய பிணிகளை மகான்களினால் குணப்படுத்த முயலுகிறோம்.

வைத்தியருக்கும் மகான்களுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களும்
ஜோசிருக்கும் மகான்களுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களும் நிறைந்திருப்பதினால் மகான்யார் ? மகன் யார்? என்ற வித்தியாசம் தெரியாதவர்களாய் இருக்கிறார்கள்.

ஒரு சூஃபி கூறினார்
அறிவைத் தேடுபவர் ஆயிரத்தில் ஒருவர்; குருவைத் தேடுபவர் கோடியில் ஒருவர்; கருவை அறிந்தவரை காண்பதும் அறிது என்று.

இன்று மகான்களாக, மகரிசிகளாக, மார்க்க வித்தகர்களாக பல பட்டங்களோடு பவனி வருபவர்கள் கருவை அறிந்தவர்களா? என்ற கேள்விகள் நம்முள் எழுவதே இல்லை என்றால் நம்மில் அதைப்பற்றிய தேடலோ, அறிவோ இல்லை என்பது தானே உண்மை.

வேதத்தை வைத்து எவ்வளவு வேண்டுமானாலும் வியாக்கியானம் செய்யலாம் வியாக்கியானம் செய்பவர்களெல்லாம் கருவை அறிந்தவர்களா?

மகானிடமிருந்து பெறவேண்டிய அறிவை நாம் பெறவேண்டுமே தவிர
நம்மிடமுள்ள குப்பைகளை அவரிடம் கொண்டிக் கொண்டிருந்தால்
எதையும் பெற்று வரமுடியாது.

ஒரு மகானிடம் சென்று நாம் அறிவுப் பெறவில்லை என்றால் நம்மிடம் அறிவுத்தேடல் இல்லை என்பதா? மகானுக்கு இல்லை என்பதா?
மகானுக்கு இல்லை என்பதை அறிந்து கொள்ளக் கூடிய அறிவு நம்மிடம் இருந்தால் …மகான் யார்?

இன்று பலர் இப்படித்தான் இருக்கிறார்கள் அறிவைத்தேடி குருவை நாடியவர்கள் குருவுக்கு கட்டுப்படவேண்டும் அப்போதுதான் நம் அறிவுத்தேடல் நிறைவு பெறும்.
குருவை மிஞ்சுபவர்களாக இருந்தால் எதையும் கற்றுக் கொள்ள முடியாது.
அறிவுத்தேடலின்றி வேறு ஏதும் தேடுபவர்களாக இருந்தால் கருவை அறிந்த மகான்களிடம் நிலைத்து நிற்க முடியாது. விரட்டப்படுவார்கள் அல்லது விலகிச்செல்வார்கள்.

உண்மையான மகானைத் தேடுங்கள்…உண்மையைத் தெளிவுபெறுங்கள்….!

Friday, December 18, 2009

அமீரகப்பதிவர்களின் "அண்ணாச்சி அழைக்கிறார்" குறும்படம் வெளியீட்டுவிழா


அமீரகப் பதிவர்களின் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா கடந்த நவம்பர் 6 ம்தேதி நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியை குறும்படமாக தயாரித்து நானும் ஒரு இயக்குனர்தான் என்று நிருபிக்கும் முகமாக கீழைராஸா தனது திறமைகளை இந்த குறும்படத்தில் காண்பித்துள்ளார்.

(பலஆயிரம் பதிவர்கள் ரகசியமாகப் பேசிக் கொண்டது என்னவென்றால் வேட்டைக்காரனுக்கு போட்டியாக அண்ணாச்சி அழைக்கிறார் திரையிடப்படுகிறது.
அதுவும் 18ம் தேதி என்று தேதி அறிவித்ததும் நடிகர் விஜய் கீழைராஸாவுக்கு தொலைப்பேசி செய்து உங்கத் தேதியை மாற்றி விடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அதற்கு இயக்குனர் கீழைராஸா நான் ஓருமுறை முடிவுப் பண்ணினா என் பேச்சைதவிர எவன் பேச்சையும் கேட்கமாட்டேன்னு சொன்னதும்…தல என் அடுத்தப்படத்துக்கு இதான் பஞ்ச் டயலாக் ன்னு சொல்லிபுட்டு கட் பண்ணிட்டார்ருன்னு வட்டாரத்திலிருந்து வந்த செய்தி)

18.12.2009 வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் சார்ஜாவில் ஆசிப்மீரான் இல்லத்தில் எப்பொழுதும் போல் எனது கை வரிசையான பிரியாணி சட்டி திறக்கப்பட்டு ஆனந்தமாக அள்ளி அள்ளி வைத்த பிரியாணியும் கறியையும் உண்ட அமீரகப்பதிவர்கள் கொஞ்சம் கூட தளராமல் ஆர்வத்துடன் திரைப்படத்தைக் காண அமர்ந்திருந்தார்கள்.

இந்த விழாவிற்கு முக்கிய சிறப்பு விருந்தினராக இலங்கையிலிருந்து காவியத்திலகம், புலவர் டாக்டர் ஜின்னா ஷரிபுத்தீன் அவர்கள் வருகைத் தந்து சிறப்பித்தார்கள்.

பெண் பதிவர்களான பட்டிமன்ற குயின் ஜெசிலாவும், அபுதாயிலிருந்து உஸேனம்மா மற்றும் அவர்கள் குடும்பத்தினரும், அன்புடன் மலிக்காவும் வருகைத்தந்திருந்தார்கள்.

புதிதாக இம்முறை பதிவர் அபுஅப்ஸர், சமீர் -ஜீவன் பென்னியும் வந்து கலந்துக் கொண்டனர்.அவர்களுடன் ஜியாவுதீன் கலந்துக் கொண்டார்.
சரியாக மதியம் 2.30 மணிக்கு அமீரகப் பதிவர்களின் “அண்ணாச்சி அழைக்கிறார்” குறும்படத்தை புரஜெக்டர் மூலம் ஒளிப்பரப்பட்டது.



காட்சியின் துவக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் பாரதியின் குரலாய் மாற பாரதி பதிவர்களை பார்த்துக் கொண்டிருந்தார்.
சூப்பர் ஸ்டாரின் டைட்டிலோடு அமீரகப்பதிவர்களின் வரலாற்று சிறப்புமிக்க குறும்படம் ஆரம்பமானது.

மொக்கை தர்பாரும், பதிவர்களின் பாட்டுக்கு பாட்டு
நிகழ்வும், கிரிக்கெட் நிகழ்ச்சியும் அவைகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த பின்னனி பாடல்களும் மிக அருமை.
பிரியாணி சட்டியை தூக்கிக் கொண்டு செல்லும் பதிவர்களை “எங்கே செல்லும் இந்த பாதை” என்ற பாடலை பின்னனியாகப் போட்டு பிரியாணியை மயானமாக்கிய திறமை பெருமை இயக்குனர் கீழைராஸாவுக்கே உரித்தானப் பாணி.

பதிவர்களின் காட்சிகளுக்கிடையே வைகைப்புயல் வடிவேலின் காமடியும் கலக்கலாக இருந்தது.

ஆஸாத் இயக்குனர் கீழைராஸாவிடம் பிரியாணியைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி?

நான்கு மணிநேரமாகியும் பிரியானியின் சூடு ஆரவில்லை அது எப்படி என்று ஆஸாத் கேட்க
"அதுவா! இந்த பதிவர்கள் சந்திப்பில் கலந்துக் கொள்ள முடியாதவர்களும், உலகப்பதிவர்களின் ஒட்டுமொத்த வயிற்றெரிச்சலின் உஸ்னத்தினால் தான் பிரியாணி இன்னும் சூடாகவே இருக்கிறது; என்று இயக்குனர் கொடுத்தப் பதில் அனைவரும் ரசித்து சிரித்தக் காட்சிகள்.

அண்ணாச்சியின் பேட்டி நகைச்சுவைமிக்கதாய் இருந்தது.

இந்தப் படத்துல நான் ஹீரோவா காமடியனான்னு இயக்குனரிடம்தான் கேட்கனும்.
இந்தக் குறும்பட வெளியிட்டுவிழாவை சிறப்பாக செய்த குழுவினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி...

கீழைராஸா…இவர் பதிவர் மட்டுமல்ல இவருடன் இயக்குனரும், பாடகரும், இசையமைப்பாளரும், ஒளி,ஒலியமைப்பாளரும், எடிட்டரும், இன்னும் பன்முகத்தார்கள் பதுங்கி இருக்கிறார்கள் என்பதை இந்த குறும்படம் நிருபித்துள்ளது.

படத்தைப் பார்த்து முடித்ததும் பதிவர்கள் அனைவரும் கீழைராஸாவை சூழ்ந்து கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்கள். அவர்களுடன் நானும் ஒருவன்.

(முன்னெச்சரிகையாக முதுகில் பஞ்சை கட்டிக் கொண்டு வந்த இயக்குனர் தப்பித்துவிட்டார்)

அண்ணாச்சியின் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைப்பெற்றது.
அமீரகப்பதிவர்களில் பெரும்பாலோர் கலந்து ரசித்தனர்.

படத்தைக் காண கீழே கிளிக் செய்யுங்க
http://www.youtube.com/watch?v=3kSjIFIbv7w

http://www.youtube.com/watch?v=HnnU9Fo8MOU

http://www.youtube.com/watch?v=A5DzU9oyaPQ

http://www.youtube.com/watch?v=LNvzkEogdmc

Wednesday, December 16, 2009

பிஞ்சு மனசு


இரண்டாம் வகுப்பு படிக்கும் எனது இளைய மகளுக்கு தமிழ் பரிட்சை.ஆத்திச்சூடியை மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும்.
அதை மனனம் செய்து இருக்காளா கேளுங்கள் என்று என்மனைவி என்னை உசுப்பேத்தினார்.
என்குழந்தைகளிடம் படிப்பைப் பற்றி நான் அதிகம் கேட்பதில்லை.என்றாவது ஒருநாள் விசாரிப்பதோடு சரி. இந்த செயல் என் மனைவிக்கு மிகுந்த வருத்தத்தை இன்று வரையில் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
காலையில் ஆறுமணிக்கு எழுந்து பள்ளிக்கூடம் புறப்பட்டு வீட்டுக்கு மதியம் இரண்டு மணிக்கு வருகிறார்கள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பெரிய மகளும் இளைய மகளும்.
வந்து சாப்பிட்டதும் குர்ஆன் ஓதுதிக் கொடுப்பதற்கு ஆசிரியர் வந்துவிடுவார் ஒருமணி நேரம் குர்ஆன் ஒதுவார்கள்.
அதன் பிறகு ஒருமணி நேரம் உறக்கம் மாலை ஆறு மணிக்கு டியூசன் வாத்தியார் வருவார் இரவு எட்டு முப்பது அதிகபட்சம் ஒன்பது மணி வரை படிக்கனும.; அவருபோன பின் பள்ளிக்கூடத்தில் கொடுத்த வீட்டுப்பாடம் செய்யனும் பிறகு ஒன்பதரைக்கு சாப்பிடனும் இதுக்குமேல குழந்தைகளுக்கு மூடு இருந்தால் அரைமணிநேரம் விளையாடுவார்கள்.
இரவு பத்தரைக்குள் படுக்கவைப்பது வழக்கம் மீண்டும் வழக்கம்போல் காலை ஆறுமணி.
கிட்டதட்ட பதிநான்கு மணிநேரம் படிப்பின் சிந்தனையில் இருக்கும் அந்த குழந்தைகளிடம் தினமும் அவர்களின் படிப்பைப் பற்றி விசாரித்தால் அந்த குழந்தைகளின் மனோநிலை எப்படி இருக்கும்.?

படிப்பின் மீதுள்ள ஆர்வம் குறைந்துவிடும் அல்லது வெறுத்து விடுவார்கள்.

ஆனால் அவர்களின் படிப்பறிவு எப்படி இருக்கிறது என்பதை அவர்களை விசாரித்து தெரிந்துக் கொள்வதைவிட அவர்களின் செயல்பாடுகளில் எளிதாக தெரிந்துக் கொள்ளலாம்.
ஒன்றை மனனம் செய்துவிட்டால் அதை பெற்றோர்களிடம் ஒப்பித்துக் காண்பித்து சந்தோசப்படுவார்கள்.அவர்கள் தெரிந்தததை கூறும்போது நாம் அவர்களுக்கு தெரியாத ஒன்றைக் கேட்டு அவர்களின் உற்சாகத்தை முடக்கக் கூடாது. அவர்கள் சொல்வதை நாம் கேட்க வேண்டும் சொல்லியப் பின் அவர்களை தூண்டுதலான வார்த்தைகளால் அவர்களை உற்சாகப் படுத்தவேண்டும்.

உற்சாகம் என்பது அன்பை வளர்த்து அறிவுத் திறனை மேன்மைப்படுத்தும் என்பது அனுபவக் கூற்று.

ஆத்திச்சூடியை படித்து காட்டேன் என்று என் மகளிடம் கேட்க அவள் திருதிரு என விழித்தாள். அவள் விழிப்பதைக் கண்டதும் எனக்கு என் மனைவி சொன்ன வார்த்தைகள்தான் ஞாபகத்துக்கு வந்தது. நாம் கண்டுக்காமல் இருந்தது தப்பாகி விட்டதோ டியூசன் வைத்தும் ஒழுங்காக படிக்கவில்லையே என்று எனக்குள் கோபத்தை ஏற்படுத்தியது.

அதட்டலாக என் மகளிடம் நீ என்னப்படிக்கிறே ஆத்திச்சூடியே உனக்கு தெரியல என்று கோபமாக கேட்டதும் பயந்தவளாய் எனக்கு முதல் வார்த்தையை சொல்லிக் கொடுங்க பாக்கிய நான் சொல்கிறேன் என்றாள்.

கொடுமையை எதிர்த்து நில் என்று முதல்வரியை சொன்னேன்.மீதி உள்ள வரிகளை திக்கிதெனறி ஒப்பித்தாள். ஏன் இவ்வளவு தினறல் என்று அதட்டினேன்.பத்துமுறை படித்துவிட்டு பார்க்காமல் என்னிடம் சொல்லவேண்டும் என்று கட்டளையிட்டேன். பத்துநிமிடத்தில் தயாரானாள்
மீண்டும் முதல்வரி தெரியவில்லை.உடனே தனது சகோதரியிடம் கேட்டுவிட்டு ஒப்பித்தாள்.

பத்துமுறை படித்தும் உனக்கு எப்படி முதல் வரி மறக்கிறது என்றேன்.முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு நின்றாள்.
மறுதினம் ஒப்பிக்கும் பரிட்சை முடிந்து வீட்டுக்கு வந்ததும் எனது அலுவலகத்துக்கு தொலைபேசி செய்து ஆத்திச்சூடியை அரைநொடியில் முழுவதையும் கூறினாள்.
வெரிகுட் வெரிகுட் என்று அவளை உற்சாகப்படுத்தினேன் அவளுக்கு சந்தோசமாக இருந்தது.

அதட்டல் இல்லாமல் நான் கேட்டிருந்தால் தினறல் இல்லாமல் நேற்று படித்துக் காட்டிருப்பாள். நான் அதட்டியதும் குழந்தைக்கு பயம் வந்துவிட்டது அந்த பயம் படித்ததை உடனே சொல்லமுடியாத திணறலை ஏற்படுத்திவிட்டது.

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களின் அதட்டல் டியூசனிலும் அதட்டல் ஒதுவதிலும் அதட்டல் போதாத குறைக்கு பெற்றோர்களின் அதட்டல் இவ்வளவு அதட்டல்களை தாங்கக்கூடிய குழந்தைகளின் மனசு பயத்திலேயே உலாவந்துக் கொண்டிருக்கும்.

இந்த பயமே குழந்தைகளை எவ்வளவு படித்து மனனம் செய்திருந்தாலும் கேட்கப்படும் போதும் பரிட்சையின்போதும் பெற்றோர்களின் கோபத்திற்கு ஆளாகநேரிடும் என்ற பயத்திலும் பதட்டத்திலும் பல கேள்விகளுக்கு பதில் எழுதாமலேயே விட்டுவிடுகிறார்கள்.

கலிபோர்னியா பல்கலைகழகத்தில் ஒரு ஆய்வு செய்தார்கள். இரண்டு செடிகளை தனித்தனியே வைத்து அவைகளுக்கு சமமாக தண்ணீர் இட்டு தினமும் ஒரு செடிக்கு முன் நின்று இது நன்றாக வளரவேண்டும் என்று எண்ணுவதும் மற்றொரு செடிக்கு முன் நின்று இது நன்றாக வளரவேக் கூடாது என்றும் தியானம் செய்வதைப் போல் செய்தார்கள்.

சில தினங்களில் எந்த செடி நன்றாக வளரவேண்டும் என்று எண்ணினார்களோ அது நன்றாக வளர்ந்திருந்தது. எது வளரக் கூடாது என்று எண்ணினார்களோ அது வளரவில்லை. இது எண்ணத்தின் வலிமையை தெரிந்துக் கொள்வதற்கு ஆய்வு செய்யப்பட்டது.

குழந்தைகளின் எண்ணங்களில் தாழ்வு மனப்பான்மையை எந்த சூழ்நிலையிலும் ஏற்படுத்தி விடவேக்கூடாது. நம் குழந்தைகளின் மீது முதலில் நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அவர்கள் செய்யக்கூடிய சின்ன சின்ன விசயங்களை பாராட்டவேண்டும் உற்சாகப்படுத்தவேண்டும்.

உற்சாகம் என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவைப்படுகிறது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பலருக்கு தெரிந்திருக்கும் ஆனந்தவிகடனில் தொடர் எழுதியவர் பல நூல்கள் எழுதி உள்ளார். அவருடைய வலைதளத்தில்
“இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.” – என்ற வாசகத்தை பதிவிட்டதின் நோக்கம் உற்சாகத்தை எதிர்நோக்கிதான்.

பிரபலமானவர்களின் எதிர்ப் பார்ப்பு இப்படி என்றால் புதிதாக வலைதளம் வைத்து எழுதிக் கொண்டிருக்கும் என்னை உங்களைப் போன்றவர்களின் எதிர்ப் பார்ப்பு எப்படி இருக்கும்?
இந்த இடுக்கையின் நோக்கம் குழந்தைகளுக்கு உற்சாகத்தை அள்ளிக் கொடுங்கள் பிஞ்சு மனதில்லுள்ள பயத்தை கிள்ளி எரிந்து விடுங்கள் என்று முடிப்பதற்கு முன் என் இளைய மகளிடம் உன்னைப் பற்றி வலைதளத்தில் இடுக்கை இடப்போகிறேன் என்று கூறியதும் ஆத்திச்சூடி வாசிக்கிறேன் கிளிப் எடுத்து போடுங்கள் டாடி என்று கேட்டுக் கொண்டதற்கினங்க உங்களின் பார்வைக்கு வைத்துள்ளேன்.



Monday, December 14, 2009

உதவி செய்வோம் உதவி செய்த எண்ணத்தை உதவி செய்திடுவோம்


மனிதனுக்கு பிரதானமாக இயங்குவது மூளை. அதன் உதவியால் உடலின் செயல்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. உதவி என்பது இல்லாமல் போனால் இந்த உலகமே ஸ்தம்பித்து விடும். இயக்கமே இல்லாமல் போய்விடும்.அதனால் உதவி என்பது வாழ்க்கையின் அச்சாணியாக இருக்கிறது.

மனிதர்களுக்குள் உதவி செய்துக் கொள்வது மனிதநேயத்தையும் பரஸ்பர அன்பையும் வளர்க்கும். ஆனால் அந்த உதவியே ஒரு மனிதனுக்கு உபத்திரமாக மாறும் போது அவனின் மனோநிலை எப்படி எல்லாம் பாதிக்கப்படும் என்பதை அனைவருமே உணர்ந்திருப்போம்.

ஒருவருக்கொருவர் உதவிகள் இல்லாத வாழ்க்கை ஒருவருக்கும் இல்லை .

நாம் நம் உடன் பிறந்தவர்களுக்கு,நண்பனுக்கு,உறவுகளுக்கு,ஊரார்களுக்கு, தெரிந்தவர்களுக்கு, தெரியாதவர்களுக்கு என்று உதவிகள் பல செய்துக் கொண்டிருப்போம்.

சிலர் எதிர்ப்பார்ப்புகளை மனம் நிறைய சுமந்துக் கொண்டு பெயருக்காகவும், புகழுக்காகவும், மரியாதையை எதிர்நோக்கியும் உதவிகள் செய்வார்கள். அந்த உதவிகள் அனைத்தும் ஏமாற்றத்தை தரும்போது அளப்பெரிய வேதனையை சுமந்துக் கொண்டிருப்பார்கள்..

ஒருவருக்கு கடன் கொடுத்தால் அந்தக் கடனை நாம் எழுதி வைத்திருப்பது வழக்கம். கடன் பெற்றவர் திரும்ப அதை செலுத்தி இருப்பார் அதை வரவும் வைத்திருப்போம்; ஆனால் அவருக்கு செய்த அந்த உதவியை நாம் என்றும் மறப்பதில்லை.செய்யப்படும் உதவிகள் செய்தவரிடம் எதிர்பார்ப்பின் மனோநிலையை உருவாக்குகிறது.

உதவி பெற்றவரிடமிருந்து ஏதோ ஒரு வகையில் ஒரு பிரதிபலனை மனம் எதிர்நோக்குகிறது. முகம்தெரியா ஒருவருக்கு செய்த உதவியை நம் எண்ணத்தில் 'செய்தோம்' என்ற செயலை பதிவாக்கி வைத்திருப்போமே தவிர, அந்த முகந்தெரியா நபரிடமிருந்து பிரதிபலனை நம் மனம் எதிர்பார்ப்பதில்லை.
இப்படி பலருக்கு செய்யப்பட்ட உதவிகளை காலங்கள் பல கடந்தாலும் நம் எண்ணத்திலிருந்து கடக்காமல் வரிசைப்படுத்தி வைத்திருக்கின்றோம்.

இன்று உதவிப் பெற்ற நண்பன் நாளை அவன் பொருளாதாரத்தில் வளர்ந்து விட்டால் அவன் என்னை மதிக்கவில்லை திமிர் பிடித்துவிட்டது என்னால் தான் இந்தளவு வளர்ந்தான் என்று இன்னொரு நண்பரிடம் நாம் புலம்பி மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருப்போம்.

ஏதோ ஒன்றை நண்பனுக்கு உதவியாக கொடுத்துவிட்டு, அதை மீண்டும் பெற்றும் விட்டு நம் மனம் சஞ்சலப்படுவதின் காரணமென்ன?

நாம் கொடுத்தது பொருளை அல்லது பணத்தை மட்டுமல்ல, அதன் கூடவே எதிர்ப்பார்ப்பையும் கொடுத்திருக்கிறோம். அவரிடமிருந்து நாம் கொடுத்த பொருள் அல்லது பணம் திரும்ப வந்து விட்டது. ஆனால் நம் எதிர்பார்ப்பு மட்டும் அவரிடம் பாக்கியாக தொக்கிக் கொண்டு நிற்கிறது. அந்த பாக்கி நாம் அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் நன்றி உள்ள நாயாக வாலை ஆட்டிக் கொண்டே நிற்கவேண்டும் என்று நம்மனம் எதிர்ப்பார்க்கிறது. அவர் நம்மைக்கண்டு வாலை ஆட்டாத போது
மன உலச்சலைச்சலும் வலியும் நம் மனம் ஏற்படுத்துகிறது.

எண்ணத்தில் எதையெல்லாம் எழுதிவைக்கின்றோமோ அவைகளை நாம் டெலிட் செய்யவேண்டும். இல்லையெனில் அது மனதில் வைரஸாக மாறி வலியை உண்டுப்பண்ணிக் கொண்டே இருக்கும் இந்த வலிக்கு யாரும் காரண கர்தாவாக முடியாது. அவரால் இவரால் தான் எனக்கு இந்த நிலமை ஏற்பட்டது என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளலாம். ஆனால் வேதனையை அனுபவித்துக்கொண்டிருப்பது அவரல்ல நாம் தான்.

எண்ணம்போல் வாழ்வு என்று சொல்வதும் இதற்குத்தான். நாம் எதை எண்ணுகின்றோமோ அதுவாகவே மாறிவிடுகிறோம் .

ஒருவருக்கு உதவி செய்வது நல்ல எண்ணம்தான் செய்த அந்த உதவியை எண்ணத்தில் வைத்துக் கொள்ளாமல் அதையும் உதவி செய்துவிட்டால் எந்த மனக்கஸ்டமும் நம்மை வந்தடையாது.

எண்ணம் என்பது ஒரு சதுரப்பரப்பான நிலம்; அதில் நாம் எதை விதக்கின்றோம் என்பது முக்கியம். மலர்களை விதைத்தால் நறுமணத்தை சுமப்போம். முட்களை வளர்த்தால் அதன் குத்தலின் வலியை சுமப்போம்.

நம்மிடம் உதவிப் பெற்றவர்கள் செய்தவர்களை மறந்துவிட்டார்கள் என்பதற்காக செய்தவர் எந்த நிலையிலும் பாதிக்கப்படக் கூடாதுதானே?.அந்த பாதிப்பை ஏற்படுத்துவது அவரவரின் எண்ணங்கள் தானே?

சிலர் பலருக்கு செய்த உதவிகளை அப்படியே மறந்திருப்பார்கள். உதவிப் பெற்றவர் அவரிடமே செய்த உதவியை நன்றி மறவாமல் நினைவுப் படுத்தும்போது அப்படி நான் செய்தேனா என்று மறந்த நிலையிலே வினவுவார்கள்.அப்படியானவர்கள் எந்த சஞ்சலத்திற்கும் ஆளாகுவதில்லை.

எதிர்ப்பார்புகள் எந்தநேரத்திலும் ஏமாற்றத்தை தரலாம் அப்படி தரப்படும் ஏமாற்றங்களை ஏற்றும் கொள்ளும் மனபக்குவம் நம்மில் எத்தனைபேரிடம் இருக்கிறது.?

Thursday, December 10, 2009

மனித நேயத்தைக் காக்கும் மனிதர்கள்


இறை என்பது வாழ்க்கையின் அங்கம். சிலர் மறுக்கலாம் பலர் ஏற்கலாம்.
மறுக்கப்படுவதும்,ஏற்கப்படுவதும் அவரவர்களின் நம்பிக்கையும்,அறிவுத் தெளிவையும் பொருத்தது.
இருப்பதை இல்லை என்று கூறுவதும்,இல்லையை இருக்கிறது என்று வாதிப்பதும் இன்று பலருக்கு வாழ்க்கையாக இருக்கிறது. இருப்பது இருக்கிறதுதானே அதை எவ்வளவு காலத்திற்கு இருக்கிறது,இருக்கிறது என்று வாதிப்பது இல்லையும் அப்படித்தான்.

இருந்தாலும் இல்லை என்றாலும் மனிதன் மனிதனாக வாழ்ந்தாக வேண்டும்.ஒரு கட்டுப்பாட்டுக்குள் மனிதன் அடங்கவேண்டும். தனது செயல்களை யாரோ கண்காணிக்கின்றார்கள் அது இறையோ அல்லது இயற்கையோ என்ற உள் உணர்வு அவனை உசுப்பிக் கொண்டிருக்க வேண்டும். ஒன்றைச் சார்ந்து வாழக்கூடியவர்கள் நூறு சதவீதம் அதைச் சார்ந்து வாழ்ந்து விட்டால் அவர்களால் மற்றவர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை. அதை முழுமையாகப் கடைபிடிக்காமல் நானும் மனிதன் தான் தவறு செய்யக் கூடியவன்தான் என்று வாதம் செய்யக் கூடியவர்களால் பலருக்கு தொந்தரவு இருக்கிறது.

மனிதன் மனிதனாக வாழ்வதற்காக இன்று வரையில் எத்தனையோ உபதேசங்கள், எத்தனையோ வழிகாட்டல்கள், எத்தனையோ வழிபாடுகள் இத்தனை இருந்தும் இன்னும் கிமு, கிபி, ஹிஜ்ராவையும் தாண்டி நவீனம், அறிவியல் என்று மனித அறிவு வளர்ச்சி அடைந்துக் கொண்டிருக்கின்ற பின்பும் முழுமையாக மனிதம் வளரவில்லை, மனித நேயம் மலரவில்லை என்றால் குறை எங்கிருக்கிறது.

மனித நேயத்திற்கு பாதகம் விளைவிக்க கூடியவர்கள் இறைநம்பிக்கை அற்றவர்களா?, இறை நம்பிக்கையாளர்களா?, மதங்களை சார்ந்தவர்களா?, மதமே இல்லாதவர்களா ? யார் என்று ஆய்வு செய்தால் ஏதோ ஒன்றை சார்ந்தவர்களாக ஒரு காரணத்தை கற்பிப்பவர்களாகதான் இருக்கிறார்கள்.

எங்கோ ஒரு இடத்தில் மனிதநேய மாநாடு போடுவதை விளம்பரம் செய்கின்றோம்.
மதநல்லிணக்க விழாவை பிரகடணம் படுத்துகின்றோம் எதற்காக?
ஒற்றுமையை மனித நேயத்தை வளர்ப்பதற்கு அல்லவா?

உலகம் தோன்றி எத்தனைஆண்டுகள்?,
உயிர்கள் தோன்றி எத்தனை ஆண்டுகள்?,
தீர்க்கதரிசிகள் மறைந்து எத்தனை ஆண்டுகள்?,
வேதங்கள் தோன்றி எத்தனை ஆண்டுகள்?
ஆனால் இன்றும் தீர்க்கதரிசிகளின் வேலையை பல மதத்தவர்களும் செய்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆண்டுகள் கடந்து விட்டன; ஆனால் மனித நேயம் இன்னும் தத்தளித்துக் கொண்டுதானே இருக்கிறது. எல்லா மதங்களும் மனிதநேயத்தை தான் போதிக்கிறது என்பது திண்ணம். மதங்களை பின்பற்றக் கூடியவர்கள் முழுமையாக பேனாததின் வெளிப்பாடுதான் இன்று மனிதநேய மாநாடுகள் மத நல்லிணக்க விழாக்கள்.

பெரும்பாலான உபநியாசர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கொள்கைகளை அல்லது கருத்துக்களை முழுமையாக உள்வாங்கி விளங்கி அதை தங்களின் வாழ்க்கையாக்கிய பின்னரே மற்றவர்களுக்கு போதனை செய்ய வேண்டும்; ஆனால் பெரும்பாலோர் மற்றவர்களுக்கு போதிப்பதோடு சரி. கருத்து விவாதங்களுக்காக காலங்களை கடத்துகிறார்களே தவிர பேணுதல் என்பது நம்மிடையே மிகக் குறைவாகதான் இருக்கிறது.

மனிதன் மனிதர்களை நேசிக்கவேண்டுமானால் அவன் தன்னை முழுமையாக அறியவேண்டும். அறிதலில் மேம்புல் மேய்ந்தால் நேசம் என்பது வேசமாகவே இருக்கும். வாழ்க்கை நாடகத்தில் ஒவ்வொரு பாத்திரத்திற்க்காக நடித்துக் கொண்டிருக்க வேண்டும். இன்று பலரும் நடித்துக் கொண்டிருக்கின்றோம். உண்மையான அன்போ நேசமோ பண்போ நம் எல்லோரிடமும் குறைந்தே இருக்கிறது.

இறைவணக்கத்தை முழுமையாக கடைப்பிடிக்க கூடிய ஒருவர் தாகத்துடன் நிற்கும் ஒரு நாய்க்கு தண்ணீர் கொடுக்காமல் சென்றால் அவரின் வணக்கம் யாரை திருப்தி படுத்துவற்காக வணங்கப்பட்டது?

எந்த வேதங்களை வாசித்தாலும் வாசிப்பவரின் அறிவுக்கேற்ப அவரின் புரிதல் இருக்கும். வேதத்திற்கு வியாக்கியானம் சொல்லக் கூடியவர்களிடமும் அப்படித்தான். நானும் படித்தேன், நானும் புரிந்தேன் என்று வாதங்கள் தான் வழுவாகிக் கொண்டிருக்கிறதே தவிர உண்மையை உணர்வதற்கு முயற்சிகள் என்பது மிக மிக குறைவு.

பிறந்த குழந்தை தாயின் மார்பகத்தில் பாலை சப்பிக் குடிக்கிறது. ஆனால் சப்பினால்தான் பால் வரும் என்று அந்த குழந்தைக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்.

பிறக்கும் குழந்தை அறிவுடன் பிறக்கிறது, அன்பை நேசக்கிறது, கவுடு, சூது தெரியாது. கோபத்தை நாம் வெளிப்படுத்தினால் குழந்தை அழும். வன்மையை விரும்புவதில்லை அதன் தொடக்கமே அன்பு பாசம் நேசம் ஆனால் நாளடைவில் அது மறந்து போனது எப்படி? அன்பே உருவான குழந்தைக்கு மனித நேயத்தை போதிக்க வேண்டிய அவசியம் ஏன்? எது மறக்கடித்தது?

ஒரு மகான் தன் மாணவர்களுடன் காட்டுக்குள் செல்கிறார். செல்லும் வழியில் மலங்கள் கிடக்கிறது இதைப் பார்த்த மாணவர்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒடினார்கள். இதைக் கண்ட மகான் அங்கேயே நின்றார் மாணவர்கள் தூரம் சென்று மகானைப் பார்க்கிறார்கள். மலத்தின் பக்கத்திலேயே மகான் நிற்பதைக் கண்ட மாணவர்களுக்கு வியப்பாக இருந்தது.

மாணவர்கள் மகானை நோக்கி வந்தார்கள் ஒரு மாணவர் மகானிடம் கேட்டார்.
இந்த அசிங்கத்தின் துர்நாற்றம் தாங்க முடியாமல் நாங்களெல்லாம் ஒடிப்போனோம் நீங்கள் மட்டும் எப்படி இங்கேயே நிற்கிறீர்கள்? என்றார்.

அதற்கு அந்த மகான் இந்த மலம் என்னுடன் பேசியது என்றார்.மாணவர்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. என்ன பேசியது? என்று ஆர்வத்துடன் கேட்டார்கள்.

நேற்று கடைகளில் அரிசியாக, காய்கனிகளாக, உணவு பண்டங்களாக இருந்தேன் இந்த மனிதர்கள் என்னை வாங்குவதற்கு ஆசையாக ஆவலாக ஒடோடி வந்து பணம் கொடுத்து வாங்கி என்னை சமைத்து, ருசித்து, ரசித்து அருகில் வைத்து உண்டார்கள். ஒரே ஒரு இரவு மட்டும் அவர்களின் வயிற்றில் தங்கினேன் காலையில் வெளியில் வந்த என்னைக் கண்டு மூக்கை பிடித்துக் கொண்டு ஒடுகிறார்கள் துர்நாற்றம், அசிங்கம் என்கிறார்கள் என்று என்னுடன் பேசியது என்றார்.
ஒரு மகானின் வாழ்க்கை சரித்திரத்தில் படித்தக் கதை.

நாம் இன்னும் மாணவர்களாகதான்த் இருக்கிறோம்.எதை அசிங்கம் என்று நினைக்கின்றோமோ அதில் எத்தனை உண்மை இருக்கிறது. எதையும் ஆழமாக சிந்திப்பதில்லை. வலி என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். ஒரு உண்மையின் கீழ்தான் இந்த உலகம்.
மதங்களை நேசிக்குமளவு அதை முழுமையாக புரிதலும் அவசியம்.
மறந்துபோன அன்பை நினைவுக் கொள்வோம் மனிதர்களை நேசிப்போம் மதங்கள் நம்மை நேசிக்கும்.

Monday, December 7, 2009

ஆட்டோ…ப்ளீஸ்

அதிகமான ஊதியத்தை பெருவதற்காக வேண்டி அமீரகம் வந்தவர்களில் நானுமொருவன். ஆனால் இன்றைய சூழல் மாறிக் கொண்டு வருகிறது. அரபு நாடுகளை விட நம் தாயகமே சிறந்தது என்ற நிலை வளர்ந்து வருகிறது.காரணம் விலை ஏற்றங்கள். விலைகள் ஏறக்கூடிய அளவு பலருக்கு சம்பளம் ஏறுவதில்லை. வந்தக் காலத்தை கணக்கிலெடுத்தால் கையில் மிஞ்சிய தொகை கடனாக இருக்கிறது.

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கிறது நம் நாட்டில் நம்மால் வாழமுடியுமா? என்ற கேள்வி என்னுல் எழுந்தது; அதை தெளிவு படுத்தியது ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் நடந்த உரையாடல்.

இரண்டாண்டுகளுக்கு முன் சென்னை சென்றிருந்தேன். மூன்று தினங்கள் சென்னையில் தங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. T நகர் செல்வதற்கு ஆட்டோவை அமர்த்திக் கொண்டேன்.

ஆட்டோ ஓட்டுனர் சுமார் 45 வயதுமிக்கவராக தோற்றமளித்தார்.
அவரிடம் 'உங்க பொழப்பு எப்படி இருக்கு?' என்று பேச்சுக் கொடுத்தேன்.
"நன்றாக இருக்குது சார்; வீட்டுக்கு போய் மூன்று தினங்கள் ஆச்சு; கோயிலுக்கு போகனும் பெரிய சிலவாக இருக்கு, அதனால வீட்டுக்கு போகாமல் வேலைப் பார்க்கிறேன்" என்றார்.

'உங்க வீடு எங்கிருக்கு' என்றேன்?
'அம்பத்தூர் பக்கத்துல சார்; என்றார் .
"அம்பத்தூர் தூரமில்லையே; பக்கத்துல தானே இருக்கீங்க தினமும் போய் வரலாம் தானே" என்றேன்.
"போகலாம் சார் வீட்டுக்கு போயிட்டா நேரம் எடுத்துடும் அதனால இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு போவேன்" என்றார்.

"எத்தனை பிள்ளைகள்?' கேட்டேன்.
"மூனு பொட்ட புள்ளைங்க; பெருசு காலேஜ் போகுது மற்ற ரெண்டும் இங்கிலீஸ் மீடியத்துல படிக்குதுங்க" என்று அவர் கூறியதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

'நீங்க என்ன படிச்சுருக்கீங்க?'

"பெருசா ஒன்னும் படிக்கல அதனால தான் என் பிள்ளைங்கல நல்லா படிக்க வைக்கிறேன்" என்றார்.

'படிப்பு சிலவே பெரிய தொகை வருமே எப்படி சமாளிக்கிறீங்க?'

"ஆமா சார்! சிலவு அதிகம் தான் அதனால தான் இரண்டு மூனுநாளு கண்விழிச்சி ஆட்டோ ஓட்டுறேன் கிடைக்கிது சார்" என்றார்.

"இப்படி ஓய்வில்லாமல் ஆட்டோ ஓட்டினா உங்க உடம்பு பாதிக்குமே ரெஸ்ட்டும் தேவைதானே" என்றேன்.

"கஸ்டமர் இல்லாத சமயத்துல எங்கனயாவது ஓரமா வண்டிய நிறுத்தி தூங்கிக்குவேன்: என்றார்.

'வீடு வாடகை எவ்வளவு கொடுக்குறீங்க.?'

"சொந்த வீடு சார் என்றார். நான் மெட்ராஸ் வந்து இருபது வருடம் ஆச்சு வந்தப்ப வாடகைவீட்டுலதான் இருந்தேன் 15 வருசத்துக்கு முன்னால இடம் வாங்கி வீடு கட்டிட்டேன்" என்றார்.

'வேற ஏதும் தொழில் பண்றீங்களா?'

"இல்ல சார் நமக்கு தெரிஞ்சது ஆட்டோ மட்டும்தான்" என்றார்.
"ஆட்டோ ஒட்டி இவ்வளவு சம்பாதிக்கிறீங்களா?ஆச்சரியமா இருக்கு சார்… எப்படி இது உங்களால முடியுது . வெளிநாட்டுல 20 வருசத்துக்கு மேல இருந்தும் முக்கி முக்கி ஒரு வீட்டை கட்டுவதற்கு எவ்வளவு கஸ்டப்படுறாங்க கடனாளியா இருக்காங்க நீங்க சொலறத என்னால நம்ப முடியல சார்" என்றேன்.

"என்ன சார் நம்பிக்கை! மெட்ராசுக்கு ஒரு நாளைக்கு எத்தனை பேரு வராங்க, போறாங்க தெரியுமா? இப்ப இருக்குற ஆட்டோ மாதிரி இன்னொரு மடங்கு தேவை இருக்கு; எங்கேயும் ஆட்டோ சும்மா நின்னு நீங்க பார்க்க முடியாது. அப்படி நின்னா அது ரிப்பேருலதான் நிக்கும். மனுஷங்கிட்ட நேர்மையும், வைராக்கியம் இருந்தா எப்படியும் முன்னுக்கு வரலாம் சார்." என்றார்

அவருடைய அந்த வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தது .
உண்மைதான் மனுஷனிடம் நேர்மையும், வைராக்கியமும் இருக்க வேண்டும் அது இல்லாத போது வாழ்க்கையே நேர்மை இழந்து விடும்.

ஆட்டோ ஓட்டக் கூடிய ஒருவரால் தன் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு கொடுக்க முடிகிறது, தன் குடும்பத்தை சொந்த வீட்டில் வாழவைக்க முடிகிறது, தேவைகளை நிறைவேற்ற முடிகிறது, இத்தனையும் நம் நாட்டில் உழைத்து செய்யமுடிகிறது என்றால் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எந்தளவு வளர்ந்து வந்துக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

வளைகுடாவில் உழைத்து வளமிக்கவர்களாக ஆனவர்கள் சிலர். ஆனால் இன்னும் வளமோடு வாழ்ந்துவிடலாம் என்ற கனவில் உழைக்கக் கூடியவர்களில் நானும் ஒருவன்.
பல ஆண்டுகளை கடந்து பிழைப்புக்காக வாழ்க்கையை இழந்து இன்னும் வீடு கட்ட முடியாதவர்கள் எத்தனைபேர்? உழைப்பு என்பது வளைகுடா நாட்டுக்கு மட்டும் சொந்தமானதா? அந்த உழைப்பை நம் நாட்டில் மூலதனமாக்கினால் முன்னேற்றம் காண முடியாதா?
நம் நாட்டில் உழைத்து வளமான வாழ்க்கை வாழ முடியுமா ? என்ற கேள்வி என்னுல் எழும்போதெல்லாம் ஆட்டோ ஓட்டுனரை நினைத்துக் கொள்கிறேன்.

Thursday, December 3, 2009

ஆகாயத்தில் ஒரு அவமானம்


ஒருமுறை தாயகம் செல்லும்போது மும்பை வழியாக சென்றேன்.அப்போதெல்லாம் சென்னைக்கு நேரடி விமானச்சேவை இல்லை.துபாயிலிருந்து விமானத்தில் புறப்பட்டபோது எனது முன் இருக்கையில் தமிழ்நாட்டைச் சார்ந்த அன்பர் ஓருவர் இருந்தார்.

நாங்கள் இருவரும் விசாரித்துக் கொண்டோம்.விமானம் ஆகாயத்தில் பறந்துக் கொண்டிருந்தது.கொஞ்ச நேரம் கழித்து என்னிடம் வந்து என்னுடைய கூலிங் கிளாஸை காணவில்லை நான் சற்றுமுன் பாத்ரூம் போய் வந்தேன் எனது பக்கத்தில் ஒரு உபி காரன் அமர்ந்திருக்கிறான் அவன்தான் எடுத்திருப்பான் என்று கூறினார்.

நீங்க உங்க உடமைகளை சோதனை செய்து பாருங்கள் என்றேன்.தேடிவிட்டேன் கிடைக்கவில்லை அவன் தான் எடுத்திருக்கான் என்று உபி காரர் மேல் பழிசுமத்தினார்.
சரி அவரிடம் கேளுங்கள் என்றேன் கேட்டுவிட்டேன் அவர் எடுக்கவில்லை என்று உறுதியாக கூறுகிறார் என்றார்.

என்னால் எதுவும் சொல்ல இயலவில்லை.அவருடைய பொருள் பாவம் எவ்வளவு ஆசையாக வாங்கி இருப்பார்.இப்படி தொலைத்துவிட்டாரே என வருந்தினேன்.
மும்பை வந்து இறங்கி இமிக்கிரேசன் வந்தேன்.அந்த தமிழ் நண்பர் போலீஸ்காரரிடம் தன்னுடைய கூலிங் கிளாஸ் காணமல் போனதாகவும் பக்கத்தில் உள்ள உபி காரர் எடுத்து விட்டதாகவும் புகார் கொடுத்துக் கொண்டிருந்தார்.

போலீஸ்காரர் உபி காரரின் உடமைகளை முழுவதையும் சோதனை செய்து பார்த்துவிட்டு அவரிடம் இல்லை என்று கூறிவிட்டார்.அந்த உபி காரரின் முகம் அவமானத்தில் வாடிப்போய் விட்டது.

இமிக்கிரேஷனை முடித்து விட்டு லெக்கேஜ் எடுப்பதற்கு ட்ரோலியை தள்ளிக் கொண்டு வெளியில் வர எத்தணித்தேன்.அந்த தமிழ் நபர் ஒடி வந்து என்னிடம் கூலிங் கிளாஸ் கிடைத்து விட்டது என்றார்.

அப்படியா! எங்கு கிடைத்தது? என்று கேட்டேன் என்னுடைய பேக்கின் அடியில் கிடந்தது என்றார்.எனக்கு சரியான கோபம் வந்தது நீ என்ன மனுஷனா.?அந்த உபிகாரரை இப்படி அவமானப்படுத்திட்டியே அவரு எப்படி யெல்லாம் மனசலவுல வேதனைப்பட்டிருப்பார்.அவரிடம் போய் மன்னிப்பு கேளு என்றேன்.

அவரைப்பார்த்து கேட்டு விட்டேன் என்றார்.அவர் கேட்டாரா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை.ஆனால் எந்த குற்றமும் செய்யாத அப்பாவியின் மனச நோகடித்து விட்டாரே என்ற வருத்தம் எனக்குள் இருந்தது.

அந்த இரண்டரை மணி நேரம் பயணம் முழுவதும் தன்னை குற்றவாளியாக்கியதை எண்ணி உபிகாரர் மன உலச்சல் அடைந்திருப்பார் அல்லவா.? தன் குடும்பத்தை காண்பதற்கு விடுப்பில் தானே அவரும் சென்றுக் கொண்டிருப்பார்.எத்தனை கனவுகள் அவரை சூழ்ந்திருக்கும் அவைகளை ஒருவரின் கூலிங் கிளாஸ் விரட்டி விட்டதே.

தன்னுடைய பொருள் காணாவில்லை என்றால் முதலில் அதை தன்னிடம் தான் தரவாக தேடவேண்டும்.பின்னர்தான் நம ;பக்கத்தில் அல்லது எதிரில் இருப்பவர்கள் என்று விசாரிக்க வேண்டும்.அவசரமாக நாம் ஒருவரை குற்றவாளி யாக்கக் கூடாது.

தன்னை விட உடையில் தரம் குறைந்திருப்பதினால் தன் பொருளை அவர்தான் எடுத்திருப்பார் என்று உறுதி கூறுவது முட்டாள்தனமானது.அப்படி கூறுபவர்கள் நேர்மையான மனிதர்கள் அல்ல .தங்களின் நேர்மையின்மையான குணத்தைதான் அங்கு வெளிபடுத்துகிறார்கள்.
எளிமையாக ஒருவரை குற்றவாளியாக்கி விடுகிறோம்.அதன் வலியை குற்றம் சுமத்தக் கூடியவர்கள் உணர்ந்திருக்கிறார்களா.?அல்லது குற்றம் சுமத்த காரணமான பொருள் கிடைத்ததும் அதை குற்றம் சுமத்தப்பட்ட நிரபராதிக்கு ஈடாக கொடுத்துவிடுகிறோமா.?
இதுவே இங்கிலாந்துகாரனாக இருந்திருந்தால் பல லட்சங்கள் நஷ்ட ஈடாக நீதி மன்றம் மூலம் வசூலித்திருப்பான்.

பொருள்களை நேசிக்குமளவு மனிதர்களை நேசிக்க ஏன் மனிதர்களுக்கு தெரியவில்லை.
எப்பவும் பயணத்தின் போது நம்மிடையே ஒரு வித பதட்டம் இருக்கும்.சில நேரங்களில் சிலர் தங்களின் பாஸ்போர்ட் பணத்தையும் கூட தொலைத்து விடுவார்கள்.நிதானம் என்பது பயணத்தில் பலருக்கு இருப்பதில்லை.

புறப்பட்டதிலிருந்து போய் சேரும் வரையில்.
ஓவ்வொருவரின் பயணமும் பல கனவுகளை சுமந்து பயணித்துக் கொண்டிருக்கிறது தயவுசெய்து ஒரு கூலிங்கிளாசினாலோ அல்லது வேறு எதைக் கொண்டும் கலைத்து விடாதீர்கள்.!

ஈத்பெருநாள் கொண்டாட்டங்கள்....

அதிகாலை ஈத் பெருநாளின் இறைவணக்கத்தை நிறைவு செய்து முசுந்தத்தை நோக்கி படையெடுத்தோம்.
ஐந்தரை பெட்டியாய் ஐந்து குடும்பங்கள் அணிவகுத்தோம்.

தமிழ்பண்பாட்டுக் கழகத் தலைவர் (முன்னால் அமைப்பு) குத்தாலம் அசரப்அலி
ஈமான் அமைப்பின் தணிக்கையாளர் முஹம்மது பாருக்
புளு ஸ்டார் ஸ்டேஸ்னரியின் மேளாளர் அப்துல் முனாப்
யுனைடெட் பேங் சார்ஜா கிளையின் மேளாளர் முஹம்மது சபீர்
இவர்களுடன் நான் ........





இதோ வந்துக்கொண்டிருக்கிறது பிரியாணி சட்டி...
தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வருபவர்கள் முஹம்மது பாருக் அண்ணனும், அப்துல் முனாப் அண்ணன்.


உண்பதற்கு தயாராக அமர்ந்திருக்கும் பசிகள்...

கசப் ஹோட்டல்


சாவிய வாங்கிட்டு வந்து ரூமை திறந்ததுமே இடத்தை பிடித்த பெரிய மலையும் சின்ன மலையும்....





போட்டில் குட்டீஸ்களின் ஆட்டம்

இவ்வளவு பவ்யமாக கையை கட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் குத்தாலம் அசரப்அலி அண்ணன் அருகில் யார் இருந்திருப்பார்.....

முசுந்தத்தில் இரவு தங்கிவிட்டு காலையில் போட்டிங் ஹவுஸ் சென்று பேரம்பேசி ஒருநாள் வாடகைக்கு போட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு கடலில் மிதந்தோம். உணவுகள் நேரத்திற்கு சரியாக கொண்டு வந்து கடலிலேயே தருகிறார்கள். எங்கு திரும்பினாலும் மலைகள் நடுவில் கடல் அலைகள்.
உற்சாகத்துடன் நடுக்கலில் வாழ்க்கை ஜாக்கெட்டை அணிந்துக் கொண்டு முனாப் சபிர் குளித்தார்கள்.
குழந்தைகளின் கொண்டாட்டம் பெற்றோர்களின் மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது.
பாருக் அண்ணனின் குடும்ப அன்யோன்யம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
குத்தாலம் அசரப்அலி அண்ணனின் அட்டகாசங்கள் அதிரடி சிரிப்பு மழையை உண்டாக்கியது.
மொத்தத்தில் ஈத்பெருநாளின் கொண்டாட்டங்கள் சிறுவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் கொண்டாட்டமாகவே அமைந்தது.

கூட்டு குடும்பம் என்பது இந்த காலத்தில் பலருக்கு கசப்பாக இருக்கிறது. ஆனால் கூட்டாக சேர்ந்து சுற்றுலா செல்லும் போது கிடைக்கும் மகிழ்ச்சி இனிப்பாக இருக்கிறது.

Tuesday, December 1, 2009

புலவரை புண்படுத்திய புல்லன்கள்...

என் மனதை பாதித்த ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். அதில் சம்பந்த பட்டவர்களின் பெயர்களை இங்கு குறிப்பிட நான் விரும்ப வில்லை.

சென்ற ஆண்டு ஒரு நிகழ்ச்சிக்காக துபாயிலிருந்து 40 பேர்களுடன் நானும் எனது நண்பர் ஷர்புதீனும் இலங்கை சென்றிருந்தோம்.

அந்த நிகழ்ச்சி கொழும்புவிலிருந்து சுமார் 150 கீ மீ தொலைவில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு இலங்கை வாழ் புரவலர்கள்,புலவர்கள்,காவியர்கள்,கவிஞர்கள்,அறிஞர்கள், ஆலிம் பெருமக்கள் என பெரும் கூட்டமே இதில் கலந்துக் கொண்டார்கள்.

இன்னும் இந்தியா,சிங்கப்பூர்,மலேசியா,குவைத்,கத்தார் போன்ற நாடுகளிலிருந்தும் பலர் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இலங்கை புலவரும் பல காவியங்களை படைத்தவருமான வயதில் எங்களுக்கு மூத்தவருமான அந்த பெரிய மனிதர் எனக்கும் நண்பர் ஷர்புதீனுக்கும் நன்கு அறிமுகமாகி நண்பரானவர் மற்றும் துபாய் வாழ் இலக்கியவாதிகளுக்கு நல்ல பரிச்சயமானவர் .

இரண்டுநாட்கள் நடந்த விழாவிற்கு பிறகு நாங்கள் துபாய் திரும்புவதற்கு ஆயத்தமானோம். இரவு 8 மணிக்கு ஒரு வேனில் நானும் எனது நண்பர் ஷர்புதீனும் மற்றும் துபாய் நண்பர்கள் 3 பேர் அதில் ஒருவர் துபாயில் பத்திரிக்கை நடத்தி அதன் ஆசிரியராக இருந்தவர்.அத்தோடு இலங்கை புலவரும் மற்றும் சிங்கை நண்பர்கள் இருவர்.

நாங்கள் புறப்படுமுன்னே இலங்கை புலவர் கூறினார் கொழும்பில் எனது வீடு இருக்கிறது இரவு அங்கு சாப்பிட்டு விட்டு நீங்கள் விமான நிலையம் செல்லவேண்டும் என்று அன்பு கட்டளையிட்டார். நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.

முன்னாடியே அவர் வீட்டுக்கும் தொலைபேசி செய்து சாப்பாடு தயார் செய்ய சொல்லியும் விட்டார்.

நாங்கள் போகும் வழியில் தேனீர் குடிப்பதற்காக வேனை நிறுத்தினார்கள். நாங்கள் தேனீர் அருந்தினோம். துபாய் பத்திரிக்கையின் ஆசிரியரும் அவரின் இரு சகாக்களும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

இலங்கை புலவர் அவர்களிடம் கெஞ்சினார் இன்னும் கொஞ்ச தூரம் தான் என் வீடு. வீட்டில் சாப்பாடெல்லாம் தயாராக இருக்கிறது கொஞ்சமாக சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்றார்.

அவர்கள் இதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. வயிறுமுட்ட சாப்பிட்டார்கள்.

அவரின் வீட்டுக்கு வந்தடைந்தோம் அனைவரையும் வீட்டிற்குள் அழைத்தார் .
நாங்கள் அனைவரும் வந்தோம் அந்த மூன்று நபர்களைத் தவிர. இந்த செயல் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது .

இலங்கை புலவர் அவர்களிடம் நீங்கள் சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை தேனீர் அல்லது தண்ணீர் அருந்தலாம் வாருங்கள் என்று எவ்வளவோ நயந்து தன் வயதையும் பொருட்படுத்தாமல் அவர்களிடம் கெஞ்சினார்.
அவர்கள் நாங்க வேனிலேயே இருக்கிறோம் என்று பிடிவாதமாக அவர் வீட்டுக்குள் வராமல் இருந்து விட்டார்கள்.

இந்த நிகழ்ச்சி அவரின் மனதை பெரிதும் பாதித்தது. வருத்தத்தை கொடுத்தது.
பத்திரிக்கை நடத்தியவர் அதன் ஆசிரியராக இருந்தவர் இப்படி நடந்துக் கொள்கிறாரே மற்றவரை மதிக்க தெரியவில்லையே. என்று அந்த புலவர் மனம் குமற நானும் எனது நண்பர் ஷர்புதீனும் அவரை சமாதானப்படுத்தினோம்.

உணவருந்திவிட்டு புலவரிடம் அவர்கள் சார்பாக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டு விமானம் நிலையம் நோக்கி புறப்பட்டோம்.

இவர்கள் ஏன் இப்படி நடந்துக் கொண்டார்கள் என்ற காரணத்தை என்னால் ஊடுறுவ முடிந்தது.

இலங்கை புலவர் துபாய் வந்த சமயம் அவருடைய காவியம் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியை ஒரு தொலைகாட்சி ஏற்பாடு செய்திருந்தது.
இன் நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை வழங்க பலரை அழைத்திருந்தார்கள் என்னையும் உள்பட . அதில் பத்திரிக்கையின் ஆசிரியரின் சகோதரருக்கும் அழைப்பு .
இந்த பத்திரிக்கை ஆசிரியரின் சகோதரர் தான் பிரபலமானவர் என்ற எண்ணத்தில் இருப்பவர்.

இந்த நிகழ்ச்சியில் தன் சகோதரரை மேடையில் அழைத்து அமரவைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு சில வினாடிகளில் அந்த பத்திரிக்கை ஆசிரியரும் அவருடைய சகோதரரும் அவர்களுடைய சகாக்களும் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.

இந்த சம்பவம் இலங்கை புலவருக்கு தெரியாது.

இதை மனதில் வைத்து கொண்டு இலங்கை புலவரை அவமரியாதை செய்வதாய் எண்ணி தங்களை தாங்களே இழிவு படுத்திக் கொண்டார்கள்.

(இவர்கள் நடத்திய பத்திரிக்கையில் துணை ஆசிரியர்களாக நானும் ஷர்புதீனும் இருந்து விட்டு ஆசிரியரின் குணமறிந்து விலகினோம் என்பது குறிப்பிடதக்கது.)

இந்த ஈனமனிதர்களிடம் பேச்சையும் பழக்கத்தையும் நானும் நண்பர் ஷர்புதீனும் நிறுத்தி விட்டோம்.

மனிதர்களிடம் மனிதனாக நடக்கத்தெரியாத இவர்களை போன்றவர்கள் எத்தனை ஞானம் அறிந்திருந்தாலும் அது சாணத்துக்கு சமம்…!

பதிவர்களே இவர்களை பற்றிய உங்களுடைய கருத்து என்ன…? சொல்லுங்கள்…!

Monday, November 30, 2009

தாயிற் சிறந்ததொரு வேலையுமில்லை…

வறுமையின் கைகளில் சிக்கிவிடாமல் தப்பித்துக் கொள்வதற்கும் வளமான வாழ்க்கையின் கோட்டைக்குள் நுழைந்து விடுவதற்கும் பலர் கனவுகளுடன் கரைக்கடந்து வளைகுடாவில் வளம்வருகிறார்கள்.

தேடி வந்த வேலையை விடாமல் எந்த பணியிலும் தன்னை உட்படுத்திக் கொண்டு ஊதியத்தைப் பற்றி உணர்வில்லாமல் உண்மையான ஊழியனாகவே உழைத்துக் கொண்டு ஊருக்கு போவதும் வருவதுமாய் பலர் வாழ்ந்துக்கொண்டு வருகிறார்கள்.

ஆண்டுகள் பல கடந்திருந்தாலும் தங்களின் வாழ்வியலில் எப்போதும் தேவை இருந்துக் கொண்டே தான் இருக்கிறது.நண்பர்களிடம் கடன் வாங்கிய வழக்கத்திலிருந்து மாறிப்போனவர்கள் இன்று வங்களின் கடன் அட்டைகளில் அட்டைகளாய் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எப்பவும் போல் காலை 9 மணிக்கு வேலைக்கு வரக் கூடிய நாங்கள் சென்ற ஆண்டு நவம்பர் 18-அன்றும் வந்தோம்.
கணக்கராக நகைக்கடையில் பணிப்புரியும் திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த தாவூது பணிகளுக்கிடையே பரப்பரப்பாக இருந்தார்.அவரின் செல் போன் அழைத்ததை எடுத்து அவர் பேசுகையில் அவரின் முகம் மாறிப்போனது. கொஞ்ச நேரத்தில் கண்களிலிருந்து அடை மழையைப் போல் கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. அவரால் பேசமுடிய வில்லை.

அவரின் எதிர்மேஜையில் அமர்ந்திருந்த நான் என்னாச்சு என்று பதட்டத்துடன் கேட்க ஐந்து நிமிடம் அவர் எதுவுமே பேசாமல் இருந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசினார்.

இன்று காலை அவருடைய தாயார் காபி அருந்திக் கொண்டிருக்கும் போது மயக்கமாகி சாய்துவிட்டதாகவும் திருவாரூர் மருத்துவ மனையில் பார்க்க இயலாது என தஞ்சைக்கு அழைத்து போவதாகவும் அவரின் மனைவி கூறியிருக்கிறார்.

இந்த செய்தியை அவர் சொல்வதற்குள் பல நிமிடங்கள் நீண்டிப் போனது .துக்கம் அவரை பேசவிடாமல் கண்களில் மட்டும் கண்ணீரை கொட்டச் செய்துக் கொண்டிருந்தது.

தாயகத்தில் குடும்பத்தினர்களுடன் வாழும்போது பிரச்சனைகள் எரிமலையாய் வெடித்தாலும் அவைகளை பதட்டமில்லாமல் பதப்படுத்தும ;நம் மனம் கடல் கடந்து உறவுகளைப்பிரிந்து வாழக்கூடியவர்களுக்கு வீட்டில் யாருக்கேனும் தலைவலி என்றாலும் கூட என்னமோ ஏதோ என அன்று முழுவதும் ரணமாகித்தான் போகிறது மனம்.

பிரிவு கடந்தவைகளை அசைபோட வைத்து மனிதர்களை ஆழமாக நேசிக்க வைக்கிறது.

சற்று நேரத்திற்குள் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் செய்திபரவவே பலரின் ஆறுதல்களும் அறிவுரைகளும் அவரைச் சூழ்ந்தன.

மேலாளர் விசாரித்தார் தாவூதால் செய்தியை சொல்ல முடியவில்லை.உதவிக்கு நான் பேசினேன்.

15 தினங்கள் அவசர விடுறையில் தாவூது ஊருக்கு ஊருக்கு அனுப்பப் பட்டார். வீட்டுக்கு இவர் ஒரே பிள்ளை தந்தை இறந்து ஐந்து ஆண்டுகள் கடந்திருந்தன.தன் தாயின் சகோதரரின் மகளை திருமணம் முடித்து 4 ஆண்டுகளில் இவருக்கு இரண்டு ஆண்பிள்ளைகள்.

நகைக்கடையில் 9 ஆண்டுகளாக பணிப்புரிந்து இப்போது தான் கொஞ்சம் தன் வாழ்க்கையின் தேவைகளை நிரப்பிக் கொண்டு வந்தார்.ஆனால் சேமிப்பு என்று பார்த்தால் இன்னும் கடனில் தான் கணக்கிருக்கிறது.

மருத்துவர் பரிசோதித்துவிட்டு அவரின் தாய்க்கு மூளையில் சின்னப் பிரச்சனை இருக்கிறது அதனால் வலது பக்கத்தின் செயல் துண்டிக்கப்
பட்டிருக்கிறது.அவர்களின் நினைவும் 50 சதவீதம் குறைந்திருக்கிறது அவர்களால் நடக்கவும் பேசவும் இயலாது என்று பெரிய பட்டியல் போட்டு கூறினார்.

அந்த தாய் கண்விழித்த போது தன் எதிரே நின்றுக் கொண்டிருந்த மகனின் முகத்தைக் கண்டதும் சந்தோசத்தில் ஏதோ பேச முயற்சித்தார் ஆனால் பேச்சு வரவில்லை.ஊமையரைப் போல் கை அசைத்தார்கள்.
தாயின் கையை பிடித்து அம்மா நான் வந்து விட்டேன் நீ கலைப்படாதே உன்னை குணப்படுத்தி விடுவேன் என்று தன் மகன் கூறியதைக் கேட்டதும் அந்த தாய் தன் நோயையும் மறந்து சிரித்தார்.

15 தினங்கள் விடுமுறையில் சென்றவர் 2 மாதங்கள் கடந்தும் அவர் வரவில்லை.தொடர்புக் கொண்டு பேசினேன்.

இப்போதுதான் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு அம்மாவை அழைத்து வந்துள்ளேன். என்தாயை பார்த்துக் கொள்வதற்கு எனக்கு ஆட்கள் இல்லை நான் மருந்து மாத்திரைகள் கொடுத்தால் மட்டுமே அவர்கள் சாப்பிடுகிறார்கள் என் மனைவியோ மற்ற யாரும் கொடுத்தால் சாப்பிட மறுக்கிறார்கள். நான் மருந்து வாங்க கடைக்கு சென்று விட்டால் அவங்களைவிட்டுவிட்டு நான் துபாய் போய் விட்டதாக எண்ணி அழுகிறார்கள்.

சின்ன பிள்ளைக்கு பணிவிடை செய்வது போல அவங்களுக்கு எல்லாமே செய்துவருகிறேன்.படுத்த படுக்கையிலேயே மலஜலம் போகிறார்கள்.அதையும் நான் தான் எடுத்து சுத்தம் செய்து வருகிறேன்.என்கூட பிறந்தவர்கள் யாரும் இல்லாததால் யாரையும் நம்பி என்தாயை ஒப்படைத்து விட்டு வர எனக்கு மனமில்லை.சம்பாத்தியம் எப்போது வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம்.என் தாயைவிட எனக்கு வேறொன்றும் பெரிதாக தெரியவில்லை என்று தாவூது கூறியபோது என் கண்கள் பணித்தன.

எத்தனைபேருக்கு இது போன்றதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.கிடைத்த வாய்ப்பை எத்தனைபேர் தாய்க்காக தன்னை அர்பணித்திருக்கிறோம்.
இவரைப் போன்றவர்கள் இருக்கும் இந்த காலத்தில் முதியோர் இல்லங்களும் இருக்கத்தான் செய்கிறது.

5 மாதங்கழித்து துபாய் வந்தார் தன்வேலையை ராஜினாமா செய்வதற்கு.சரியாக ஐந்து நாட்களில் தன் அலுவலக விசா கேன்சலேசனை முடித்துக் கொண்டு ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

ஆனால் சில மாதங்களில் மீண்டும் வருவார் என
அவரின் வருகைக்காக எங்கள் அலுவலம் இன்றும் காத்திருக்கிறது.

Thursday, November 26, 2009

அமீரகவாழ் அன்பர்களுக்கு RTA-வின் எச்சரிக்கை


அமீரகவாழ் அன்பர்களுக்கு

நவீனமுறையில் வழிப்பறிகளும் திருட்டுகளும் சமீபகாலமாக அமீரகத்தில் நடந்து வருகிறது.
தியாகத் திருநாளை முன்னிட்டும் அமீர 38 வது தேசிய நாளை முன்னிட்டும் விடுமுறைகள் ஒருவாரக் காலத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விடுமுறை நாட்களிலோ மற்ற நாட்களிலோ வெளியில் சுற்றக் கூடிய அன்பர்கள் இரவு நேரங்களில் தங்களின் வாகனத்தில் செல்லக் கூடியவர்கள் கவனமாக இருப்பதற்கு துபாய் ஆர்டியே டிரான்போர்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சொந்த வாகனத்தில் செல்லும் போது முன் கண்ணாடியில் முட்டைகள் ஏதும் விழுந்தால் அதை சுத்தம் செய்யும் பொருட்டு வைப்பரைக் கொண்டு உபயோகப்படுத்தினால் கண்ணாடி வெள்ளை நிறத்தில் நுரையாகி எதிரில் உள்ளதை காணமுடியாதவாறு ஆகிவிடும்.

வாகனத்தை நிறுத்தி அதை சுத்தம் செய்ய எத்தனிப்போம்.அப்போது சிலர் ஆயுதங்களை காண்பித்து நம்மிடமுள்ள பொருட்களை சூறையாடி விடுவார்கள்.
ஆதலால் சென்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் முட்டையோ அல்லது வேறு ஏதும் பொருட்களோ வாகன முன் கண்ணாடியில் விழுந்தால் வாகனத்தை நிறுத்தாமல் வைப்பரை உபயோகிக்காமல் செல்வது நம் பாது காப்புக்கு உகந்தது என்று ஆர்டியே நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Hi All,

It’s a very IMP info...Please follow & tell others as well.

If you are driving at night & were attacked with eggs on your car's windshield, please do not operate your wiper or spray water/liquid of any kind. Eggs when mixed with water turns milky & it will block your vision up to 92.5 %.

You are then forced to stop at the road side & can be the victim of robbery. This is the latest technique used by robbers.

Take care & Drive safe.





السلام عليكم

هذه المعلومه هامة للغاية.. الرجاء قراءة التعميم جيدا و مشاركته مع الآخرين..

إذا كنت تقود سيارتك ليلا وحدث أن ’رمي عليك بيضاّ على السيارة، فالرجاء عدم تشغيل مساحات الماء أو رش الماء على المنطقة لأن الماء سيختلط بالبيض مكونا طبقة بيضاء والتي بدورها ستعدم الرؤية بواقع 92.5% وبالتالي ستكون ملزما بالوقوف على جانب الطريق وستكون عرضة للسرقة.

هذه آخر صيحات السرقات..

اعتنوا بأنفسكم...



This transmission is intended solely for the person or organisation to whom it is addressed. It may contain privileged and confidential information. If you are not the intended recipient, you should not copy, distribute or take any action in reliance on it. If you have received this transmission in error, please notify us immediately by e-mail at info@rta.ae

Tuesday, November 24, 2009

நன்றி உள்ள ஜீவன்


எனது சின்னஞ்சிறு காலம் அது. 1979 க்கு முன்…
நாய்குட்டிகளின் மேல் அளவுகடந்த பாசம்.நாய் குட்டிகளை எங்கும் கண்டு விட்டால் அதை தொட்டுப்பார்த்து தடவிப் பார்க்காமல் வரவே மாட்டேன்.தடவும் போது அதனுடைய உடல் மிக மென்மையாக இருக்கும்.அதை அப்படியே எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு இருக்கும்போது தாயின் மடியில் படுத்ததைப் போன்ற உணர்வில் அந்த குட்டி விரல்களை நாவினால் நக்கிவிடும். நம்முடைய உடலின் வெப்பம் அதற்கு குளிர் காய்வது போன்று இதமாக இருக்கும்.

ஒருமுறை எனது மாமாவின் வீட்டுக்கு சென்றிருந்தேன் அங்கே இரு நாய் குட்டிகள் இருப்பதைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.அதை தூக்கி வைத்துக் கொண்டேன். வெளியிலிருந்து வந்த மாமா இந்த நாய்குட்டியின் தாய் இறந்து விட்டது நேற்றுதான் ராமு கொண்டு வந்து கொடுத்தான் என்றார்.

அவர் இரண்டு நாய் குட்டிகளை காண்பித்து உனக்கு எது பிடித்திருக்கிறது என்றார்.செங் கல்லின் நிறத்தில் இருந்த குட்டியை காண்பித்தேன்.இதை நீ வீட்டுக்கு எடுத்துப்போ இது ஜாதி நாய் என்றார்.

எனக் கு வியப்பாக இருந்தது நாய்களுக்கும் ஜாதி இருக்கிறதா என்று .?என் மனசுக்குள் கேட்டுக் கொண்டு… இது என்ன ஜாதி என்று மாமாவிடம் கேட்டேன்.
அவர் சிரித்துக் கொண்டே நீ நினைக்கின்ற ஜாதி இல்ல தெருநாய் மாதிரி இல்லாம இது வளர்ந்ததும் ஆடு மாதிரி பெரிசாக இருக்கும் நல்லா சாப்பாடு கொடு உங்க ஊட்டுக்கு காவலா இருக்கும் என்றார்.

புதிதாக கட்டப்பட்ட எங்கள் வீடு தெருவிலிருந்து தள்ளி வாகனங்கள் செல்லக்கூடிய சாலையோரத்தில் தனியாக இருந்தது. மாலை ஆறு மணிக்கெல்லாம் கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டு எட்டுமணிக்குள் உறங்கி விடுவோம்.தெருவுடன் இருந்தால் அக்கம் பக்கத்தில் ஆட்கள் இருப்பார்கள் உறங்குவதற்கும் நேரம் எடுத்துக் கொள்ளும் .அக்கம் பக்கம் யாருமில்லாத தனியான வீடு என்றால் அந்த தனிமையில் பயமும் சேர்ந்துக் கொள்ளும்.அந்த பயத்தில் வாழ்வதே பெரிய பயம்.

மாமா தந்த நாய்குட்டியை பையில் போட்டு சைக்களின் ஹேண்ட்பாரில் மாட்டிக் கொண்டு சைக்கிளை ஓட்டிக் கொண்டு எங்கே நாய்குட்டிக்கு அடிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மெதுவாக வந்தேன். வரும் வழியெல்லாம் தலையை தூக்கிக் கொண்டு முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டு மெல்லிய குரலால் முனங்கிக் கொண்டே வந்தது.அந்த குட்டியின் சகோதரனை பிரித்துவிட்டேன் என்ற ஏக்கத்துடன் முனங்கியது.

வீட்டுக்கு வந்ததும் எனது தாயார் நாய் குட்டியைப் பார்த்துவிட்டு இதை எங்கிருந்து பிடித்துவந்தே பிடித்து வந்த இடத்திலேயே விட்டுட்டுவாடா என்று கத்தினார்.

எனக்குத் தெரியும் என்தாயார் நாய் வளர்பதற்கு சம்மதிக்க மாட்டார்கள் .ஒரு முறை எங்கள் வீட்டில் வளர்ந்த பூனை திருட்டு தனமாக பாலை குடித்து விட்டது என்பதற்காக அதை சாக்கில் காட்டி இரண்டு மைல் தூரத்தில் விட்டுவரச் சொன்னார்கள். அதை விடும் போது அந்த பூனை என் கால்களை சுற்றி சுற்றி வந்தது நான் ஒட்டமாய் பூனையை விட்டு ஓடியதும் அதுவும் என் பின்னாலேயே ஒடி வந்ததும் அதை விரட்ட விரட்ட போகமறுத்ததும் சைக்கிளில் வேகமாக நான் நான் தப்பி வந்ததும் நன்றாக நினைவிருக்கிறது.

என் தாயாரிடம் மாமாதான் தந்தார் நம்ம வீட்டுக்கு காவலாக இருக்கும் இது ஜாதி நாய்குட்டின்னு சொன்னார் என்றேன்.நம்ம வீட்டுக்கு காவல் என்றதும் என் தாய் மனம் இறங்கி சரி சரி கொல்லைப் பக்கத்துல விடு என்றார்.

தினமும் காலையில் பள்ளிக்கு செல்லுமுன் காபி குடிப்போம்.அந்த சமயங்களில் எனது சகோதரர்களிடமும் சகோதரியிடமும் ஒரு டம்ளரில் ஆளுக்கு கொஞ்சம் காப்பி ஊத்துங்க என்று கேட்டு வாங்கிஅம்மாவிற்கு தெரியாமல் நாய்குட்டிக்கு காபி கொடுப்பது வழக்கம்.அதே போல் உணவும். கறி சோறாக இருந்தால் எலும்பைப் போடாமல் என்பங்கு கறியை போடுவேன்.என் தாயாருக்கு தெரிந்ததும் திட்டுவார்கள்.

கொல்லை புறத்தில் ஒரு சின்ன வீடு கட்டி அதில் பழைய துணிகளைப் போட்டு உறங்க வைப்பேன்.அந்த நாய்குட்டிக்கு கழுத்தில் மணிகட்டி அழகு பார்த்தேன்.
அதற்கு பெயர் வைக்க யோசனை செய்த போது மாமா வீட்டில் வேலைப்பார்க்கும் ராமுதானே இந்த குட்டிகளை கொண்டுவந்தார் அதனால் அவர் பெயரையே ராமு என்று வைத்து அழைத்து வந்தோம்.

நாளடைவில் அது எங்கள் குடும்பத்தினருடன் இணைந்துக் கொண்டது எல்லோரிடமும் அன்பாக இருக்கும். வாசலுக்கும் கொல்லைக்குமாக அழைந்துக் கொண்டிருக்கும்.அக்கம் பக்கத்தில் சென்று அதற்கு சில நண்பர்களை தேடிக் கொண்டது.எங்கு சென்றாலும் ராமு என்று அழைத்தால் அது யாருடன் இருந்தாலும் எனது குரலை கேட்டதும் ஒடி வந்துவிடும்.

இரண்டுவருடங்களில் நான் துபாய் பயணம் கிளம்பவேண்டிய சூழ்நிலை உருவானது. எனது உறவுகளை பிரிந்தேன் அந்த உறவில் நான் வளர்த்த நாய்குட்டியும். நான் பிரியும்போது அது குட்டியல்ல வயசுக்கு வந்த இளம் நங்கை ஆம் அது பெண் குட்டி.

வெளிநாடு வந்து ஒரு ஆண்டுக்குள் அது இரண்டு குட்டிகளை ஈன்றது என்று என்தாயார் கடிதத்தில் எழுதி இருந்தார்கள்.எனக்கு மிகுந்த சந்தோசமாக இருந்தது.ஆனால் அந்த சந்தோசம் நீடிக்கவில்லை . அடுத்த கடிதத்தில் நான் வளர்த்த நாய் இறந்து விட்டது என்றும் இரவில் வீட்டு வாசலில் காவலுக்கு இருந்த சமயத்தில் ரோட்டில் சென்ற காரில் அடிப்பட்டு காலையில் நாங்கள் பார்க்கும் போது அது இறந்து கிடந்தது என்று வருத்தமாக அம்மா எழுதிஇருந்தார்கள்.அது ஈன்ற குட்டியை பத்திரமாக பார்த்துவருகிறோம் என்றும் எழுதி இருந்தார்கள்.

அந்த செய்திக்கேட்டு பெரிதும் மனம் கஸ்டப்பட்டேன் எனது நண்பர்களிடம் ராமு குட்டியின் வாழ்க்கை வரலாறை கூறி ஆறுதல் அடைந்தேன்.

எனது விடுமுறையில் தாயகம் சென்றேன். அப்போது தொலைபேசி வசதி எங்கள் வீட்டில் இல்லை. தந்தி கொடுத்திருந்தேன்.நான் கொடுத்த தந்தி கிடைக்காததால் என்னை அழைப்பதற்கு யாரும் சென்னை விமான நிலையத்திற்கு வரவில்லை.
நானே தனியாக பஸ்சை பிடித்து மயிலாடுதுறை வந்து இறங்கியபோது அதிகாலை மூன்று மணி.அங்கிருந்து எனது கிராமத்திற்கு வாடகைக்காரில் வந்து இறங்கினேன்.

வீட்டின் காம்பவுண்ட் கேட் சாத்தப்பட்டிருந்தது.வீட்டு வாசலில் விளக்கும் எரியவில்லை.இருளாக இருந்தது கேட்டைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்றதும் குபீரென இரண்டு நாய்கள் என்மேல் பாய்ந்தது. கையில் வைத்திருந்த சூட்கேஸ்சை தவறவிட்டேன்.


தாவிய நாய்கள் என்னை முகர ஆரம்பித்து இரண்டு கால்களை என் இடுப்பில் வைத்து நாவினால் நக்க ஆரம்பித்தது . நான் அதன் பிடரியை தடவியபடி ராமுவின் பிள்ளைகளே நலமா என்று குலம் விசாரித்துக் கொண்டு என் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன் என் கால்களை சுற்றி சுற்றி முகர்ந்தது. சிறிது நேரத்தில் எனது தாயார் விளக்கைப்போட்டு கதவை திறந்தார்கள். என்னைக் கண்டதும் ஆனந்தமடைந்தார்கள்.

அவர்கள் என்னிடம் கேட்ட முதல் கேள்வி எப்படி கேட்டைத்தாண்டி உள்ளே வந்தாய். நம் வீட்டுப்பக்கம் வெளியாட்கள் யாருமே வரமுடியாது . சாலையில் செல்பவர்கள் கூட நம் வீட்டுப் பக்கம் வந்தால் நாய்க்கு பயந்தே செல்வார்கள் என்றார்கள்.

நான் வளர்த்த நாய் இறந்து விட்டது. அது ஈன்ற குட்டியை நான் பார்த்ததும் இல்லை அதனுடன் பழகியதுமில்லை. ஆனால் என்னை எப்படி நான் வளர்க்காத நாய்கள் அடையாளம் கண்டது.?

நாய் நன்றி உடையது என்போம்.நாம் வளர்க்கக்கூடிய நாய் மட்டும் நன்றி உடையதல்ல அதனுடைய வம்சமே நம்மிடம் நன்றி உடையதாக இருக்கும்.

தாய் நாய் யாருக்கெல்லாம் நன்றி பாராட்டியதோ அதன் குட்டிகளும் அதன் வசம்சங்களும் அவர்களுக்கு நன்றி பாராட்டும். அதனால் தான் நன்றி உள்ள ஜீவன் நாய் என்கிறோம்.
ஆனால் நாயின் குணம் மனிதனிடம் மிகைத்திருக்கிறது குரைப்பதற்கு மட்டும்.!

Sunday, November 22, 2009

தங்கத்தில் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்...7 (நிறைவு)



தங்கத்தின் விலை ஏறி இறங்குவது போல வைரத்தின் விலையிலும் ஏற்றம் இறக்கம் இருக்கிறது.

இந்த விலையை இணையத்தில் தினமும் நாம் காணலாம். அதன் முகவரி
(www.rapaport.com)
அதில் VVS-1,VVS-2,VS-1,VS-2,SI-1,SI-2

இதன் விலைகளை கேரட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கிறார்கள்.

வைரத்தை சோதிப்பதற்கு இன்று பல கருவிகள் உள்ளன.சாதரன கல்லையும் வைரத்தையும் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
சிலர் ராசிப்பார்த்து தான் கல்லை வாங்குவார்கள்.வைரம் சிலருக்கு ராசி இல்லை என்று நம்புவார்கள்.இது அவரவர்களின் நம்பிக்கையை பொருத்த விசயம்.
பிறந்த மாதங்களை வைத்து கற்களை தேர்வு செய்கிறார்கள்.
அசலான கல்கலுக்கு சில தன்மைகள் இருப்பதாக சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வைரக்கல்லை பரிசோதிக்கும் கருவி

ஆபிரிக்கா கனடா இந்தியா பிரேசில் ரஷ்யா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வைரங்கள் கிடைக்கிறது.
ஆண்டுதோறும் ஏறத்தாழ 130 மில்லியன் காரட் (26இ000 கிலோ கிராம்) வைரம் எடுக்கப்படுகிறது.

உலகத்திலேயே வைரக்கல் பட்டைத்தீட்டக் கூடிய பெரிய மையம் பெல்ஜியத்தில் இருக்கிறது.
நம் நாட்டில் மும்பை சூரத், ஹகமதாபாத், பஹவாங்கர் குஜராத்திலும் சிறு சிறு மையமாகவும் இருக்கிறது. இந்த தொழிலில் சுமார் பத்துலட்சம் பேர்கள் ஈடுபட்டுள்ளார்கள். நம் நாட்டில் வைரத்தை வெட்டி அதிகமாக பட்டைத்தீட்டல் செய்து அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
இன்று வளைகுடா நாடுகளில் இந்தியாவில் பட்டைத் தீட்டப்பட்ட வைரங்களே அதிகமாக புலக்கத்தில் உள்ளது.
ஆனால் பெல்ஜியத்தில் பட்டைத்தீட்டப்பட்ட கல்லுகளுக்கு சந்தையில் தனித்துவம் கிடைக்கிறது. அதன் விலையிலும் மாறுதல் இருக்கிறது.

பெல்ஜிய மையத்தைப்பற்றி தமிழ் பண்பலையில் வெளியான செய்தியில்,

பெல்ஜியத்தின் அண்டவிப் ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய துறைமுக நகரமாகும். உலக வைரக்கல் மையம் என்று அழைக்கப்படுவதால் அது மேலும் மக்களைக் கவர்கிறது.

உலகில் பத்து வைரக்கல்களில் 7 இந்த நகரில் பட்டை தீட்டப்படுகின்றன. என்று கூறப்படுகின்றது.
அண்டவிப் நகரின் மிக பெரிய வைரக்கல் கடையின் 1000 சதுர மீட்டர் பரப்புடைய காட்சி அறையில் வைரக்கல் பட்டை தீட்டப்படுவதை இலவசமாக பார்வையிடலாம்.
இந்த நகரில் தயாரிக்கப்பட்ட வைரக்கல் வரி விலக்கு என்ற சலுகையுடன் ஏற்றுமதி செய்யப்படலாம்.
அண்டவிப் நகரின் வைரக்கல் பட்டை தீட்டும் வெட்டு கலை உலகில் முதல் தரமுடையது. அங்குள்ள மக்கள் இதனால் பெருமைப்படுகிறார்கள். இந்தத் தீட்டும் வெட்டு முறை ஏற்கனவே 600 ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றது. பட்டை தீட்டப்பட்ட வைரக்கல் மேலே 33 பக்கங்களும் கீழே 24 பக்கங்களும் கொண்டுள்ளது. இந்த வடிவ வைரக்கல் மிகவும் ஒளிமயமானது.
இந்த வடிவம் உலகில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பத்து கிராமுடைய ஒரு வைரக்கல் அண்டவிப் கலைஞர்களால் பட்டை தீட்டப்பட்ட பின் அதன் எடை 5 கிராம் மட்டும் இருக்கும். மற்ற 5 கிராம் எல்லாம் சிதறிவிடும்.
அண்டவிப் நகரில் உள்ள வைரக்கல் தெரு S வடிவில் உள்ளது. மொத்தம் 4 வைரக்கல் விற்பனை மையங்களில் 3 இந்த தெருவில் உள்ளன. 300 நிறுவனங்களின் வைரக்கல் விற்பனை மையத்தில் ஒரு மின்னணு சாவடியில் நுழைவு அட்டை காட்டிய பிறகு தான் நுழைய முடியும் என்று கூறுகிறது.

நாம் எதைவாங்கினாலும் அதைப்பற்றிய விபரங்களை கொஞ்சமாவது விளங்கிக் கொண்டு வாங்கினால் நாம் ஏமாற்றத்திலிருந்து காக்கப்படுகின்றோம்.

தெரிந்தவர்களிடம் கேட்கலாம் அல்லது இணையத்தில் தேடலாம்.

இன்றைய சூழலில் தங்கமும் வைரமும் விலையில் பெரும் ஏற்றத்தைக் கண்டுள்ளதால் அவைகளில் நாம் கொடுக்கக் கூடிய பணத்திற்கான மதிப்பு இருக்கிறதா என்பதை உறுதி படுத்திக் கொண்டு வாங்குவது சிறந்தது .
ஏமாற்றக் கூடியவர்கள் அதிகம் இருப்பதால் ஏமாறுபவர்களும் அதிகமாகவே இருக்கிறார்கள்.
ஆதலால் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் நம் பணத்தையும் தரத்தையும் இழந்திடாமல் காப்பாற்றலாம்.

இந்த தொடர் கட்டுரைக்கு பலர் வாழ்த்துக்கள் கூறினார்கள் சிலர் சந்தேகங்களையும் கேட்டார்கள்.

கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி…நிறைவு…!