உங்கள் வருகைக்கு நன்றி...

Saturday, December 3, 2011

பங்கு சந்தை அமீரகத்தில் ஒரு விழிப்புணர்வு

இந்திய பங்கு சந்தையைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆவல் என்னிடம் இருந்துக் கொண்டே இருந்தது. அமீரகத்தில் பல அமைப்புகள் இருந்தாலும் அவைகள் தங்கள் ஆண்டு விழாக்களுக்கு சினிமா சம்பந்தப்பட்டவர்களையும் இலக்கிய சம்பந்தபட்டவர்களையும் மட்டுமே அழைத்து வந்து அமீரக தமிழ் மக்களுக்கு கேளிக்கைகளாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Tuesday, November 15, 2011

அமீரகத்திலிருந்து அடுத்த நாடு மஸ்கட் வரை

பசுமை நிறைந்த மஸ்கட் பயணம்
சுற்றுவது அலாதியான இன்பம் எனக்கு ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமில்லை அலுவலகத்திலேயே முடங்கிக்கிடக்கும் என்னைப்போன்ற பலருக்கு சுற்றுவதில் ஆர்வமிருக்கிறது.அந்த ஆர்வமே இந்த பாலைவழி சாலையில் ஒரு பயணத்தை தொடர்கிறேன்.

Thursday, October 6, 2011

கல்லூரி மாணவிகளோடு கிஸ்கிந்தா


நீண்ட நாட்களுக்கு பிறகு...

தொடர வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடர் எழுதி, அதை தொடர முடியாமல் படர்ந்து விட்டேன். இந்த சோர்வு எல்லோருக்கும் வரலாம், ஆனால் இந்த நாட்களை வீணாக்கி விடவில்லை வீணையாக்கி விடுவேன்.

எழுதுவது ஒரு கலை நம்மருகில் பதில் பேசாத நண்பனை அமரவைத்து, நம் கதைகளை சொல்லிக் கொண்டிருப்பது போல, எண்ணத்திற்கும், எழுத்திற்கும் மத்தியில் எது வேண்டுமானாலும் சிந்திக்கலாம், எழுதலாம், எழுதியதை சிதறாமல் திருத்தலாம் திருந்தலாம் எழுத்து மனித வாழ்க்கையின் வடிகால்.


Thursday, August 11, 2011

தாறுமாறாக தாவுகிறது தங்கம்



தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளாகவே ஏறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பலருடைய மனதில் இது இறங்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்துக் கொண்டுதானிருக்கிறது. தங்கத்தைப் பற்றிய சில கட்டுரைகளை அவ்வபோது பதிவிட்டுள்ளேன்.

கடந்த வருடம் அக்டோபரில் தங்கம் விலை ஏறுமா இறங்குமா? என்ற தலைப்பில் தங்கத்தின் ஏற்றத்தைப் பற்றியும், தேவை உள்ளவர்கள், சேமிப்பவர்கள், யோசிக்காமல் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று நிபுணர்களின் ஆலோசனையும் குறிப்பிட்டிருந்தேன். அதன்படி யாராவது வாங்கி வைத்திருந்தால் இன்று அவர்களுக்கு 30% லாபத்தை தங்கம் தந்திருக்கும்.

Tuesday, July 26, 2011

முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 3

* அமீரகத்திலிருந்து எனது நண்பர்களில் சிலர் தாயகத்திற்கு வருகைப்புரிந்துள்ளார்கள். அப்படி வந்தவர்களில் இலக்கிய நண்பர் ராஜகிரியைச் சேர்ந்த அண்ணன் அப்துல்கதீம் அவர்கள்.

அமீரகக் கவிஞர் பேரவையை பல ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தியவர் மற்றும் துபாய் ஈமான் அமைப்பின் உதவி தலைவரும் இல்மு அமைப்பின் தலைவருமாவார்கள்.

Saturday, July 23, 2011

முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 2



அன்னியநாட்டில் சம்பாதித்து வந்து சிலவு செய்பவர்களைவிட தாயகத்திலேயே சம்பாதிக்கின்றவர்கள் தாராளமாக சிலவு செய்கிறார்கள் எல்லோரிடமும் காசு சரளமாக புரலுகிறது ஒரு லட்சத்திற்கு விலை பேசிய இடமெல்லாம் இன்று இருபது முப்பது லட்சம்,கோடி என்கிறார்கள்.

Thursday, July 21, 2011

முப்பது தினங்களில் முப்பது நிகழ்வுகள் - 1



(இந்த பதிவை மிக நீலமான பதிவாக பதிவிட எண்ணினேன் படிப்பதற்கு சிரமமாக இருக்கலாம் என எண்ணி தொடராக எழுதுகிறேன்.)

இது ஒரு விடுமுறை அனுபவம்

Tuesday, June 14, 2011

அமீரகத்திற்கு கோடைக்காலம்! மயிலாடுதுறையில் பதிவர்களை சந்திக்க ஆவல்!


அமீரகத்தில் கோடைக்காலம் துவங்கியாச்சு வேர்வைக்காக நடக்க வேண்டிய அவசியமில்லை சும்மா இரண்டு நிமிடம் நின்றாலே நம் உடைகள் வேர்வையால் நனைந்து விடும். இந்த ஆண்டு கோடையின் துவக்கம் கொடூரகமாக இருக்கிறது.ஜஶலை முதல் வாரத்திலிருந்து பள்ளிகளுக்கு இரண்டு மாதங்கள் விடுமுறை துவங்க இருக்கிறது.

குழந்தைகள் கோடைக்கால விடுமுறையில் அமீரகத்தில் இருப்பதை விரும்புவதில்லை. தங்களின் நாட்டிற்கு செல்ல மிகவும் விரும்புகிறார்கள். நாங்கள் குடும்பத்துடன் ஆண்டுதோறும் இந்தியாவிற்கு சென்று விட்டு ஒரு மாதத்தில் நான் அமீரகத்திற்கு மீண்டு விடுவேன். ஆனால் எனது குடும்பத்தார்கள் இரண்டு மாதம் முழுசாக அங்கு இருந்து விட்டு தான் வருவார்கள்.

ஒரு மாறுதலுக்காக எனது துணைவியார் இந்த ஆண்டு தாயகம் செல்ல வேண்டாம் என்று கூறினார். ஆனால் நான்காவது படிக்கும் எனது இளைய மகளோ கட்டாயமாக ஊருக்கு போய்தான் ஆகவேண்டும் என்று கூறினாள். ஏன் போகனும் என்று கேட்டதற்கு உறவுகளை பார்க்க வேண்டும் அதாவது பாட்டிம்மா அத்தாவுடைய அம்மா அம்மாவுடைய அம்மா இவர்கள் தங்கள் பேரன் பேத்திகளுக்கு கொடுக்ககூடிய அன்பை இந்த குழந்தைகள் மிஸ் பண்ண விரும்புவதில்லை. அதுமட்டுமில்லை உறவுக்காரர்களின் குழந்தைகளுடன் விளையாடுவது ஊர்சுற்றுவது இப்படி நிறைய விசயங்களுக்காக இந்த குழந்தைகள் தாயகத்தை பெரிதும் விரும்புகிறார்கள்.

இவர்களுக்கா வேண்டி ஆண்டுதோறும் தாயகம் சென்று வருவது வழமையாக இருக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு நம்தாய் நாட்டின் இயல்பையும் இயற்கையையும் காட்டவேண்டியது பெற்றோர்களின் கடமையாகவும் இருக்கிறது. அயல்நாட்டில் கிடைக்கக்கூடிய வசதி வாய்ப்பு நம் நாட்டில் இல்லை என்றாலும் நம் தாய்நாட்டின் சுவாசத்தை வளரும் குழந்தைகளுக்கு நாம் ஊட்டியே ஆகவேண்டும். வளைகுடா போன்ற நாடுகளில் எத்தனை ஆண்டுகள் பணிப்புரிந்தாலும் அந்த நாட்டின் குடியுரிமைப் பெற்றவராக நாம் ஆகமுடியாது. எந்த நேரத்திலும் நாம் நம் தாய் நாட்டிற்கு அனுப்பப்படுவோம் என்பது நிதர்சனம். அதை உணர்ந்து நாம் குழந்தைகளை தயார்படுத்த வேண்டும்.

சென்ற ஆண்டு அமீரக கோடைவிடுமுறையில் வடஇந்திய சுற்றுப் பயணம் மேற்கொண்டோம். வரலாற்று சிறப்புமிக்க இடங்களை எல்லாம் பார்வையிட்ட எனது பிள்ளைகள் தங்களின் பாடத்தில் படித்ததை நேரடியாக காண்கின்ற போது அளவிலா ஆனந்தம் கொண்டார்கள்.

சுற்றுலா பெற்றோர்களுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது. குழந்தைகளுடன் நாம் வாழ்ந்தாலும் குழந்தைகளுடன் நாம் முழு நேரத்தை கழிப்பதில்லை ஆனால் சுற்றுலா நமது முழு நேரத்தை குழந்தைகளுடன் கழிப்பதற்கு வாய்ப்பைத் தருகிறது. நம் வசதிக்கேற்ப ஆண்டுதோறும் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவதினால் பணம் சிலவானாலும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது.

இந்த ஆண்டு கேரளா பக்கம் சுற்றுலா சென்றுவர உள்ளேன் வழக்கம் போல சுற்றுலா பதிவு எழுதுவேன்.

நிறைய திட்டங்களுடன் இந்த விடுமுறை நாட்களை கழிப்பதற்கு ஆயத்தமாகி உள்ளேன் எனது திட்டங்கள் இறைவனின் அருளால் நலமாய் நடந்தேர தாங்களும் பிரார்த்தனை செய்யுங்கள்.

எப்பொழுதும் விடுமுறையில் ஊருக்கு செல்லும்போது உறவினர்களுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்கு அமீரகத்திலிருந்து சாமான்களை வாங்கி கட்டிக்கொண்டு அதற்கு தனியாக லக்கேஜ் சார்ஜ் கொடுத்தும் சில நேரங்களில் சென்னை விமான நிலையத்தில் கஸ்டம்ஸில் தீர்வை கட்டியும் பெரிய போராட்டம்போல வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் ( இப்போதும் சிலர் இப்படிதான் வருகிறார்கள்) ஆனால் சமீபகாலமாக எல்லா சாமான்களும் சென்னையிலேயே அமீரக விலைக்கும் அதைவிட குறைவாகவும் கிடைக்கிறது.
பெண்களுகான ஆடைகள், சிறுவர், சிறுமிகள், ஆண்களுக்கான சட்டை, டவுசர் இப்படி அனைத்துமே அங்கு கிடைப்பதால் நாம் அமீரகத்தில் அலைந்து திரிந்து பொருளை வாங்கிக் கொண்டு ஏர்போர்ட்டில் லக்கேஜ் கட்டி பணத்தை விரயம் செய்வதை விட, சென்னையில் தி நகருக்கு சென்று சில மணி நேரங்களில் வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு அழகாக வீடுபோய் சேர்ந்துவிடலாம்.
இதனால் நமக்கு நேரம், மனஉலச்சல், பணவிரயம் எல்லாம் மிச்சப்படும்.

என்னத்தான் இருந்தாலும் எங்க கிராமத்து பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது. கட்ட விலக்கமாறாக இருந்தாலும் கப்பல் விலக்கமாறாக இருக்கனும்னு சொல்லுவாங்க. நாம மாறினாலும் இந்த பழமொழி மாறாது.

இந்த பதிவிற்கு பின் ஊர் சென்று பதிவு எழுதலாம் என எண்ணமிருக்கிறது அங்குள்ள சூழ்நிலைக்கேற்ப. மயிலாடுதுறை பதிவர்களை சந்திக்க ஆவல் தொடர்புக் கொள்ளுங்கள். 9486718827 இம் மாதம் 20 தேதிக்குபின் மொபைல் ரிங் ஆகும்.நன்றி

Friday, June 10, 2011

ஊழலை ஒழிக்க 25 கோடி பேர்களில் நீங்களும் ஒருவர்


ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா நிறைவேற்றுவதற்கு சுமார் 25 கோடிபேர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் அப்போதுதான் அதை நிறைவேற்ற முடியும் என்று மத்திய அரசு தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறது ஆகையினால் நாமும் இந்த போராட்டத்தில் இருக்கின்ற இடத்திலிருந்தே நமது உணர்வை பதிவு செய்யலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது ஒரு மொபைல் எண்ணுக்கு ரிங் செய்ய வேண்டியதுதான் , ஒரு ரிங்கில் கட் ஆகி விடும். இதுவே உங்கள் கருத்தாக எடுத்துக்கொள்ளும். உங்கள் உணர்வு பதிவு செய்யப்பட்டதற்கான நன்றி அறிவிப்பு எஸ்.எம்.எஸ்.சாக வரும். இந்த ஊழல் எதிர்ப்பு போரில் நீங்களும் ஒருவராக இணைத்துக்கொள்ளலாமே.,

அழைப்பு விடுக்கப்பட வேண்டிய எண்கள் : + 91 22 6155 0789 மற்றும் 0 22 6155 0789.

Thursday, June 9, 2011

எங்க ஊரு நல்ல ஊரு (இது தொடர் பதிவு)


எங்க ஊரு நல்ல ஊரு” என்ற தலைப்பில் இருபத்தைந்து பதிவர்களை தேர்வு செய்து தொடர் பதிவெழுத அழைப்பு விடுத்து அதில் என்னையும் அன்பு சகோதரி ஸாதிகா அவர்களுக்கு முதலில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

தொடர் பதிவு எப்படி எதை எழுதவேண்டும் என்பதை இதோ ஸாதிகா கூறுகிறார்கள்

“பதிவர்கள் அவரவர்கள் சொந்த ஊர்,புகுந்த ஊர்,வாழ்ந்த ஊர்,புலம் பெயர்ந்த ஊர் மற்றும் நாடுகளில் உள்ள நிறைவான,குறைவான,போற்றத்தக்க,வெறுக்கத்தக்க,சுவாரஸ்யமான,சிறப்பான குணாதிசயங்களை எழுதிப்பகிர்ந்தால் அவ்வூர்களைப்பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை அனைவரும் அறிந்து கொள்ளலாமே.”

இது நல்ல முயற்சி பல பதிவர்களிடமிருந்து பல ஊர்களைப் பற்றிய விபரங்கள் கிடைக்கும்.

,இதில் எனது ஊரைப்பற்றிய செய்திகளை நீங்களும் தெரிந்துக் கொள்ளுங்கள்.

* கிளியனூர் எங்கு இருக்கிறது? எந்த கிளியனூர்? என்ற கேள்விகள் பலருக்கு தோன்றலாம். ஆம் இதே பெயரில் மூன்று கிளியனூர் இருக்கிறது. ஒன்று விழுப்புரம் பக்கமும், இன்னொன்று நன்னிலம் பக்கமும் இருக்கிறது. நான் பிறந்த கிளியனூர் தஞ்சை மாவட்டத்தின் கிழக்குப் பகுதி தற்போது நாகை மாவட்டத்திற்குள் ஐக்கியமாகி, மயிலாடுதுறையிலிருந்து (12 கீ.மீ) திருவாரூர் செல்லும் சாலை வழியாக சுந்தரப்பன் சாவடியிலிருந்து 4 கீ.மீ தூரம் உள்ளே சென்றால் பசுமைப் போர்வையை போர்த்தியதுபோல, சுற்றிலும் வயலும், தோப்புகளும் சூழ்ந்து அழகிய மாதிரி கிராமமாக பல ஆண்டுகளுக்கு முன்னே பெயர் பெற்றது கிளியனூர் வரலாறு.


* 1955 ஆம் ஆண்டிலேயே சுய தேவை பூர்த்தியில் தன்னிறைவு அடைந்த இந்திய கிராமங்களின் வரிசையில் தஞ்சை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற கிராமமாக “மாதிரி கிராமம்” என்ற சிறப்பை பெற்று அன்றைய முதல்வர் கர்மவீரர் காமராஜ் அவர்களின் கரங்களால் நேருவிருது வாங்கிய பெருமை எங்கள் கிளியனூருக்கு உண்டு.

* கிளியனூர் என்றாலே கொடைவள்ளல் S.A.அப்துல் மஜீதை (சீனா அனா) அவர்களை யாருமே மறக்க மாட்டார்கள். கிளியனூருக்கு மட்டுமல்ல தமிழகத்தில் பல ஊர்களுக்கு கல்வியிலும், பொருளாதாரத்திலும் வள்ளலாக திகழ்ந்தவர்கள். இன்று புகழ் பெற்ற டாக்டர் முஹம்மது ரிலா அவர்கள் இவருடைய பேரர் ஆவார்.

பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்து இந்த உலகத்தையே வியக்க வைத்தவர் டாக்டர் ரிலா.

தகவல் ஒலிபரப்பு முன்னாள் அமைச்சர் பிரமோத் மகாஜன் குண்டடிப்பட்டு கல்லீரல் பழுதுப்பட்டிருந்த போது சிகிச்சையளிக்க லண்டனிலிருந்து தனி விமானத்தில் மும்பை வந்தவர் டாக்டர் முஹம்மது ரிலா.
முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் சந்திக்க விரும்பிய நபர் டாக்டர் முஹம்மது ரிலா. இவருடைய பரம்பரை எங்கள் ஊரைச் சார்ந்தவர்கள் என்பதில் எங்களுக்கு பெருமை.

பள்ளிவாசல் மினாராவிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்


* நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய - “இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை” - என்ற இந்தப்பாடலை கேட்காத காதுகள் தமிழகத்தில் இருந்திருக்க முடியாது மதங்களை கடந்து இரசித்த இந்தப் பாடலை எழுதியவர் எங்கள் ஊரைச்சார்ந்த மரியாதைக்குரிய காலம் சென்ற கவிஞர் அப்துல்சலாம் அவர்கள் என்று குறிப்பிடுவதில் நான் பெருமைக் கொள்கிறேன்.

* நான் ஏழாம் வகுப்பு படித்த தருணத்தில் எங்கள் ஊரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வருகைப்புரிந்த நாகூர் ஹனீபா அவர்களும் அதே மேடையில் கவிஞர் அப்துல்சலாம் அவர்களும் அமர்ந்திருந்து “இறைவனிடம் கையேந்துங்கள்” பாடலை அரங்கேற்றிய அந்தக் காட்சி இன்றும் என் மனத்திரையில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. கவிஞர் மறைந்தாலும் அவருடைய கவிதைகள் பல பாடகர்களின் வழியாக இன்னும் அவரை வாழவைத்துக் கொண்டிருக்கிறது..

* எங்கள் ஊரின் சிறந்த கவிஞர்கள் வரிசையில் இடம் பெற்றிருப்பவர் கிளியனூர் அஜீஸ், அவரைத் தொடர்ந்து அ.மு.இப்ராஹிம், கவிஞர் சஹிதா செல்வன் (அப்துல் அலீம்) போன்றவர்களை இங்கு குறிப்பிடுவதில் மகிழ்கிறேன்.

* எங்கள் ஊரின் பல சாதனைகளுக்கு துணையாக இருந்தவர் தூணாக இருந்தவர் மதிப்பிற்குரிய அபுல்ஹசன் அவர்கள்.

* ஆண்டுதோறும் ரமாளான் பெருநாளில் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் எனக்கு கருத்து தெரிந்த நாளிலிருந்து இன்று வரையில் விளையாட்டு போட்டிகள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.


* தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பார்கள் எங்கள் ஊரில் இஸ்லாமிய முன்னேற்ற சங்கம் துவங்கி நூற்றாண்டு காலத் தொடராக இருக்கிறது. அந்த காலத்தில் எங்கள் ஊரில் திருமணங்கள் இரண்டு தினங்கள் நடக்குமாம் இரவு முழுவதும் மாப்பிள்ளை ஊர்வலம் விடியற்காலை திருமணம் (நிக்காஹ்) தெருவெல்லாம் இறைமாலை திருநபி புகழ்பாடி சங்கத்து இளைஞர்கள் சுற்றிவருவார்கள். ஒவ்வொரு தெருவிலும் உள்ள உறவினர்கள் சங்கத்து பிள்ளைகளுக்கு தேனீர் குளிர்பானங்கள் என்று வழங்குவார்கள் சங்கத்து பாடகர்களுக்கு பனகற்கண்டு பால் வழங்குவார்கள். இந்த சங்கத்தில் 1970 க்கு பிறகு நானும் உறுப்பினராக இருந்து வந்தகாலமும் இருக்கிறது.(இது இப்போதும் நடைபெறுகிறதா? என்று கேட்டுவிடாதீர்கள்)


* நோன்பு காலங்களில் நோன்பு திறப்பதற்கு என்னதான் வசதி படைத்தவராக இருந்தாலும் பள்ளிவாசலில் எல்லோருடனும் அமர்ந்து நோன்பு திறப்பார்கள்.

* கிளியனூரில் சாதிக்கப்பட்ட நலத்திட்டங்கள் அரசினர் உயர் நிலைப்பள்ளி, மருத்துவமனை, தபால்நிலையம் ,டெலிபோன் எக்சேஞ், ஐஒபி வங்கி, வசதிகள் மின்சார வசதிகள் எல்லாமும் கிளியனூருக்கு மட்டுமல்ல கிளியனூரைச் சுற்றியுள்ள கோவில்கிளியனூர், பழவலாங்குடி, கடக்கம், முத்தூர், கீழப்பெரம்பூர், வேலூர், மேலப்பெரம்பூர், கீழவல்லம், அகரவல்லம், எடக்குடி, வல்லம், பெருஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள தலீத் குடியிருப்புகள் உட்பட எல்லா சமூக மக்களும் பயன்படத்தக்கதாகவே விளங்கி வருகின்றன.

* எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் ஊர்காரர்கள் ஒற்றுமையில் பல ஊர்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளார்கள் அதனால்தான் பல சாதனைகளை கிளியனூர் அன்று நிகழ்த்தி இருக்கிறது.

பலரும் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் இன்றைய காலத்து இளைஞர்கள் படிப்பில் ஆர்வம் கொண்டு படித்துவருவது எங்கள் ஊருக்கும் நம் நாட்டிற்கும் கிடைத்திருக்கும் பலம். இது எங்கள் ஊரைப்பற்றிய நிறைவு அல்ல.

எங்கள் ஊரின் சிறப்புகளை எழுதுவதற்கு ஒரு தூண்டுகோளாக விளங்கிய சகோதரி ஸாதிகா அவர்களுக்கு மிக்க நன்றி.!

Monday, May 30, 2011

புகையிலை எதிர்ப்பு தினம்

மே 31 உலக புகையிலை எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

புகையிலை என்றதும் நம் சிந்தைக்கு வருவது சிகரெட்.

இது பலருடைய வாழ்க்கையை புகைத்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மை.

ஆண்களைப்போல சில பெண்களும் இன்று புகைப்பதை ஒரு மாடனாக கருதுகிறார்கள்.
ஸ்டைலுக்காக புகைக்கப்படும் பழக்கம் நாளடைவில் வலுவாகி புகைக்காமல் இருக்கமுடியாத சூழலுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள்.
தற்போது ஐடி துறை கால் சென்டர்களில் பணிப்புரியும் இளம் பெண்களிடம் புகைக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது.
பெரும்பாலும் வேலையின் பளுவாலும் பசியை மற்றும் உடல் பருமனை குறைப்பதற்கும் புகைக்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.

சில காலங்களுக்கு முன் விமானத்தில் புகைப்பதற்கு அனுமதியளித்திருந்தார்கள் இன்று விமான நிலையத்தில் கூட புகைப்பதற்கு அனுமதி இல்லை.சில விமான நிலையங்களில் தனி அறையை புகைப்பதற்கு ஒதுக்கியிருந்தாலும் அங்கு சென்று புகைப்பதைவிட ஒரு இரண்டுநிமிடம் நின்று வந்தால்போதும் சிகரெட் குடித்த உணர்வோடு வந்துவிடலாம் அந்தளவு புகைமூட்டமாக இருக்கும்.

முன்னையவிட தற்போது அதிகமான விழிப்புணர்வு புகையிலையின் கெடுதலைப்பற்றி வந்திருக்கிறது பல நாடுகள் பொது இடங்களில் புகைப்பதை தடை செய்திருக்கிறார்கள்.
ஆனால் இந்தோனேஷியாவில் இந்த தடை அமுலில் இருந்தாலும் அதிகமானோர் பொது இடங்களில் புகைக்கிறார்கள்.

இதெல்லாம் மற்றவர்களின் ஆய்வு என்னைப்பற்றிய ஆய்வை நான் சொல்லவேண்டும் ஆரம்பத்தில் நான் புகைக்க ஆரம்பித்தேன் மெல்ல மெல்ல புகை என்னை புகைக்க ஆரம்பித்தது.

புகைக்கும் பழக்கம் எங்கு தொடங்கியது என்று என்னிடம் நீங்கள் கேட்டால் நட்பு என்று சொல்வேன்.ஆம் நண்பர்களுடன் ஜாலியாய் தினம் ஒரு சிகரெட் என்று துவங்கிய பழக்கம் அது வளர்ந்து தினம் ஒரு பாக்கெட் (20) என்ற கணக்கில் சில நேரங்களில் சந்தோசமான துக்ககரமான நேரங்களில் கொஞ்சம் அதிகமாகவே புகைத்து என்நேரமும் என் உடலைப்போல் ஆன்மாவைப்போல் என் கூடவே இருந்து இடது பேண்ட் பாக்கெட்டை ஆக்கிரமிப்பு செய்து தனி இடத்தை என்னிடம் பெற்றிருந்தது.

திருமணத்திற்கு பின் எனது மனைவி என்னிடம் சிகரெட்டை விடும்படி எத்தனையோ முறை கேட்டுக் கொண்டிருக்கிறார்.அப்போதெல்லாம் என் மனைவிக்கு கோபம் உண்டாக்குவதற்காக நீ எனக்கு இரண்டாவது மனைவி என்பேன் எப்படி என்றால் உன்னை கல்யாணம் செய்வதற்கு முன்னிருந்தே நான் புகைத்துக் கொண்டிருக்கிறேன் அதனால் முதல் மனைவி சிகரெட் என்பேன்.

புகைப்பதற்கு எத்தனையோ காரணங்களை கூறியிருக்கிறேன் ஆனால் அத்தனையும் உண்மையல்ல என்பது புகைப்பவர்களுக்கு தெரியும்.

எனது குழந்தைகள் என்னிடம் இந்த பழக்கத்தை விடுங்களேன் என்று கேட்கும்போது உள்ளுக்குள் வெட்கப்பட்டிருக்கிறேன்.இப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அதை விடமுடியாமல் தவிக்கின்றோமே எப்படியாவது விடவேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்ததே தவிர அதைவிட்டுவிடுவதற்கு மனம் தயாராக இல்லை.

பொது நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளும் பழக்கமுடைய எனக்கு நான் பழகக் கூடிய நண்பர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத்தவிர பல நண்பர்கள் புகைப்பதில்லை.புகைத்துவிட்டு நண்பர்களின் பக்கத்தில் அமரும்போது அவர்களின் முகம் சுளிவதை காணும் என் மனசு வலியை சுமந்திருக்கிறது.வாயை பினாயிலிட்டு கழுகினாலும் சிகரெட்வாடை போவதில்லை.


எனது ஆன்மீக குருவைக்காண குடும்பத்துடன் சென்றபோது புகைப்பதை சொல்லக்கூடாது என்று நான் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அதையும்மீறி எனது குழந்தைகள் நான் புகைப்பதை அவர்களிடம் கூறிவிட்டார்கள்.

என் குரு ஆச்சரியமாக என்னைப்பார்தார்கள் உங்களுக்கு இந்த பழக்கமிருக்கிறதா? நம்பிள்ளைகள் இதுபோன்ற பழக்கங்களில் ஈடுபடமாட்டார்கள் தங்கள் மனதை இதில் லயிக்கசெய்து பாழாக்கிக் கொள்ளவேண்டாம் அதனால் வரக்கூடிய தீமைகளை எடுத்துக் கூறினார்கள்.

அவர்களிடம் என்னைப்பற்றிய குறையை கூறும்போது நான் கூனிக்குறுகி விட்டேன்.
எப்படியாவது விட்டுவிடுகிறேன் என்று நான் கூறினாலும் மனம் சம்மதிக்கவில்லை.

மனிதன் ஏதோ ஒன்றுக்கு கட்டுப்படவேண்டும் அந்தக் கட்டுப்பாடு இல்லை என்றால் நூலறுந்த பட்டத்தைப் போன்று அவனுடைய வாழ்க்கை இருக்கும்.

குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டால் அதனால் வரக்கூடிய நன்மைகள் எனக்குத்தானே இருந்தாலும் ஈகோ சும்மா இருப்பதில்லை மனைவிச் சொல்லி இதை விடவேண்டுமா? அல்லது நீ பெற்ற குழந்தைகள் சொல்லி விடவேண்டுமா? இப்படி விடாமல் புகைத்துக் கொண்டிருப்பதற்கு பல காரணங்களை மனம் கற்பித்தாலும் அறிவு அதை ஏற்றுக் கொள்வதில்லை.

புகைக்கக் கூடியவர்களுக்கு புகைப்பதினால் பல தீமைகள் இருக்கிறது என்பது தெரிந்துதான் இருக்கிறார்கள் ஆனால் அந்த தீமை அவர்களைத் தண்டிக்காத வரையில்.
ஆனால் தண்டிக்கப்படும்போது அதை துண்டித்துவிடுவார்கள் தண்டனைக்காக காத்திருக்க வேண்டுமா?.

ஒரு செயலை தொடரும்போது மனம் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை அதை தொடச்சியாக்கும்போது அது பழக்கமாகிறது.அந்த பழக்கம் வழக்கமாகி வாழ்க்கையாகிறது.

இப்படி தொடரப்படுவதுதான் எந்தப்பழக்கமும்.

(அந்தப்பழக்கத்திலிருந்து விடுப்பட்டு சரியாக சொல்ல வேண்டுமானால் 2010 ஏப்ரல் 10 தேதி இரவு 9.30 மணிக்கு புகைப்பதை விட்டுவிட்டேன்.50 தினங்களை புகைக்காமல் கடத்தியும் விட்டேன்.வாடை இன்னும் வீசிக்கொண்டு தானிருக்கிறது இருந்தாலும் நான் போராட புறப்பட்டுவிட்டேன்.)

புகைப்பதில் நுழைந்த பலர் அதிலிருந்து மீண்டுவருவது கடினம் என்று தங்களுக்குள் ஒரு எண்ணத்தை வழுவாக வைத்திருக்கிறார்கள் என்பது உண்மை.
நானும் அப்படிதான் இருந்தேன் எனது குரு கேட்டார்கள் உங்கள் மனதை உங்களால் வெல்ல முடியும் விட்டுப்பாருங்கள் உங்கள் மனோசக்தியை உணர்வீர்கள் என்றார்கள்.

என்மனதை வென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தூக்கி வீசினேன் இந்த ஐம்பது தினங்களில் அந்த நினைவு வரும்போதெல்லாம் நம் மனதை வெல்லவேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக்கிக் கொள்கிறேன் அந்த எண்ணத்திற்கு மத்தியில் இந்த சிகரெட் வலுவிழந்து வருகிறது.

ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீளக்கூடியவர்களின் மனோசக்தி அவர்களுக்கு அதிகரிக்கிறது அவர்களால் எதையும் வைராக்கியத்துடன் செய்து சாதிக்கமுடியும் என்பதை இந்த ஐம்பது தினத்தில் நான் கற்றுக் கொண்டுவரும் அனுபவப்பாடங்கள்.

அந்த பழக்கத்தை விட்டதினால் எனது குடும்பம் சந்தோசமடைகிறது நானும் சந்தோசமடைகிறேன் என்னுள் இருந்த புகைக்கும் எண்ணம் இல்லாதபடியால் அவ்வபோது நண்பர்களைவிட்டு விலகி புகைத்துவிட்டு வரும் அந்த நிமிடங்கள் இன்று மீண்டுருக்கிறது ச கநண்பர்களுக்கு மத்தியில் இன்று நானும் புகைக்காதவனாக காட்சியளிக்கிறேன்.

சாதிக்க முடியும் என்னாலும் சாதிக்க முடியும் ஆம் நான் இமயத்தை தொடவில்லை ஆனால் என்வீட்டு இதயங்களை தொட்டுவிட்டேன்.

மீள்வதற்கு வழிதந்த என்குருவிற்கும் என்குடும்பத்தார்கள் எனது நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை இத்தருணத்தில் கூறிக் கொள்கிறேன்.
-------------------------------

இவ்வளவு தூரம்வரை நீங்கள் வாசித்தவை சென்ற ஆண்டு மே 31ம் தேதி எழுதிய பதிவு. ஆனால் இந்த பதிவுக்கு பிறகு இன்று வரையிலும் நான் சிகரெட் குடிக்கவில்லை. குடிக்கவேண்டும் என்ற எண்ணம் அவ்வபோது வந்தாலும் கூட அந்த எண்ணத்தை ஏதேனும் தின்பண்டங்கள் பக்கம் கவனத்தை திருப்பிவிடுகிறேன்.

எனது நண்பர்கள் உறவினர்கள்கூட நான் சிகரெட் புகைக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன் என்று கூறியபோது நம்பவில்லை ஆச்சரியம் அவர்களுக்கு எப்படி? என்று கேட்டார்கள் கூறினேன் மனம் வைத்தால் நம்மை நாமே வெல்ல முடியும் என்பதை என் குரு எனக்கு மெய்பித்து காண்பித்திருக்கிறார்கள்.

இன்று பல தொலைக்காட்சிகளில் புகைக்கும் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு நிக்கோடின் போன்ற மாத்திரை மருந்துகளை அறிமுகம் செய்கிறார்கள். இவைகளை வாங்கி உண்டு விடுவதைவிட புகைப்பதை நீங்கள் மாற்று மருந்து இல்லாமல் நிறுத்திப்பாருங்கள் சில தினங்களில் உங்கள் மனதளவில் ஒரு சக்தியை புத்துணர்ச்சியை உணர்வீர்கள். என்றுமில்லாத ஒரு சுறுசுறுப்பு உங்களிலே ஏற்படும். அந்த சுறுசுறுப்பே உங்களின் எண்ணத்தை புகைப்பதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறக்கவைத்துவிடும்.

புகைக்கும் எண்ணம் வந்தால் எதையாவது சாப்பிடுங்கள் கொஞ்ச நாட்கள் அப்படி சாப்பிடுவதினால் உங்கள் உடல் பருமன் கூடும் பின் நாட்களில் பருமனை குறைத்துவிட முடியும்.

இவைகளை எல்லாம் படித்தோ அல்லது கேட்டோ இங்கு பதிவு செய்யவில்லை இந்த 13 மாதங்களில் நான் கண்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

நண்பர்களே!
உங்களாலும் முடியும் நீங்களும் சாதனையாளர்தான் புகைப்பதை விட்டுப்பாருங்கள் உங்களின் தனித்தன்மையை உணர்ந்துக் கொள்வீர்கள் வாழ்த்துக்கள்!

Tuesday, May 24, 2011

எழுத்தாளன் வறிஞனாகிறான்

அமீரகத்தில் எனது 30 வருட வாழ்க்கையை அனுபவத் தொடராக எழுதிவந்தேன். அவ்வபோது சரியாக தொடரை தொடாததினால் அது தடைப்பட்டு போயிருக்கிறது. கூடுமானவரையில் எனக்கு நிகழ்ந்த அனுபவங்களை பதிவிட்டிருக்கிறேன். மனிதர்களின் சிந்தனையில் ஏற்படக்கூடிய மாற்றங்களும், இயற்கையின் மாற்றங்களும்தான் காலத்தின் மாற்றமாகிறது.

அமீரக வாழ்க்கையில் அறிமுகமானவர்களில் கீழக்கரையைச் சார்ந்த ஒரு பெரியவர் எனக்கு செய்த உபதேசம் நீ எழுதுவதை விட்டுவிடு! நன்றாக சம்பாதிக்கனும் என்றார்.
அவர் ஏன் அப்படி சொன்னார் என்று நான் யோசித்துப் பார்த்தேன் புலவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் இவர்களில் பெரும்பாலோர் வறுமையில்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள், மறைந்தும் இருக்கிறார்கள்.

அவர் மேலும் சொன்னார் எழுத்தாளர் அப்துற் றஹீம் அவருடைய கடைசிக் காலத்தில் பொருளாதாரத்தில் எப்படி எல்லாம் கஸ்டப்பட்டார் என்பது உனக்கு தெரியுமா? நான் அவருக்கு உதவி செய்திருக்கிறேன் என்றார்.
தன்னம்பிக்கை தரக்கூடிய நூல்களை தமிழகத்தில் அறிமுகம் செய்தவர் அப்துற் றஹீம். அவருடைய பல நூல்களை நான் வாசித்திருக்கிறேன். அவருடைய வார்த்தைகளை எனது அறையின் சுவற்றில் எழுதியும் வைத்திருந்தேன்.

“எழுத்து என்ற இரக்கமற்றத் துறையில் நுழைந்த எவரும் துவக்கத்தில் எல்லாவிதமான கஸ்டங்களையும் நஷ்டங்களையும் துன்பங்களையும் தாங்கிக் கொள்ள தயாராக இருக்கவேண்டும்.”

இந்த வரிகள் என்னை செம்மைப்படுத்திருக்கிறது. ஆனால் எழுத்தை எனது பொழுதுபோக்காக எண்ணியதால் முழு நேரம் அது என்னை ஆட்படுத்தவில்லை. ஒருவேலை முழுநேர எழுத்தாளனாக மாறியிருந்தால் எனது எழுத்தின் போக்கும், எனது வாழ்க்கையின் போக்கும் மாறியிருக்கும். நான் எழுத்தை விற்க துவங்கியிருப்பேன். அந்த விற்பனையில் கிடைக்கக்கூடிய வருமானம் இன்றைய நவீன உலகிற்கு பற்றாமலேயே போயிருக்கலாம் அல்லது கவிபேரரசு வைரமுத்துவை போல தமிழ் கை நிறைய பணத்தை அள்ளியும் கொடுத்திருக்கலாம்.

எழுத்துலகில் பணக்கார கவிஞன் ஒருவரைத்தான் என்னால் இங்கு அடையாளம் காட்டுவதற்கு முடிந்திருக்கிறது.

தமிழகத்தில் எழுத்தை நம்பி வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களின் வாழ்க்கை இன்னும் வறுமைக்கோட்டுக்குள்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தே அந்த பெரியவர் எனக்கு உபதேசம் செய்தார். அவரின் உபதேசம் கேட்கும் நேரத்தில் நான் வேலை இழந்திருந்தேன். எழுதுகிற அளவுக்கு என்னிடம் இலக்கணம் இல்லை. சிலவு செய்யுமளவு என்னிடம் பொருள் களமுமில்லை இருந்தாலும் அவருடைய அந்த வார்த்தை நெஞ்சுறுதியாகி விட்டது.

அந்த தருணங்களில் எழுதி வெளியிட்ட நூல்கள் நல்ல நண்பர்களிடம் என்னை கொண்டுச் சென்றது. அந்த நண்பர்களின் முன்னேற்றமும் நான் படித்த தன்னம்பிக்கை நூல்களும் எனக்கு வழிகாட்டியது.

அந்த வழிகாட்டல் பொருள் சேர்க்கும் எண்ணத்தையும், நல்ல சிந்தனையையும் கொடுத்தது. பொருளே வாழ்க்கையாகிவிடவும் முடியாது அதில் பொருள் இருக்கவேண்டும் அல்லவா? பொருளுடன், அருளும் இணையும் போதுதான் சேர்த்த பொருளுக்கு பொருள் இருக்கும்.

அப்படி கிடைத்ததுதான் ஆன்மீகம். ஆன்ம பாட்டை மனிதனுக்கு சுய சிந்தனையை ஏற்படுத்தக்கூடியது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் ஆன்மீகம் என்பது வாதம் புரிவதற்கும் பிறருக்கு போதிப்பதற்கும் அதன் பொருளை தவறாக புரிந்துக் கொள்ளப்படுகிறது. அதனால்தான் உலக நாடுகள் பலவற்றிலும் அமைதியின்மை நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.

சுயசிந்தனை செய்யாத எதுவுமே ஆன்மீகம் அல்ல அது லௌகீகம் அது புறசிந்தையை மட்டுமே தூண்டும் அகத்தை விளங்காது அதன் கருத்தை மனம் ஏற்காது. இப்படிப்பட்டவர்கள் தங்களை தாங்களே அமைதிப்படுத்திக் கொள்ள முடியாது. இவர்கள் எப்படி இந்த சமுதாயத்தை ஒன்றுப்படுத்தஇ அமைதிகாக்க வைக்க முடியும். இவர்களால் பல பிரிவுகளை வேண்டுமானால் உண்டாக்க முடியும் பிரிந்தவர்களை ஒன்று படுத்த முடியாது.

ஆன்மாவை படிப்பதற்கு நிறைய விசயங்கள் இருக்கின்றன அதை கற்பதற்கு பல்கலைகழகங்கள் இல்லஈ ஆன்மீகக் கூடங்கள் இருக்கிறது. எதையுமே கற்றுத் தெரிந்தவரிடமிருந்தே கற்க வேண்டும் அதனால் தான் இன்றும் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

பொருளீட்ட வந்த இடத்தில் பொருளுடன் அருளும் ஈட்டுவதற்கு நட்புகள் துணைப் புரிந்தன. எனது எழுத்தின் போக்கு திசைமாறுவதை நான் உணர்கிறேன்.

இறைவனைப்பற்றி பேசக்கூடியவர்களுமஈ எழுதக்கூடியவர்களும் இறைவனை விளங்கியவர்களல்ல. இறையைப் பற்றி பேசாதவர்கள் நாத்தீகருமல்ல. ஒவ்வொரு மனிதனும் இறைவனின் படைப்புதான் அவனை அறிவதற்கு தன்னைவிட இன்னொன்று சிறந்ததல்ல இதை விளங்கி சிந்தித்தாலே பல அறிவுகள் விளக்கங்கள் தன்னிடமே கிடைக்கும்.

இப்படிப்பட்ட ஞானங்களையும் இந்த அமீரகத்தில் என்னால் சம்பாதிக்க முடிந்தது. அதனால் எழுதுவோம் நம்மிடம் வறுமை வராதவாறு.!

Thursday, May 19, 2011

தங்கச் சந்தையை மிஞ்சும் வெள்ளி


சென்ற ஆண்டு அக்டோபரில் தங்கம் விலை இன்னும் ஏறுமா இறங்குமா? என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருந்தேன் அந்த சமயத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் (31.10 கிராம்) 1380 டாலர் விற்பனையாகிக் கொண்டிருந்தது. ஏழு மாதத்திற்குப் பின் அதிகபட்சம் 1550 டாலரை தொட்டுவிட்டு தற்போது 1496 – 1510 இடையில் நடனமாடிக் கொண்டிருக்கிறது.அந்த பதிவில் 1500 டாலர் தொட்டுவிடும் என்ற நிபுணர்களின் கருத்தையும் ஆணித்தரமாய் கூறியிருந்தேன்.

தங்கத்தைப் பற்றிய எனது பதிவுகளை படித்துவிட்டு சிலர் முதலீடு செய்தனர் அவர்களுக்கு 175 லிருந்து 200 சதவீதம் லாபம் கிடைத்திருக்கிறது என்பதை கூறிக்கொள்கிறேன்.

இப்பொழுது தங்கத்தில் முதலீடு செய்யுமளவு என்கையில் பணம் அதிகம் இல்லை என்று சொல்லக்கூயவர்களுக்கு தங்கத்தையும் விட அதிகம் லாபம் தரக்கூடிய தங்கத்தின் தோழர் வெள்ளியைப் பற்றிய விபரத்தை இங்கு காண்போம்.

உலோகத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது மக்களுக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ பண முதலைகளுக்கு லாபம் கிடைக்க வேண்டும் அதனால் அவர்களின் போக்குக்கு சந்தையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.அதனால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது இதைப் பயன் படுத்தி நாமும் முதலீட்டாளராக மாறிக் கொண்டால் லாபம் பெறலாம்.

வெள்ளிப் பக்கம் யாருமே அதிகம் செல்லாமல் சென்ற ஆண்டுவரையில் இருந்தார்கள் அப்போது அதன் விலை அவுன்ஸ் 18 – 19 டாலர் என்ற ரீதியில் விற்பனையாகிக் கொண்டிருந்தது.

சென்ற ஆண்டின் CHAT

இந்த ஒராண்டுக்குப் பின் 48.48 டாலர் வரை சென்றது கிட்டதட்ட ஒரே ஆண்டிற்குள் 155 சதவீதம் வரை விலை ஏற்றம் நிகழ்ந்திருக்கிறது ஏன் இப்படி என்று கேட்கிறீர்களா? எல்லாம் பணமுதலைகளின் திருவிளையாடல்.அவர்கள் நினைத்தால் மண்ணைக்கூட சாக்குகளில் அள்ளி மூட்டை 100 டாலர் என்று சொல்லி விற்பார்கள் இப்பொழுது அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது.

அவுன்ஸ் 48.48 டாலர் வெள்ளியின் விலை உயர்ந்ததும் நம்மைப்போன்ற சிறு முதலீட்டாளர்கள் வெள்ளியின் பக்கம் கவனத்தை திருப்ப முதலைகளோ தங்களிடம் உள்ள வெள்ளியை 50 சதவீதம் விற்பனை செய்ய சந்தை சரிந்திருக்கிறது.
இன்னும் வெள்ளியின் விலை உயரும் என்ற எண்ணத்தில் அவுன்ஸ் 48.48 டாலரில் வாங்கியிருந்தவர்கள் தங்களிடம் பணமிருந்தால் தற்சமயம் 34 டாலரில் இருக்கும் வெள்ளியை வாங்கி ஆவ்ரேஜ் செய்துக் கொள்ளலாம்.

மீண்டும் வெள்ளியின் விலை உயர வாய்ப்பிருக்கிறது. பணமுதலைகள் வெள்ளியை அடுத்தக் கட்ட உயரத்திற்கு கொண்டுச் செல்ல ஆயத்தமாகி இருக்கிறார்கள். இன்னும் இரண்டு ஆண்டுகளில் வெள்ளி ஒரு அவுன்ஸ் 100 டாலரை கடக்கலாம்.

தங்கத்தின் போக்கு அதிவேகமாக இருப்பதால் ஏழைகள் வெள்ளியின் பக்கம் செல்வது இயல்பே.ஆதலால் தங்கத்தை காட்டிலும் வெள்ளி தற்போது அதிகமான லாபத்தை தந்துக் கொண்டிருக்கிறது.

34 டாலருக்கு தற்போது நீங்கள் வெள்ளியில் முதலீடு செய்தால் 3 மாதத்திற்குள் 15 லிருந்து 20 சதவீதம் லாபம் பெற சாத்தியம் இருக்கிறது என்று நிபுணர்களின் கணிப்பாக இருக்கிறது.

வெள்ளிச் சந்தை விரைவில் தங்கச் சந்தையை முதலீட்டில் மிஞ்சும் என்பது நிதர்சனமாகப்போகும் உண்மை.

ஆதலால் உலோகத்தில் முதலீடு செய்யும் அன்பர்கள் தங்களின் முதலீட்டை வெள்ளியின் பக்கம் திருப்பலாம்.

Thursday, May 5, 2011

சக்கரை வியாதிக்கு சகசமான வைத்தியம்



இன்று சர்க்கரை வியாதி என்பது சர்வசாதரணமாகி விட்டது யாரைப் பார்த்தாலும் கேட்டாலும் தங்களுக்கு அந்த நோய் இருப்பதாகவே பெரும்பாலோர் கூறுகிறார்கள்.உலகம் முழுவதும் 15 கோடி மக்களுக்கு இந்த வியாதி இருப்பதாக ஒரு செய்தி சொல்கிறது.ஆனால் நம் பாரத நாட்டில் சுமார் இரண்டு கோடி மக்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

பெரும்பாலோருக்கு தங்களுக்கு சர்க்கரை வியாதி இருப்பதே தெரியாமல் உடம்பை பரிசோதனையும் செய்யாமல் அதைப்பற்றிய விழிப்புணர்வும் இல்லாமல் இந்த வியாதியால் அவதிப்பட்டு வாழ்ந்துக் கொண்டு வருகிறார்கள்.

முதலில் சர்க்கரை வியாதி என்றால் என்ன? என்பதை சுறுக்கமாக தெரிந்துக்கொள்வோம்.
நாம் உட்கொள்ளும் உணவுகளிலிருந்து கிடைக்ககூடிய குளுக்கோஸ் எரிபொருளாக மாறுகிறது. இந்த குளுகோஸ் இரத்தத்திற்குள் சென்று பின்னர் இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உடற்செல்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. கணையம் எனும் உடல் உறுப்பு இன்சுலின் எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த இன்சுலின் இரத்தத்தின் வழியாக செல்களை சென்றடைகின்றன. அங்கு குளுகோஸ் ஐ சந்தித்து, செல்களானது குளுகோஸ்-ஐ தங்களுக்குள் எடுத்துக் கொள்ளச் செய்கிறது. குளுக்கோஸ்-ஐ செல்கள் எரித்து உடலுக்கு தேவையான சக்தியினை உற்பத்தி செய்து தருகிறது.

இது சர்க்கரை வியாதி இல்லாதவர்களின் உடல் நிலை. ஆனால் அந்த நோய் இருக்கும்போது ஏற்படக்கூடிய மாற்றங்கள்

குளுக்கோஸ்-லிருந்து சக்தியை உற்பத்தி செய்வதை சர்க்கரை நோய் கடினமாக்குகிறது. வயிறு போன்ற ஜீரண உறுப்புகள், உணவினை குளுகோஸ்-ஆக மாறச் செய்கின்றன. அவை இரத்தத்திற்குள் சென்று இரத்தத்தின் வழியாக செல்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடிவதில்லை
ஏனெனில்
1. இன்சுலின் போதுமான அளவு இல்லாதிருக்கலாம்.
2. இன்சுலின் அதிகளவில் இருந்தும், இந்த இன்சுலின் செல் உறையில் உள்ள ரிசப்ட்டார் எனப்படுவதை திறக்க முடியாத நிலை ஏற்படுவதினால் செல்லானது குளுக்கோஸ்-ஐ உட்கொள்ள முடியாத நிலை
3. எல்லா குளுக்கோஸ் துகள்களும் செல்களுக்குள் செல்ல மிகக் குறைந்த அளவே ரிசப்ட்டார்கள் இருக்கலாம்.
எல்லா குளுக்கோஸ் துகள்களும் இரத்தத்திலேயே தங்கியிருக்கும். இதனை ஹைப்பர்கிளைசீமியா (இரத்தத்தில் குளுக்கோஸ் அல்லது சர்க்கரை மிகவும் அதிகளவில் இருப்பது) என்பர். செல்களில் போதிய அளவு குளுக்கோஸ் இல்லாததினால் உடல் நன்கு செயல்பட தேவையான சக்தியினை உற்பத்தி செய்ய முடிவதில்லை.

அதனால் நமது உடம்பில் செயற்கையாக ஆங்கில வைத்திய முறையில் தினம் மாத்திரைகள் அல்லது ஊசிகளின் மூலம் இன்சுலினை செலுத்தி சர்க்கரையை குறைத்துக் கொள்கிறோம்.
இது சர்க்கரை வியாதி உள்ள எல்லோரும் தினம் தினம் செய்துக் கொண்டிருக்ககூடிய நிகழ்வு.

சில தினங்களுக்கு முன் எனது நண்பர் M.E.Sஅபுதாஹிர் பைஜி அவர்கள் சர்க்கரை வியாதியை இயற்கை வைத்தியத்தின் மூலம் ஒருவர் குணப்படுத்துகிறார் என்று ஒரு துண்டு பிரச்சாரத்தை காண்பித்தார்கள்.

படத்தின் மீது கிளிக் செய்தால் பெரிய எழுத்தில் படிக்கலாம்

அதை முழுவதையும் வாசித்துப் பார்த்தேன். “சர்க்கரை நோய்க்கு எளிய இயற்கை மூலிகை மருந்து” - என்று தலைப்பிட்டு விளம்பரப்படுத்தி இருந்தார்கள். இந்த விளம்பரம் நோய்க்கு சிகிச்சை பெற்றவர் கொடுத்திருக்கிறார் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விசயம்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் துர்க் என்ற ஊரில் பாபா ஷேக் இஸ்மாயில் என்பவர் இந்த வைத்தியம் முறையை செய்துவருகிறார்கள்.பல மாநிலத்திலிருந்து மக்கள் அவரைத்தேடிச் சென்று அவர் தரும் மருந்தை உட்கொள்கிறார்கள்.குணம்பெருவதாக கூறுகிறார்கள்.

அந்த மாநிலத்திற்கு நாம் எப்படி செல்ல வேண்டும் என்ற விபரங்களும் துண்டு பிரச்சாரத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த வைத்தியத்தின் சிறப்பு என்ன வென்றால் பாபா தரக்கூடிய சூரண மருந்தை ஓரிருமுறை மட்டுமே சாப்பிட்டால் போதுமானது சர்க்கரை அளவு குறைந்துவிடும்.என்கிறார்.

வைத்தியர் பாபா ஷேக் இஸ்மாயில்

அவர் கூறும் அறிவுரைகள்

1. மருந்து சாப்பிட்டப் பின் தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்கு தண்ணீர் உணவு புகைத்தல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

2. நான்கு மணிநேரம் கழித்தப்பின் நீங்கள் ஒதுக்கிவைத்த இனிப்பு சாப்பாடு அனைத்தும் வயிறு நிறைய சாப்பிட வேண்டும்.

3. உணவில் புளி கத்தரிக்காய் மாங்காய் கண்டிப்பாக இரண்டு மாதங்களுக்கு சேர்த்துக் கொள்ளக்கூடாது.

4. மருந்துக் குடித்தப்பின் ஏற்படும் உமிழ்நீர் மற்றும் ஒமட்டலுடன் கூடிய உமிழ்நீர் ஆகியவற்றை கண்டிப்பாக துப்பக்கூடாது.

5. இருமல் ஏற்பட்டு அதனால் வரும் சளியினை துப்பலாம்.

6. வீட்டிற்குச் சென்றப்பின் சர்க்கரை அளவு உயர்வு தெரிந்தால் இரண்டு நாட்களுக்கு மட்டும் நீங்கள் பயன்படுத்தி வந்த சர்க்கரை மாத்திரைகளை உட்கொண்டு அதன் பின் சுத்தமாக சர்க்கரை மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.முப்பது நாட்கள் கழித்து உங்கள் சர்க்கரை அளவை பரிசோதனை செய்துக் கொள்ளவும். பரிசோதனையில் சர்க்கரை நார்மல் அளவிற்கு குறைந்திருப்பதை காண்பீர்கள்.

7. இன்சுலின் பயன்படுத்துபவர்கள் சூரண மருந்தை இரண்டு முறை இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டும்.

8. மாத்திரை மருந்து சாப்பிடக்கூடியவர்கள் ஒருமுறை சூரணமருந்தை எடுத்துக் கொண்டால் போதுமானது.

என்று இப்படி பாபா ஷேக் இஸ்மாயில் அறிவுரைகள் வழங்கி இருக்கிறார்கள்.

இவைகள் எல்லாம் உண்மைதானா?அல்லது பணம் பண்ணும் வழியா? என்ற சந்தேகமும் நமக்கு தோன்றவே செய்தன. வரக்கூடியவர்களிடம் டோக்கன் முறையில் பெயர்களை பதிவு செய்வதற்கு முப்பது ரூபாயும் பாபா கொடுக்கக் கூடிய மருந்துக்கு 120 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. என்று பிரசுரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

நண்பர் அபுதாஹிர் அவர்களுக்கு சர்க்கரை இருப்பதினால் அதற்கான மாத்திரைகள் தினம் சாப்பிட்டு வருகிறார்கள் இந்த துண்டுப் பிரச்சாரத்தைப் பார்த்ததும் சட்டீஸ்கர் சென்று வருதற்கு துபாயிலிருந்து ஆயத்தமானார்கள்.
அப்போது நான் கேட்டுக் கொண்டவிசயம்
வைத்தியர் பாபாவை புகைப்படம் எடுத்துவாருங்கள் சென்று வரக்கூடிய விபரங்களையும் சேகரித்து வாருங்கள் என்று கேட்டுக்கொண்டதற்கினங்க அதற்கும் மேலாகவே சகோதரர் அபுதாஹிர் அவர்கள் தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதி அதற்கான சிலவுகள் என்று பல விபரங்களையும் சேகரித்து வந்துள்ளார்கள்.

இனி நண்பர் M.E.S.அபுதாஹிர் பைஜி அவர்கள் கூறுவதைக் கேட்போம்.

துபாயிலிருந்து டெல்லி அங்கிருந்து ராய்பூர் விமானம் மூலம் வந்திறங்கினேன்.அங்கிருந்து துர்க் செல்வதற்கு 40 கி.மீ தூரம்.
(தமிழகத்திலிருந்து வரக்கூடியவர்கள் சென்னை சென்ட்ரலிருந்து கோர்பா-6327 எக்ஸ்பிரஸ் இரயிலில் நேரடியாக துர்க் வாரம் இருமுறை செல்கிறது அதில் வரலாம்) புதன்காலையில் துர்க் வந்தடைந்தேன்.

அப்பொழுது என் உடம்பில் சர்க்கரை அளவு 360 இருந்தது.வியாழன்கிழமை அதிகாலை எழுந்து இறைவணக்கத்தை முடித்துக் கொண்டு வெறும் வயிறுடன் தண்ணீர் கூட அருந்தாமல் ஜூம்மா பள்ளிவாசலுக்கு வந்தேன்.பள்ளியில் வைத்துதான் மருந்து தருகிறார்கள்.

பல மாநிலத்திலிருந்து வைத்தியத்திற்காக பலரும் வருகிறார்கள் குறிப்பாக தமிழகத்திலிருந்து இந்த வைத்தியமுறை தெரிந்தவர்கள் வருகிறார்கள். நீண்ட வரிசை நின்றது மற்றவர்களைப் போல நானும் வரிசையில் அமர்ந்து சென்றேன்.

மருந்தை குவளையில் போட்டு கலக்குகிறார் பாபா


பாபா அவர்கள் மூலிகை மருந்தை எடுத்து உள்ளங்கையில் வைத்து குவளையில் பாலுடன் கலந்து கொடுத்தார் அதைக் குடித்தேன் கடுமையான கசப்பும் துவப்பும் இருந்தது.இந்த மருந்தை குடித்த உடன் தண்ணீர் குடிக்கலாம். அதன் பின் சில மணி நேரங்கள் கழித்து இனிப்பு மற்றும் உணவு உண்டேன்.
புளி மாங்காய் கத்தரிக்காய் இவைகள் கலக்காத உணவு அங்கு தயாரித்தும் கொடுக்கிறார்கள்.
நம் வசதிகேற்ப அங்கு தங்கிக் கொள்ளலாம் மூன்று தினங்கள் தங்கி இரண்டு தினங்கள் மட்டும் மருந்து சாப்பிட்டேன் மூன்றாவது தினம் துபாய் புறப்பட்டு விட்டேன். பாபா தரக்கூடிய மருந்து அங்கே மட்டுமே சாப்பிடக் கொடுக்கிறார் மற்றபடி அதை பொட்டலம் போட்டு வீட்டுக்கு எடுத்துப்போக கொடுப்பதில்லை அனுமதியுமில்லை.

அங்கு தங்கிருந்த மூன்று தினங்களில் சர்க்கரையை பரிசோதித்து பார்க்கவில்லை. துபாய் வந்ததும் பரிசோதனை செய்து பார்த்ததில் சர்க்கரை எப்பவும் போல 360 அதிகமாகவே இருந்தது.எப்பவும் சாப்பிடக்கூடிய சர்க்கரை மருந்து ஒருதினம் எடுத்துக் கொண்டேன்.

ஆனால் முன் இருந்ததை போல் அல்லாமல் தற்போது உடலில் சோர்வு இருக்கவில்லை சர்க்கரை அதிகமானால் பல்வலி கோபம் ஏற்படும் அந்த வலியும் இல்லை பதட்டம் கோபம் இருக்கவில்லை மாறாக உடலில் புத்துணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

இந்த மருந்து சாப்பிட்டு இன்றுடன் பதினைந்து தினங்களுக்கும் அதிகமாகிவிட்டது. இந்த நாட்களில் தினம் உட்கொள்ளவேண்டிய சர்க்கரை மருந்தை ஒருநாள் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளேன்

நண்பர் M.E.S.அபுதாஹிர் பைஜியுடன் பாபா மற்றும் அவர் நண்பர்கள்

தற்போது பரிசோதித்து பார்த்தவரையில் சர்க்கரை 360 லிருந்து 250க்கு குறைந்திருக்கிறது பலருக்கு நார்மலாக இருப்பதாக கூறுகிறார்கள்; ஆனால் எனது உடல் நிலைக்கு இன்னும் சில தினங்களில் குறைந்துவிடும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. என்று புத்துணர்ச்சியுடன் அபுதாஹிர்பைஜி கூறுகிறார்கள்.

சர்க்கரை வியாதிக்கு பலவிதமான வைத்திய முறைகள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது ஆனால் இந்த வைத்தியமுறை எளிமையாக இருக்கிறது. பாபா கொடுப்பது மூலிகை மருந்து அதை உட்கொள்வதால் சர்க்கரை வியாதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும் என்று அங்கு சென்று வந்தவர்கள் கூறுகிறார்கள்.

பாபா வசிக்கும் துர்க்கில் நமது நண்பர் உள்ளுர்வாசிகளிடம் பாபாவைப் பற்றி விசாரித்தும் இருக்கிறார்.அவர் வைத்தியத்தைப் பற்றி சிலர் நம்பிக்கையும் சிலர் அவநம்பிக்கையும் கொண்டுள்ளார்கள்.

இன்றுவரையில் பாபா தனது வைத்தியத்தை எதிலும் விளம்பரங்கள் செய்யவில்லை கேள்விஞானத்தில் சென்று அவரைப்பார்த்து மருந்துண்டு குணம் தெரிந்தவர்கள் மற்றவர்களிடம் கூறுவதை வைத்தே பலரும் அங்கு சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பர் M.E.S.அபுதாஹிர் பைஜி அவர்களை ஒரு முன்னோட்டம் பார்த்த வரையில் பாபாவின் வைத்தியத்தில் நம்பிக்கை தெரிகிறது.அதனால்தான் இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு பதிவு செய்கிறேன்.

இன்னுமொரு நண்பர் துர்க் செல்வதற்கு ஆயத்தம் மேற்க்கொண்டுள்ளார்.

வேறு ஏதும் விபரம் வேண்டுபவர்கள் நேரடியாக பாபாவிற்கு தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு விவாதிக்கலாம்.

முக்கிய அறிவிப்பு
இங்கு சென்றுவந்த நண்பருக்கு இன்று வரையில் (2013 அக்டோபர்) சர்க்கரை வியாதி குணமாக வில்லை என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

Sunday, April 17, 2011

காலத்தால் கரையாத காவியம் தீரன் திப்புசுல்தான்


நல்ல நட்பு கிடைப்பது அரிது அதுவும் இலக்கிய உலகில் சாதித்துக் கொண்டிருப்பவர்களுடன் நெருக்கமான உறவு கிடைப்பதும் அவர்களுடன் பழகுவதும் ஒரு அலாதியான இன்பம்.

சில வருடங்களுக்கு முன் துபையில் அறிமுகமான இலங்கையைச் சார்ந்த காவியத்திலகம் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களுடன் எனக்கு கிடைத்த நட்பை மிகவும் மதிக்கிறேன் என்றென்றும் நினைவுக் கொள்கிறேன்.

டாக்டர் ஜின்னாஹ்வைப் பற்றி தமிழகத்தில் பிரபலமான இலக்கியவாதிகளிடம் கேட்டால் அவருடைய சாதனைகளை பட்டியலிட்டு கூறுவார்கள். இலக்கிய வட்டத்தில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்திருக்கும் இவர் ஒரு மருத்தவர்.

மருந்தகம் அமைத்து கூடுமானவரையில் ஏழைகளுக்கு இலவச வைத்தியங்களை செய்தும் மலைவாழ் மக்களிடத்திற்கு சென்று வைத்தியம் செய்ததும் இவருடைய வரலாற்று சுவடுகள். மருத்துவ தொழிலில் ஈடுப்பட்டிருந்த காலத்திலும் இலக்கியத்தின் மீது அளவிலா காதல் கொண்டிருந்ததற்கு காரணம் அவருடைய தந்தை புலவர்மணி M.K.ஷரீபுத்தீன் அவர்கள்.ஆனால் பத்திரிக்கைதுறை ஜம்பவான் அறிஞர் எஸ்.டி.சிவநாயகம் அவர்களை தனது குருவாக ஏற்றுள்ளார்.

அமீரகத்தில் ஜின்னாஹ் அவர்களின் புதல்வர்களும், புதல்வியும் இருப்பதினால் அடிக்கடி துபாய் வந்துபோவது அவரின் வழமை. வந்த இடத்திலும் இலக்கிய ஆர்வலர்களின் தொடர்பை துபாயில் இயங்கிக் கொண்டிருக்கும் சங்கமம் தொலைக்காட்சி நிறுவனர் கலையன்பன் மூலம் கிடைக்க அதன் வழி எனக்கும் கிடைத்தது.

பண்டார வன்னியன் காவியம் வெளியீட்டு விழாவிற்கு தொலைபேசி மூலம் என்னை அழைத்து உரையாடிய ஜின்னாஹ் அவர்களை அதே தினத்தில் சந்தித்தேன். அந்த சந்திப்பு இன்று வரை தொடர்கிறது இறைவனின் நாட்டத்தால் என்றும் தொடரவேண்டும்.

பண்டார வன்னியன் காவிய நூலை பெற்றபோதுதான் ஜின்னாஹ் அவர்களின் சாதனைகளை படிக்கத் தெரிந்தேன். 1965-ல் இலக்கியத்தில் பிரவேசித்துள்ள இவர் கவிதை சிறுகதை புதினம் சிறுவர் இலக்கியம் மொழிமாற்றம் (கவிதை) இவைகளில் ஆர்வம் கொண்டவரானார். இவர்வெளியிட்ட நூற்கள் முத்துநகை, பாலையில் வசந்தம் மஹ்ஜபீன் காவியம்,புனித பூமியிலே காவியம்,பணிமலையின் பூபாளம் கவிதை தொகுப்பு, கருகாத பசுமை (புதினம்),பிரளயம் கண்ட பிதா, தாய்க்கென வாழ்ந்த தனயன்,(குறுங்காவியங்கள்),கடலில் மிதக்கும் மாடி வீடு (சிறுவர் பாடல்கள்),அகப்பட்ட கள்வன் (சிறுவர் படக்கதை),பெற்றமனம் சிறுகதைத் தொகுப்பு,எங்கள் உலகம் (சிறுவர் பாடல்கள்),பண்டார வன்னியன் காவியம்,திருநபிக் காவியம்,திருமறையும் நபிவழியும்,வேரறுந்த நாட்கள், ராகுலுக்கு ஒரு புது வண்டி,ஆகிய நூற்களை வெளியீட்டுள்ளார்.இன்னும் வெளிவரவேண்டிய நூற்கள் ஏராளம் இருக்கின்றன. இதுவரையில் ஏழு காவியங்களை எழுதி வெளியீட்டுள்ளார்.இதில் டாக்டர் கலைஞர் அவர்களால் எழுதப்பட்ட பண்டார வன்னியன் நாவலை 1500 பாடல்களாக காவியமாக்கியவர். அந்த காவியத்திற்கு இலங்கை அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் மிக உயர்வானவிருது சாகித்ய மண்டலம் அவருக்கு 2005-ல் வழங்கப்பட்டது.

இவருடைய மஹ்ஜபீன் காவியம், புனித பூமியிலே காவியம் ஆகிய இரு காவியங்களும் இந்திய தமிழ்நாட்டின், வேலூர் மாவட்ட மேல்விசாரம் அப்துல்ஹக்கீம் கல்லூரியின் தமிழ்துறை தலைவர் பேராசிரியர் எஸ்.முஹம்மதுஅலி அவர்களால் ஈழக்கவிஞர் ஜின்னாஹ் ஷரீபுத்தீனின் இரட்டைக் காப்பியங்கள் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஆய்வு செய்யப்பட்டு சென்னைப் பல்கலைகழகத்தில் 2006-ம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார். இன்னும் தமிழகத்தில் பல இலக்கிய நிகழ்வுகளில் மு.மேத்தா, வைரமுத்து, வாலி, கவிக்கோ போன்றவர்கள் இவருடைய காவியங்களை கவிதைகளை விமர்சித்துள்ளார்கள். சென்னையில் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக்கழகம் துவங்குவதற்கு முக்கிய காரணமாகவும் விளங்கியவர். பல அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்துக் கொண்டிருப்பவர் இருபதுக்கும் அதிகமான விருதுகளை பெற்றவர்.

இவருடைய சாதனைகள் மிக நீளமானது 68 வயதை தொட்டிருந்தாலும் இவர் இன்றும் இளைஞராகவே திகழ்கிறார் இவருடைய எழுத்துக்களுக்கு வயதாகவில்லை. இன்னும் காவியங்கள் படைத்தவண்ணமிருக்கிறார்.இறைவனின் அருளால் நிறைய நிறைய காவியங்களை இவர் படைக்கவேண்டும் என்பதே எமது பிரார்த்தனை.

2011 ஏப்ரல் 14 வியாழன் மாலை துபாயில் இவருடைய தீரன் திப்பு சுல்தான் காவியம் வெளியிடப்பட்டது.

தீரன் திப்பு சுல்தானைப்பற்றி அறிந்துக் கொள்வதற்காக இலங்கையிலிருந்து மூன்றுமுறை கர்நாடகா மாநிலத்திற்கு விஜயம் செய்து வரலாற்று சிறப்புமிக்க இடங்களை எல்லாம் பார்வையிட்டு பல நூற்களை ஆய்வு செய்து தீரன் திப்பு சுல்தானின் முழுமையான உண்மையான வரலாற்றை காவியமாக 1607 பாடல்களில் பாடியிருக்கிறார்.

இவர் அன்னிய நாட்டுக்காரராக இருந்தாலும் தன் இன மன்னனின் கரையைபோக்குவதற்கு தன்னாலான முயற்சியாக இந்த காவியத்தை இவர் செய்திருப்பது இஸ்லாமிய வரலாற்றில் பதிவுச்செய்யப்பட வேண்டிய ஒரு விசயமாக இருக்கிறது. இவர் இலங்கை மன்னன் பண்டாரவன்னியனின் காவியத்தையும் மதபேதமின்றி எழுதி இருப்பது இவருடைய மனிதநேயத்தை பறைசாற்றுகிறது.

இந்த விழாவிற்கு இலக்கிய ஆர்வமிக்கவர்கள் மட்டுமே கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் டாக்டர் ஜின்னாஹ் அவர்களைப் பற்றிய ஒரு கவிதையை நான் வாசித்தளித்தேன்.

இலங்கை மண்ணில் உதயமானவர்
இலக்கிய விண்ணில் இதயமானவர்

தோற்றத்தில் எளிமையானவர்-கவி
ஏற்றத்தில் முதன்மையானவர்

பழக்கத்தில் இனிமையானவர்-தமிழ்
புழக்கத்தில் புதுமையானவர்

நாணயம் குறையாத நளினமானவர்
ஆணவம் நிறையாத அமைதியானவர்

புகழ்தேட அகல் ஏற்றாதவர்
பொருள் தேட மருள் கொள்ளாதவர்

காவியம் படைப்பதில் இளமையானவர்
ஆவியம் படைத்தவனுக்கு இசையானவர்

திரு நபிகள் மீது காதலானவர்
திறனாய்வு செய்து காவியமாக்கியவர்

அன்னியன் எழுத்தை ஏற்றவர்-அதனால்
பண்டார வன்னியன் கவியை சாற்றியவர்

மருத்துவம் படித்த மனிதரிவர்-என்றாலும்
கருத்துரை வடித்த தமிழறிஞரிவர்

தீரன் திப்பு சுல்தானை சொந்தமாக்கியவர்
தீ யறம் சுமத்தியவர்களை சிந்தையாக்கிவர்

ஏழுக் காவியங்களை எழவைத்தவர்- எட்டாத
சாகித்யமண்டலத்தை விழவைத்தவர்

தமிழ்மாமணி தமிழியலில் சின்னமானவர்
காவியத்திலகம் கவிக்கதிரோன்பெற்ற ஜின்னாஹ் அவர்

பல அமைப்புகளில் தலைமை ஏற்றவர்
தன் உழைப்பினால் திரவியம் பெற்றவர்

வாழ்நாள் சாதனையாளரென்ற விருதைப்பெற்றவர்
வாழ்க்கை சோதனைகளில் பொறுமைப்பெற்றவர்

வாழ்க்கைத் துணைவியோடு வளமானவர்-தன்
வாழ்க்கையை துணிவோடு வலம்வருபவர்

வள்ளலாய் பலகாப்பியங்களை வழங்கவேண்டுமிவர்
வலமான தேகத்தை தரவேண்டும் வல்லோனவர்

வாழ்க வாழ்கவென வாசனமாய் வாழ்த்துமிவர்
வாஞ்சையோடு இறைஞ்சுகின்றேன் இஸ்மத் இவர்!

என்று கவிதையைப் பாடி எனது அவாவை வெளிப்படுத்திக் கொண்டேன். இவருடைய காவியங்கள் மரபுக் கவிதைகளாக இருந்தாலும் அதைப்படிக்க, படிக்க மரபு மறைந்து, வசனநடையாக கருத்துக்களை புரிந்துக் கொள்ளுமளவிற்கு, எளிமையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமீரகத்திற்கு தற்போது அவர் வருகைத் தந்து இரண்டு மாதங்கள் ஆகியிருக்கின்றன.இந்த நாட்களில் பல அமைப்புகளின் நிகழ்வுகளில் கலந்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் மூஸாநபி காவியத்தை எழுதி முடித்திருக்கின்றார்.இது எட்டாவது காவியம்!

இதுவரையில் தமிழக வரலாற்றில் ஒரு புலவர் எட்டு காவியங்களை வெளியிட்டுள்ளாரா? என்பது கேள்வியாக இருக்கிறது.! ஆனால் இஸ்லாமிய இலக்கிய உலகில் இதுவரையில் இவரைவிட அதிகளவில் யாரும் காவியங்கள் வெளியிடவில்லை என்பது வரலாறாக இருக்கிறது.பல காவியங்களை தனது சொந்த பொருட்செலவில் செய்திருக்கிறார்.

தமிழ் மீது ஆர்வம் கொண்ட மதிப்பிற்குரிய டாக்டர் ஜின்னாஹ் அவர்கள் 1999-ம் ஆண்டு புதுச்சேரி கோட்டைக்குப்பத்தில் நடைப்பெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் தமிழ்மாமணி விருதை பெற்றிருக்கிறார்.இன்னும் தமிழியல், காவியத்திலம், கவிக்கதிரோன், கலாபூசணம், நற்கவிஞர், கவிமாமணி, காவியக் கவிமணி, கவிச் சக்கரவர்த்தி, காப்பியக்கோ என்று பல விருதுகளை குவித்துள்ளார். எத்தனை விருதுகளை பெற்றிருந்தாலும் தன்னடக்கம், எளிமை இவருடன் பிறந்த ஒன்றாகவே இருக்கிறது.

இவருடைய காவியங்களனைத்தும் பல்கலைகழகங்களில் பாடங்களாக விளங்குவதற்கு தகுதியானவை என்று பேராசிரியர்கள் கூறுகிறார்கள்.

பேராசிரியர்களும், முனைவர்களும் காவியங்களை வெளியிடுவதற்கு யோசித்துக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில்; தைரியமாக ஆண்டுக்கு ஒரு காவியத்தை வெளியிடும் டாக்டர் ஜின்னாஹ் போன்ற தயாள இலக்கியமனம் படைத்தவர்களுடன் நட்புக் கொண்டிருப்பது எல்லாம் வல்ல இறைவன் எனக்களித்த வரம்.

இவர் இஸ்லாமியர் என்பதற்காக கொடுக்க வேண்டிய கௌரவங்களை மத துவேசமிக்க அரசியல்வாதிகளால் மறைக்கப்பட்டு வருகிறது; பல அமைப்புகள்தான் அதிகமான விருதுகளை வழங்கியிருக்கிறது ஆனால் அரசாங்கத்தினால் கிடைக்கவேண்டிய விருதுகள் தடுக்கப்பட்டே வருகின்றன. ஆனால் கௌரவங்களை எதிர் நோக்கி இன்று வரையில் இவர் எழுதவில்லை என்பதுதான் உண்மை.

தமிழுக்காக உயிர் கொடுப்போம் இன்னும் எதையெல்லாம் கொடுப்போம் என்று வாய்கிழிய மேடைகளில் பேசுகிறார்களேயொழிய ஒரு உண்மையான தமிழ் அறிஞரை கண்ணியப்படுத்தவோ மரியாதை செய்யவோ தெரியாதவர்காளவே அதிகாரமிக்கவர்கள் திகழ்கிறார்கள் என்பது வருத்தத்திற்குரிய செய்தியாக இருக்கிறது.

இன்றைய காலத்தில் காவியம் படைப்பவர்களை காண்பது அரிது அந்த அரிதான அறிஞர்களுக்கு தக்க ஊக்கமும் உற்சாகமும் தருவது ஒவ்வொரு தமிழனின் கடமையாக இருக்கிறது.

இந்தியாவில் தீரன் திப்புசுல்தான் காவியம் கிடைக்குமிடம்
சமநிலை சமுதாயம் பப்ளிக்கேஷன் பிரைவேட் லிமிட், எண் 5 கிரீண்ரோடு, தவ்ஸன் லைட், சென்னனை – 600006.
தொலைபேசி - +91-9840277450

Wednesday, April 6, 2011

தரம் தரமாக இருக்கும் வரையில் தரத்தை யாராலும் குறைக்க முடியாது!

எனக்கு 30 அமீரகத்திற்கு 39 தொடர் - 14

இது ஒரு பாலை அனுபவம்

ஹவுஸ்பாய் பணியிலிருந்து முதன்முதலாக வியாபாரத்தில் சேல்ஸ்மேன் பணிக்கு மாற்றத்தை கொடுத்தவன் நண்பன் சிஹாபுதீன்.

பூதமங்கலம் அப்துல்கரீம் சிஹாபுதீனுக்கு தெரிந்த நண்பர். அவர் பணிப்புரியும் இமிட்டேசன் ஜீவல்லரி கடையில் எனக்கு வேலைகிடைக்க துபாய் அல்குரேயர் சென்டருக்குள் நுழைந்தேன்.
அப்போது எனக்கு திருமணமாகி நான்கு மாதங்கள் மனமெல்லாம் மனைவியின் மணம் வீசியது.காதல் என்னிடம் கதை படித்தது.

என்ன வாழ்க்கை இது இப்படிதான் வாழ வேண்டுமோ என்றெல்லாம் மனம் புலம்பிக் கொண்டிருந்த நேரத்தில் புதிய அறிமுகங்களை நான் எழுதிய நாவல் டெலிபோன்டைரி எனக்கு கொடுத்தது.

அல்குரேயர் சென்டருக்குள் ஐநூறுக்கும் அதிகமான கடைகள் இருந்தன.பல கடைகளில் விற்பனையாளர்களாக தமிழர்கள் பணிபுரிந்தார்கள்.

அப்படித்தான் ஜெய்னா ஜீவல்லரியில் பணிப்புரிந்த மூவருடைய அறிமுகம் கிடைத்தது. ஆயங்குடி இனியவன் ஹாஜிமுஹம்மது, கீழக்கரை அபுதாஹிர், அத்திக்கடை ஹாஜா.
இனியவனின் சந்திப்பு இலக்கியம் சார்ந்திருந்தது அந்த தருணத்தில் நம்பிக்கை என்ற கையேட்டு பத்திரிக்கையை துவங்கினார் அதில் என்னை இணைத்துக் கொண்டார் அதில் கவிதைகள் எழுதினேன். ஆனால் இனியவனின் வேகம் அசுரமானதாக இருந்தது.
இன்று அவர் டோஹா கத்தாரில் பணியில் வணிகத்தில் தலைசிறந்து விளங்குகிறார் பன்மொழிகளை கற்று பலரிடமும் பழகுகிறார் அவரிடம் தமிழ்தாகம் தழைத்திருந்தது அத்தருணங்களில் எனது மெய்ஞ்ஞானசபைக்கு அழைத்துச் சென்றேன் ஆனால் மெய்ஞ்ஞானம் மறைந்துக் கொண்டு அவரிடம் கேள்வி ஞானம் முன்னின்றது.அதனால் தான் சொன்னேன் ஞானம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

கீழக்கரை அபுதாஹிர் என் எழுத்தின் மூலமே இணைந்தவர் என் வாழ்க்கையின் திருப்பு முனை இவர்தான். இவருடைய நண்பர் ஹிலால் முஹம்மதின் அறிமுகம் பெற்றுத்தந்தார். பணிமுடிந்த தருணங்களில் இரவில் ஒன்றுக்கூடுவோம் ஞானம் பேசுவோம் அவர்களுக்கு மத்தியில் நான் இளையவன் ஆனாலும் அதிகமாக பேசி இருக்கிறேன்.

அந்த ஞான நட்புதான் நகைக்கடையில் பணியமர்த்தி தந்தது என்று கூறுவதில் சந்தோசமடைகிறேன்.

நட்பு எல்லோருக்கும் உண்டாகலாம் ஆனால் எப்படி உண்டானது என்பதை பொருத்தே அந்த நட்பின் வலிமை நிறைந்திருக்கும் மனதில் என்றும் மலர்ந்திருக்கும். ஆனால் எனக்கு இவர்களிடம் மெய்ஞ்ஞானத் தேடலில் அதைப்பற்றிய வாதாடலில் உண்டானது.

ஞானம் நாடியவர்களுக்கு தான் கிடைக்கும்.

நம் கையில் கிடைத்திருக்கும் கல்லை கூலாங்கல் என தூக்கி வீசுவதற்கு எத்தனிப்போம் ஆனால் மகான்கள் அதில் வைரம் இருப்பதை உணர்த்துவார்கள்.
நாம் இறைவனை எங்கேயோ தூரமாக வைத்திருப்போம் ஆனால் மகான்கள் இறைவனை நம் பிடரியின் நரம்பிற்கும் சமீபமாக இருப்பதை உணர்த்துவார்கள்.

ஞானவேட்கை இருந்தாலேயொலிய அதைப்பற்றி பேச அல்லது அதைக் கேட்கமுடியாது.மகான்களிடம் படித்துக் கொண்டிருப்பவர்கள் தான் ஞானிகள்.
அந்த ஞானவேட்கை நிறைந்தவர்களாக திகழ்ந்தவர்கள் சகோதரர்கள் ஹிலால் மற்றும் அபுதாஹிர் இருவரும்.

நான் பணிப்புரிந்த அல்குரேயரில் பணி இழந்த போது ஹிலால் மற்றும் அபுதாஹிர் அவர்கள் என்னை நகைக்கடையில் பணியமர்த்த என்னிடம் ஒப்புதல் கேட்டார்கள். இரண்டு தினங்கள் அவகாசம் கேட்டேன். என்னிடம் பயம் நிறைந்திருந்தது என்னை தரம் குறைத்துவிடுவார்களோ என்ற பயம் இருந்தது.அச்சமயத்தில் ஹிலால் அவர்களின் தைரியமான வார்த்தைகள்தான் இன்றுவரையில் நகைக்கடையில் நடமாட வைத்துக்கொண்டிருக்கிறது.

நாம் தரமாக இருக்கும் வரையில் யாராலும் நம்தரத்தை குறைத்துவிட முடியாது வேண்டுமானால் உரசி பார்க்கலாம்.

நல்ல நட்புதான் ஒரு நல்லவேளையை பெற்றுத்தந்திருக்கிறது.தங்கக் கடையில் நுழைந்ததும் எங்களின் சந்திப்பில் இடைவெளி ஏற்பட்டது அது எனக்கு பணியினால் ஏற்பட்ட பளுவினாலும் ஹிலால், அபுதாஹிர் அவர்களுக்கு இறைத்தேடலின் சிந்தனையிலும் இடைவெளி நீண்டது.

ஆண்டுகள் பல கடந்திருந்தாலும் அவ்வபோது முகமுன் சந்திக்கொள்வோம் ஆனால் ஹிலால் அதிகமான பொருள் சம்பாதித்தளவு அருளையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். போதுமென்ற மனம் நிறைந்ததால் தனது இறை(காதல்) நேச வாழ்க்கைக்காக அமீரக வாழ்க்கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தாய் மண்ணில் நிரந்தரமாக பாதம் பதித்துவிட்டார்.

அபுதாஹிர் அவர்கள் பி.பி.ஜீவல்லரியை நிர்வகித்து வருகிறார் இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது நேற்றைய தினம் அவரை சந்தித்து உரையாடினேன். எங்களின் பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொண்டோம்.

இப்படிபட்ட தூய்மையான நண்பர்களை கிடைக்க செய்த எல்லாம் வல்ல இறைவனுக்கு என்றென்றும் நன்றிக்கடன்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஞானம் கற்றுக் கொள்ளுங்கள் நாம் ஞானியாக அல்ல மனிதனாக வாழ்வோம்.!

தொடர்வோம்...

Monday, March 21, 2011

துரிதமாக ஒரு பயணம் துருக்கி வரையில்...

குறிப்பு - இது தொடரல்ல நீளமான பதிவு

துருக்கி இஸ்தாம்புலில் நடக்கவிருக்கும் தங்க நகைகளின் 2011 கண்காட்சியை காண்பதற்கும், புதிய டிசைன்களை தேர்வு செய்வதற்கும் நான்கு தினங்கள் அலுவலக பணியாக நான் சென்றிருந்தேன்.

பலநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்னோடு துபாயிலிருந்து எமிரேட்சில் இஸ்தாம்புலுக்கு பயணம் செய்தார்கள். பல இந்தியர்களும் அதில் இருந்தாலும் சில தமிழர்கள் தமிழில் பேசிய சப்தம் கேட்கவே எனக்குள் பரவசம், நான் தனிமைப்பட்ட உணர்வை அந்த தமிழர்களின் பேச்சு நீக்கியது. அவர்கள் யார்? என்ன ஏது என்ற விபரமோ, அறிமுகமோ செய்துக்கொள்ளவில்லை ஆனால் அவர்கள் உரையாடிய தமிழ் என்னை சந்தோசப்படுத்தியது, நம்பிக்கை ஊட்டியது ஆம் தாயோடு பயணிப்பதைப் போன்ற உணர்வைக் கொடுத்தது நமது தாய்மொழி.

விமானத்திலிருந்து இந்த பகுதியை எழுதிக்கொண்டிருக்கிறேன் எமிரேட்சில் எந்த நாட்டுக்கு பயணம் செய்தாலும் தமிழ் படம் இரண்டு ஒளிபரப்புகிறார்கள் அட்டவணைப்படி இந்த மாதம் ஜக்குபாய், அசல் இரண்டு படங்களைப் பார்த்தேன்.

இதன் பிறகு ஹோட்டல் அறையிலிருந்து பதிவுசெய்கிறேன்.
என்னை அழைப்பதற்கு எங்கள் நட்புக் கம்பெனியின் ஊழியர் நண்பர் ஆர்தோ துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் வந்திருந்தார்.விமான நிலையத்தில் வெப்பத்தை உணர்ந்த நான் வெளியில் வந்ததும் குளிரை சுவாசித்தேன். ஆம் 17 டிகிரி இது சாதாரணம் என்கிறார்கள் துருக்கியர்கள் மைனஸ் எல்லாம் வருமாம்.

மாலை 6.00 மணிக்கு துருக்கி விமான நிலையத்திலிருந்து நான் தங்கப்போகும் வாவ் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். விமான நிலையத்திலிருந்து 10 நிமிடங்கள் தான் வாவ் ஹோட்டல் இதற்கு எதிர்புறம் தான் நகை கண்காட்சியின் அரங்கம் இருக்கிறது எளிதாக ஐந்து நிமிடத்தில் நடந்துவிடலாம்.

ஹோட்டலில் முன் பதிவு செய்யப்பட்டிருந்ததால் அதிகநேரம் எடுக்கவில்லை சில நிமிடங்களில் 17 வது மாடியின் அறை சாவியை தந்தார்கள்.

அறையின் ஜன்னல் வழியாக கிழக்கு பகுதி துருக்கியை காணமுடிந்தது சாலைகளில் வாகனங்கள் எந்தநேரமும் சென்றுக்கொண்டே இருந்தன சில தருணங்களில் வாகன நெரிசல் டிராபிக் இருந்தது.


இரவு 8.00 மணிக்கு அறையிலிருந்து ஹோட்டல் உணவகத்திற்கு வந்தேன் துருக்கி நாட்டு உணவுதான் வைத்திருந்தார்கள் சுவையாகதான் இருக்கும் ஆனால் சுவைப்பதற்கு பசி அவ்வளவாக இல்லை அருகில் சூப்பர் மார்கெட் இருக்கிறதா என்று வினவினேன்.நான் மறந்துபோன பல்பேஸ்ட் வாங்குவதற்கு.

நடக்கும் தூரத்தில் ஏதும் இல்லை சில மைல்கள் போகனும் மெட்ரோ இரயிலை உபயோகப்படுத்துங்களேன் என்றார்கள்.

என்னை அழைப்பதற்கு வந்த நண்பர் ஆர்தோ தனியாக செல்ல வேண்டாம் ஏமாற்றுவார்கள் என்று கூறிவிட்டு போன வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தது.இருந்தாலும் ஒரு குருட்டு தைரியத்தில் ஹோட்டலில் இருந்து புறப்பட்டேன்.

மெட்ரோ ஸ்டேசன் வரையில் நடப்பதற்கு 7 நிமிடங்கள் ஆகின விளக்கு வெளிச்சம் ஏதும் இல்லை மனமெல்லாம் பயம் இருந்தாலும் ஒரு நம்பிக்கை அவ்வபோது தைரியத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.ஏதும் நடக்காது அப்படி நடந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது.
மெட்ரோ ஸ்டேசன் வந்துவிட்டேன் எந்த ஸ்டேசனில் இறங்குவது எந்தப்பக்கம் போகும் இரயிலில் ஏறுவது குழப்பம்.
டிக்கெட் எடுக்கும் மெசின் அருகில் நின்று கொண்டிருந்தேன்.இரவு நேரம் என்பதால் ஒன்று இரண்டு நபர்கள் தான் வருவதும் போவதுமாக இருந்தார்கள் .நான் நிற்பதை பார்த்து விட்டு இருவர் துருக்கி மொழியில் விசாரித்தார்கள் நான் ஆங்கிலத்தில் பேச அவர்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் கொஞ்சம் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் பேசினார்கள் சூப்பர்மார்கெட் போகவேண்டும் என்று கேட்டுக் கொள்ள அவர்களும் இரண்டு ஸ்டேசனுக்கு பிறகு இறங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்.

இந்த மெட்ரோவில் என்னைத் தவிர அனைவரும் குளிருக்காக வேண்டி ஜாக்கெட் அணிந்திருந்தார்கள் அந்த ஒன்றே என்னை அன்னியனாக அனைவருக்கும் மத்தியில் காட்டிக்கொடுத்தது. எந்த நாடு என்று என்னை விசாரித்தார்கள் இந்தியா என்றேன் இஸ்தாம்புல் எப்படி இருக்கிறது? கேட்டார்கள் நல்ல மனிதர்கள் வாழக்கூடிய நகரம் என்றேன் கை குலுக்கினார்கள்.

அவர்களிடமிருந்து விடைப்பெற்று ஸ்டேசனில் இறங்கினேன். மெட்ரோவில் எந்த ஸ்டேசனில் ஏறி இறங்கினாலும் ஒரு லிரா 75 குருஸ் ஒரே தொகைதான். (துருக்கியின் பணத்திற்கு லிரா என்றும் காசுக்கு குருஸ் என்றும் அழைக்கிறார்கள்) இறங்கி ஸ்டேசனின் வெளியில் நடந்தேன் அப்படியே நமது சிங்கார சென்னையின் நினைவைத் தந்தது.பிளாட்பாம் கடைகள் ஏராளம் இருந்தது கூட்டம் நெரிசல் இருந்தது ரோட்டைக் கடப்பதற்கு பாலத்தின் வழியாக நடந்தேன் பாலத்தின் இரு பக்கங்களிலும் கடைகள் இருந்தன.கடந்துச் சென்றேன் உணவகங்கள் வரிசையாக இருந்தது அதன் அமைப்பு கிட்டத்தட்ட தமிழர்களின் உணவகங்கள் போலவே அமைந்திருந்தது.

அதைப்பார்த்ததும் மனசுக்கு சென்னையில் இருப்பதைப்போன்ற உணர்வு இருந்தது.

இன்னும் தஞ்சைப் பகுதியில் இஸ்லாமியர்களை துலக்கர்கள் என்று அழைப்பதுண்டு. அது துருக்கியிலிருந்து வணிகத்திற்காக இந்தியா வந்து குறிப்பாக தமிழகத்தில் அதிகமான வணிகம் செய்தவர்கள் துருக்கியர்கள்.காலப்போக்கில் தமிழகத்திலேயே அவர்கள் தங்களின் வாழ்கையை அமைத்துக் கொண்டு நிரந்தரமாக தங்கினார்கள் அவர்களை துருக்கர்கள் என்று அழைத்து வந்தனர் நாளடைவில் அது துலக்கர் என்று மறுவி விட்டது.அந்த துருக்கியர்கள் வடிவமைத்த உணவகங்கள்தான் இன்றும் நமது தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருந்து வருகிறது.

துருக்கியில் சமதளமான தெருக்கள், சாலைகள் இல்லை மேடு, பள்ளம் நிறைந்தாக இருக்கிறது. நான் நடந்துச் சென்ற அந்த தெருவின் எல்லையில் ஒரு சூப்பர்மார்கெட் இருந்தது பல்பேஸ்ட் வாங்கிக் கொண்டு கிங் பர்கரில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் மெட்ரோவை நோக்கி நடந்தேன். சரியாக நான் இறங்க வேண்டிய ஸ்டேசனில் இறங்கி ஹோட்டலுக்கு வந்துச் சேர்ந்தேன்.

மறுதினம் அதிகாலையில் துபாயில் கண்விழிப்பதைப் போன்றே 6.00 மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது காலை தொழுகையை நிறைவு செய்துவிட்டு லெப்டப்புடன் அனுபவங்களை பதிவு செய்ய தொடங்கினேன்.

நகை கண்காட்சி நடக்கும் அரங்கத்திற்கு புறப்பட்டேன் காலை நேரத்தில் வானம் மேகமூட்டமாக இருந்தது.சில நிமிடங்கள் நடந்தேன் அரங்கத்தின் வாயிலில் சரியான கூட்டம் அதனால் பாதுகாப்பும் அதிகமாக இருந்தது. விசிட்டர்கள் தங்களை பதிவு செய்வதற்கு பாஸ்போர்ட் மற்றும் விசிட்ங் கார்டு கொடுக்க வேண்டும் இதைக் கொடுத்து விசிட்டர் நுழைவுச் சீட்டு வாங்க வேண்டும் இதைப் பெறுவதற்கு சுமார் மூன்று மணிநேரம் வரிசையில் நின்றுக் கொண்டிருந்தோம். எனக்கு முன்னால் சில தமிழ் முகங்கள் நின்றுக் கொண்டிருந்தன பரிச்சயமில்லாதவர்கள் இருந்தாலும் அவ்வபோது எங்களின் பார்வை ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவிதம் நீயும் தமிழனா நானும்தான் என்பதை போல இருந்தது.

ஒவ்வொரு விசிட்டர்களையும் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவு செய்கிறார்கள் அதன் நகலை நுழைவுச் சீட்டாக தந்தார்கள்.இந்த கண்காட்சிக்காக பல நாடுகளிலிருந்து பார்வையாளராகவும் சிலர் அங்கு ஸ்டால் அமைத்து வர்த்தகம் செய்வதற்கும் வருகைப் புரிந்திருந்தார்கள்.

இத்தாலி நாட்டில் ஆண்டு தோறும் பிப்ரவரியில் நகை கண்காட்சி நடக்கும் அதுதான் பிரமாண்டமாக இருக்கும் அதற்கு அடுத்தபடியாக துருக்கி இஸ்தாம்புலில் இந்த ஷோ இதில் நமது இந்திய சகோதரர்கள் குஜராத்திகள் வெள்ளி நகைகள் மற்றும் கலர் கற்கள் வைத்து ஸ்டால் அமைத்திருந்தார்கள்.

ஒரு இந்தியரின் ஸ்டாலில் புத்தகமாக இருந்தது அருகில் சென்று விசாரித்தேன் அவர் கூறினார் நகைகளின் டிசைன்கள் அடங்கிய நூற்கள் மற்றும் பல ஆங்கில சிற்றிதழ்களில் புதிய வடிவத்தில் வெளியான நகைகளின் டிசைன்கள் அடங்கிய இந்த நூல்களை மட்டுமே விற்பனை செய்கிறார் மும்பையைச் சேர்ந்த சகோதரர்.

பெரும்பாலானவர்கள் பார்வையாளர்களுக்கு தங்களின் டிசைனின் கேட்டலாக்குகளை அழகான பைகளில் வைத்து தங்கள் ஸ்டாலின் முன் வைத்துவிடுகிறார்கள் தேவையானவர்கள் அதை எடுத்துச் செல்லலாம். அனைத்து ஸ்டால்களிலுமே இனிப்பு வகைகளை வைத்து வரக்கூடிய பார்வையாளர்களை உபசரிக்கிறார்கள்.

பெரும்பாலான ஸ்டால்களில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பார்வையாளர்களுடன் ஆங்கிலம் மற்ற மொழிகளை உரையாடுவதற்கு துருக்கிய நாட்டைச் சேர்ந்த இளம் பெண் பிள்ளைகளை உலாவரச் செய்துள்ளார்கள் சிலர் தங்களின் நகைகளை அந்த இளம் பெண்களுக்கு அணிவித்து அதன் அழகை கண்டு ஆர்டர்களை பெறுவதற்கும் ஸ்டாலின் வாயில் நிறுத்தி இருந்தார்கள்.நாம் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக அவர்கள் பதில் சொல்வதில்லை அந்த ஸ்டாலின் உரிமையாளரிடம் கேட்டு பதிலளிக்கிறார்கள் பெரும்பாலன துருக்கியர்களுக்கு ஆங்கிலமொழி தெரியவில்லை.

நகைகண்காட்சி நடக்கும் அந்த அரங்கம் மிக நீளம் அகலமுமானது ஆதலால் பகுதி பகுதியாக பிரித்து வைத்திருக்கிறார்கள் முழுவதையும் சுற்றி பார்க்க கால்கள்தான் வேண்டும் ஆங்காங்கே அமர்ந்து ஓய்வெடுக்க இருக்கைகளும் உணவகங்களும் இருக்கின்றன.

நான் சுற்றி பார்த்தவரையில் புதிய டிசைன்கள் சில இருந்தன அவைகள் எடைக்குறைவாகவும் கற்கள் இல்லாத டிசைனாகவும் அனைவரும் எளிதில் வாங்கக் கூடிய டிசைனாகவும் பார்த்து தேர்வு செய்து வைத்துள்ளேன் அதன் செய்கூலி அதிகமாக இருக்கிறது முதல் சுற்று பேச்சுவார்த்தை அந்த வணிகருடன் முடித்துள்ளேன் இரண்டாவது சுற்று பேச்சு வாரத்தை நாளை நடத்துவேன் இதற்கிடையில் எனது கம்பெனியின் நிறுவனரும் நாளை கண்காட்சிக்கு பார்வையிட வருகிறார் அவருடன் கலந்து இறுதியாக ஆர்டர் செய்வோம்.

மாலை ஏழு மணியுடன் கண்காட்சி அரங்கம் மூடப்படும் மீண்டும் மறுநாள் காலை 10.00 மணிக்கு திறப்பார்கள்.அன்று மாலை மழை பெய்திருந்தது இரவு ஆர்த்தோ துருக்கி நண்பர் எனக்கும் அவருடைய வாடிக்ககையாளர்களான துபாய் மஹல்லாத்தி ஜூவல்லரியில் பணிப்புரியும் இந்தியர்களுக்கும் விருந்தளித்தார். அங்குள்ள உணவகங்கள் பெரும்பாலும் பெரிதாகவே அமைத்திருக்கிறார்கள். ஒரு உணவகத்திற்குள் சென்றால் சுமார் 500 நபர்கள் அமர்ந்து சாப்பிடக்கூடிய அளவிற்கு இடவசதிகள் இருக்கின்றன.


துருக்கி உணவு மிகவும் சுவைமிக்கதாக இருக்கிறது கத்தரிக்காய் என்றாலே எனக்கு பிடிக்காது ஆனால் அதே கத்தரிக்காயை இவர்கள் சமைத்து வைத்திருந்த விதம் மிகவும் ருசியாக இருந்தது பச்சை காய்கறிகளை மிகவும் பக்குவப்படுத்தி ருசியை கூட்டி செய்திருக்கிறார்கள் மாமிசங்களும் மிருதுவாகதான் இருந்தன ஆனால் பச்சை காய்கறியின் மீது அளவு கடந்த அன்பையும் பாசத்தையும் எனக்குள் துருக்கியர்கள் ஏற்படுத்திவிட்டார்கள்.

உணவுக்கு துருக்கியர்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள் ஒரு பொருளை ஒரேமாதிரி சமைப்பதில்லை பலவிதமான ருசிகளில் சமைத்து அந்த பொருளை விரும்பாதவர்களையும் விரும்ப வைக்கக் கூடிய தந்திரம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் விரைவில் உணவுக்காக ஒரு ஷோ ஏற்பாடு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.( அப்படி ஒரு ஷோ நடத்தினால் எவ்வளவு சிலவானாலும் சரி கண்டிப்பாக அம்மணியை அழைத்துக் கொண்டு வந்துவிடுவேன்.)

விருந்துக்கு வந்த ஆர்த்தோ வாடிக்கையாளர்களான ஹைதராபாத்தைச் சார்ந்த சகோதரர்கள். இவர்கள் ஏற்கனவே எனக்கு பரிட்சையமானவர்கள்தான் அவர்களும் துபை கோல்டு மார்க்கெட்டில் பணிபுரிபவர்கள் ஒன்றாக சந்தித்து உணவருந்தியதில் எங்களுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

இரவு உணவருந்திவிட்டு வரும் வழியில் நல்ல மழைபெய்தது அதனுடன் குளிரும் சேர்ந்து எங்களை குளிரவைத்தது.விடுதிக்குள் வந்து வெப்பமூட்டும் மெஷினின் காற்றை அறைக்குள் நிரப்பி உறங்கினேன்.

விடிந்தது பொழுது எனது அறையின் ஜன்னல் வழியாக காலைக்கதிரவனின் உதயத்தையும் கனமில்லாத கருணையாக பெய்துக் கொண்டிருந்த மழையையும் என்னால் கண்டு ரசிக்க முடிந்தது.


வழக்கம்போல இரண்டாம் நாளாக கண்காட்சி அரங்கத்திற்கு சென்றேன் முதல் நாள் கூட்டத்தைவிட இன்று கொஞ்சம் அதிகமாக இருந்தது.இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஜூம்ஆ தொழுகைக்கு செல்லவேண்டுமே எப்படி எங்கு யாருடன் செல்வது என்ற சிந்தனை அதிகாலையிலிருந்தே இருந்துக் கொண்டிருந்தது.

துருக்கியின் மிகவும் பிரபல்யமான சுல்தான் பள்ளிவாசலுக்கு சென்று தொழுகை புரியவேண்டும் என்ற ஆவல் என்னிடம் இருந்தது ஆனால் இன்று எனது கம்பெனியின் நிறுவனர் அதாவது முதலாழி வருகிறார் என்னை கண்காட்சியில் சந்திப்பதாக கூறியிருந்தார் எந்த நேரத்தில் தொலைபேசியில் தொடர்புக் கொள்வார் என்று தெரியாததினால் அங்கு சென்று வருவதற்கு காலம் போததாது என்று தெரிந்ததால் இன்னொரு வாய்ப்பை எதிர்பார்த்து என்எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.

கண்காட்சியை வலம் வந்துக் கொண்டிருந்தபோது துபாயில் அசினா ஜூவல்லரியில் பணிப்புரியும் தமிழ் நண்பர்கள் அய்யுப் மற்றுமொருவர் நின்றுக் கொண்டிருக்க அளவிலா ஆனந்தத்துடன் இரண்டு தினங்களுக்குபிறகு அவர்களுடன் தமிழில் பேசுவதற்கு வாய்ப்பாக இருந்தது. சில நிமிடங்களில் அவர்களும் விடைப்பெற்று சென்றார்கள்.

ஹால் எண் 3-ல் ஜூம்ஆ தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுப்பு செய்தார்கள் குழப்பத்துடன் இருந்த நான் மகிழ்ச்சியுடன் தொழச்சென்றேன்.ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கு தொழுதக் காட்சி மனதில் பிரமாண்டத்தை தோற்றிவித்தது.

சரியாக தொழுகை முடிந்து சில நிமிடங்களில் எனது கம்பெனியின் பாஸ் என்னை அழைக்க அவரைச் சந்தித்தேன்.நேற்று நான் நகைகளை தேர்வு செய்த கம்பெனிகளுக்கு பாஸ்சுடன் சென்று எங்களின் ஆர்டர்களை உறுதி படுத்திக் கொண்டோம் அதில் ஒரு சப்ளையர் இன்று இரவு தங்கள் கம்பெனி நடத்தும் பேஷன் ஷோவிற்கும் அங்கு நடக்கும் இரவு விருந்துக்கும் எங்களை அழைத்தார் அவர் தந்த இன்விட்டேசனை பெற்றுக் கொண்டு சில மணி நேரங்கள் என்னுடன் உலாவந்த பாஸ் அவருடைய நண்பர்களை கண்டதும் என்னிடமிருந்து விடைப்பெற்றார் நாளை சந்திப்போம் என்று!

நாளை வெளியில் சென்று சுற்றிப் பார்க்கலாம் என்று திட்டமிட்டிருந்த எனது திட்டத்தில் இடி விழுந்ததினால் உடனடி தீர்மானம் செய்தேன் இப்பவே புறப்பட்டு செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வந்துவிடாலாம் எனது குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வேறு வாங்கவேண்டும் என்பதினாலும் சந்தர்பத்தை கிடைத்த நேரத்தை நழுவவிடாமல் மாலை 6.00 மணிக்கு புறப்பட்டேன்.

இஸ்தாம்புல் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த நான் அங்கிருந்து கிராண்ட் பஜார் என்று அழைக்கும் பழைமை வாய்ந்த அந்த மார்க்கெட்டிற்கு டெக்ஸியில் செல்வதாக இருந்தால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் ஆகும் என்றார்கள் காரணம் டிராபிக். ஆனால் மெட்டோவில் சென்றால் ஒரு மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம் என்றதும் நான் மெட்ரோவை தேர்வு செய்தேன்.

ஸ்டேசனில் நின்றுக் கொண்டிருந்த ஒருவரிடம் கிராண்ட் பஜார் செல்ல வேண்டும் எந்த ஸ்டேசனில் இறங்கனும் என்று கேட்டேன் அவருக்கு ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் தெரியவில்லை ஆனால் அவர் அருகில் நின்றுக் கொண்டிருந்த துருக்கியர்களிடம் ஆங்கிலம் தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறீர்களா என்று கேட்டு இருவரை அழைத்துவந்து என்னிடம் பேச வைத்தார்.

நான் போகவேண்டிய இடத்தை சொன்னதும் செல்லும் வழியில் இன்டர்சேன்ஜ் இருக்கிறது நீங்கள் இன்னொரு இரயில் மாறவேண்டும் என்று கூறிவிட்டு நான் கிராண்ட் பஜாரை கடந்து தான் செல்கிறேன் அந்த நிறுத்தத்தில் உங்களை இறக்கிவிடுகிறேன் என்றதும் துருக்கியர்களின் பண்பாட்டை எண்ணி மிகைத்தேன்.

மேட்ரோவிலிருந்து இன்டர்சேன்ஜில் மற்றொரு ஸ்ட்ரீட் மெட்ரோவிற்கு மாறினேன் இந்த ரெயில் கார் பஸ் போகும் ரோட்டிலேயே சில இடங்களில் மட்டும் செல்கிறது பெரும்பாலான இடங்களில் தனிச் சாலையில் செல்கிறது.

மேட்ரோ எந்தந்த ஸ்டேசனில் நிற்கும் என்ற இடத்தின் பெயர்களைப் பதிவு செய்து வைத்துள்ளார்கள் அதில் நான் ஏறிய ஸ்டேசனையும் இறங்க வேண்டிய ஸ்டேசனையும் துருக்கி நண்பர்கள் காண்பிக்கவே அதை துருக்கி மொழியிலேயே ஆங்கிலத்தில் குறித்துக் கொண்டேன்.



கிராண்ட் பஜாரில் இறங்கி எந்தப் பக்கம் போக வேண்டும் என்று தெரியாமல் நடந்தேன் எதிரில் பழைமையான பிரமாண்டமான பள்ளிவாசல் தெரிய அதனுள் சென்றேன் அது சுல்தான் பள்ளி தொழுதேன் வேலைபாடுகள்நிறந்த கலைநயத்துடன் கட்டப்பட்டிருக்கிறது. அதை பார்த்துவிட்டு மார்கெட் பக்கம் நடந்தேன் மிக நீளமான தெரு இரு பக்கங்களிலும் கடைகள் இந்த பகுதி வர்த்தகர்கள் அரபி மொழியும் ஆங்கிலமும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு பொருளுக்கு விலைக்கேட்டால் நமது மொழியை வைத்தே நாம் சுற்றுலாவாதி என்பதை மோப்பம் பிடித்து விலையை அதிகமாக கூறுகிறார்கள் இங்கு பேரம் பேசிதான் பொருட்களை வாங்க வேண்டி இருக்கிறது.

துபாய் மார்கெட்டை ஒத்துப்பார்த்தோமேயானால் துருக்கி மார்கெட் விலை அதிகம் என்றே கூறலாம். பொருட்களின் தரம் நல்லதரமானதாகவே தெரிந்தது அதனாலேயே விலை அதிகம் கொடுக்க வேண்டி இருக்கிறது.

இரவு ஒன்பது மணிவரையில் சுற்றிவிட்டு மீண்டும் மெட்ரோ பயணம் ஆனால் யாரிடமும் வழி கேட்கவில்லை வந்த வழியை தெரிந்துக் கொண்டேன் வரும் வழியில் குளிர் என்னை நன்றாக நோவ புடைத்தது.

இன்று மூன்றாவது தினம் காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் இருந்தது ஹோட்டல் அறையில் வெப்பக்காற்று இயந்திரம் இருப்பதால் வெளியில் சீதோசனம் எப்படி இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை காலை 10.30 க்கு கண்காட்சி அரங்கத்திற்கு புறப்பட்டேன் ஹோட்டலை விட்டு வெளியில் வந்தேன் ஜில்லென்று என்னை வைத்து குளிர் சாதனப்பெட்டியில் திணித்ததைப் போன்று இருந்தது நான் விடும் மூச்சு காற்று புகையாகவே வெளியில் வந்தது இன்று 7 டிகிரி குளிர்.

கண்காட்சி அரங்கில் உலாவந்தபோது சவுதிஅரேபிய நாட்டைச் சேர்ந்த எங்களின் வாடிக்கையாளரை சந்தித்தேன் என்னைக் கண்டதும் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது என்னுடனேயே கண்காட்சி அரங்கத்தில் உலாவந்தார்கள்.

முதல்தினம் பரிச்சயமில்லாத தமிழ் முகங்களை கண்ட நான் அவர்களை இப்பொழுது நேருக்கு நேராக ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டோம். கொஞ்சமும் தாமதிக்காமல் ஆங்கில மொழியில் பேசாமல் நேரடியாக நீங்க எந்த ஊர் என்று தமிழில் என்னை விசாரிக்க நான் பதில் சொல்ல எங்களின் விசிட்டிங் கார்டுகளை பரிமாறிக்கொண்டோம்.

கோயமுத்தூரிலிருந்து ஐந்துபேர்கள் இந்த கண்காட்சியை காண்பதற்கு வருகைப்புரிந்துள்ளார்கள். இவர்கள் நகை பட்டறைகள் வைத்திருக்கிறார்கள் இந்த கண்காட்சியில் புதிய டிசைன்களை காண்பதற்கும் அவர்களின் டிசைன்களை காட்டுவதற்கும் வருகைப் புரிந்ததாக கூறினார்கள் மகிழ்வுடன் கை குலுக்கிக் கொண்டு விடைபெற்றோம்.
மாலை பேஷன் ஷோவிற்கு அழைத்த சப்ளையரின் அழைப்புக்கு போக முடியவில்லை என்னுடன் சுற்றிக் கொண்டிருக்கும் சவுதியர்கள் இரவு விருந்துக்கு அழைத்துச் சென்றார்கள். போகும் வழியில் ஷாப்பிங் மால் சென்றோம் கூட்டம் அதிகமாக இருந்தது அது வாரத்தின் இறுதி நாள் சனிக்கிழமை இரவு விடிந்தால் விடுமுறை என்பதால் மக்கள் தங்களின் நேரத்தை மாலில் கழித்தனர். ஓவ்வொரு பொருளின் விலையை பார்த்தால் அங்குள்ளவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை நமக்குதான் எக்சேன்ஜ் ரேட் எகுறுகிறது சுற்றினோமே தவிர ஒன்றும் யாரும் வாங்கவில்லை.


எங்களை இரவு விருந்துக்கு அழைத்துச் சென்ற சப்ளையர் ஒன்னரை மீட்டர் கபாப் ஆர்டர் செய்து திகைப்பூட்டினார். நம்ம ஊரில் விஜிபியில் நீளமான மெகா தோசையை அறிமுகம் செய்திருந்தார்களே அதுபோல ஒன்னரை மீட்டர் நீளத்திற்கு கபாப் அதாவது ஆட்டுக்கரியை அரைத்து இன்னும் சில பொருட்களை கலந்து அதை நெருப்பில் சுட்டு இப்படி வைத்தார்கள். கபாப் சாப்பிட்டிருக்கிறேன் ஆனால் இது நீளம் பெரிது எப்படி இவ்வளவு பெரிய காபாபை சாப்பிடப்போகிறமோ என்று ஆச்சரியப்பட்ட எனக்கு அரைமணியில் காளியாகிபோனது ஆச்சரியமாக இருந்தது.

இரவு 12 மணிக்கு இஸ்தாம்புல்லை காரில் அமர்ந்து சுற்றிப்பார்த்தேன் சுமார் இரண்டு கோடி மக்கள் இஸ்தாம்புல் நகரத்தில் வாழ்கிறார்கள். இதில் ஒரு பகுதி ஆசிய கண்டமாகவும் ஆற்றின் பாலத்தை கடந்து மறுபுறம் ஐரோப்பிய கண்டமாகவும் திகழ்ந்துக் கொண்டிருக்கிறது. துருக்கி நாட்டு பெண்கள் இளம் தலைமுறைகள் பெரும்பாலோர் நமது இந்திய கலாச்சாரமான மூக்குத்தி அணிவதையும் புகைப்பதையும் புதிய நாகரீகமாக கருதுகிறார்கள்.
ஐரோப்பிய கலாச்சாரம் இவர்களிடம் அதிகம் தென்பட்டாலும் ஒரு எல்லைக்குள் நிற்கிறார்கள் துருக்கிய இஸ்லாமிய நாடு என்பதால் 90 சதவீதத்தினர் இஸ்லாமியர்களாக வாழ்வதினால் இஸ்லாமிய கட்டுப்பாட்டுக்குட்பட்டு வாழ்கிறார்கள்.

நான்காம் நாளான இன்று பகல் 12 மணிக்கு எனது துருக்கி பயணத்தை முடித்துக் கொண்டு ஹோட்டலை செக்அவுட் செய்துவிட்டு விமானநிலையத்தை நோக்கி புறப்பட இருக்கிறேன் இதுவரையில் ஹோட்டல் அறையிலிருந்து பதிவு செய்துக் கொண்டிருக்கிறேன் .
இனி துருக்கி விமான நிலையத்தில் நேரம் கிடைத்ததால் இதோ உங்களுடன்…
பெரிய விமான நிலையமாகவும் டூட்டி ப்ரீ கடைகள் தனித்தனியாகவும் இருக்கிறது.

பல மணிநேரங்கள் டிரான்சிட் பயணிகளாக அமர்ந்து இருப்பவர்களுக்கு ஐந்து ஈரோவில் இயந்திர மசாஜ் செய்துவிடுகிறார்கள்.

டூட்டிப்ரீயில் எதை வாங்கினாலும் ஈரோவின் விலையை தான் லேபிளில் இருக்கிறது.
துருக்கி நாடு சுற்றிப்பார்க்ககூடிய வரலாற்று சிறப்புமிக்க பல இடங்கள் நிறைந்த நாடு ஆனால் விலைவாசி தங்கும் அறைவாடகை மற்றும் டெக்ஸ உணவு இவைகளை துபாயுடன் இணைத்து பார்க்கும்போது விலை துருக்கியில் அதிகமாக இருக்கிறது.

சுற்றுலாவில் நாட்டமுடையவர்கள் பட்ஜெட் விமானத்தில் துருக்கி ஒருமுறை வந்து போகலாம் மே மாதத்திலிருந்து ஆகஸ்ட் வரையில் கோடைகாலமாக இருக்கும் மற்ற மாதங்களின் சீதோசனம் குளிரும் வாடைக்காற்றுமாக இருக்கும் தொழில் விசயமாக நான் துருக்கி வந்திருந்தாலும் பார்க்கவேண்டிய பழைமைமிக்க மியூசியத்தை மிஸ் பண்ணின வருத்தம் என்னிடம் இருக்கத்தான் செய்கிறது குடும்பத்துடன் வரவேண்டுமென்ற ஆவலும் இருக்கிறது.

இறைவன் நாட்டமிருந்தால் இன்னொருமுறை துருக்கி வருவேன்.!
இந்த பதிவை துருக்கியில் எழுதத்துவங்கிஅங்கேயே நிறைவு செய்துவிட்டு விமானத்தில் ஏறப்போகின்றேன்.

துருக்கியின் இணையதளத்தில் பிளாக்ஸ்போட்டிற்கு தடை செய்துள்ளார்கள் இதை போஸ்ட் செய்வதற்கு முயற்சித்தேன் முடியவில்லை துபாயிலிருந்துதான் இதை போஸ்ட் செய்வேன்.
இவ்வளவு தூரம் ஆர்வத்துடன் படித்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றியை சமர்பிக்கின்றேன்.