உங்கள் வருகைக்கு நன்றி...

Wednesday, December 16, 2009

பிஞ்சு மனசு


இரண்டாம் வகுப்பு படிக்கும் எனது இளைய மகளுக்கு தமிழ் பரிட்சை.ஆத்திச்சூடியை மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும்.
அதை மனனம் செய்து இருக்காளா கேளுங்கள் என்று என்மனைவி என்னை உசுப்பேத்தினார்.
என்குழந்தைகளிடம் படிப்பைப் பற்றி நான் அதிகம் கேட்பதில்லை.என்றாவது ஒருநாள் விசாரிப்பதோடு சரி. இந்த செயல் என் மனைவிக்கு மிகுந்த வருத்தத்தை இன்று வரையில் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
காலையில் ஆறுமணிக்கு எழுந்து பள்ளிக்கூடம் புறப்பட்டு வீட்டுக்கு மதியம் இரண்டு மணிக்கு வருகிறார்கள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பெரிய மகளும் இளைய மகளும்.
வந்து சாப்பிட்டதும் குர்ஆன் ஓதுதிக் கொடுப்பதற்கு ஆசிரியர் வந்துவிடுவார் ஒருமணி நேரம் குர்ஆன் ஒதுவார்கள்.
அதன் பிறகு ஒருமணி நேரம் உறக்கம் மாலை ஆறு மணிக்கு டியூசன் வாத்தியார் வருவார் இரவு எட்டு முப்பது அதிகபட்சம் ஒன்பது மணி வரை படிக்கனும.; அவருபோன பின் பள்ளிக்கூடத்தில் கொடுத்த வீட்டுப்பாடம் செய்யனும் பிறகு ஒன்பதரைக்கு சாப்பிடனும் இதுக்குமேல குழந்தைகளுக்கு மூடு இருந்தால் அரைமணிநேரம் விளையாடுவார்கள்.
இரவு பத்தரைக்குள் படுக்கவைப்பது வழக்கம் மீண்டும் வழக்கம்போல் காலை ஆறுமணி.
கிட்டதட்ட பதிநான்கு மணிநேரம் படிப்பின் சிந்தனையில் இருக்கும் அந்த குழந்தைகளிடம் தினமும் அவர்களின் படிப்பைப் பற்றி விசாரித்தால் அந்த குழந்தைகளின் மனோநிலை எப்படி இருக்கும்.?

படிப்பின் மீதுள்ள ஆர்வம் குறைந்துவிடும் அல்லது வெறுத்து விடுவார்கள்.

ஆனால் அவர்களின் படிப்பறிவு எப்படி இருக்கிறது என்பதை அவர்களை விசாரித்து தெரிந்துக் கொள்வதைவிட அவர்களின் செயல்பாடுகளில் எளிதாக தெரிந்துக் கொள்ளலாம்.
ஒன்றை மனனம் செய்துவிட்டால் அதை பெற்றோர்களிடம் ஒப்பித்துக் காண்பித்து சந்தோசப்படுவார்கள்.அவர்கள் தெரிந்தததை கூறும்போது நாம் அவர்களுக்கு தெரியாத ஒன்றைக் கேட்டு அவர்களின் உற்சாகத்தை முடக்கக் கூடாது. அவர்கள் சொல்வதை நாம் கேட்க வேண்டும் சொல்லியப் பின் அவர்களை தூண்டுதலான வார்த்தைகளால் அவர்களை உற்சாகப் படுத்தவேண்டும்.

உற்சாகம் என்பது அன்பை வளர்த்து அறிவுத் திறனை மேன்மைப்படுத்தும் என்பது அனுபவக் கூற்று.

ஆத்திச்சூடியை படித்து காட்டேன் என்று என் மகளிடம் கேட்க அவள் திருதிரு என விழித்தாள். அவள் விழிப்பதைக் கண்டதும் எனக்கு என் மனைவி சொன்ன வார்த்தைகள்தான் ஞாபகத்துக்கு வந்தது. நாம் கண்டுக்காமல் இருந்தது தப்பாகி விட்டதோ டியூசன் வைத்தும் ஒழுங்காக படிக்கவில்லையே என்று எனக்குள் கோபத்தை ஏற்படுத்தியது.

அதட்டலாக என் மகளிடம் நீ என்னப்படிக்கிறே ஆத்திச்சூடியே உனக்கு தெரியல என்று கோபமாக கேட்டதும் பயந்தவளாய் எனக்கு முதல் வார்த்தையை சொல்லிக் கொடுங்க பாக்கிய நான் சொல்கிறேன் என்றாள்.

கொடுமையை எதிர்த்து நில் என்று முதல்வரியை சொன்னேன்.மீதி உள்ள வரிகளை திக்கிதெனறி ஒப்பித்தாள். ஏன் இவ்வளவு தினறல் என்று அதட்டினேன்.பத்துமுறை படித்துவிட்டு பார்க்காமல் என்னிடம் சொல்லவேண்டும் என்று கட்டளையிட்டேன். பத்துநிமிடத்தில் தயாரானாள்
மீண்டும் முதல்வரி தெரியவில்லை.உடனே தனது சகோதரியிடம் கேட்டுவிட்டு ஒப்பித்தாள்.

பத்துமுறை படித்தும் உனக்கு எப்படி முதல் வரி மறக்கிறது என்றேன்.முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு நின்றாள்.
மறுதினம் ஒப்பிக்கும் பரிட்சை முடிந்து வீட்டுக்கு வந்ததும் எனது அலுவலகத்துக்கு தொலைபேசி செய்து ஆத்திச்சூடியை அரைநொடியில் முழுவதையும் கூறினாள்.
வெரிகுட் வெரிகுட் என்று அவளை உற்சாகப்படுத்தினேன் அவளுக்கு சந்தோசமாக இருந்தது.

அதட்டல் இல்லாமல் நான் கேட்டிருந்தால் தினறல் இல்லாமல் நேற்று படித்துக் காட்டிருப்பாள். நான் அதட்டியதும் குழந்தைக்கு பயம் வந்துவிட்டது அந்த பயம் படித்ததை உடனே சொல்லமுடியாத திணறலை ஏற்படுத்திவிட்டது.

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களின் அதட்டல் டியூசனிலும் அதட்டல் ஒதுவதிலும் அதட்டல் போதாத குறைக்கு பெற்றோர்களின் அதட்டல் இவ்வளவு அதட்டல்களை தாங்கக்கூடிய குழந்தைகளின் மனசு பயத்திலேயே உலாவந்துக் கொண்டிருக்கும்.

இந்த பயமே குழந்தைகளை எவ்வளவு படித்து மனனம் செய்திருந்தாலும் கேட்கப்படும் போதும் பரிட்சையின்போதும் பெற்றோர்களின் கோபத்திற்கு ஆளாகநேரிடும் என்ற பயத்திலும் பதட்டத்திலும் பல கேள்விகளுக்கு பதில் எழுதாமலேயே விட்டுவிடுகிறார்கள்.

கலிபோர்னியா பல்கலைகழகத்தில் ஒரு ஆய்வு செய்தார்கள். இரண்டு செடிகளை தனித்தனியே வைத்து அவைகளுக்கு சமமாக தண்ணீர் இட்டு தினமும் ஒரு செடிக்கு முன் நின்று இது நன்றாக வளரவேண்டும் என்று எண்ணுவதும் மற்றொரு செடிக்கு முன் நின்று இது நன்றாக வளரவேக் கூடாது என்றும் தியானம் செய்வதைப் போல் செய்தார்கள்.

சில தினங்களில் எந்த செடி நன்றாக வளரவேண்டும் என்று எண்ணினார்களோ அது நன்றாக வளர்ந்திருந்தது. எது வளரக் கூடாது என்று எண்ணினார்களோ அது வளரவில்லை. இது எண்ணத்தின் வலிமையை தெரிந்துக் கொள்வதற்கு ஆய்வு செய்யப்பட்டது.

குழந்தைகளின் எண்ணங்களில் தாழ்வு மனப்பான்மையை எந்த சூழ்நிலையிலும் ஏற்படுத்தி விடவேக்கூடாது. நம் குழந்தைகளின் மீது முதலில் நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அவர்கள் செய்யக்கூடிய சின்ன சின்ன விசயங்களை பாராட்டவேண்டும் உற்சாகப்படுத்தவேண்டும்.

உற்சாகம் என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் தேவைப்படுகிறது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பலருக்கு தெரிந்திருக்கும் ஆனந்தவிகடனில் தொடர் எழுதியவர் பல நூல்கள் எழுதி உள்ளார். அவருடைய வலைதளத்தில்
“இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.” – என்ற வாசகத்தை பதிவிட்டதின் நோக்கம் உற்சாகத்தை எதிர்நோக்கிதான்.

பிரபலமானவர்களின் எதிர்ப் பார்ப்பு இப்படி என்றால் புதிதாக வலைதளம் வைத்து எழுதிக் கொண்டிருக்கும் என்னை உங்களைப் போன்றவர்களின் எதிர்ப் பார்ப்பு எப்படி இருக்கும்?
இந்த இடுக்கையின் நோக்கம் குழந்தைகளுக்கு உற்சாகத்தை அள்ளிக் கொடுங்கள் பிஞ்சு மனதில்லுள்ள பயத்தை கிள்ளி எரிந்து விடுங்கள் என்று முடிப்பதற்கு முன் என் இளைய மகளிடம் உன்னைப் பற்றி வலைதளத்தில் இடுக்கை இடப்போகிறேன் என்று கூறியதும் ஆத்திச்சூடி வாசிக்கிறேன் கிளிப் எடுத்து போடுங்கள் டாடி என்று கேட்டுக் கொண்டதற்கினங்க உங்களின் பார்வைக்கு வைத்துள்ளேன்.



11 comments:

சந்தனமுல்லை said...

அழகா சொல்லியிருக்கீங்க! நல்ல பகிர்வு!
வீடியோ பிறகு பார்க்கிறேன்!

Jazeela said...

நல்ல பதிவு. குழந்தை எந்த பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள்? துபாய் குழந்தை ஆத்திச்சூடி பாடுகிறாளே. ஆத்திச்சூடின்னாலே இப்பலாம் -- ’ஆத்திச்சூடி ஆத்திச்சூடி நியூ ஏஜ் ஆத்திச்சூடி’ என்று ஆகிப்போச்சு :-)

சென்ஷி said...

அருமையான பதிவு இஸ்மத்ஜி.. குழந்தையை தமிழ் மன்ற விழாவில் சந்தித்தது நினைவில் உள்ளது.

/புதிதாக வலைதளம் வைத்து எழுதிக் கொண்டிருக்கும் என்னை உங்களைப் போன்றவர்களின் எதிர்ப் பார்ப்பு எப்படி இருக்கும்?//

இன்னுமா நீங்க புதியவர்கள் லிஸ்ட்ல இருக்கீங்க. பிரியாணி சட்டியை மறுபடி தொறக்க வேண்டி இருக்கும் சாக்கிரத :)

குழந்தைக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்

Unknown said...

நல்ல இடுகை.

//குழந்தைகளுக்கு உற்சாகத்தை அள்ளிக் கொடுங்கள் பிஞ்சு மனதில்லுள்ள பயத்தை கிள்ளி எரிந்து விடுங்கள்//

இதைப் படிக்கும்போது, பதிவர் படகு அவர்கள் சொன்னது நினைவுக்கு ஏனோ வருகிறது. அல்லாஹ்வைப் பற்றி பிள்ளைகளுக்கு சொல்லித் தரும்போது அல்லாஹ் தண்டித்து விடுவான் எனக்கூறி ஏன் பயப்படுத்த வேண்டும். அல்லாஹ் ஒரு கொடுமைக்காரனாக குழந்தைகள் மனதில் பதியாதா. இதற்கு பதிலாக அல்லாஹ் அருளாளன், அன்பாளன். இந்த செய்கையால் இத்தகையோருக்கு அல்லது இத்தகைய தீமை விளையும், அவை இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும். அல்லாஹ் தீமைகளை விரும்பாவதனாகையால் நம்மை தண்டிக்க நேரிடும் என்று விளக்கமாகச் சொன்னால் நல்லதில்லையா என்றார்.

Anonymous said...

மிக நல்ல பதிவு.

அதட்டலில் பெறும் அழுத்தத்தில் மூளையின் ஒரு பகுதி நசுங்கி விடும். பயம் காரணமாய் அழுத்துகிற அழுத்தலில் தகவல் தரும் நரம்பு சிரமப் படும்.

எதார்த்தமான பிள்ளை வளர்ப்பு பற்றிய இதமான பதிவு. தெளிவான நடையில் நல்ல வாசிக்கும் அனுபவம்.

தன் சறுக்கலை சுட்டிக் காட்டிய நேர்மை நேர்த்தி அறுமை. தொடர்ந்து கலக்குங்கள்.


-லாரன்ஸ்

கிளியனூர் இஸ்மத் said...

சந்தனமுல்லை உங்கவருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஜெஸிலாக்கா...குழந்தைகள் கிரஸண்ட்இங்லீஸ் ஹைஸ்க்கூலில் படிக்கிறாங்க...தாயை மறக்கமுடியாது கூடாது தானே...தாய்மொழியை மட்டும் எப்படி மறப்பது? நன்றி.

சென்ஷி....புதுசா இருந்துதானே பழசாஆகிக்கிட்டிருக்கோம்...அதனால புதுச மறந்திடப்படாது இல்லையா?...இன்னொரு சிரிப்புபோட்டா எடுக்கனுமுல்ல....வெள்ளிக்கிழமை பிரியாணியோட வரேன்....வருகைக்கு நன்றி

சுல்தான் பாய்...நீங்க சொல்வது முற்றிலும் உண்மை....இறையைப் பற்றி பொற்றோர்கள் புரிந்து வைத்திருப்பதும் பயத்தைதான் அதையே தன் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கிறாங்க...வருகைக்கு நன்றி...

லாரன்ஸ்....உண்மைங்க அந்த பிஞ்சுகளுக்கு என்ன தெரியும்? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..

ஸாதிகா said...

நல்ல பதிவு.அதட்டல் ஆகாது என்பதை இரண்டாவது படிக்கும் உங்கள் மகளுக்குமட்டுமல்ல கல்லூரியில் படிக்கும் என் மகனுக்கும் பொருந்தும்.

cheena (சீனா) said...

அன்பின் கிஸ்மத்

நல்ல சிந்தனை - மழலைச் செல்வங்களை மழலையாக மதித்து - அவர்களிடம் பழக வேண்டும். நமது அறிவினை அவர்களிடம் எதிர்பார்க்கக் கூடாது. நமக்கு பொறுமை வேண்டும். உண்மையில் அவர்களின் ஐக்யூ நமதை விட அதிகம்.

நல்வாழ்த்துகள் கிஸ்மத்

அது ஒரு கனாக் காலம் said...

கிஸ்மத் அண்ணே , உங்கள் மகள் அருமை ... நீங்கள் சொல்லிய செய்தி ரொம்ப சரி .

சிநேகிதன் அக்பர் said...

நான் கூட யோசித்தது உண்டு நாம் குழந்தையை குழந்தையாக பார்க்கவில்லையோ என்று.

இன்றைய கால கட்டத்தில் அறிவை வளர்க்க முடியவில்லை திணிக்கத்தான் வேண்டியிருக்கு.

நல்ல இடுகை உங்கள் குழந்தைக்கு வாழ்த்துகள்.

கிளியனூர் இஸ்மத் said...

சகோதரி ஸாதிகா,
சீனா,
அதுஒரு கனாக் காலம்,
அக்பர்,
....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....