உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, August 20, 2009

மனம் கவர்ந்த மலேசியா...15

அதிகாலை தூக்கத்திலிருந்து கண்களை திறக்க முடியாமல் திறந்து குடும்பத்தை கிளப்பி புறப்படுவதற்கு ஏழுமணி ஆச்சுங்க…
பினாங்கிலிருந்து சுமார் 250 கிமீ தொலைவில் கேமரான் ஐலாண்ட் இருக்கிறது…
போய் சேருவதற்கு எப்படி இருந்தாலும் 2 மணிநேரம் ஆகும்ன்னு கணக்கு போட்டு அதுபடியே போய் சேர்ந்தோம்.

கேமரான் ஐலாண்ட்கிட்டதட்ட நம்ம ஊட்டி கொடைக்கானல் மாதிரி தான் இருக்கிறது. ஆனால் அதைவிட சுத்தமாக நல்ல பராமரிப்பில் கேமரான் இருக்கிறது.



இந்த மலைப் பாதையில் ஏர்பின் வளைவுகளும் இருக்கிறது. மலைப்பாதையில் ஏற ஏற குளிர்ந்த காற்று மேகமூட்டம் நம்மை தழுவிக் கொள்கிறது.
பாதை வளைந்து செல்வதால் சிலருக்கு வாந்தி மயக்கம் வரலாம்.
அங்கு தங்குவதற்கு ஹோட்டல்ஸ் நிறைய இருக்கிறது . வாடகை சீசனைப் பொருத்து வசூலிக்கப்படுகிறது.

அங்கு ரோஜாக்களின் பண்ணை தேனீக்கள் பண்ணை ஸ்டேபிரி பழத்தின் பண்ணை தேயிலை தோட்டம் ஆப்பிள் மரங்கள் திராட்சை செடிகள் இப்படி மனதை கவரும் பழங்களும் மணங்களும் நிறைந்திருக்கிறது.
அந்த குளுமையான சூழலை எந்த காலத்திலும் நினைத்துப்பார்த்தாலும் நம் மனசுக்கு குளிரும்ங்க.

இந்த மாதிரி இடங்களில் இரண்டு மூனு நாட்கள் தங்கி அந்த இயற்கையை ரசிக்கனும் நாங்க லாங்காவி போனா மாதிரி இதுவும் ஒரு நாள் கூத்து தான் எனக்கு பெரிய வருத்தமாக இருந்தது.
தங்கமுடியலைன்னாலும் இதையெல்லாம் பார்க்க முடிந்ததேன்னு மனச தேத்திக் கொண்டேன்.


நாங்க கிளம்பும்போதே மதியம் சாப்பிட னாசிலாமா ங்கிற சாப்பாட்டை தயார் செய்து என் உறவினர் பார்சல் தந்திருந்தார்கள். சாப்பிடலாம்னு புல்தரையில் அமர்ந்தோம் மழையும் எங்களுடன் சாப்பிட வரவான்னு கேட்பது போல் பொழிய ஆரம்பித்தது அவசரமா அது சாப்பிட்டா நமக்கு பத்தாதேன்னு எடுத்துக் கொண்டு ஒடி பக்கத்தில் உள்ள தேவஆலயத்தில் நுழைந்தோம். அது மிக பழைமையான ஆலயம் . ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாம்.
அதையும் பார்த்து விட்டு உணவையும் உண்டுவிட்டு கிளம்பினோம்.
அந்த இடத்தில் யாருமே கிடையாதுங்க ஏதோ த்ரில்லிங் படம் பார்ப்பது போல் ஒரு வித பயத்துடன் தான் இருந்தோம்…இல்ல இருந்தாங்க …நாமத்தான் பயப்பட மாட்டோமே.
பறவைகளின் சப்தமும் …ஸ்ஸ்…ஸ்ஸ் ன்னு காற்றின் அசைவில் மரங்களின் உரசல் சப்தமும் சும்மா சின்ன பயத்தை என் சுட்டிகளுக்கு ஏற்படுத்திருக்கிறது.
அவங்க பார்த்த அத்தனை பேய் படத்தின் பெயரையும் சொன்னாங்க.

ரோஜாக்கள் எங்களை வரவேற்பதைப்போன்று பல வண்ணங்களில் பூத்து வரவேற்றது… ஆமாங்க அதற்கு தெரிஞ்சுருக்கு வருகிறவன் வலைப்பூ வச்சிருக்கான்னு.
எல்லா செடிகளுக்கு பக்கத்திலும் நின்னு வருத்தப்படாமால் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

பொதினா செடிகள் நிறைய இருந்தது. அதைப்பார்த்ததும் கொஞ்சமா பறித்து வெண்நீரில் போட்டு நம்ம அரபு சுலைமாணி குடிச்சோம்.
தேன் பண்ணைக்கு சென்றோம் பல வகையான தேன்களை பாட்டலில் வைத்திருந்தார்கள் நாம் குடித்து பார்த்து வாங்கலாம் .
தக்காளிச்செடி இங்கு கொடிப்போல் பெரிதாக வளர்ந்திருந்தது ஒவ்வொரு தக்காளியும் நல்ல எடைக் கொண்டது.

தேயிலை மலைக்கு சென்று அங்குள்ள “ஃபோ டி கார்டன்” னையும் தொழிற்சாலையையும் பார்வையிட்டோம்.
வருபவர்களுக்கு நல்ல தரமான தேயிலை தேனீர் கொடுத்தார்கள். நல்ல மணம் நல்ல ருசியும்கூட


மாலைபொழுதில் அந்த பசுமையில் மெல்ல நடந்து இதமான குளிரில் நனைந்து அதை ரசிக்கும் போது கவிதை படித்த உணர்வு மேலிடவே என் துணைவியிடம்

இந்த இடத்தைப் பார்த்தால் என் கவிதை மாதிரி இருக்கேன்னு சொன்னேன்.

உங்க கவிதை மாதிரியா…? ஏங்க இவ்ளோ ஆசை… இந்த இடத்தை கவிதை மாதிரி இருக்குன்னு சொல்லுங்க ஒத்துக்கிறேன்… உங்க கவிதை மாதிரி இருக்குன்னு சொல்லாதீங்க…!
ஏன் … என் கவிதைக்கு இந்த இடம் பொருந்தாதோ … இதைவிட பெட்ரான இடத்தை சொல்லனும்னு தோனுதோ…ன்னே.

வேணா… நான் ஏதாவது சொல்லிடுவேன் …என்றார்

ம்…வெற்றி பெறும் ஒவ்வொரு ஆணுக்கும் பின்னாடி ஒரு பெண் இருப்பாள்னு சொல்லு வாங்க … ஆனால் நீயும் இருக்கியே … பெண்ணா நீ…இல்ல… தேவதைன்னு சொல்றேன் . ஹி…ஹி…ஹீ ( இந்த ஹி போடலைன்னா என்ன நடக்கும்னு உங்களுக்கு தெரியும்)
என்னா…?
ஓண்ணும் இல்லடி தங்கம்… நீ நடம்மா…!

கேமரான் ஐலேண்டின் இறக்கத்தில் பெரிய அருவி இருக்கிறது. குளிராக இருந்ததால் குளிக்க வில்லை. தண்ணீரும் சும்மா ஜில்லுன்னு இருந்தது. ஆனாலும் என் குழந்தைகள் அதில் குளிக்க ரொம்பவும் ஆசைப்பட்டார்கள். வேண்டாம்னு தடுத்திட்டேன். ஜூரம் ஏதும் வந்திடுமோன்னு பயம்தான்.

இரவு கேமரானைவிட்டு மெல்ல இறங்கி ஈப்போ வழியாக பினாங்கு வந்தோம்.
மறுதினம் எங்களின் பயணம் கோலலம்பூர். அங்கு மூன்று தினங்கள் இருந்து விட்டு திருச்சியை நோக்கி பறக்கனும்.
அதனால என் மைத்துனரிடம் நாங்க மட்டும் கோலலம்பூர் புறப்பட்டு சென்று சுற்றி பார்த்து விட்டு அப்படியே கிளம்பி இந்தியா சென்று விடுகிறோம். நீ வரவேண்டாம்னு சொல்லி விட்டோம்.
சரி நான் வரலை ஆனால் நீங்க சுற்றி பார்ப்பதற்கு ஒரு ஆளை அங்கு ஏற்பாடு செய்கிறேன்னு ஏற்பாடு செய்தார்.
பினாங்குலிருந்து இரயிலில் கோலலம்பூர் செல்வதற்கு டிக்கேட் புக் செய்தோம்.
காலை 7.30 க்கு இரயில் புறப்படுகிறது.
அதனால இப்ப தூங்கினாத்தான் காலையில சீக்கிரமா எழுந்திருக்க முடியும்ங்க…
இரயில்ல சந்திப்போம்ங்க…….

3 comments:

நட்புடன் ஜமால் said...

சாப்பிடலாம்னு புல்தரையில் அமர்ந்தோம் மழையும் எங்களுடன் சாப்பிட வரவான்னு கேட்பது போல் பொழிய ஆரம்பித்தது அவசரமா அது சாப்பிட்டா நமக்கு பத்தாதேன்னு எடுத்துக் கொண்டு ஒடி]]


ஹா ஹா ஹா

எண்ணா இரசனை - கிளப்புங்க அண்ணாச்சி.

Joe said...

Interesting post about your travel experiences.

Arnold said...

Hi great reading yyour post

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....