உங்கள் வருகைக்கு நன்றி...

Wednesday, April 14, 2010

பூஜியமாகும் சூனியம்


சில தினங்களுக்கு முன் எனது ஆன்மீக ஆசிரியரின் சொற்பொழிவைக் கேட்க சென்றிருந்தேன்.
ஆண்டுக்கு ஒருமுறை பத்து அல்லது பதினைந்து தினங்களுக்கு துபாயில் சொற்பொழிவாற்றுவார்கள்.

பலதரபட்ட கேள்விகள் பலரும் கேட்பார்கள்.எல்லாவற்றிற்கும் பதில் கிடைக்கும்.ஆனால் கேட்கப்படும் கேள்வியை விளங்கி கேட்கப்படும்போது அதற்கான பதிலும் நம் மனதில் பதியும் இருள் விலகி அறிவுத் தெளியும்.
எல்லோரும் கேட்கிறார்கள் என்று நாமும் எதையாவது கேட்டால் பதில் கிடைக்கும் ஆனால் அந்த பதில் நம் மனதில் தரிபடாது.

ஏத்தனையோ நூற்களை நாம் வாசிக்கின்றோம் எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு நூலும் ஒரு அறிவுதான்.ஆனால் அந்த நூற்கள் அறிவின் பூரணத்தை விளக்குவதில்லை.ஏட்டுக்கல்வியினால் எல்லாவற்றையும் விளக்க முடியாது.
விளக்கம் கொடுப்பதற்கு ஒரு ஆசான் தேவை.விளக்கமில்லாத படிப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.

ஞானிகளிடம் பூரணத்தை கேட்டு தெளியலாம்.கேட்கப்படும் நம்மிடம் தேடல் இருக்கவேண்டும்.இல்லையெனில் எந்த பதிலும் நம்மை திருப்தி படுத்தாது.
எல்லாவற்றிகும் ஒரு வழி இருக்கிறது.அந்த வழியில் தான் எதையும் பெறவேண்டும்.வழிமாறினால் வாழ்க்கையும் மாறிவிடும் சிந்தனையும் மாறிவிடும்.

இது அவசரக்காலம் எதையும் அவசரமாக செய்யப் பழகுகிறோம்.இந்த அவசரம் மனிதனை போட்டி மனப்பான்மையை உண்டாக்கி பொறாமைகளை வளர்த்து வருகிறது.

இந்த பொறாமை ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அழிப்பதற்கும் அவனைக் கெடுப்பதற்கும் பல யுக்திகளை கையாளுகிறான்.
அப்படிப்பட்ட யுக்திகளில் ஒன்று தான் செய்வினை செய்வதும் சூனியம் வைப்பதும்.இதில் பெரும்பாலும் பெண்கள் கவரப்படுகிறார்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்.

உண்மையில் ஒரு மனிதனுக்கு சூனியமோ செய்வினையோ செய்யமுடியுமா? அப்படி செய்வதினால் அதில் மனிதன் பாதிக்கப்படுகிறானா?

இந்த கேள்விகள் என் ஆன்மீக ஆசிரியரிடம் கேட்கப்பட்டது.

ஒரு கதை மூலம் விளக்கம் அளித்தார்கள்.

ஒரு சாலை ஓரத்தில் இருவர் எதிர் எதிரே ஒரேவிதமான கடை வைத்திருந்தார்கள்.ஒருவருக்கு நல்லவியாபாரம் அவர் நியாயமான விலையில் விற்பனை செய்துக் கொண்டிருந்தார்.மற்றவருக்கோ அந்தளவு வியாபாரமில்லை.எதிர் கடைக்காரனைக் கண்டு அவர் பொறாமைக் கொண்டார்.

ஒரு நாள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.உன்னை என்ன செய்கிறேன் பார் உனக்கு சூனியம் வைக்கிறேன் என்று வியாபாரம் இல்லதவர் கூற உன்னால் முடிந்ததை செய் என்றார் நியாயக் கடைக்காரர்.

மறுதினம் காலையில் கடைத் திறக்க வந்தவருக்கு அதிர்ச்சி.அவர் கடை வாசலில் கருப்பாக மணி உதிர்ந்து கிடைப்பதைப் போல கடுகு கிடைப்பதைக் கண்டதும் பொறாமை கடைக்காரர் ஏதோ சூனியம் செய்வினை வைத்துவிட்டார் என்று இவரே ஒரு பிரம்மையை ஏற்படுத்திக் கொண்டு கவலையடைந்தார்.அந்த கவலை வியாபார சிந்தனையிலிருந்து அவரை திசைத்திருப்பியது.அவருக்கு வியாபாரம் மந்தமானது அவர் உடல் நிலையும் மோசமானது.

இவரின் நண்பர் இவரைக்காண வந்தபோது தனக்கும் தனது எதிரி கடைக்காரனுக்கும் நடந்த பிரச்சனையை கூறி அவர்தான் எனக்கு செய்வினை செய்துவிட்டார்.என்னுடைய வியாபாரமும் உடல் நிலையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. என்று அவர் கூறியதும் அந்த நண்பர் கூறினார்
உன்னுடைய எதிரையை பார்த்துவிட்டுதான் உன்னைக்காண வந்துள்ளேன்.
அவர் உனக்கு செய்வினையோ சூனியமோ வைக்கவில்லை. ஆனால் ஒரு ஐம்பது கிராம் கடுகை மட்டும் உன் கடை வாசலில் கொட்டிஇருக்கிறார் அதைக்கண்ட உனக்கு பயம் உண்டாகி நீயே உனக்கு சூனியத்தை செய்வினையை வைத்துக் கொண்டுள்ளாய் என்றார்.
இப்படித்தான் பலர் தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்துக் கொள்கிறார்கள்.என்ற கதையை ஆன்மீக ஆசிரியர் கூறினார்கள்.

பல பெண்களிடம் சூனியத்தின் நம்பிக்கை நிறைந்திருக்கிறது.எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள்.சூனியம் என்றாலே ஒன்றும் இல்லை என்பதுதானே பொருள்.ஒன்றுமில்லத ஒன்றினால் என்ன செய்ய முடியும். ஆனால் நம்பிக்கை எதையும் செய்யும்.
இறைவன் ஆதியில் சூனியமாக இருந்ததை அமாவாக இருந்தேன் என்கிறான்.ஒன்றுமில்லா ஒன்றுதான் இந்த பிரபஞ்சமாக இருக்கிறது.

செய் என்றால் செயல்பாடு
வினை என்றாலும் செயல்பாடுதான்; செய்வினை என்ற சொற்சொடருக்கு செயல் என்பதுதான் பொருளாக இருக்கிறது.

செய்வினை சூனியம் என்பது மனிதர்களை முட்டாளாக்குவதற்கும் பொருளை அபகரிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஏமாற்று கண்கட்டு வித்தை.
சூனியம் மூலம் ஒருவரை பழிவாங்க முடியுமென்றால் நம்நாட்டு அரசியல்வாதிகளை எண்ணிப்பாருங்கள்.
சூனியம் வைத்தே ஒட்டையும் ஆட்சியையும் பிடித்துவிடுவார்கள் எதிர்கட்சி என்பதே இல்லாமலாகிவிடும்.எதிர்ப்பனுக்கெல்லாம் சூனியம்தான்.
இது சாத்தியமா?

சில இல்லங்களில் மாமியார் மருமகள் பிரச்சனை கூட சூனியம் என்ற பாட்டையில்தான் நடைப்பெறுகிறது.

இந்த நம்பிக்கையை பேணக்கூடியவர்களுக்கு சூனியம் எல்லாமும் செய்யும் இதை ஏற்காதவர்களுக்கு சூனியம் தனக்கே சூனியமாக்கிக் கொள்ளும்.

நம்பிக்கை என்பது மனிதன் தெளிவுவடைவதற்குதானே தவிர மூடநம்பிக்கையை வளர்ப்பதற்கல்ல.!

9 comments:

Unknown said...

Good.
நல்லாருக்கே இது போன்ற இன்னும் பல கேள்வி பதில்களையும் எதிர் பார்க்கிறோம். பயனுள்ள பதிவு.

ஜீவன்பென்னி said...

இதை வைத்து நம் ஊரில் நல்ல காசு பாக்குறாங்க.

mohamedali jinnah said...

ஆன்மீக ஆசிரியர் நபிநாதர்தான் மற்றவர் எல்லாம் ஆசிரியர்தான்

துபாய் ராஜா said...

அருமையான பகிர்வு அண்ணாச்சி.

தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

sultangulam@blogspot.com said...

அதானே!. தமிழக அரசியலில் என்னென்னவோ நடக்குது. சூன்யம் செய்து இருந்தால் இந்நேரம் முடிந்திருக்காதா? நல்ல இடுகை இஸ்மத் பாய்

அப்துல்மாலிக் said...

தெளிவான சிந்தனை விளக்கம்

கிளியனூர் இஸ்மத் said...

உள்ளே வந்த அனைவருக்கும் கருத்துக்களை வழங்கிய நண்பர்களுக்கும் மிக்க நன்றி

ஜோதிஜி said...

நிறைய விசயங்கள் அழகாக அற்புதமாக சிந்தனைகளை தூண்டும் அளவிற்கு எழுதுகிறீர்கள். ஆனால் இந்த நிற பின்புலம் மாற்றக்கூடாதா? ஏகப்பட்ட சுமைகள் வேறு உள்ளே நுழைய தாமதப்படுத்துகிறது. வாய்ப்பு இருந்தால் சரி செய்யுங்கள்.

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி...மாற்றிவிடுகிறேன்.ஜோதிஜி

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....